குருஷேத்திரப் போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. துரோணாச்சாரியாரின் அம்பு மழையால், பாண்டவப் படைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாயின. கவுரவர்களின் கை ஓங்கி நின்றது. மாலை ஆவதற்குள், துரோணர் ஒருவர் மட்டுமே, பாண்டவப் படைகளின் பாதி பலத்தைக் குறைத்துவிடுவார் என்ற மோசமான நிலை. இது, அர்ஜுனனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்குப் புலப்பட்டது.
இந்நிலை நீடித்தால், பாண்டவர்கள் தோல்வியடைவது நிச்சயம் என்று யூகித்த கிருஷ்ணன், ஏதாவது ஒரு உபாயத்தைக் கையாண்டு, போரின் போக்கைத் திசை திருப்ப வேண்டுமென்று நினைத்து, தன் கதாயுதத்தால், கவுரவப் படைகளை துவம்சம் செய்து கொண்டிருந்த பீமனிடம் சென்றார்.
“”பீமா! நம் படைகளை அசுவத்தாமன் என்ற கவுரவர்களின் யானை அடித்து நொறுக்குகிறது பார். அதன் தலையை உன் கதையால் பிள,” எனக் கட்டளையிட்டார்.
இவ்வளவு சொன்னால் போதாதா, பராக்கிரமசாலியான பீமனுக்கு. யானையின் மேல் பாய்ந்தான். யானையின் தலையில் தன் கதையால் பறந்து, பறந்து அடித்தான். பாவம்! அசுவத்தாமன் சுருண்டு விழுந்து உயிரைவிட்டது.
சாரதியாகிய கிருஷ்ணன், இப்போது தர்மரிடம் வந்தார்.
“”நம் படைகளை வதம் செய்த அசுவத்தாமன் என்ற யானையை பீமன் கொன்றுவிட்டான். “அசுவத்தாமன் இறந்தான்’ என்று துரோணருக்குச் சொல்லுங்கள்.”
தர்மத்தின் காவலரான யுதிஷ்டிரர், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டுத் தயங்கினார்.
“”இதிலென்ன தயக்கம்?”
“”அசுவத்தாமன் என்ற யானை இறந்துவிட்டது என்பதற்குப் பதிலாக, அசுவத்தாமன் என்ற தனது மகன் தான் போர்க்களத்தில் இறந்துவிட்டான் என்று துரோணர் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?”
“”அப்படி அவர் மாறுபாடாக எடுத்துக் கொள்வது உங்கள் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?”
சற்றுத் தயங்கிய தர்மர், “”துரோணாச்சாரியரே! அசுவத்தாம யானையை பீமன் கொன்றுவிட்டான்,” என்று துரோணரை நோக்கி உரக்கக் கூவினார்.
அவ்வமயம் கிருஷ்ணன் சங்கநாதம் எழுப்பினார்.
“”தருமரே! என்ன சொல்கீறிர்கள்? சரியாகக் கேட்கவில்லை,” என துரோணர் திருப்பிக் கேட்டார்.
“”அசுவத்தாமனை, பீமன் கொன்று விட்டானாம்.”
சரியான நேரத்தில் இடையில் புகுந்து பேசினார் கிருஷ்ணன்.
“”இது உண்மையா தருமரே!” பதைபதைப்புடன் கேட்டார் துரோணர்.
தருமர் மவுனமாக நின்றார்.
“தன் நேசத்திற்குரிய அருமை மகன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகக் கூறியதற்கு தருமர் மவுனம் சாதிக்கிறாரே. மவுனம், சம்மதத்தின் அறிகுறிதானே,” என்று நினைத்த துரோணர் நிலை குலைந்தார். போர்க்களத்தை விட்டு அப்போதே வெளியேறிவிட்டார். வெற்றி, திசை மாறியது.
கிருஷ்ணர் கூறிய பொய்யை தருமர் மறுத்திருக்க வேண்டும். அப்படி அவர் மறுக்காததால், பொய் சொன்ன குற்றத்திற்கு அவரும் உள்ளானார். மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இருந்த தருமர், சாதாரண மனிதனின் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதுகாறும், தர்மரின் தேர்ச் சக்கரங்களைத் தரையில் படாமல் அந்தரத்தில் நிறுத்திக் கொண்டிருந்த தர்ம தேவதைகள், தர்மரின் தேரைத் தரையில், “பொத்’தென்று போட்டன.
– ஆகஸ்ட் 06,2010