”அம்மா. .! அம்மா …! ” முகம் நிறைய மகிழ்ச்சியைச் சுமந்து கொண்டு விரைவாய் வரும் மகனைக் கண்டதும் அப்படியே மலை த்துப் போய் நின்றாள் தாய் விசாலாட்சி.
சட்டென்று கையில் வைத்திருந்த மைசூர் பாக்கை அவன், தன் தாயின் வாயில் திணித்தான்.
வாய் நிறைய இனிப்புடன் பேச முடியாமல் திணறிய விசாலாட்சி. ..
” எ. ..என்னடா. .? ” கேட்டாள்.
” சொல்றேன். அப்பா எப்போ ஆபிஸ்லேர்ந்து வருவாரு. ..? ”
வாயில் இருந்ததை ஒருவாறு தின்று முடித்து. …
”ஏன். … வரும் நேரம்தான் ! என்றாள்.
”வரட்டும். சொல்றேன் ! ” சொல்லி அறைக்குள் புகுந்து கொண்டான் அருள்.
அப்பா வேண்டசுப்ரமணியம் வரும் வரை வெளியே எட்டிப் பார்த்து குட்டிப் போட்ட பூனையாகச் சுற்றி அவர் படியேறுவதைப் பார்த்ததும் எதிரே ஓடினான்.
ஆள் உள்ளே வந்ததும்தான் தாமதம்……
” எனக்கு வேலை கிடைச்சாச்சுப்பா ! ” என்று அவர் காலில் படக்கென்று விழுந்தான்.
வேண்டசுப்ரமணியம் இதை எதிர்பார்க்கவில்லை.
” ரொம்ப சந்தோசம் அருள் ” மகனைத் தூக்கி நிமிர்த்தி கட்டிப் பிடித்தார்.
‘ படித்து முடித்து, இருபத்தெட்டு வயதுவரை லோல்பட்டதற்குப் பலன…? கடவுள் கண்ணைத் திறந்துட்டார் ! ‘ விசாலாட்சிக்குள் மகிழ்ச்சி மத்தாப்பாய்ப் பூத்தது.
” இன்னொரு சந்தோசமான விசயம்ப்பா .”
” என்ன. .? ”
” உங்க துறையிலேயே எனக்கு இயக்குனர் வேலை . .! ” என்றான்.
” என் துறையிலேயா. .எப்படி அருள். .? ” அவருக்கு ஆச்சரியம்.
” மூணு மாசத்துக்கு முன் நான் டெல்லியில் யு. பி. எஸ். சி. பரீட்சை எழுதினேன் இல்லியா. அதுக்கான ரிசல்ட் இது. உங்களுக்குத் தலைமை! ”
” ரொம்ப ரொம்ப சந்தோசம் அருள் ! ”
” உங்களைவிட எனக்குச் சம்பளமும் அதிகம். நம்ப கஷ்டமெல்லாம் தீர்ந்துதுப்பா. ”
” ஆமாம் ! ”
” அப்ப்பா ! உங்க வருமானத்தில் குடும்பம் நடத்திக்கிட்டு, அம்மா உடம்புல பொட்டுத் தங்கம் இல்லாம என்னைப் படிக்க வச்சீங்க. என் முதல் சம்பளத்துல அவுங்களுக்கு ஒரு சவரன் தங்கத்துல நகை எடுக்கணுமப்பா. அப்புறம்…….. முக்கியமா நீங்க அலுவலகத்துக்குச் சைக்கிள்ல போகாம இருக்க. … வங்கியில் லோன் போட்டு ஒரு ஸ்கோஓடியோ டி . வி. எஸ். 50 யோ கண்டிப்பா வாங்கணும்ப்பா. தினம் வத்தல் மிளகாய், ரசமும் இல்லாம நாக்குக்கு ருசியாய் சமைச்சு சாப்பிடணும். இந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிப் போட்டுட்டுநல்லதா ஒன்னு வாங்கணும். அம்மா கஷ்டப்படாம சமைக்க மிக்ஸி, கிரைண்டர் வாங்கணும். இப்படி மாசா மாசம் என் முழு சம்பளம் செலவானாலும் உங்க சம்பளத்தை அப்படியே உங்க வாங்கி கணக்குல சேமிப்பா சேர்த்து வைக்கணும். இதெல்லாம் என் ரொம்பநாள் ஆசைப்பா ! ” என்று மனம் முழுதும் தேக்கி வைத்திருந்த எதையும் மறைக்காமல் கண்கள் பனிக்கச் சொன்னான் அருள்.
