கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 16,794 
 

பெரிய ஈயச் சட்டியில மொச்சைப் பயறு ஒரு அடுப்புலயும் சீனிக் கிழங்கு ஒரு அடுப்புலயும் ஏத்தி வச்சிட்டு வேலிமுள்ளையும் விறகுக் கட்டையையும் ஒவ்வொன்னா திணிச்சி கொஞ்சம் சீமெண்ணெயை ஊத்தி அடுப்பு பத்த வச்ச பொன்னம்மா தான் அந்த வீட்டுக்கு வந்த முதல் மருமக..

ஒன்பது மாச பிள்ளைத்தாச்சியா இருந்தாலும் மாமியாருக்குப் பயந்து பயந்து வேலை செய்வா..

“என்னத்தா ,நான் கடைக்குப் போயிட்டு வாரேனு சொல்லிக்கிட்டே தோள்ல கிடந்த அந்த பச்சைத் துண்ட சுருட்டி சும்மாடு செஞ்சி,

“வா, ஒரு கை பிடி “..என்று தன் மனைவியை குருசாமி துணைக்கு அழைக்க அவளும் வேக வைத்து வச்ச மொச்சைப் பயறையும் சீனிக்கிழங்கையும் ஒன்னுக்கு மேல ஒன்னா வச்சி அவரை வழியனுப்பி வீட்டுக்குள்ளே போனாள்…

ஓரம் கிழிஞ்சி கிடந்த கோரப்பாயில் மூத்த மக குப்புறடிக்க கவுந்து படுத்து தூங்கிட்டு இருந்தா..விலகிக் கிடந்த பாவாடையை இழுத்துவிட்டு திண்டுல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்த பொன்னம்மாவுக்கு அடிவயிறு லேசா வலிக்க ஆரம்பிக்க …அவளுக்கோ பயம் வர ஆரம்பிச்சது…மருத்துவச்சி இன்னும் பத்துநாள் ஆகும்னு சொன்னாளே இப்பவே வலிக்குதே என்ன செய்யனு இடுப்ப பிடிச்சிக்கிட்ட வீட்டுக்குப் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளிக் கொண்டிருந்த மாமியாரிடம்,

“எத்தே …! எனக்கு அடிவயித்தோடு கவ்விப் பிடிச்சி இடுப்புக் கொடையுது”னு முட்டிக்கிட்டு வர்ர கண்ணீரை அடக்கமாட்டாம தொண்டை அடைக்க பேசினாள்…

“எப்பப் பார்த்தாலும் அதையே நினைச்சிக்கிட்டிருந்தா அப்படித்தான் இருக்கும் விளக்கெண்ணெய தொப்புல்ல தடவி நல்லா சுடுதண்ணி வச்சி இடுப்புல இருந்து ஊத்து …எல்லாம் சரியாப் போகும்…”னு சொல்லிக்கிட்டே தொடர்ந்து வாய்மூடாம “போன வாரமே சின்னவன் வடகாட்ல நாலைஞ்சி வேலிக் கருவேல மரத்தை வெட்டிப் போட்டு வந்துருக்கான்…இப்போ நல்லா காய்ஞ்சி போயிருக்கும் …சாந்திரம் அடுப்பு பத்தவைக்ககூட விறகு இல்லை …நீ போய் ஒரு கட்டு தூக்கிட்டு வந்துரு …போ ..போ.. முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு நிக்காம வேலையைப் பாரு”னு அவளுக்கான வேலையை சொல்லிட்டு பருத்திக் கொட்டையையும் புண்ணாக்கையும் அந்தப் பெரிய ஆட்டுரலில் போட்டு அரைக்கப் போயிட்டா மாமியா…

பக்கத்து கிராமத்துல வியாபாரத்துக்குப் போன குருசாமி வீட்டுக்கு வர மத்தியானம் ஆகிடும் …வலியோடு என்ன செய்துறதுனு புரியாம வீட்ல இருந்து மாமியார் கிட்ட திட்டு வாங்குறதைவிட முள்ளுக்கட்டு தூக்கவே போயிறாம்லுனு கிளம்பிட்டா பொன்னம்மா…

அங்கங்க பருத்திச் செடி மிளகாய்ச் செடினு பச்சைப் பசேல்னு இருந்தாலும் நாயக்கர் பிஞ்சையில இருக்குற கிணத்துச் சுவத்துல தரையோட வளர்ந்திருக்கும் சொடக்குத் தக்காளியும் முசுமுசுப் பழமும் ரொம்பப் பிடிக்கும் பொன்னம்மாவுக்கு…

அதை பறிச்சு சாப்ட்டுட்டு இன்னும் கொஞ்சம் சேலை முந்தானையில சேர்த்து வச்சிக்கிட்டு மெல்ல மெல்ல நடந்தா…

மேலத்தெரு கொட்டுக்காரன் பொண்ணாட்டி எதுத்தாப்புல வந்தவ “என்னத்தா …பேசாம வீட்ல கிடக்க வேண்டியதுதானே..வயிறுகூட கீழே இறங்கிருச்சி இப்பவோ அப்பவோனு பிள்ளைப் பிறந்திரும்போல இந்த நடுக்காட்டுக்குள்ள ஒன்னுகெடக்க ஒன்னாச்சுனா என்ன செய்வ…” என்றாள்.

“எல்லாம் என் தலையெழுத்து …வாக்கப்பட்டு வந்த இடத்துல எனக்கு இதுதானேக்கா வாச்சிருக்கு..நானும் வயிறு வலிக்குத்தேனு சொன்னேன், ஆனால் மாமியார்காரி வீட்ல இருக்க விடலையே” னு சொல்லிக்கிட்டே நகர்ந்தாள்…

என்னதான் வயசானாலும் சின்னச் சின்ன விளையாட்டுப் புத்திகள் எல்லோரிடமும் எப்போதுமே இருப்பது தனிசுகம்தான்..அதுபோலத்தான் பொன்னம்மா முள்ளுக்காடு போய்ச் சேர்ந்தா…அங்கே வெட்டாத மரத்துல குட்டிக் கொம்பு வச்சிக்கிட்டு கிளையோட வண்ணம் மாதிரியே ஒரு பூச்சி ஊறும் அதை கருவேலமாடுனு சின்னப்புள்ளைக சொல்வாங்க அந்த ஊர்ப்பக்கம்…அப்படியே நல்லா கிளையை கவ்விப் பிடிச்சிக்கிட்டே நகரும்..கொஞ்ச நேரம் அதையே பார்த்துகிட்டு ஒன்ன எடுத்து உள்ளங்கையில எடுத்து வச்சா…அது அப்படியே நிலையா நின்னுச்சி …நகரவேயில்லை…மறுபடியும் எடுத்து கிளையில வச்சிட்டு கொண்டுவந்த அறுவாளை வச்சி சிக்கிக் கிடந்த முள்ளை ஒவ்வொன்னா எடுத்து இரண்டு கயிறை பக்கத்து பக்கத்துல நீட்டா போட்டு அதுமேலே வச்சி செருப்புக்காலால முள்ளை நெருக்கி இறுக்கமா கட்டிக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தா…கண்ணுக்கெட்டுன தூரம் வரை யாரையும் கானோம்..தூக்குவாலியில கொண்டு வந்த தண்ணியக் குடிச்சிட்டு அப்படியே செத்த நேரம் வரப்பு மேலே உட்கார்ந்துகிட்டா..

கொஞ்ச நேரத்துல “மே..மே..”னு ஆட்டுக்குட்டிக சத்தம் கேட்க.. அந்த வழியா போன ஆடு மேய்க்கிறவனை முள்ளுக்கெட்டை தூக்கிவிடச் சொல்லி ஊருக்குள்ள வந்து சேர்ந்தா பொன்னம்மா…

“ஏத்தா ..!குடு இப்படி ..நான் போய் உங்க வீட்ல சேர்த்திரேனு சொன்ன மேலத்தெருவுல இருக்குற முதல் வீட்டுக்காரியிடம் கூட…”வேண்டாம்த்தா பத்ரகாளி மாதிரி ஆடுவா என் மாமியா”னு சொல்லிக்கிட்டே கடந்து போயிட்டா…

ஊர்க்கிணத்துக்கு ஒட்டுனாப்புல மொத்தமா ஒரு பத்து தென்னைமரம் இருக்கும் அதுதான் அவுக எடம் அங்கதான் மாட்டுச்சாணி குப்பையெல்லாம் சேர்த்து வச்சியிருப்பாக…கூடாரம் அளவு சேர்ந்தவுடனே நிலத்தை உழும்போது இதையும் போட்டு கிளறிவிடுறது வழக்கம்…அதுதான் நல்ல உரம்…அவங்கவங்க இடத்துல அவங்கவங்க குப்பைபை சேர்த்துவச்சி இப்படித்தான் பயன்படுத்துவாங்க…

கொண்டுபோன சுமையை அந்த இடத்துல போய் நின்னுக்கிட்டே தொப்புனு போட்டு முந்தானையால முகத்தைத் தொடச்சிக்கிட்டா..இருந்தாலும் சொலசொலனு வேர்த்துக்கிட்டேயிருக்க வலியோ அதிகமாப் போச்சு பொன்னம்மாவுக்கு…

என்னமோ சத்தம் கேட்குதேனு ஓடிவந்த பார்த்தா மாமியார், “அப்படியா அலுத்துப் போயிட்ட ..வென்னித் தண்ணி வைக்கக்கூட காங்காது இந்த முள்ளு ..இதைக் கொண்டு வந்துட்டு நடிக்கியாக்கும் “என்று கொஞ்சங்கூட கருணையில்லாம் வசவு பாடத் தொடங்கிவிட்டாள்…

இருக்க இருக்க வலி கொஞ்சம் அதிகமாகிக் கொண்டே போனது…நாலு ஓலையை மறவா வச்சி ஒரு பெரிய மண்பானையில தண்ணி ஊத்தி வச்சிருப்பாக அதுதான் அவர்களுக்கு பாத்ரூம் ..அந்தக் குடிசைக்குள்ள ஒதுங்கப் போனவ கொஞ்ச நேரத்துல காதுகிழியச் சத்தம் போட …பக்கத்து வீட்டு பெருசுகளும் மாமியாரும் வந்து பார்த்தா அங்கையே பிள்ளையை பெத்து போட்டு மல்லாந்து கிடந்தா பொன்னம்மா…

அப்போதான் வியாபாரத்துக்குப் போன குருசாமியும் வீடுவந்து சேர பதறிப் போய் மருத்துவச்சியை கையோடு கூட்டிட்டு வந்துட்டான்…

ஒருவழியா தாயையும் மகளையும் செண்டுக்க தூக்கி வீட்டுக்குள்ள வைக்கோல விரிச்சி அதுக்கு மேலே சீலைத் துணிகளை போட்டு வச்சிருந்த படுக்கையில கொண்டு வந்து சேர்த்தாக….

“ஏற்கனவே பொட்டப் புள்ளை இப்போ இதுவும் இப்படிப் போச்சி ..அவன் என்ன செய்வானோ” முணங்கிக்கிட்டே இருந்தா மாமியார் …

மகனை நினைச்சிக் கவலைப் பட்டு என்னவோ மருமக வேணும்னே பொம்பளைதான் வேணும்னு இறக்குன மாதிரி கரிச்சிக் கொட்டிய படியே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தாள்…

மகளைப் பார்க்க வந்த பொன்னம்மாவின் அம்மா குருவம்மாள் அங்குதான் இருந்தாள்…

“என்ன மதினி வஞ்சிக்கிட்டே யிருக்கீக..அவ என்ன செய்வா பாவம்…எந்தப் புள்ளையா இருந்தா என்ன..ஏதோ தாய் வேறு பிள்ளை வேறுனு நல்லபடியா ஆனது போதும்னு நானே குலசாமிய வேண்டிக்கிட்டு இருக்கேன் …நீங்க என்னடானா பிள்ளையா வசவா வஞ்சிக்கிட்டு கிடக்கீகனு”, கொஞ்சம் சத்தமாகவே எதிர்த்துக் கேட்டுவிட்டாள் குருவம்மா…

“ஆமா ..உன் மகளை நீதான் மெச்சுக்கனும் …அந்தப் புள்ளையை தூக்கி குப்பையில போடு…போதும் என் மகனுக்கு பொம்பளைப் புள்ளைக…”

இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத குருவம்மா மூக்கும் முழியும்மா குட்டிகுட்டியா இருக்குற அந்தக் கையையும் காலையும் தடவித் தடவி நீவிக்கிட்டேயிருந்தவ தன் மக பொன்னம்மா கூப்பிடுறதைக் கேட்டுத் திரும்புனா…

“எம்மா ..எனக்கு வயிறு கடுத்துக்கிட்டு இருக்கு பிள்ளைப் பிறந்ததுலயிருந்து நீர் பிரியலைனு” சொன்னா…

மடியில வச்சிருந்த பிள்ளையை மகளுக்கு முன்னால போட்டுட்டு …வீட்டுக்கு வெளியில பக்கத்து வீட்டு பெரியாத்தாகிட்ட வைத்தியம் கேட்க போனாள்.

“அடி ஆத்தி ..ஒரு நாளு முடியப் போகுதுல பிள்ளையைப் பெத்து …இன்னுமா நீர் பிரியலை ..இது நல்லதுக்கு இல்லை…இதுக்கு கை வைத்தியமெல்லாம் சரிப்பட்டு வராது ஆஸ்பத்திரிக்குத்தான் போகனும் சொல்லிருச்சு…”

மாமியாக்காரி ஒரு பக்கம் முணங்கிக்கிட்டேயிருந்தாலும் மருமகளை கூட்டிட்டு மாட்டுவண்டிய மகன் ஓட்ட பக்கத்து ஊர்ல இருக்குற கம்பவுண்டர்கிட்ட காமிக்கப் போனாக…

அவரும் என்னன்னமோ வைத்தியம் பார்த்தாரு ஒன்னும் வேலைக்கு ஆகலை அதுக்கடுத்து பெரிய டவுன்ல இருக்குற ஆஸ்பத்திரியில நாலு நாள் தங்க வச்சிதான் வயித்துல இருக்கிற சிறுநீரை எடுக்கனும்னு சொல்லிட்டாக…வேற வலியில்லாமா அங்க கொண்டு போயாச்சு பொன்னம்மாவை…கூடவே மகனை இருக்க வச்சிட்டு மாமியார் வீட்டுக்கு வந்தாச்சு..

தனக்கு உடம்பு சரியில்லைமா அவஸ்தைப்லட்டாலும் வீட்ல இருக்குற பிள்ளைகளை நினைச்சி கண்ணீர் வடிச்சா…

“நீ ஏந்த்தா அழுவுத ..அதான் உங்க அம்மா இருக்காகல்ல அவுக பாத்துப்பாக”னு குருசாமி அவ தலையை கோதிவிட்டு ஆறுதல் சொன்னான்…

வைத்தியம் பார்த்துட்டு பொன்னம்மாவும் குருசாமியும் இரண்டு நாள் கழிச்சி ஆஸ்பத்ரியில இருந்து வீட்டுக்கு வந்தாக…

வந்து பார்த்தா ஒரே ஆச்சரியம் …

பொம்பளைப்புள்ள பெத்துட்டானு மருமக மேல கோபமா இருந்த மாமியார் சிரிச்சிக்கிட்டே சுண்ணாம்பும் மஞ்சளும் கலக்கி அது நல்லா சிவப்புக் கலரா வந்ததும் அதுமேல இரண்டு வெத்தலை வச்சி சூடத்தைப் பொறுத்தி ஆரத்தி சுத்தி ஒரு ஓரமா ஊத்திட்டு மருமக கையைப் பிடிச்சி வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தா…

பேறுகாலமாகி நாளு நாளா பச்சைப்புள்ளைய விட்டுட்டுப் போனவ அவ அம்மா தூக்கி வச்சிருந்த மகளைத் தூக்கிக் கொஞ்சினாள்..இதுக்குள்ளாற முதுகைச் சேர்த்துக் கட்டிப் பிடிச்சிபடி மூத்த மக கைசப்பி

அம்மாவை அப்பிக் கொண்டாள்…

ரெண்டு மக்களையும் கொஞ்சிட்டு

“எம்மா …என்ன நடந்துச்சி என் மாமியா ரொம்ப மாறிப் போயிட்டாகனு “அம்மாவிடம் சின்னக் குரலில் கேட்டாள் பொன்னம்மா…

“அது ஒன்னுமில்லடி ..நீ ஆஸ்பத்திரிக்கு போனதும் பிள்ளை பிறந்த வீடு தேடி உள்ளூரு நர்சம்மா வந்துச்சி …

வந்து எல்லா விபரமும் கேட்டுச்சி …ஒரு வெள்ளைத் தாளுல எல்லாம் குறிச்சி வச்சிக்கிட்டு உன் மாமியார்கிட்ட, “பிறந்தது இரண்டும் பொம்பளைப் புள்ளைங்கங்கிறதுனால அரசாங்கம் அவுகளுக்கு காசு குடுக்கும் ..குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷனும் செஞ்சிட்டு வந்துருங்கன்னு சொல்லிட்டுப் போச்சு…”

“ஏ ஆத்தா…நான் பொம்பளைக ஒன்னுக்கும் ஆகாதுனுல நினைச்சிருந்தேன். இந்தக்குட்டி பிறக்கும்போதே மகாலட்சுமி மாதிரி செல்வத்தோடல்ல வந்திருக்கா..”பெருமை பீத்திட்டு திரியுது பக்கத்து வீடெல்லாம்…என்று சொல்லிச் சிரித்தாள் குருவம்மா.

அதுக்குள்ளாக பூண்டுக் குழம்பு வச்சி சோத்தை மறைச்சி வச்சி யார் கண்ணுலயும் படாத மாதிரி மருமக கையில் கொடுத்து விட்டு மாட்டுத் தொழுவத்தை நோக்கிப் போனாள் அந்த மாமியார்…

– 23-02-2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *