வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு வயதான சுந்தரி புத்தகத்திலேயே பார்வை வைத்தபடி இருப்பதையும் பார்த்தாள்.
“சுந்தரி, மேஜையில் இருந்த கண்ணாடித் தட்டு உடைந்துபோய்க் கிடக்கிறதே! அந்த எலிதான் தட்டைத் தட்டி உடைத்திருக்க வேண்டும்’ என்றாள் அம்மா.
சுந்தரி உடனேயே பதில் சொன்னாள்-
“ஆமாம், அம்மா, அந்த எலிதான் தட்டைத் தட்டி உடைத்திருக்கிறது…’
அம்மா புன்னகையோடு சுந்தரியைப் பார்த்தாள்.
u
“இவ்வளவு பெரிய தட்டை எப்படி அந்த எலியால் மேஜையில் இருந்து தட்டியிருக்க முடியும்?’ என்றாள் அம்மா.
சுந்தரியின் முகம் சுருங்கிற்று.
“வாலினால் தட்டியிருக்குமோ?’ என்று கேட்டாள் அம்மா.
சுந்தரியிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை.
அம்மா. அன்போடு சுந்தரியின் தோளைத் தொட்டாள்.
“கண்ணு, அந்த எலியின் பெயர் என்ன தெரியுமா? சுந்தரிதான் அந்த எலியின் பெயர். இரண்டு கால் எலி!’ என்றாள்.
சுந்தரி நாணித் தலை குனிந்தாள்.
“அம்மா நான்தான் தட்டை உடைத்துவிட்டேன். தெரியாமல் செய்துவிட்டேன். பொய் சொன்னதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.
– டிசம்பர் 2011