முடிச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 266 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிரேக்க புராணங்களில் கூறியுள்ள கோர்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸினால் போடப்பட்ட முடிச்சாகும். கோர்டியஸ் அரசனாவதற்கு முன்பு சாதாரண குடியானவனாக இருந்தவன். ஒருநாள் அவன் தன் வண்டியை ஓட்டிக் கொண்டு முதன் முறையாக பரிகியா நகரத்துக்குள் நுழைந்த போது தெய்வ வாய்மொழி பிரகாரம் அவனை அரசனாக அந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டனர். தன் நன்றிக்கடனாக சீயஸ் என்ற கடவுளுக்கு அந்த வண்டியை கோர்டியஸ் அர்ப்பணித்து வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து ஒரு முடிச்சுப் போட்டான். அந்த முடிச்சானது கடுஞ்சிக்கல்கள் கொண்ட ஒரு நூதனமான முடிச்சு . அந்த முடிச்சினை அவிழ்ப்பார் ஆசியாவுக்கு மகுடாதிபதி யாவார் என்பது தொன்று தொட்டு வந்த வாக்கு. ஆண்டாண்டு காலமாக அந்த முடிச்சை அவிழ்க்கப் பலரும் முனைந்து தோற்றுப் போயினர். மாவீரன் அலெக்சாந்தர் இதனைக் கேள்வியுற்று அந்த முடிச்சின் முன்னால் வந்து நின்றான்; நிதானமாகப் பார்த்தான்; தன் உடைவாளை உருவி ஓங்கி ஒரே வீச்சில் முடிச்சை இரு கூறாக்கினான்.
– மைக்கிரோசொப்ட் – என் காத்தா

நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கந்தையா வாத்தியார் கொடுத்த கணக்கு இதுதான்: “இரண்டு மரங்களுக் கிடையிலிருக்கும் தூரம் பத்து மைல். ஒரு மரத்திலிருந்து ஒரு மனிதன் மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் மற்ற மரத்தை நோக்கி நடக்கிறான். அதே நேரத்தில் மற்ற மரத்தில் இருந்து புறப்பட்ட நாய் ஒன்று மணிக்கு இருபது மைல் வேகத்தில் மனிதனை நோக்கி ஓடுகிறது. நாய் மனிதனிடம் வந்து சேர்ந்ததும் திரும்பவும் தான் புறப்பட்ட மரத்தை நோக்கிப் போகிறது. மரம் வந்ததும் திரும்பவும் மனிதனை நோக்கி ஓடுகிறது. இப்படியே மாறி மாறி அது ஓடிக்கொண்டேயிருக்கிறது. கடைசியில் மனிதனும் நாயும் மற்ற மரத்தடியில் வந்து சேருகிறார்கள். நாய் ஓடிய தூரம் எவ்வளவு?”

கந்தையா வாத்தியார் இதைச் செய்பவருக்கு ஒரு ரூபா கொடுப்பதாக அறிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக நேரமும், தூரமும்’ கணக்குகளை உச்சந்தலையில் அடித்தடித்து உள்ளே இறக்கியிருந்தார். ஆனால் இந்த நாய்க் கணக்கு என்னை நாயாய் அலைத்துவிட்டது. இரண்டு நாளாக இதைத் தூக்கிக் கொண்டு திரிந்தேன். அப்பதான் இந்த மண்டையன் வந்தான். சூல்கொண்ட தேங்காய் போல அவனுக்கு பெரிய தலை. தலை முழுக்க அவனுக்கு மூளை என்று பரவலாக ஒரு பேச்சுமிருந்தது. இரண்டு கால்களையும் பரப்பி வைத்து, கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ”என்ன கணக்கு?” என்றான். நான் சொன்னேன். யோசிப்பது போல் கொஞ்சம் கண்ணை மூடி “இன்னொருக்கால் சொல்” என்று அதிகாரம் செய்தான். நானும் ‘சிவனே’ என்று இன்னொரு முறை கூறினேன். அவன் ‘ஆ! விடை நாப்பது மைல்’ என்றான். நான் “எப்டி, எப்டி?” என்று பறந்தேன். மண்டையன் ஏளனமான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சொன்னான்: “பத்து மைல் தூரத்தை மனிதன் இரண்டு மணி நேரத்தில் கடக்கிறான். நாயின் வேகமோ மணிக்கு இருபது மைல்; இரண்டு மணியில் நாய் நாற்பது மைல் தூரத்தைக் கடக்கும்”. நான் வாயைப் பிளந்து கொண்டு சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றேன். இந்தச் சிறிய கணக்கை என்னாலே செய்ய முடியவில்லயே? அந்த நேரம் கந்தையா வாத்தியார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “எந்தவொரு சிக்கலான கணக்குக்கும் இலகுவான ஒரு பாதை இருக்கிறது; உன் விவேகத்தால் அந்தப் பாதையை நீ கண்டுபிடிக்க வேண்டும்.”

கணக்கிலே நான் படு புலியென்றாலும் இப்படி பலதரம் புல்லைச் சாப்பிட வேண்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு நானே தேறுதல் கூறிக்கொள்வேன். கலாசாலையில் முதல் வருடம் படிக்கும் போதும் இப்படித்தான் ஒரு கணக்கு என் காலை வாரிவிட்டது.

