ஓருநாள், தீவிர யோசனைக்குப் பிறகு நாக்கு, பற்களிடம், “நண்பர்களே, நீங்கள் உங்கள் தோழர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்கிறீர்கள். உணவுப் பொருள்களை நன்றாக அரைத்து எனக்குச் சுவையாக இருக்கும்படி தருகிறீர்கள். நானோ தன்னந்தனி ஆளாக இருக்கிறேன். நீங்களோ முப்பத்து இரண்டு பேர். இருப்பினும் உங்களால் எனக்கு எந்தவிதத் தொல்லையும் இல்லை. உங்களுக்கு நடுவில் நான் இருந்தாலும் என்னைக் கடிப்பதோ, நசுக்குவதோ இல்லை! எனக்கு நீங்கள் செய்யும் உபகாரம் இது! இவ்வாறு நீங்கள் உபகாரம் செய்வதற்கு நன்றிக் கடனாக உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்று கூறியது.
அதற்கு, பற்கள், “நீ எங்களுக்கு ஒரே ஒரு உதவி செய்தால் போதும்! நீ ஏதாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டால், உன்னை யாரும் ஒன்றும் சொல்வதில்லை. கோபத்தில் உடனே “பல்லை உடைப்பேன்’ என்று எங்களைத்தான் திட்டுகிறார்கள், மிரட்டுகிறார்கள்! சமயங்களில் அப்படியே செய்தும் விடுகிறார்கள். அதனால் உனக்கு எங்கள் மீது உண்மையிலேயே நல்லெண்ணம் இருந்தால், எங்களுக்கு எந்தவிதத் துன்பமும் வராமல் அடக்கமாகவும் பணிவாகவும் நல்லதையே பேசினால் அதுவே எங்களுக்கு நீ செய்யும் மிகப் பெரிய உதவியாகவும் உபகாரமாகவும் இருக்கும்!’ என்றன.
– செவல்குளம் ஆச்சா (பெப்ரவரி 2012)