கேட்ட தாய்க்கும், தந்தைக்கும் மனம் நெகிழ்ந்தது.
சிறிது நேரம் மௌனமாய் இருந்த வேங்கடசுப்ரமணியம். …
” அருள் ! நீ எங்க துறையை விட்டு வேறொரு துறைக்குப் போய் வேலையில சேர முடியுமா. .? ”
” ஏன்ப்பா. .? ” கேட்டான்.
” சொல்லு. .? ”
” முடியாது ! ”
” ஏன். ..? ”
” இது மத்திய அரசாங்க பரிட்சை வேலை. எதுக்கு எழுதினோமோ அதுக்குத்தான் போகமுடியும். மாத்த முடியாது ! ஏன்ப்பா கேட்டீங்க. ..? ”
” இல்ல. .. என்னுடைய இத்தனை வருச உழைப்புல ..ஒருத்தனிடம் ஒரு பேச்சு, கெட்ட பெயர் எடுக்காம வந்துட்டேன், வாழ்ந்துட்டேன். அது போல என் பிள்ளையும் வாழனும். .”
” என்னப்பா சொல்றீங்க. .?! ” குழம்பினான்.
” அருள் ! பெத்த பிள்ளையிடம் நான் கை கட்டி சேவகம் செய்ய… வெட்கப்படல, வேதனைப்படல, கூச்சப்படல. இன்னைக்கு இருக்கிற மாதிரி நாளைக்கும் உன் அறை வாசல்ல நான் கை கட்டி கடைநிலை ஊழியனாய் நிற்பேன். நீ. .. என்னை அப்பன் என்கிற முறையில டீ வாங்கவோ, வேற அது இது வாங்கவோன்னு கண்டபடி வேலை வாங்க முடியாது. கறாரா வேலை வாங்கவும் உன் மனசு இடம் கொடுக்காது. நான் தப்பித்தவறி தவறு செய்தால்…. உன்னால என்னைத் திட்ட, கண்டிக்க முடியாது. இதுக்காக என்னை நீ கண்டுக்காமல் இருந்தால். . ‘ அப்பனுக்கு சலுகை காட்டுறேன்னு உன்னைத் தப்பா பேசுவாங்க. மத்தவங்களுக்கு உன்னால ஏதாவது கஷ்டம், காரியம் ஆகணும்ன்னா என்னை சிபாரிசு செய்யச் சொல்லி வருவாங்க. இது மாதிரி ஆயிரம் சங்கடங்கள் இருக்க. அதனால. .”
” அதனால. ..? ! ” கேள்விக்குறியாய் அருள் அப்பாவைப் பார்த்தான்.
” நான் வேலையை ராஜினாமா பண்றதுதான் எனக்கு நல்லதாய்ப் படுத்து. நீ என்ன சொல்றே. .? ” பார்த்தார்.
” சரிப்பா. ஆனா. .. இந்த அரசாங்க வேலையில நீங்க வேற துறைக்கு மாற வாய்ப்பிருக்கே. ஏன் மாறக்கூடாது. .? ” கேட்டான்.
” அது முடியும் முடியாமல் போகும். உடனே முடியணும்ன்னா லட்சக்கணக்கில் அரசியல்வாதிகளிடம் கொட்டி கொடுக்கணும். அது வரும்வரை நீ வேலையில் சேராமல் இருக்கணும். இதெல்லாம் சரிப்படாது. நான் முப்பது வருசம் உழைச்சாச்சு. ஓய்வுக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம்தான் மிச்சமிருக்கு. நான் ஓய்வெடுத்துக்கிறேன். நீ வாழ வேண்டியவன். சீக்கிரம் வேலையில் சேர். உழை ! ” சொன்னார்.
” சரிப்பா. .! ” என்று கனத்த மனத்துடன் சொன்ன அருளுக்குள். ..குஞ்சுகள் பொரிக்கும்போதே இறக்கும் தாய் நண்டின் ஞாபகம் வர. ..அவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர்!