“ஒரு காதலன் தன் காதலியோடு ஆற்றின் ஓட்டத்துக்கு எதிராகப் படகிலே போகிறான். ஆற்றின் வேகம் மணிக்கு பத்து மைல்; படகின் வேகமோ மணிக்கு ஐந்து மைல். காதலரை வருடிய தென்றல் காற்று காதலன் போட்டிருந்த தொப்பியை நீரிலே தள்ளி விடுகிறது. (ஏன் இவன் காதல் செய்வதற்கு தொப்பி போட்டுக்கொண்டு போனான், முட்டாள்) காதல் வேகத்தில் இவன் அதைக் கவனிக்கவில்லை . அரைமணி நேரத்தில் படாரென்று படகைத் திருப்பிக்கொண்டு (கருமி, கருமி) வந்த வழியே போகிறான். எவ்வளவு மணி நேரத்தில் அவன் தொப்பியை மீட்பான்?”

இந்தக் கணக்கிலேயும் நான் அதே தவறைத்தான் செய்தேன். மூளையைக் கசக்கி விடையைத் தேடினேன். ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடினால் விடை கிடைத்துவிடுமா? அடுத்த நாள் எங்கள் பேராசிரியர் கணக்கை விளக்கியபோதுதான் ‘அடே’ என்று எனக்குப் பட்டது. விடை: அரைமணி நேரம் தான் (இந்த விடை வந்த காரணத்தை இங்கே விளக்கினால் இதுவே ஒரு கணக்குப் புத்தகமாகிவிடும். மேலே தொடருவோம்.)

சாதாரண மனிதர்களுக்குத்தான் இப்படியென்றில்லை. ஒரு விஞ்ஞானிக்கு நடந்ததைப் பார்ப்போம்…. பாரிஸ் நகரில் ஜோர்ஜ் உர்பெய்ன் என்று ஒரு தலைசிறந்த விஞ்ஞானி இருந்தார். இவர் பல வருடங்களாக மூளையைச் செலவழித்தும், பணத்தை இறைத்தும் மிக அரிதான நாலு தனிமங்களைப் பொடி செய்து குழம்பாக்கி பிறகு அவற்றை விஞ்ஞான முறைப்படி வேறுபடுத்தி தனிமங்களைக் கண்டு பிடிக்கும் அபூர்வ வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். இவர் இந்தக் குழம்பைத் தூக்கி நளாயினிபோல தலையிலே வைத்துக் கொண்டு ஒவ்வொரு விஞ்ஞானியாகத் தேடிச் சென்றார். இந்தக் குழம்பைத் தனிப்படுத்தி தனிமங் களின் பெயரைச் சொல்லும்படி இவர் மற்ற விஞ்ஞானி களுக்கு சவால் விட்டார். ஹென்றி க்வியின் மொஸ்லே என்ற ஆங்கிலேய விஞ்ஞானி மாத்திரம் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு காரியம் செய்தார். அந்தக் குழம்பில் எலக்ட்ரான்களைப் பாய்ச்சி அதிலிருந்து புறப்பட்ட எக்ஸ்ரே அலைகளின் நீளத்தைக் கணித்து அந்த நாலு தனிமங்களின் பெயர் களையும் கடகடவென்று இரண்டே நிமிடத்தில் கூறி விட்டாராம். இருபத்தியாறு வயது கூட நிரம்பாத இளைஞர் மொஸ்லே . உர்பெய்ன் ஆடிவிட்டார்; இத்தனை வருடத்து ஆராய்ச்சிகள் எல்லாம் வியர்த்த மானதில் அவருக்கு தாங்கமுடியாத வருத்தம்தான். எனினும் விஞ்ஞானத்துக்கு ஒரு புது வழி கிடைத்து விட்டதே என்று மகிழ்ந்து போனாராம். சாதாரண விஞ்ஞானிகளை விடுவோம்; கடவுளருக்கு வருவோம். நாரதருடைய கையிலே ஒரு அழகிய மாம்பழம் இருந்தது. விநாயகர் அந்தப் பழம் வேணுமென்று தாம் தூம்’ என்று குதித்தார்; முருகன் தனக்குத்தான் வேணுமென்று அடம்பிடித்தார். நாரதர் சொன்னார்; “யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத்தான் பழம்”. முருகன் யோசிக்கவில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தை ஸ்டார்ட் பண்ணி அதிவேகமாக உலகத்தை வலம் வரப் புறப்பட்டார். பிள்ளையார் டொங்கு, டொங்கு’ என்று எலியிடம் ஓடினார். எலி அவரை ஏற்றிக் கொண்டு இரண்டு அடி வைப்பதற்கிடையில் மூசு மூசு’ என்று மூச்சு வாங்கியது. அப்படியே நசுங்கி நிலத்தோடு படுத்துவிட்டது. “என்ன நின்று விட்டாயா? இப்ப முருகன் ஆபிரிக்காவின் மேல் போய்க் கொண்டிருக்கிறானே! நான் இங்கே வாசற்படிகூடத் தாண்ட வில்லை” என்று பெருமூச்சுவிட்டார். “ஸ்வாமி, நீங்கள் கொஞ்சம் ஓவர் வெயிட், காரட் ஜூஸ் மட்டும் இனி சாப்பிட்டுப் பாருங்கள்” என்றது எலி. விநாயகருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே வேறு ஒரு யுக்தி பண்ணினார். “அம்மையும், அப்பனுமல்லவோ உலகம்; நான் அவர்களை வலம் வந்தாலே போதுமானது” என்று நினைத்து அம்மையப்பனை வலம் வந்து மாம்பழத்தைக் கையிலே வாங்கும் தருணம் முருகன் மயிலிலே வீச்சாக வந்து சடன் ‘பிரேக்’ போட்டு நின்றார். விநாயகர் அவ்வளவுக்கும் நிற்பாரா, என்ன? தும்பிக்கையை எட்டிப் பழத்தைப் பறித்துக்கொண்டு மெள்ள நகர்ந்து விட்டார். நான் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டி பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தேன். நான் ஹாவார்டில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பேராசிரியர் அடிக்கடி கூறுவார். பூட்டு செய்தவன் சாவியும் செய்திருப்பான் என்று. சாவியைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். மனக்கண்ணினால் ஐந்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்புவரை நான் படித்தது எல்லாவற்றையும் அலசிப் பார்த்துவிட்டேன். இதிகாசங் களையும், புராணங்களையும் தேடியாகிவிட்டது. கணிதவியலையும், பொருளியலையும் ஆராயவும் தவறவில்லை.

மனிதர்கள் இரண்டு விதமானவர்கள். முதலாவது ரகம், சாதாரணமான நேரங்களில் சாதாரண வேலை செய்வார்கள், கழுத்தைப் பிடிக்கும் நெருக்கடி சமயம் சுடர்விட்டுப் பிரகாசிப்பார்கள். இரண் டாவது ரகம், சாதாரண நேரங்களில் அசாதாரணத் திறமையுடன் செயல் படுவார்கள், ஆனால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு செய்வதறியாமல் திகைப்பார்கள்.

இதில் இரண்டாவது ரகம் இதிகாசத்தில் கர்ணன். வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனைவிட ஒரு இழைமேல் என்றே சொல்லலாம். ஆனால் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில் பாவம் கர்ணன் செய்வதறியாது தடுமாறி நின்று போய்விடுவான். இந்தக்கால உதாரணம் வேண்டுமென்றால் டென்னிஸ் வீரன் கோரன் இவானி ஸேவிக்கை சொல்லலாம். இவனுடைய சர்வீஸ் 135 மைல் வேகத்தில் போகும். கண் வெட்டுவதற்கிடையில் மளமளவென்று புள்ளிகளைக் குவித்து விடுவான். ஆனாலும் என்ன பயன்? வெற்றி தேவதை அணைக்க வரும் நேரத்தில், பாவம் இவனுக்குக் கை கால்கள் சோர்ந்துவிடும். சர்வீஸ் ‘பொத், பொத்’ என்று விழும். எதிராளி தட்டிக் கொண்டு போய் விடுவான். இவன் விளையாட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வரும்.

நான் முதலாவது ரகம். அசாதாரண நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதுதான் என் விசேஷத் திறமை. அதற்காகவே படித்துப் பட்டம் பெற்றவன். சூறாவளி என்றால் அதற்கு ஒரு மையம் இருக்கும்; மகா விருட்சம் என்றால் அதற்கு ஒரு ஆணி வேர் இருக்கும். எந்தவிதமான சங்கடத்துக்கும் ஒரு உயிர் மையம் இருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் பேராசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய பாழடைந்த பத்து மாடிக் கட்டிடம். இதை உடைத்தெறிய உத்தரவு வந்துவிட்டது. நாங்கள் தகர்ப்பு விற்பன்னர்களைக் கூட்டி இந்தக் காரியத்தை ஒப்படைக்கிறோம். இது சாதாரண காரியமில்லை. ஒரு கட்டிடத்தைக் கட்டுவதிலும் பார்க்க மிகவும் சிரமமானது. அவர்கள் இந்தக் கட்டிட வரைபடத்தை முதலில் ஆராய்ச்சி செய்து கட்டிடத்தைத் தாங்கும் ஆதார மையங்களில் வெடி மருந்துகளைப் பொருத்துவார்கள்.

அது வெடித்ததும் கட்டிடம் ஆடாமல், அசங்காமல் சொன்னபடி கேட்டு அதே இடத்தில் வேறு சேதம் விளைவிக்காமல் பொத்தென்று வந்து விழும். உன்னுடைய வில்லங்கங்களை ஒட்டுமொத்தமாகத் தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்காரனுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல் அனர்த்தம்தான் விழையும்.

விஷயம் இதுதான். மிகவும் பெரிய ஒரு கம்பனியின் மானேஜிங் டைரக்டராக நான் இரண்டு வருட காலத்திற்கு முன்பாக பதவி உயர்வு பெற்றிருந்தேன். எனக்கு வயது முப்பத்தைந்து; எனக்கு முன்பு இருந்தவர் வயதானவர்; திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார். கம்பனி இயக்குனர்கள் என் பேரில் முழு நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர். எல்லாம் நல்லாய்த்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று சனிதிசை பிடித்து ஆட்டத் தொடங்கியது.

விற்பனைகள் சரியத் தொடங்கின. தொழிலாளர்கள் அதிருப்தி காட்டி முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். முன்பிருந்த மானேஜிங் டைரக்டரின் மருமகன், ஜெயந்தன் என்பவன் கம்பனிக்கு எதிராக நாசகார வேலைகள் பார்க்கிறானாம். இவன் என்னுடைய பதவியில் கண் வைத்து ஆவலாக எதிர்பார்த்து இருந்தவன். சில இயக்குனர்களையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறானாம். பங்கு மார்க்கெட்டில் கம்பனியின் பங்குகள் சரியத் தொடங்கின. ஆனால் இது எல்லாத்தையும் விட மோசம் கிட்டடியில் வந்த செய்திதான்.

கம்பனியின் முழு மூச்சு ஏற்றுமதிதான். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்கு மாத்திரம் எழுபது வீதம். சமீபகாலங்களில் வந்த ஓடர்களை முற்றிலும் நிறைவேற்ற முடியாமல் கம்பனி தத்தளித்தது. எதிராளிக் கம்பனி ஒன்று இந்த ஓடரில் ஒரு பகுதியைத் தன் வசமாக்க முயற்சிகள் செய்து வந்தது. இது அவர்களுக்குப் போனால் வேறு வினையே வேண்டாம் ; கம்பனியை இழுத்து மூட வேண்டியதுதான்.

தலைக்குமேல் தண்ணி போய்விட்டது. இனி என்ன செய்யலாம் என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு யோசித்த போதுதான் திருவண்ணாமலை ஞாபகம் வந்தது. அங்கே ஒரு மகாயோகி இருக்கிறார். எனக்கு இப்படியான இக்கட்டுகள் வரும் போது அவரிடம் தான் ஓடுவேன். இதே மாதிரி இரண்டு முறை முன்பு போயிருந்தேன். அவர் அறிவுரை, ஆசியென்றல்லாம் வழங்க மாட்டார்; உங்கள் சிந்திக்கும் திறனைத் தூண்டிவிடுவார். அடுத்த நாளே திருவண்ணாமலை போய்விட்டேன். இரண்டு நாளாக யோகியாரை எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் யாரோ சொன்னார்கள் யோகியார் பதினாறு கால் மண்டபத்தில் இருப்பதாக. யோகியாரிடம் ஓடினேன், அவர் சிரித்தபடியே இருந்தார். அந்தச் சிரிப்பிலே எத்தனையோ அர்த்தங்கள் எனக்குத் தெரிந்தன. ஸ்வாமியைப் பார்த்தவுடன் எனக்கு வந்த காரியம் எல்லாம் மறந்து விட்டது; அது மாத்திரமல்ல, என் கஷ்டமெல்லாம் அர்த்தம் இல்லாத தாகவும் பட்டது. என் கண்கள் பனித்துவிட்டன. ஸ்வாமி என்னையே பார்த்தபடி இருந்தார்.

“ஆதிமூலத்தை அறிந்து விட்டாயா?” என்றார்.

“ஸ்வாமி, அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்; நீங்கள்தான் காட்ட வேணும்” என்றேன்.

“மடையா, நான் என்னத்தைக் காட்டுவது? நீதான் தேடிப் பிடிக்க வேணும்” என்றார்.

“ஸ்வாமி, எனக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது …”

“என்ன, சாயுஜ்ய பதவியா?” என்றார், ஸ்வாமி சிரித்தபடி.

“இல்லை, இது சாதாரண பதவிதான். மிக நல்லாக முன்னேறி வந்த கம்பனி காரணமின்றி படபடவென்று சரியத் தொடங்கிவிட்டது. நாலா பக்கத்திலும் இருந்து எனக்கு தொல்லைகள். தலை நிமிர்த்தவே முடியவில்லை; மீளும் வழியும் தெரியவில்லை” என்றேன்.

“நாலா பக்கமும் பிரச்சனைகள் இல்லை; பிரச்சனையின் மூலம் ஒன்றுதான். நீதான் நாலு பக்கமும் பார்க்கிறாய். ஸ்பெய்ன் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா?”

“சொல்லுங்கள், ஸ்வாமி”

“மேரடோர் என்பவன் எருதுடன் சண்டை போட்டு அதைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வீரன். எருதுக்கும் இவனுக்கும் ஒரு நீண்ட போர் நடக்கும். இறுதியில் எருது களைத்து, தலையைத் தாழ்த்தி சோர்ந்து போய், ஆனால் கடைசி மூச்சின் ஆங்காரத்தோடு சண்டை போடும். எருது தலை குனிந்திருக்கும் அந்தக் கணத்தில் மேரடோர் என்பவன் தன் நீண்ட வாளை உருவி மாட்டின் தோள் துவாரத்தில் வாளை நுழைத்து அதன் ஆதார நாடியை சேதித்து விடுவான். இந்த நேரம்தான் மகத்தான உண்மையான நேரம். எருது அந்தக் கணமே விழுந்து இறந்து விடும்.”

“ஸ்வாமி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால் அந்த ஆதாரநாடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே? திசை தெரியாத பறவைபோல அல்லவா சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன், ஒரு வழி காட்ட முடியாதா?”

ஸ்வாமி யாரோ பக்தர்கள் கொடுத்துவிட்டுப் போன ஒரு சீப்பு வாழைப் பழத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பிய்த்தார். “இந்தா, இதைக் கொண்டு போ. இரண்டு நாளைக்கு இதுதான் உனக்கு சாப்பாடு. கொஞ்சம் பால் வேண்டுமானால் மட்டும் பருகலாம். மூன்றாம் நாள் காலை இங்கிருந்து போய்விடு” என்றார். நானும் பழத்தை எடுத்துக் கொண்டு என்னுடைய மடத்தை நோக்கிப் புறப்பட்டேன்.

அடுத்த நாள் காலை. ஒரு பழமும் ஒரு அண்டா பாலும் சாப்பிட்ட பிறகு பசியும் ஆறவில்லை ; பிரச்சனையும் தீரவில்லை . நான் படித்ததெல்லாவற்றையும் மறுபடி அசைபோட்டு பார்த்தேன். பீட்டர் ட்ரக்கர் கூறியதையும், கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங் களையும், பிரடெரிக் டெய்லர் எழுதி வைத்ததையும் நினைவுகூர்ந்து பார்த்தேன். மனமானது சுழன்று சுழன்று வந்ததே ஒழிய ஒரு பிடியும் கிடைக்கவில்லை.

சிந்திப்பது மூன்று வகைப்படும். ஒன்று செக்கு மாட்டு வகை; ஒன்றையே திருப்பித் திருப்பி அசை போடுவது. இது பிரயோசன மில்லாமல் நீண்டு கொண்டே போகும். இரண்டாவது தொடர் சங்கிலி சிந்தனை முறை. இது ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றாக தர்க்க ரீதியாக வருவது. மூன்றாவது பரவல் சிந்தனை. அறிவியலுக்கு ஆதாரமான பல சித்தாந்தங்களை பரவல் சிந்தனை மூலம்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். ஆகாய விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதரர்களா கட்டும், பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாந்தர் பிளெமிங் ஆகட்டும், பரவல் சிந்தனை மூலம்தான் தங்கள் மகாகண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள்.

இத்தாலி மகாவிஞ்ஞானி கலீலியோ ஒரு நல்ல கிறிஸ்துவர். அவர்தன் சித்தாந்தங்களை வெளியிட்ட போது அவை அன்றைய கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்தன. இருந்தும் அவர் தன் கருத்துக் களை அவசரமாக பகிரங்கப்படுத்திவிட்டார். தேவாலயத்து மதகுருக் களுக்கு அவர் கூறியது சங்கடமாக இருந்தது. வேறு என்ன? அவர் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது’ என்று அபத்தமாக உளறினால் அவர்களுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்? அவருக்கு அறுபத்தொன்பது வயது நடக்கும் போது தேவாலயத்தினர் அவரைச் சிறையில் இட்டனர்; சொன்னதை மறுதலிக்கும்படி வற்புறுத்தினர். கலீலியோ “பூமி சூரியனை சுற்றவில்லை, பூமி சூரியனை சுற்றவில்லை” என்று உரத்துச் சொல்லி விட்டு மனதிற்குள், தனக்கும் பூமிக்கும் மட்டுமே கேட்கும் படி, “என்றாலும் சுற்றுகிறது” என்று கூறினாராம்.

உலகத்தின் இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணம் கலீலியோ போன்ற விஞ்ஞானிகளின் பரவல் சிந்தனைகள் மூலம் பிறந்த அருமையான கண்டுபிடிப்புகள்தான். நான் தேடிக்கொண்டிருக்கும் விடையும் இப்படியான சிந்தனைகளில் தான் தங்கியிருக்கிறது என்று எனக்குப் பட்டது. மனதைக் குவித்து ஏகாக்கிரக சிந்தனை என்று சொல்வார்களே அப்படி நேர்ப்படுத்தினேன்.

மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். தொழிற்சாலையில் போதிய ஓடர்கள் வந்து குவிகின்றன; உற்பத்தி வேகமும் குறைந்ததாகத் தெரியவில்லை . விற்பனைகள் சரிவதின் காரணமென்ன? ஜெயந்தன் செய்யும் நாச வேலைகளாக இருக்குமா? அவன் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கம்பனியிலிருந்து ஒரு பெண்ணாக கூட்டிக்கொண்டு திரிகிறானே, இதற்கு நேரம் இருக்குமா?

ஜெயந்தனுடன் நேர் மோதலை நான் தவிர்த்து வந்தேன். ஒருமுறை கேட்டுவிட்டேன்: “ஜெயந்தன், நீ என்ன இப்படி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறாயே! இது உனக்கும் நல்லதல்ல; பெண்ணுக்கும் நல்லதல்ல; கம்பனிக்கும் நல்லதல்ல.”

அதற்கு அவன் கூறிய பதில் விசித்திரமாக இருந்தது. “எனக்கு பதின்மூன்று வயதாகியதிலிருந்து நான் இப்படி ஒரு விரதம் காத்து வருகிறேன். எப்பவும் கன்னிப் பெண்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டு மென்பதுதான் அது. எனக்குக் கிடைக்கும் அந்த பாதுகாப்பை இப்படி சடுதியாக துறக்கச் சொல்கிறாயே. இது நியாயமா? நீ அதற்குப் பொறுப் பேற்பாயா?” என்றான். நான் அவனுக்குப் பைத்தியம் முற்றிப் போய் விட்டது என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.

உண்மையிலேயே இவன் பைத்தியக்காரத்தனமான வேலைகள் செய்வானோ? தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகைகளெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோமே! சக தொழிலாளருடன் ஒப்பிடும் போது இவர்களுடைய சம்பளமும் வருமானமும் மிகக் கூடுதலாகவல்லவா இருக்கிறது. இருந்தும் அவர்களுடைய அதிருப்தியைத் தூண்டி விடுவதற்கு இவன் காரணமாக இருப்பானோ?

திருப்பித் திருப்பி செக்குமாடு போலத்தான் சிந்தனை சுழன்று கொண்டே வந்தது. இரண்டு நாள் இரண்டு யுகம் போலச் சென்றது. மிஞ்சியது பசியும் களைப்பும்தான். மூன்றாம் நாள் அதிகாலையே எழும்பிவிட்டேன். நான் வந்தது வியர்த்தம் போலத்தான் பட்டது. பிரச்சனை அப்படியே கொழுக்கட்டை போல் முழுசாக இருந்தது. நல்ல பசி. சாப்பிட்டுவிட்டு திரும்புவோம் என்ற முடிவோடு புறப்பட்டேன்.

பாதையோரத்தில் அந்தக் கிழவி சுடச்சுட தோசை வார்த்து விற்றுக் கொண்டிருந்தாள். நான் போன போது அங்கே ஒரு சிறுமி மாத்திரம் தோசை வாங்கிப் போக வந்திருந்தாள். கிழவி தோசையை ஒரு

பெட்டியில் அடுக்கிவிட்டு அதை மூட முயற்சி செய்து பார்த்தாள். வாழை இலை நேராக நட்டுக்கொண்டு நின்றது. அப்போ அந்தச் சிறுபெண் “பாட்டி, வாழை இலையை மடித்துவிடு, மடித்துவிடு” என்று மணியடிப்பது போல சொல்லிக்கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மூளையிலே ஒரு மின்பொறி தட்டியது. “அப்படியும் இருக்குமா?” என்று மனசு போட்டு அடித்துக்கொண்டது.

அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு உடனேயே புறப்பட்டேன். வழிநெடுக சிந்தனை தொடர்ந்தது. ஒரு பெரிய கேள்விக்கு சிறிய விடை கொடுப்பதும் ஒரு சிறிய கேள்விக்கு பெரிய விடையொன்று தருவதும் சில வேளைகளில் நடப்பதுதான். மிகவும் படித்து இறுமாந்த ஒளவைக் கிழவி ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்கவில்லையா? கிழவி, சிறுவன்தானே என்று பாராமல் அவனுடைய கேள்விக்கு ஆழ்ந்து யோசித்திருந்தால் சரியான விடை கூறியிருப்பாள். அல்லவோ? ஒளவையார் பழத்தை எடுத்து “பூ, பூ” என்று ஊதியபோது சிறுவன், “என்ன பாட்டி! பழம் சுடுகிறதா?” என்று கேட்டு சிரித்த அந்தத் தருணத்தில் ஒளவையாருடைய மனம் என்ன பாடு பட்டிருக்கும்! ஒரு கணத்திலும் கணம் சிந்திக்கத் தவறியதன் விளைவல்லவா இது?

தொழிற்சாலையை வந்து அடைந்ததும் முதல் வேலையாக கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ஓடர்கள் எல்லாம் உரிய காலத்தில் தொழிற்சாலையில் முடிக்கப்பட்டுவிட்டன. ஏற்றுமதியில்தான் பிரச்சனை துறைமுகத்திலே தேக்கம்; துறை முகத்துக்கு எடுத்துப் போகும் வாகனங்களின் பற்றாக்குறை; ஆனபடியால் தொழில் சாலை கிடங்கிலும் ஏற்றுமதிப் பொருட்கள் குவிந்து கிடந்தன.

எங்கள் தொழிற்சாலையில் நாங்கள் உற்பத்தி செய்தது உயர்ந்த ரக சமையல் பாத்திரங்கள். சமையல் பாத்திரங்கள் என்றால் சாதாரண வீட்டு சமையல் பாத்திரங்கள் அல்ல. இவையோ மிகப்பெரிய ஹோட்டல் களிலும் சமையல் விடுதிகளும் பாவிக்கும் உறுதியான எஃகுப் பாத்திரங்கள்; செப்பு அடித்தகடு வைத்த பென்னம் பெரிய பாத்திரங்கள். நாலு பருமன்களில் ஒன்பது ரக பாத்திரங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். இதற்காகத் தயாரித்த விசேஷமான பெரிய அட்டைப் பெட்டிகளில் அவற்றைப் போட்டு அடைத்து ஏற்றுமதி செய்வதுதான் வழக்கம்.

இந்தப் பாத்திரங்களின் கைப்பிடிகள் பெரிதாக மேலே நீட்டிக்கொண்டு நிற்கும். முதல் வேலையாக கம்பனி வரைபட வல்லுனரைக் கூப்பிட்டு இந்தப் பாத்திரங்களின் கைப்பிடிகளை மடித்துவிடக்கூடியதாகச் செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். அவருடைய சிந்தனையும் என்னுடையது போல ஒரே நேர்க்கோட்டில் போயிருக்க வேணும். ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமலே போய்விட்டார். அடுத்த நாள் அவர் கொண்டு வந்த புது டிசைனில் ஒரு பாத்திரத்தை செய்து பார்த்தோம். அது நல்லாகவே வந்திருந்தது.

அதிர்ஷ்டவசமாக பக்கிங்’ பெட்டிகளில் ஒரு சிறு மாற்றம்தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அறுநூறு கன அடியில் முன்பெல்லாம் நூறு பாத்திரங்கள் அடைத்து அனுப்ப முடிந்தது. இந்தப் புது டிசைன்படி நூற்றி நாற்பத்தி மூன்று பாத்திரங்கள் அடைக்கக்கூடியதாக இருந்தது. எங்கள் வாடிக்கைக்காரர்கள் இந்தப் புது டிசைனை வரவேற்றார்கள்.

என்னுடைய ஊகம் சரிதான். உற்பத்தி குறையவில்லையென்றாலும் ஏற்றுமதியில் தான் பிரச்சினை. தொழிற்சாலையில் இருந்து கப்பலுக்கு போவதில் சுணக்கம்; துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுமதி செய்வதில் தடங்கல். பாத்திரங்களின் கைப்பிடியை மடக்குவதால் இப்போது முந்திய கன அளவில் கூடிய பாத்திரங்களை அனுப்பக்கூடியதாக இருந்தது.

எங்கள் புது டிசைனை நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். கிடுகிடுவென்று துறைமுகத்தில் தேங்கியிருந்த பெட்டிகள் குறையத் தொடங்கின. தொழிற்சாலை சூடு பிடித்தது. ஆறே மாதத்தில் தேங்கி நின்ற பொருட்கள் எல்லாம் கப்பலேறிவிட்டன. ஓடர்கள் வரவர அவை உற்பத்தியாக்கப்பட்டு அதே வேகத்துடன் பக்’ செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஏற்றுமதியின் வேகம் பார்த்து புது ஓடர்களும் வந்து குவிந்தன.

இதற்கிடையில் தொழிற்சாலை போனஸ் முறையிலும் சிறு மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன்பெல்லாம் உற்பத்தியில் போனஸ் கொடுக்கப்பட்டது. இப்போதோ ஏற்றுமதி அல்லது விற்பனை என்ற அடிப்படையில் கூடிய விகிதத்தில் போனஸ் வழங்கப்பட்டது. விளைவு? தொழிலாளரிடம் கூடிய ஒற்றுமை இருந்தது; எல்லோரும் ஒரே நோக்கத்தோடு பாடுபட்டார்கள்; தேக்கம் என்பதே அரிதாகி விட்டது.

எங்கள் வரைபட வல்லுனரின் பெயர் சின்ன பாரதி. அவருடைய தகப்பனார் பாரதியின் ரஸிகராக இருந்திருக்கக் கூடும். அவர் அதிசயித்துப் போனார். அவர் முப்பது வருடமாக அங்கே வேலை பார்த்து வருகிறார். அவர் கேட்டார்: “இத்தனை வருட காலமும் ஏன் ஒருவரும் இது பற்றி சிந்திக்கவில்லை?”

அதற்கு நான், “சில பேர் சில விஷயங்களை ஓர் இக்கட்டான சமயம் வரும் போதுதான் கண்டு கொள்கிறார்கள். இப்படியான கஷ்டம் எங்களுக்கு முன்பு வந்ததில்லையே” என்றேன்.

ஆனால் எனக்கு இன்னுமொரு வேலை இருந்தது. இழந்து போன ஓடர்களை மீட்பதற்கும், புது ஓடர்களைத் தொடர்ந்து ஸ்திரப்படுத்துவதற்கும்; வாடிக்கைகாரர்களின் நன்மதிப்பை பெறுவதற்கும் ஒரு புதுவித அணுகுமுறை தேவைப்பட்டது. ஜெயந்தன் அதற்கு மிகவும் தகுந்த ஆளாகப் பட்டார். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து கம்பனிக்கு ஒரு புது முகத்தை தயார் பண்ண வேண்டிய பொறுப்பை அவரிடம் கொடுக்க முடிவு செய்தேன்.

சின்ன பாரதி இதைக் கேள்விப்பட்டதும் அசந்து விட்டார். அவர் அனுபவஸ்தர்; நம்பகமானவர். அவருடைய அறிவுரைகளை நான் அவ்வப்போது கேட்பதுண்டு. அவர் சொன்னார்: “ஜெயந்தனுடைய அசைந்தாடும் நெஞ்சில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அவனிடம் இப்படியொரு பொறுப்பை ஒப்படைக்கலாமா? அரபுக் குதிரை போல் நிமிர்ந்து திரியும் வெள்ளைக்கார மோகினிகளின் கண் வீச்சிலே இவனுடைய புத்தி சிதறிவிடுமே! இது இன்னும் சீரழிவையல்லவோ கொண்டு வரும்.”

ஆனால் என்னுடைய உள் மனதுக்கு நான் செய்வது சரி போல் பட்டது. துணிந்து இந்தக் காரியத்தை ஜெயந்தனிடம் ஒப்படைத்தேன். ஜெயந்தனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவருக்கு இப்படியாக கம்பனி செலவில் உலகம் சுற்றுவது மிகவும் பிடித்த காரியமாகப் போய்விட்டது. இது தவிர இன்னுமொரு முக்கியமான காரணமும் இருந்தது.

அவருடைய மாதச் சம்பளத்தை தவிர அவர் பிடிக்கும் ஓடர்களின் பிரகாரம் அவருக்கு ஒரு ஸ்பெஷல் போனஸ் இப்போதெல்லாம் வழங்கப்பட்டது. ஜெயந்தன் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் வெளியே தங்கினார். ஓடர்கள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. தொழிற் சாலையில் தொழிலாளர்கள் வெகு மும்முரமாக வேலையில் ஈடுபட் டார்கள். அவர்களுக்கு வேறு விஷயங்களுக்கு நேரமே இல்லை. ஏற்றுமதி போனஸ் மூலம் அவர்கள் வரும்படி நல்லாக விரிவடைந்திருந்தது.

என்னுடைய கல்யாண குணங்களில் சிரேட்டமானது அடக்கம். என் எதிரிகள் என்னை மகா மேதாவி’ என்றும் அறிவுஜீவி’ என்றும் திட்டும் போதெல்லாம் நான் மறுப்பதில்லை; பேசாமல் இருந்து விடுவேன். ஆனபடியால் என்னுடைய தனித்திறமையால் கம்பனியை அதல பாதாளத்தில் இருந்து மீட்டுவிட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ள மாட்டேன். அது தற்பெருமை போல் தோன்றும்.

ஆறு மாதத்தில் கம்பனி இழந்த விற்பனைகளை எல்லாம் மீட்டுவிட்டது. நடப்பு வருடத்து விற்பனை முந்திய வருடத்து விற்பனையிலும் பார்க்க இருபது சதவீதம் அதிகரித்துவிட்டது. மூன்று வருடங்களில் கம்பனியின் விற்பனை இரண்டு மடங்காகிவிட்டது; லாபம் எழுபது வீதம் கூடிவிட்டது. பங்கு விலைகள் கிறுகிறுவென்று ஏறிவிட்டன. இயக்குனர்கள் எல்லாம் ஒன்றுகூடி என் திறமையைச் சிலாகித்தார்கள். கம்பனியை இன்னும் விஸ்தரிப்பது பற்றிப் பேசிக் கொண்டார்கள். தொழிற்சாலையை விரிவு செய்யவும், புது மெசின்கள் வாங்கவும் ஆலோசனைகள் தர வெளிநாட்டு நிபுணர்கள் தருவிக்கப் பட்டார்கள்.

இப்படியாக என்னுடைய வாழ்க்கைத் தேர் அந்தரலோகத்தில் பவனி வந்தது. அரம்பையர் சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத்தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூட்டங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.

அரசாங்கம் திடீரென்று கொண்டு வந்த ஒரு புதிய சட்டத்தினால் கம்பனியின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. எங்களுக்குக் கிடைத்த சில சலுகைகள் நீக்கப்பட்டன. பார்த்துக் கொண்டிருக்கும் போதே கம்பனி கடகடவென்று கவிழத் தொடங்கியது. இந்த சமயத்தில் நான் கற்ற வித்தை ஒன்றும் பயன் தரவில்லை . தலைக்குமேல் தண்ணி போனபின் எனக்கு மறுபடியும் திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது. ஓடோடியும் சென்றேன்.

அங்கே யோகியார் என்னை எதிர்பார்த்து இருந்தது போல புன்சிரிப்புடன் வரவேற்றார். இந்த முறை எனக்கு வாழைப்பழம்கூட இல்லை; வெறும் தண்ணிதான். யோகியார் நான் சொன்ன எல்லா வற்றையும் பொறுமையுடன் கேட்டார். பிறகு என் கண்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

அது இன்னொரு கதை.

கணிதத்திலே ஆர்வமுள்ள வாசகர்களுக்கு மாத்திரம்:
பிரஸ்தாபிக்கப்பட்ட கணக்குக்கு விடை.

ஆற்றை உறைய வைக்க வேண்டும். அதன்பிறகு படகின் வேகம் மணிக்கு பதினைந்து மைல். தொப்பி விழுந்த போது அது ஆற்றில் அப்படியே இருக்கும். அரை மணியில் ஏழரை மைல் போன படகு திரும்பவும் அதே தூரத்தை கடக்க அரை மணி ஆகும்.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *