பரோட்டாவின் மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 2,525 
 

பரோட்டா, பொரட்டா, பரத்தா, புரோட்டா, ப்ரோட்டா இப்படி நீங்க சொல்ற எதுவா இருந்தாலும் அதுவாவே வச்சுக்கோங்க. யாருடா நீ? எங்க இருந்து வந்த? அப்படின்னு அதுட்ட கேட்காதீங்க, நான் சொல்றேன். இது இலங்கைல தொடங்கின ஒரு மாறுபட்ட ப்ரெட் போன்ற ஒரு உணவா தான் நாட்டுக்கு வந்துருக்கு, அப்புறம் மைதாவையே வீசி ஒரு லேயர் மாதிரி வடிவம் குடுத்து அத பரோட்டாவாக்குனது நம்மாளுங்க தாங்க. சிலர் அதெல்லாம் இல்ல கேரளா உணவுனு சண்டைக்கு வராதீங்க. உண்மையான பிறப்பிடம் இலங்கை தான், நமக்குள்ள சண்டை வேணாம்.

“தம்பி அதிகமா பரோட்டா சாப்பிடாத! தம்பி நைட் நேரம் பரோட்டா சாப்பிடாத! தம்பி மைதால செய்றது பரோட்டா, அதுனால ஒழுங்கா செரிக்காது!” இப்படி யாரு நமக்கு அட்வைஸ் பண்ணினாலும் சரி, நம்ம விஜய் அண்ணன் சொல்ற மாதிரி “ஒருதடவை முடிவு பண்ணிட்டா ஏன் பேச்ச நானே கேட்க மாட்டேன்டா” அந்த மாதிரி தாங்க, சிலர் கடைல போய் உட்கார்ந்ததும் “அண்ணன் ரெண்டு பரோட்டா ஒரு ஆம்லெட், அண்ணன் ரெண்டு பரோட்டா ஒரு குழம்பு கலக்கி, அண்ணன் ரெண்டு பரோட்டா ஒரு ஹாஃப் பாயில் னு ” என்னமோ ரெகார்ட் வாய்ஸ் மாதிரி அவங்க வாய் தானா சொல்லிடுங்க. இப்போ சின்ன சிரிப்பு உங்க முகத்துல வந்திருந்தா நீங்களும் நம்ம ரகம் தான். இப்படி ஆர்டர சொல்லிட்டு ஹோட்டலில் வெயிட் பண்ற அப்போ முட்டையை தட்டி உடைக்கும் சத்தம், அதை கலக்கும் ஸ்பூன் சத்தம், அதைப் புரட்டி போடும் கரண்டி சத்தம் இப்படி ஒவ்வரு சத்தமும் இன்னிசை தான், அந்நேரம் மாஸ்டரும் இசையமைப்பாளர் தான்.

இந்த பரோட்டாக்கு ஃபேமஸ் ஆன இடம் “செங்கோட்டை பார்டர் பரோட்டா” கண்டிப்பா எல்லாரும் கேள்வி பட்டுருப்பீங்க, அது மட்டுமில்லாம “விருதுநகர் எண்ணெய் பரோட்டா, சிலோன் பரோட்டா, கொத்து பரோட்டா, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து, வெஜ் கொத்து னு” அடுக்கிட்டே போகலாம். இப்போ கூட எல்லா வலைதளத்துலயும் வலம் வந்துட்ருக்க “வாழை இலை கொத்து பரோட்டா” வரைக்கும் எல்லாம் நம்ம பரோட்டாவோட பங்காளிங்க தான். அந்த வீடியோல குக் பண்ணி முடிச்சு அந்த வாழை இலையை விரிக்குறத பார்த்தாலே எச்சி ஊருதுங்க. எத்தன பேரு அத பார்த்து கிறங்கி போனிங்கனு தெரியல.

சரி அதெல்லாம் ஓரம் கட்டிட்டு நம்ம ஊரு ராம்நாடுக்கு வருவோம். தமிழ்நாட்டுல பரோட்டாக்கு எங்கப்பா பஞ்சம் வந்துச்சு, அதுமாதிரி நம்ம ஊருலயும் பரோட்டாக்கு பஞ்சம் இல்லேங்க. வெறும் பரோட்டா பரோட்டானு அதப்பத்தியே பேசாம, சால்னாவ பத்தி பேசுவோம், அவன் தான மெய்ன் ரோலு. சும்மா நல்லா அரைச்ச தேங்கா போட்டு, மசாலா போட்டு, சிக்கன்லாம் போட்டு, ரொம்ப தண்ணியாவும் ரொம்ப கெட்டியாவும் இல்லாம நடுத்தரமான தன்மையோட கொதிக்க வச்சு இறக்கி வச்சா, சும்மா கம கமனு 4 தெருக்கு வாசனை வரும் நம்ம ஊரு சிக்கன் சால்னா. அத அப்படியே பிச்சு போட்ட பரோட்டா மேல நல்லா ஊத்தி கொலப்பியடிச்சாலே உசுரோட சொர்கத்த பார்க்கலாமுங்க. சிலருக்கு சால்னா னு சொன்னா புரியாது, உங்க பாஷைல ” சேர்வா இல்ல குருமானு” வசுக்கங்க.

ஒரு நாலஞ்சு வருஷம் ஆச்சு ஊருக்கு போயி, ஆனா அங்க இருந்த வரைக்கும் நமக்கு பெஸ்ட் னா “பொன்னையா” கடை பரோட்டா தான். சும்மா சுருக்கு நருக்குனு காரசாரமான சால்னா. நம்ம வீட்டுல இருந்து போக வர 3 கிலோமீட்டர் தூரம் இருந்தா கூட, சளைக்காம பள்ளி பருவத்துல நடந்தே போய் பார்சல் வாங்கிட்டு வந்த காலமெல்லாம் இருக்கு. அதுக்காக இன்னும் ரெண்டு கிலோமீட்டர் சேர்ந்து கூட நடக்கலாம் தப்பே இல்ல, ஏன்னா அந்த டேஸ்ட் அப்படி. அங்க கிடைக்கிற குட்டி தோசை கூட செம்மயா இருக்குமுங்க. அதுக்காக மத்த ஹோட்டல் ஒன்னும் சும்மா இல்லங்க, “பாலன், சோலா, அஃப்ரின், ஐஷ்வர்யா, ஶ்ரீராம் ஹோட்டல்” னு அடுக்கிட்டே போகலாம் நம்ம ஊருல. எந்த ஹோட்டல் போனாலும் சால்னா இல்ல வெஜ் குருமாக்கு நான் கியாரண்டி. ஆனா எல்லா கடையை விடவும் நம்ம பொன்னையா கடைக்கு அரை மார்க் ஜாஸ்தி அம்புட்டு தான். நம்ம பொன்னையா கடை ஒன்னும் அழகால ஈர்க்கும் பிரமாண்ட கடை அல்ல, தன் சுவையால் முட்டுசந்துக்குள் மக்களை முட்டிக்கொள்ள வைக்கும் சுவையான கடை. சுவையிருந்தா கடை பெருசோ சிறுசோ நம்ம சென்னை மொய்தீன் பிரியாணி, சுக்குபாய் பிரியாணி மாதிரி தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்குமுங்க ஒரு நல்ல சுவையான கடை.

இப்படி இனிமையான பரோட்டா பக்கங்களை பார்த்துட்டு வெளிநாட்டுக்கு வந்தா தான் தெரியுது, எதுக்குடா இந்த பரோட்டா இங்க இருக்குனு. இங்க பாதி பேரு வாழ்க்கைல காலை உணவு ஒரு கிளாஸ் டீயும் பண்ணுமா தான் இருக்கு, மதியத்துக்கு ரெண்டு பரோட்டா தொட்டுக்க குடுக்குற எதாச்சும் ஒரு குழம்பு. அது சாம்பாரா இருந்தாலும் சரி, டாலா (பருப்பா) இருந்தாலும் சரி வாங்கிப்பாங்க. இது இப்படி போனா சிலர் நைட்டுக்கும் அதே ரெண்டு பரோட்டாவ வாங்கி காலத்தை தள்ளுரவங்களும் இருக்காங்க. என்ன தரம், எப்படி இருக்கு, சூடா இருக்கா, சுவையா இருக்கா அதெல்லாம் பார்க்க இங்க பலருக்கு நேரம் இல்ல, எப்படி இருந்தாலும் சரி ரெண்டு பரோட்டாவ தின்னுட்டு நடைய கட்டுவாங்க. சரி கம்மியான சம்பளம் வாங்குறவங்க தான் இப்படினா, நல்லா சம்பளம் வாங்குற சிலரும் இதான் பண்ணுறாங்க. அப்படி என்ன காரணம்னு பார்த்தா வேற ஒன்னும் இல்லேங்க “காசும் கம்மி, மைதா வயிறையும் அமைதி பண்ணிடும்” அம்புட்டு தான். நல்ல சம்பளம் வாங்குற சிலருக்கு சொல்றேன், இப்படி நீங்க கஷ்டப்பட்டு அனுப்புற பணத்தை உங்க குடும்பம் நிச்சயம் விரும்பாது நண்பரே! இந்த மோசமான நிலமைல நம்ம உடம்பு ஒன்னு தான் நமக்கு ஒரே சொத்து, அப்போ தான் நம்ம ஃபிளைட் ல இருந்து இறங்கி “நடந்து ஊருக்கு போக முடியும்”.

நான் சொல்லுறத நம்பலைனா உங்களுக்கு தெரிஞ்ச வெளிநாட்டுல இருக்க “நண்பனையோ, கணவனையோ, தம்பியையோ, அண்ணனையோ, மாமனையோ, மச்சானையோ” ஒருமுறை வீடியோ கால் பண்ணி கேட்டு பாருங்க என்ன சாப்பிட்ட? னு “அவங்க சொல்லுற பொய் அவங்க முகத்தை பார்த்தாலே தெரிஞ்சுடும்”. அப்படியே சிலர் அடிக்கடி பரோட்டானு உண்மைய சொன்னா “காசு மட்டுமே வாழ்க்கை இல்லைனு” கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *