நான் – A அவள் – Z

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 38,283 
 

‘ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம்.
நீயும் ஒரு அரசியல்வாதி!’

– என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்?

எனக்கு கவிதைகளே அலர்ஜி, அவள் மனதுக்கு அவை தான் சாப்பாடு.

வீடா
ஹவ் ஸ்மார்ட்! ஹவ் இன்டெலிஜெண்ட்!

என்ன என்னவோ நிறைய படிப்பாள். அந்த ஆசிரியர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது.

வேதா ரொம்ப சிம்பிள். ஐ- ப்ரோ கூட வைத்துக் கொள்ள மாட்டாள். மாவு அப்பா மாட்டாள். உதட்டை ரணப்படுத்த மாட்டாள்.

ஷி ஐஸ் லவ்வபிள்.

அதனால் நான் லவ்வினேன்.

எங்கள் முதல் சந்திப்பைப் பற்றிஸ் சொல்லியாக வேண்டும்.

எங்கள் சிநேகிதம் ரயிலில் தான்.

“எக்ஸ்கியூஸ்மீ , இந்த ஸூட்கேஸைப் பார்த்துக்கங்க . இதோ வந்துடறேன்” என்று காப்பி சாப்பிடச் சென்றேன்.

காபியோ சூடு, ஊதி ஊதி குடிப்பதற்குள் ரயில் நகர… அவசரமாய்ப் பர்ஸைத் திறந்தால், சில்லறையே இல்லை. ஐந்து ருதுபாய் நோட்டைக் கொடுத்து , பாக்கி வாங்கி, ரயிலை நோக்கி ஓடினால்.. எந்த கம்பார்ட்மெண்ட் என்பது புரியவில்லை.

ஜன்னல் வழியாகக் கையை ஆட்டி அழைத்தால்.

ஓடி தாவி,ஏறி, அமர்ந்து பாம்பு மூச்சு விட்டு, “சில்லறை இல்லை, அதான் லேட் என்ற போது…

அழகாய்ச் சிரித்தாள்.

அது தான் காதலின் விதை.

ஆங்கிலப் புத்தகம் வைத்திருந்தாள். கேட்டேன், தந்தாள். புரட்டினேன் படிக்கவில்லை. நான் புத்தகங்களே அதிகம் படிப்பதில்லை. சும்மா… சும்மா தான் கேட்டேன்.

“நீங்க என்ன பண்றீங்க என்றேன்.

“மெட்றாஸ்லே ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனில அக்கவுண்டண்ட். நீங்க?”

“அடடே! நானும் மெட்ராஸ் தான். ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியோட ஏஜண்டுக்கு அஸிஸ்டண்ட் மேனேஜர்.”

“எந்தக் கம்பெனி?”

”ஷிவ்லால் அண்ட் ராம்லால்”

“பீச் லைன் செகண்ட்?”

“ஆமாம்”

“வாட் அ சர்ப்பரைஸ்!”

“என்ன?”

“நான் சொன்னதும் அந்தக் கம்பெனி தான்” என்ற போது அவள் விழிகள் டால்பின் ஷோ நடத்தின.

“அப்போ, யூ… யூ… நீங்க தான் மிஸ்.வேதாவா? சிக்னேச்சர்ஸ் பார்த்திருக்கேன் என்றேன்.

“கரெக்ட்” என்றாள்

காதல் விதைக்கு நீர் ஊற்றப் பட்டது.

டெலிபோனில் முடிக்க வேண்டிய வேலைகளுக்கெல்லாம், பெட்ரோலை விரயப்படுத்தி ஸ்கூட்டரில்; அவள் செக்ஷனில் வேலையே இருக்காது. ஆனால் ஏற்படுத்திக் கொண்டேன். இல்லாத சந்தேகங்களை உருவாக்கிக் கொண்டேன்.

லிஃப்டில்…

காண்டீனில்…

ஸ்கூட்டரில்…

பேசி… பேசி… நாங்கள் காதலித்தோம்.

பழகப் பழகத்தான் எனக்கும், அவளுக்கும் ‘மலைக்கும், மடுவுக்கும்’ உள்ள தூரம் என்பது புரிந்தது.

என்னை விட அவள் எல்லாவற்றிலும் உயர்ந்தவள். படிப்பில்… அறிவில்… சாமார்த்தியத்தில்… ஆனால் அது என்னிடத்தில் எந்த காம்ப்ளக்ஸையும் ஏற்படுத்தவில்லை சின்னச் சின்ன விசயங்களில் கூட நான் அதிகம் அசடு வழிந்திருக்கிறேன், அவள் எதிரில்.

பங்ச்சுவாலிடியில் அவளுக்கு அக்கறை அதிகம். அதை நான் மீறும் பொழுது அவள் முகத்தில் மிளகாய் பஜ்ஜியின் காரம் தெரியும். அன்றைக்கு என்ன ஜோக்கடித்தாலும் சிரிக்க மாட்டாள்.

“நீங்க நிறைய மாறணும் மை பாய்” என்பாள்.

எனக்கும் ‘சுருக்’ கும் ஆனால் நான் மாற மாட்டேன்.

ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களுக்கு ஒரு அவஸ்தை.

அவள் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்குத் தலைவலி மற்றும் உபாதைகளைத் தரும்.

“வேதா, தூங்குறியா?”

“நீங்க ரசிக்கிறதையெல்லாம் என்னால ரசிக்க முடியாது. அதுக்காக உங்க விருப்பு, வெறுப்புகளை அவமதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. அதனாலத்தான் வந்தேன். பட், மை பாய், சொல்றேன்னு வருத்தப் படாதிங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து சிரிக்கணும்னா ஒண்ணு, உங்க டேஸ்ட்ஸை உயர்த்திக்கணும், இல்லேன்னா என் டேஸ்ட்ட்ஸை தாழ்த்திக்கனும். இரண்டும் முடியாது. தனித் தனியாகவே சிரிச்சிக்குவோம். ஆனா இது நம்ம காதலுக்கு எந்த விதத்திலேயும் தடையா எனக்குத் தோணலை” என்பாள்.

நான் அயர்ந்து விடுவேன்.

கொஞ்சம் கூட அவள் விருப்பங்களில், அவள் மனப்போக்குகளோடு ஒன்ற முடியாத என்னை எப்படி அவள் காதலிக்க முடிகிறது? இதற்கும் அவள் பதில் சொல்லியிருக்கிறாள்.

“விருப்பு, வெறுப்புகள்ங்கறது வேற. மனசுங்கறது வேற. உங்க விருப்பு வெறுப்புக்கு காரணம் நீங்க வளர்ந்த விதம் உங்களைச் சுத்தி அமைஞ்ச சூழ்நிலை தான் மனிதர்களை ஷேப் பண்ணுது. உங்க வெள்ளையான, அன்பான மனசு எனக்குப் பிடிச்சிருக்குது. தட்ஸ் ஆல்”

எனக்குள் சில சமயங்களில் ஒரு வெறி ஏற்பட்டதுண்டு. அவள் அளவிற்கு நாமும் நம்மை உயர்த்திக் கொண்டால் என்ன? அவள் பழகும் மனிதர்களோடு பழகி…. அவள் படிக்கும் புத்தகங்களைப் படித்து…

செயலாக்க முனைந்து தோற்றுப் போனேன்.

கணவன் திறமையானவனாக இருந்து, மனைவி மண்டாக அமைவதில்லையா? அதற்காக அந்த மனைவிகள் எல்லாம் அவமதிக்கப் படுகிறார்களா? என்ன? அது போல எங்கள் மணவாழ்வில் குடும்பத்தைத் திறமையாக அவளே மெயிண்டெயின் செய்யட்டுமே…

திருமணத்துக்குப் பின் பிரச்சினைகள் எழும் போது… அதை அவள் சாமர்த்தியமாக டீல் செய்யும் போது… நான் மவுனமாக தலையாட்டும் போது… எனக்கு ஹென்பெக்ட்” என்ற பட்டம் பிறரால் மாட்டப்படும்.

ஆனால், ஆண்- பெண் இருவரும் சமம் என்ற கூற்றை உணர்ந்தால், இந்த வார்த்தைக்கே அர்த்தமிருக்காது. அப்படியே பிறர் சொன்னாலும், நான் பிறருக்காகவா வாழ்கிறேன். எனக்காக… என் மனைவிக்காக… அதன்பின் எங்கள் வாரிசுகளுக்காக…

என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டு எங்கள் திருமணத்தைப் பற்றிக் கனவுகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த போது…
சனியன் பிடித்த மழை என் வாழ்வில் சதி செய்து விட்டது.

அன்று என் அறையில்…

கண்ணாடி முன் நின்றிருந்தேன். கன்ன வயலில் ரேஸர் டிராக்டர் உழுது கொண்டிருந்தது.

மனமோ எண்ண வயலில் ‘ வேதா, வேதா’ என்று நாற்று நட்டுக் கொண்டிருந்தது.

வெளியே கட்டிடங்களை மழை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது…

கதவு தட்டப்பட்டு…

என்னால் திறக்கப் பட்டு…

வேதா, நனைந்த வேதா.

அவள் கொட்டும் மழையில் வந்தது தவறல்ல. நனைந்து கொண்டே வந்தது தான் தவறு.

நனைந்து கொண்டே வந்தது கூட தவறல்ல. என்னை அப்நார்மல் மனிதனாகக் கருதி, துண்டு வாங்கி என் முன்னேயே துடைத்துக் கொண்டது தான் தவறு.

துடைத்துக் கொண்டது கூடத் தவறல்ல. அவள் அங்கங்கள் அழகாய் இருந்தது தான் பெரும் தவறு.

“வேதா” என்று அவள் கையைத் தொட்ட போது…

“என்ன?” என்று அவள் சாதாரணமாகக் கேட்ட போது…

“ஐ… ஐ…”

“யூ?”

“வாண்ட் டு…”

“வாண்ட் டு…”

“கிஸ் யூ” என்ற போது…

“நோ, மை பாய், இதிலேயும் ஒரு சாதாரண மனிதனா பிஹேவ் பண்ணிடாதீங்க. மழை, குளிர், உணர்ச்சின்னு தப்புக்கு சப்போர்ட் தேடிக்கிறது எனக்குப் பிடிக்காது. நாம மேரேஜ் பண்ணிக்கப் போறோம் சீக்கிரத்திலே. அது வரைக்கும் டீஸண்ட்டாவே இருப்போம்” என்று அவள் சொன்ன போது நான் சுதாரித்திருக்கலாம். அந்த டீசன்சியைக் கடைப்பிடித்திருக்கலாம். அவள் மதிப்பில் உயர்ந்திருக்கலாம்.

பட்…

இந்த ‘பட்டில்’ என் வாழ்வே முற்றுப் புள்ளி வைத்துக் கொள்ளப் போவதை உணராமல்…

அவளின் ‘கோலம்’; ‘கண்ட’ புத்தகங்களின் ‘வர்ண’ ஜாலம் என்னை நார்மலுக்கும் கீழே தள்ள

“வேதா!” என்று அணைத்து , உதட்டோடு உதட்டைப் பொருத்தி… மேலும் சூடேறி… என் கைகளால் அவளை…

‘பளார்’

நான் கன்னத்தைப் பிடித்தேன்.

“இடியட்! உங்களுக்கும் ஒரு உமனைசருக்கும் வித்தியாசம் இல்லை. உங்க கிட்டே நான் எதிர்பார்த்தது லவ் மட்டும் தான். லஸ்ட்டை இல்லை. இந்த விசயத்திலே உங்களை நான் ரொம்ப உயர்வா நினைச்சிருந்தேன். இதிலேயும் ரொம்பக் கீழே போய்ட்டீங்க. உங்களை நான் எவ்ளோ தூரம் நம்பியிருந்தா, இந்த நேரத்திலே உங்க ரூமுக்கு வந்திருப்பேன். ஆனா நீங்க…”

“வேதா, நாம தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோமேங்கற தைரியத்திலே ஜஸ்ட்…”

“ஸ்டாப் அண்ட் ஃபர்கெட் இட். இனிமே நம்ம கல்யாணத்தைப் பத்தி நினைச்சுக் கூடப் பார்க்காதீங்க. இப்பவும் உங்களை விரும்பறேன், ஆனா உங்களுக்குள்ளே இருக்கற மிருகத் தனத்தை, கீழ்த்தரமான எண்ணங்களை, வெறுக்கறேன். ஐ காண்ட் லிவ் வித் யூ. எனக்கு அடுத்த ஜென்மத்துல நம்பிக்கை இல்லை. ஆனா அப்படி ஒன்ணு இருந்தா, அப்போ உங்களை சாதரணமான மனிதரா சந்திச்சா… அப்போ கல்யாணம் பண்ணிக்கறேன் பை.

சென்று விட்டாள்.

முகத்தில் சோப்போடு நின்று கொண்டே இருந்தேன். எனக்கு அவள் மேல் கோபம் கொஞ்சம் கூட வரவில்லை. எவ்வளவு ஐடியல் பெண்!

என் மேல் எனக்குக் கோபம் பெரிதாக வந்தது. எவ்வளவு உயர்ந்த அவளிடம் எனது சில நிமிட சபலத்தால் மிக மிகக் கீழே போய் விட்டேன்.

எனக்கு வேதாவைத் தெரியும். நன்றாகத் தெரியும். இனிமேல் கெஞ்சினாலும், கதறினாலும் நடக்காது.

அடுத்த ஜன்மம் என்ற ஒன்று இருந்தால்…

அப்போது நான் அவள் ‘எதிர்பார்ப்புக்கு’ ஈடு கொடுக்கும்படி இருந்தால்…

எங்கல் காதல் காய் கனியும். கல்யாணம் நடக்கும்.

இறைவா! அடுத்த ஜென்மத்தில் என்னை வித்தியாசமாகப் படை. அவள் அளவிற்கு அறிவோடு படை.

– அக்டோபர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *