கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 13,906 
 

கடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும்.

சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொன்னார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக.

“தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.”
“அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.”

ஊருக்கு இனி எப்போது போவது? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட, பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார்.

“இந்த ஊர் சினப்பர் மீன் விளமீன்மாதிரித்தான் இருக்குமாம் மாமி. அதெண்டாத்தான் ஹரீஷும் சாப்பிடுவான்”

ரூபிணா மாமியைத் திரும்பிப்பார்க்காமலேயே சொல்லிக்கொண்டு நடந்தாள். சரசுமாமி எதுவும் பேசவில்லை. அவர்கள் ஹரீஷுக்கென இரண்டு சிறிய இளஞ்சிவப்பு சினப்பர் மீன்களை வாங்கிக்கொண்டார்கள். கடைகளில் சீலா, திரளி, கெளிறு, முரள், ஒட்டி, அரக்குளா, சூடை என்று மாமிக்குப் பரிச்சயமான மீன்கள் எல்லாம் வகைபிரித்துக் குவிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொருவகைச் சமையல். சிலதைச் சரக்குத்தூள் சேர்த்துப் பிரட்டவேண்டும். சிலதுக்கு நன்றாக பழப்புளி கலந்து கொதிக்கவிடவேண்டும். சிலதைக் கூழுக்குச் சேர்க்கச் சுவையாக இருக்கும். சூடை பொரியலுக்கு. ஒட்டியை சரியாகச் சமைக்காவிட்டால் கச்சல் எடுக்கும். சீலாவில் ஒருவித மிக நுண்ணிய இனிப்புச்சுவை உண்டு. கோதுமைமாவுப் புட்டோடு அதன் குழம்பை குழைத்துச்சாப்பிடுகையில் கலாதியாக இருக்கும். அதன் விலையும் மலிவாக இருந்தது. “சீலாவையாவது வாங்கலாமே” என்று சொல்ல சரசு மாமிக்கு வாயுண்ணியது.

அன்று சந்தையிலிருந்து திரும்பியதுமுதல் சரசுமாமிக்கு அந்த விளமீன் ஞாபகமாகவே இருந்தது. அந்தவகை ஊர் விளமீன்களை அவர் அவுஸ்திரேலியக்கடைகள் எங்கேயும் கண்டதேயில்லை. எப்படியோ அந்த ஒரு விளமீன் மாத்திரம் ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்தி வந்து இந்த ஊர் மீனவரிடம் பிடிபட்டுவிட்டது. சிலவேளை கூட்டமாகவே அவை நீரோட்டத்தில் இழுபட்டு வந்ததில் அகப்பட்டிருக்கலாம். அல்லது பருவமாற்றத்துக்கு அவையாகவே நீந்தி வந்திருக்கக்கூடும். எப்படியோ வந்து சேர்ந்துவிட்டது. அவர் கண்ணிலும் பட்டுத்தொலைத்து ஆட்டிப்படைக்கிறது. ஆனால் என்ன செய்ய இயலும்? மகன் ராசனுக்கு வீட்டுக்குள் மீன் குழம்பு வாசனையே எட்டக்கூடாது. ரூபிணாவோ ஒரு முட்டை சைவம். அவர்கள் வீட்டில் ஹரீஷுக்கு மாத்திரம் புரத உணவு வேண்டுமென்று மீனை வாங்கி, மின்சூளை அடுப்பில் வாட்டிக்கொடுப்பார்கள். அதுவும் அந்த பாழாய்ப்போன இளஞ்சிவப்பு நிற சினப்பர் மீனை.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த ஐந்து வருடங்களில் நல்லதொரு மீன் குழம்பு காணாமல் சரசுமாமிக்கு நாக்கு மரத்தே போய்விட்டது. ஐந்து என்றில்லை, கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் என்றே சொல்லலாம். திருமணத்துக்குப்பின்னர் ஒரு ஆன விளமீன் குழம்பை மாமி ருசித்துச் சாப்பிட்டதில்லை. மீனரிவாளில் பிறாண்டப்பட்டுச் செதில்கள் சிதறிப்பறப்பதுபோல மாமிக்குப் பழைய ஞாபகங்கள் பறக்க ஆரம்பித்தன. ஊரிலென்றால், அம்மாள் கோயில் வைரவர்மடை முடிந்து அடுத்தநாளே, குழந்தை அவர்கள் வீட்டுக்கு மீனோடு வந்துவிடுவான். புதிதாக அன்று காலையே பிரிக்கப்பட்ட களங்கண்டியில் பிடிக்கப்பட்ட விளமீன்கள். ஒரு கோர்வை என்றால் அதில் இரண்டு, மூன்று கிலோவரை தேறும். குழந்தையின் சைக்கிள்மணிச் சத்தம் காதில் எட்டியதுமே, மாமி மீனரிவாளும் சரவச்சட்டியுமாய் பத்திப்பக்கம் போய்விடுவார். பன்னிரண்டு வயதுதான். ஆனால் அப்போதே சரசுமாமி மீனரிந்து கழுவினார் என்றால் ஒரு செதில் கறியில் அகப்படாது. தானே அரிவாளைத்தீட்டி, தானே அரிந்து, தானே குழம்புக்கு, சொதிக்கு, பொரியலுக்கு, வறைக்கு, இராவுக்கு என்று வகை பிரித்து, தானே மசாலா கூட்டு அரைத்து, புளி கரைத்து, தேங்காய் துருவி, முதற்பால், கடைப்பால் பிழிந்து, குழம்பு பதமாக வற்றும்வரைக்கும் காத்திருந்து, அகப்பை நுனியை அடி உள்ளங்கையில் தொட்டு நக்கிச் சுவைபார்த்து என்று சிறுவயது முதலேயே மீன் குழம்பு சமைக்கும் விடயத்தில் மாமி வீட்டில் வேறு யாரையும் குசினிப்பக்கமே நெருங்கவிட்டதில்லை. அவர் குழம்புச்சட்டியை திருகணியில் இறக்கிவைத்து, மூடியைத் திறந்தார் என்றால் கறியின் வாசம் எட்டாம் வட்டாரம் வரைக்கும் நாசியில் அடிக்கும். இப்படிப்பட்ட சரசுமாமிக்கு வந்து வாய்த்ததோ விளமீனுக்கும் திரளிக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அற்பாயுள் கணவன். அவர்களுக்குப் பிறந்த ஒரே மகன் ராசனுக்கோ மீன் குழம்பு வாசம் என்றாலே ஓங்காளித்துக்கொண்டு வருகிறது. அவன் காதலித்துக் கலியாணம் கட்டிய ரூபிணா ஒரு சுத்தமான முட்டை சைவம். பேரன் ஹரீஷ் பிறந்தபின்னர்தான் அவர்கள் வீட்டுக்குள் முதன்முதலாக ஒரு மீன் முதன்முதலாக அடியெடுத்து வைத்தது. அதுவும் அந்த இளஞ்சிகப்பு நிற சிறிய சினப்பர் மீன். மஞ்சள் தடவி வாட்டிக்கொடுப்பார்கள். மாமி ஒருநாள் வாயில் வைத்துப்பார்த்துவிட்டுத் துப்பிவிட்டார். பச்சைத்தண்ணி.

திடீரென்று இத்தனை தசாப்தங்களுக்குப்பின்னர் மாமியின் மீன் குழம்பு ஆசையை அந்த ஒற்றை விளமீன் கிளறிவிட்டது. நாள் முழுதும் அவர் அந்த விளமீன் பற்றிய சிந்தனையாகவே இருந்தார். சரியாக யாருடனும் பேச்சுக்கொடுக்கவில்லை. அடுத்தநாள் ஆங்கிலவகுப்புக்கு நடந்துசெல்லும்போதும் திரும்பும்போதும் விளமீனின் வெடுக்குவாசம் ஒரு பதின்மக்காதலின் இரண்டாம் நாளினைப்போல வழியெல்லாம் அவரோடு கூடவே வந்துகொண்டிருந்தது. தேவையே இல்லாமல் பதட்டத்தைக் கொடுத்தது. விளமீனைப் பதமாகப்பொரித்தால் அதன் தோற்பரப்பு மொறுமொறுவென்று இருக்கும். ஆனால் பிய்த்துப்பார்த்தால், உள்ளே மிதமாகப் புட்டுப்போல அவிந்து இருக்கும். அதனைக் குரக்கன்புட்டோடு கலந்து சாப்பிடவேண்டுமே, புட்டுக்குத் தேங்காய்ப்பூ தனியாகப் போடவே வேண்டாம். அவ்வளவு ருசியாக இருக்கும்.

வகுப்பிலும் மாமியின் எண்ணம், சிந்தனை எல்லாம் விளமீன் பற்றியே இருந்தது. ஆங்கில ஆசிரியர் கூறியது எதையும் சரசுமாமி காதிலேயே போடவில்லை. அன்றைக்கு என்றில்லை. என்றைக்குமே வகுப்பை அவர் செவி மடுத்ததில்லை. அங்கு போனால்தான் அரச உதவித்தொகை கிடைக்கும். அல்லாவிட்டால் வேலை தேடவேண்டும். தனியாக ஒரு கடைக்குப் போவதற்கே பயப்படுபவர் எப்படி இந்த நாட்டில் வேலைக்கெல்லாம் போவது? இவர்கள் வகுப்பில் தினந்தோறும் வந்து படிக்கிறார்கள் என்று ஆசிரியர் ஒரு கடிதம் எழுதிக்கொடுத்தால் அரசாங்கம் மறுகேள்வி கேட்காமல் உதவித்தொகையை வைப்பிலிட்டுவிடும். பத்துநிமிட நடைதூரத்தில் வகுப்பு. அந்த வகுப்பில் சரசுமாமியைப்போல பத்துப்பதினைந்து சக மாணவர்கள். எல்லோரும் பிள்ளைகளைப் பார்க்கவந்த சமயத்தில் அகதி விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுத்து, அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டதில் அவுஸ்திரேலியர்கள் ஆனவர்கள். ஈரானியர்கள், தென் சூடானியர், பர்மியர், செர்பியர்கள், கிழக்குத் திமொரியர்கள் என்று அவர்கள் எல்லோருக்குமே, ஆங்கிலமொழி தெரியாது என்பதே பொதுவான இணைப்புப்பாலமாகவிருந்தது. ஆரம்பத்தில் ஹலோ சொல்லவே வெட்கப்பட்டவர்கள் இப்போது பேர், ஊர் சொல்லி, போகுமிடத்துக்கு வழியை ஆங்கிலத்தில் விசாரிக்குமளவுக்கு முன்னேறியிருந்தார்கள். நெஞ்சுக்குள் நோவு எடுத்தால் அவசரசிகிச்சைக்கு தொலைபேசி எடுத்து, எங்கே எப்படி வலிக்கிறது என்று விளக்குவதற்குப் பழகியிருந்தார்கள். சக மாணவர் எவரும் இறந்துபோனால் அடுத்த வகுப்பில் ஆங்கிலத்தில் கூட்டுப்பிரார்த்தனை செய்வார்கள்.

000

அடுத்தவாரம் வகுப்புக்குப்போனபோது, பெரியவெள்ளியை முன்னிட்டு அந்தவாரம் முழுதும் விடுமுறை என்று வாசலில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. முந்தையவாரமே அதுபற்றிச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அவர்தான் மறந்துவிட்டார். வீட்டுக்கு உடனேயே திரும்பிப்போக சரசுமாமிக்கு அலுப்பாக இருந்தது. வீதியோரம் போடப்பட்டிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்துகொண்டார். இலையுதிர்காலக் குளிர் காற்று கால்களுக்குள்ளாலும் கைகளுக்குள்ளாலும் உடலினுள் கூசிக்கொண்டு ஏறியது. கைகளை மார்புக்குக்குறுக்கே இறுக்கமாகக் கட்டி, கால்களையும் ஒடுக்கிக்கொண்டு குறண்டியபடி மாமி உட்கார்ந்துகொண்டார். ஆள்களே இல்லாத பேருந்து ஒன்று அவ்வழியால் கடந்துபோனது. அவுஸ்திரேலியா வந்து பேருந்து எதிலும் சரசுமாமி பயணித்ததில்லை. வீடு, ஆங்கிலவகுப்பு, அவ்வப்போது இரத்த அழுத்தம், சலரோகம், சளி என்று மருந்து எடுக்கச் செல்லும் வைத்தியசாலை, எப்போதாவது ராசன் மனதுவைத்தால் கூட்டிப்போகும் கடை, கண்ணி. இவ்வளவும்தான் சரசுமாமிக்குத் தெரிந்த அவுஸ்திரேலியா. விருந்துகள், நண்பர்கள் வீடுகள் என்று எங்கும் அவர் போனது கிடையாது. ராசனுக்கும் ரூபிணாவுக்கும் நண்பர்கள் என்றும் சொல்லும்படியாக பெரிதாக எவரும் இல்லை. தமிழர்களோடு அவர்கள் ஏனோ அவ்வளவாகப் பழகுவதில்லை. ஓரிரு வெள்ளைக்கார நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் எங்கேயாவது உணவகங்களிலோ, மதுச்சாலைகளிலோதான் சந்திப்பார்கள். வீட்டுக்கு விருந்தினர்கள் எவரும் வருவது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களும் போவதில்லை.

சரசுமாமிக்குத் தன்னந்தனியனாக இந்த ஊர் மீன்களோடு வந்து மாட்டிக்கொண்ட அந்த விளமீனின் நினைவு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. அதை மட்டும் வாங்கிக்கொண்டுவந்து சமைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? விளமீன் குழம்புக்கு நன்றாக பழப்புளி கரைத்து விடவேண்டும். புழுங்கலரிசிச் சோறு, தேசிக்காய்ப்புளி சேர்த்த முளைக்கீரைக் கடையல், தலை போட்டு ஒரு பாற்சொதி, தடித்த குழம்பு, சினை மாட்டினால் பொரியல் என்று சமைத்து, அதை ஒன்றாகக் குழைத்துச் சாப்பிடுவதை நினைத்துப்பார்க்கவே மாமிக்கு வாயூறியது. கடைசிச் சோற்றுப்பருக்கையும் தீர்ந்தபின்னர், எஞ்சியிருக்கும் கீரை கலந்த குழம்புச்சொதியை அப்படியே கோப்பையோடு வாயில் பிடித்து உறிஞ்சிக்குடிக்கையில் ஒருவித இறை கண்ட பரவசநிலை கிடைக்கும். கோப்பையை உறிஞ்சிக்குடிக்கும் பழக்கம் மாமிக்கு ஐயாவிடமிருந்துதான் தொற்றிக்கொண்டது. ஐயா இடம், பொருள், ஏவல் பாரார். முன்னாலே அமர்ந்திருந்து சாப்பிடுபவரையும் கணக்கில் எடார். கோப்பையை உறிஞ்சும் கணத்தில் அவரும் அந்தக் குழம்புமீதியும்தான் அவருக்கு உலகம். சரசுமாமிக்கும் அப்படித்தான். வாயெல்லாம் வழிந்து சமயத்தில் குழம்பு பாவாடை சட்டையிலும் ஊற்றிவிடும். ஆர்வமிகுதியில் சட்டையைத்தூக்கி, வழிந்த மீன் குழம்பை உறிஞ்சும்போது தாய்க்காரியிடம் சரசுமாமி வாங்கிக்கட்டியதும் உண்டு. ஆனால் ஐயா ஒன்றுமே சொல்லமாட்டார். உனக்குப்பிடித்ததைச் செய் என்பார். அவர்தான் சரசுமாமி யாழ்ப்பாணம் டவுணுக்குப்போய் படிக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தவர். தீவுக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்கவேண்டும் என்பதிலும் திடமாக இருந்தவர். நல்லூரடியிலிருந்து ஒரு ஆங்கில ஆசிரியர் வரன் வந்ததும் ஒரே பிடியாக நின்று சம்பந்தத்தைப் பேசியும் முடித்தவர். அரியாலையில் காணி வாங்கி, வீடு கட்டக் காசு கொடுத்து, நகை போட்டு.

எப்போதாவது கடந்துசெல்லும் கார்களைத் தவிர்த்து வீதி பெரும்பாலும் வெறிச்சோடிப்போய்க்கிடந்தது. முன்னர் சென்ற பேருந்தும் மீண்டுமொருமுறை கடந்துபோனது. இலக்கம் 577. இம்முறையும் பயணிகள் எவரும் அதற்குள் இருக்கவில்லை. யாருமே அண்டாத அந்தப்பேருந்து எதற்காக, யாருக்காக இவ்வழியால் சுற்றித்திரியவேண்டும்? அதுவுந்தனியனாக? அடுத்த தரிப்பில் யாரேனும் ஏறக்கூடும் என்ற எதிர்பார்ப்பா? மாமிக்குக் காணும் யாவையும் தனித்தனியாக அலைவதாகவே தோன்றியது. அவரைப்போலவே. கைகளை மேலும் இறுக்கிக்கட்டிக்கொண்டார். குளிரோடு சேர்ந்து அந்த வெடுக்குவாசமும் உடலெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

ஐயா பார்த்துப் பார்த்துத் தேடிய மாப்பிள்ளை ஒரு சுத்த சைவப்பழமாக இருப்பான் என்று திருமணத்துக்கு முன்னர் வீட்டில் எவருமே அறிந்திருக்கவில்லை. மாமியின் கணவனுக்கு வருடத்தின் முந்நூறு நாள்களும் ஏதேனும் ஒரு கோயில் கொடியேறியிருக்கும். அல்லாவிட்டால் கும்பாபிஷேகம். அல்லது பிள்ளையார்கதை, நவராத்திரி, கந்தசஷ்டி, கௌரிபூஜை. அபூர்வமாக அசைவம் சமைக்கும் நாள்களிலும் முட்டையையோ, கோழி இறைச்சியையோதான் கணவன் வீட்டில் வாங்குவார்கள். ஊருக்குப்போனால், அங்கேயும் அம்மாள் கோயில் திருவிழா, பிடாரிகோயில் நேர்த்தி என்று ஏதாவது வந்து தொலைத்துவிடும். அல்லது நேரம் கெட்ட நேரத்தில் கணவன் வீரபத்திரர் கோயிலில் பிரதட்டை செய்துவிட்டு புழுதிமணலோடு வாசலில் வந்து நிற்பான். இதனால் திருமணத்துக்குப்பின்னர் மாமிக்குப் பிறந்தவீட்டில்கூட ஒரு ஆன மீன் சாப்பாடு கிட்டியதில்லை. இப்படி வருடக்கணக்கில் மீனை விட்டுப் பிரிந்ததாலோ என்னவோ, கணவன் இறந்தபின்னரும் சரசுமாமிக்கு மீன் குழம்பில் மீண்டும் நாட்டம் போனதில்லை. அவ்வப்போது சாப்பிட்டிருந்தாலும் அதன்மீது இப்படியொரு அவா வந்ததில்லை. ஆனால் அவுஸ்திரேலியா வந்து ஐந்து ஆண்டுகளுக்குப்பின்னர், எதேச்சையாக ஒரு மீன்கடைக் குவியலுக்குள் தனியாகச் சிக்கிக்கிடந்த ஒரு விளமீன் சரசுமாமியின் மீன் குழம்பு ஆசையைக் கிளறிப்போட்டுச் சிப்பிலி ஆட்டுகிறது.

“சனியன் பிடிச்சது” என்று மாமி கொஞ்சம் சத்தமாகவே சொல்லிக்கொண்டார். எதற்காக அந்த மீன் அவர் கண்களில் பட்டுத்தொலையவேண்டும்? அன்று சந்தையில் அதை யார் வாங்கியிருந்திருப்பார்கள்? வாங்கியவர்களும் வெறுமனே அதற்கு மஞ்சள் தடவி வாட்டிச்சாப்பிட்டிருப்பார்களா? அல்லது யாருமே வாங்காமல் அது கெட்டுப்போயிருக்குமோ? இங்குள்ளவர்களுக்கு அதன் அருமை எப்படித் தெரியவரும்? இளஞ்சிவப்பு பச்சைத்தண்ணி சினப்பர் மீன்களுக்குப் பழக்கப்பட்ட நாக்குகளுக்கு எப்படி அவருடைய ஊர் விளமீனின் சுவை புரியும்? அது அறிந்துதான் அந்த விளமீன் சரசுமாமியின் கண்களுக்குள் சிக்கிக்கொண்டதா? தன்னை அவர் எப்படியும் வாங்கிவிடுவார் என்று எதிர்பார்த்துக்காத்துக்கிடந்ததா? சரசுமாமிக்கு அந்த விளமீன்மீது இனம்புரியாத ஒரு பாசம் உருவெடுக்க ஆரம்பித்தது. அவரைச்சுற்றி ஏகப்பட்ட இளஞ்சிவப்பு சினப்பர்கள் அலைவதுபோல. பல்லாயிரம் மீன்களுக்கு மத்தியில் அவரும் அந்த விளமீனும் மாத்திரமே எவராலும் கவனிக்கப்படாமல். தனியராய். அந்த விளமீன் அவரை முற்றாய் அறிந்த பால்ய நண்பன்போல. அதற்கும் அவரைவிட்டால் வேறுயாருமே இல்லாததுபோல. இருவருமே நீரோட்டத்தில் இழுபட்டு வந்து சிக்குப்பட்டவர்கள்போல.

அடுத்தமுறை பேருந்து வந்தபோது சரசுமாமி யோசிக்காமல் ஏறிவிட்டார். ஓட்டுநரிடம் வயோதிபர் அட்டையைக்காட்டி, சில்லறை கொடுத்து எப்படி இறங்குமிடம் சொல்லவேண்டும் என்றெல்லாம் ஆங்கிலவகுப்பில் பயிற்சிகொடுத்திருந்தார்கள். சரசுமாமிக்கு பயிற்சியைவிட நேரடிச் செயன்முறை இலகுவாக இருந்தது. அவர் காலத்துக்கு பேருந்து ஓட்டுநரும் ஒரு சீக்கியராய் அமைந்திருந்தார்.

“யூ கோ டு ட்ரெயின் ஸ்டேஷன்?”
“ஐ கோ டு பிஷ் மார்க்கட்”
“யூ இண்டியன்?”
“நோ … ஸ்ரீலங்கன்”

சரசுமாமி வாழ்க்கையில் முதன்முதலாக முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசுகிறார். சற்றுத்தடுமாறினாலும் அவர் சொன்னது சீக்கியருக்குப் புரிந்தது. சீக்கியர் சொன்னதும் அவருக்குப் புரிந்தது. உள்ளூர ஒரு பயம் இருந்தாலும் அதை மீறிய உற்சாகமொன்று மாமியிடம் தொற்றிக்கொண்டது. எப்பிங் புகையிரதநிலையத்தில் ரயில் எடுத்து பிரெஸ்டன் நிலையத்தில் இறங்கினால், மீன்சந்தையை நடை தூரத்திலேயே காணலாம் என்று சீக்கியர் ஆற அமர சரசுமாமிக்குத் தெளிவுபடுத்தியிருந்தார். புகையிரதநிலையத்திலும் பணம் கொடுத்து டிக்கட் வாங்குவது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கவில்லை. இரண்டு ரயில் மேடைகளில் எந்தப்பக்க இரயிலில் ஏறவேண்டும் என்ற குழப்பம் வந்தது. நீண்ட நேரத் தயக்கம், நிறைய ஒத்திகைகளுக்குப்பிறகு சக பயணி ஒருவரிடம் சென்று விசாரித்ததில் அந்தப்பிரச்சனையும் தீர்ந்தது. மாமிக்கு முதன்முதலாக தன்னுடைய ஆங்கிலம்மீது நம்பிக்கை உருவாகியது. சமாளித்துவிடலாம்.

பிரெஸ்டன் சந்தைக்குள் அடியெடுத்து வைக்கையில் பேக்கரியிலிருந்து இறக்கப்பட்ட புதுப் பாணின் வாசனை நாசியில் வந்து அடித்தது. வாழைப்பழமும், காளானும் மலிவு என்று ஒருவர் தொண்டைகிழியக் கத்திக்கொண்டிருந்தார். கடைகளில் பெரிதாகக் கூட்டமிருக்கவில்லை. பழக்கடை ஒன்றின் கல்லாவில் இளம்பெண் ஒருத்தி புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாள். ஒரு சைனீஸ் கடையில் வீட்டுப்பாவனைப் பொருட்கள் குப்பையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விளையாட்டுப்பொருட்கள், சட்டைகள், கைவினைப்பொருட்கள், தொழில்கருவிகள் என்று அங்காடிகள் எங்கும் சாமான்கள் நிறைந்திருந்தன. வாங்குவதற்குத்தான் ஆள்கள் இல்லை. வேலைநாள் பகல்வேளை என்பதால் சந்தையில் அதிகமாக வயோதிபர்களே கூடியிருந்தார்கள். ஆங்காங்கே போடப்பட்டிருந்த வாங்கில்களிலும் சிறிய கோப்பிக்கடைகளிலும் உட்கார்ந்து கோப்பிக்கப்புகளை உறிஞ்சியபடி தமக்குள் கதைகள் பல பேசிக்கொண்டிருந்தார்கள். பெயருக்கு இரண்டு மரக்கறிகளை வாங்கி அருகில் வைத்திருந்தார்கள். எவரிடமும் வீடு திரும்பும் அவசரம் இருக்கவில்லை. எல்லோருமே விடுமுறைக்கு வந்தவர்கள்போலவே சுற்றித்திரிந்தார்கள். அறிமுகம் இல்லாதவர்களோடும் ஹலோ சொல்லிப் பேச்சுக்கொடுத்தார்கள். புன்னகைத்தார்கள்.

மாமி எவருடைய கண்களையும் எதிர்கொள்ளாமல், நேரே மீன்கள் விற்கும் பகுதியினுள் நுழைந்தார். முந்தையவாரம் அவர்கள் சென்றிருந்த மீன்கடையை கண்டுபிடிக்கச் சற்று சிரமமாகவிருந்தது. மீன்கடையிலும் அதிக கூட்டமிருக்கவில்லை. வழமைபோல மீன்கள் வகைபிரித்துக் குவிக்கப்பட்டுக் கிடந்தன. மாமி ஹரீஷின் இளஞ்சிவப்பு சினப்பர் மீன் குவியலைக் கண்டுபிடித்து, அதற்குள் அந்த ஊர் விளமீன் இன்னமும் கிடக்கிறதா என்று தேடினார். காணவில்லை. உள்ளே அடியில் கிடக்குமோ என்றும் நீக்கல்களினூடே கண்ணை விட்டுப்பார்த்தார். ம்ஹூம். எங்கே போயிற்று அது?

“ஹவ் ஆர் யு மெடம்?”

மாமி ரயில் பயணம்முழுதாகவும் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனத்தை ஒப்புவித்தார்.

“ஐ வோண்ட் … வைட் சினப்பர்”
“யூ மீன் சினப்பர் பிஷ் மெடம்?”
“நோ … திஸ் இஸ் பிங்க். ஐ வோண்ட் வைட் கலர் … யு நோ … லாஸ்ட் வீக் யூ ஹாவ் வைட் சினப்பர்”

மாமி கூறியது கடைக்காரருக்குப் புரியவில்லை.

“வன் கிலோ சிக்ஸ் டொலர்ஸ் மெடம். பரேஷ் சினப்பர்.”
“நோ … யூ ஹாவ் வைட் சினப்பர்?”

சரியாக விளங்காததால் கடைக்காரர் இறுதியில் கைவிரித்துவிட்டார்.

“சொறி மெடம். வி டோன்ட் ஹாவ் வட் யூ ஆஃப்டர்”

மாமிக்கு முகம் தொங்கிப்போனது. இத்தனைதூரம் அலைந்து வந்தது வீணாகிப்போய்விட்டதா? அந்த விளமீன் எங்கே போயிருக்கும்? கெட்டுப்போயிருக்கலாம். அல்லது விலைபோகாமல் வீசியிருப்பார்கள். இப்போது என்ன செய்வது? வந்ததுதான் வந்தோம், வேறொரு மீனையேனும் வாங்கலாம் என்றால் அதற்கு அவருக்கு மனம் வரவில்லை. விளமீன்தான் அவர் மனம் முழுதும் நிறைந்திருந்தது. கிடைக்காமல் போனதால் அதன் மீதான ஆசை இன்னமும் ஆழமாக வியாபித்துவிட்டிருந்தது. குனிந்ததலை நிமிராமல் மாமி மெதுவாகக் கடையைவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

ஐந்தாறு எட்டு வைத்திருப்பார்.

“மெடம் … எக்ஸ்கியூஸ்மீ … மெடம்”

தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று மாமிக்கு முதலில் தோன்றவில்லை. இரண்டு மூன்று அழைப்புகளுக்குப்பின்னர்தான் திரும்பிப்பார்த்தார். அந்த மீன் கடையிலிருந்துதான் அழைத்தார்கள். மாமி சற்றே மிரண்டுபோய் மீண்டும் கடைக்கு வந்தார்.

“வேர் யூ லுக்கிங் போர் திஸ் பிஷ் மெடம்?”

வீரபத்திரர் கோயிலடி தாண்டும்போதே குழந்தையின் சைக்கிள் மணிச்சத்தம் சரசுமாமிக்குக் கேட்டுவிடும். முன் ஹாண்டிலில்தான் அவன் கோர்வை மீனைத் தொங்கவிட்டிருப்பான். சைக்கிளிருந்து இறங்காமல், கேற்றை ஒரு கையால் இலாவகமாகத் திறந்தபடி, பிரேக்கூடப் போடாமல் நேரே வீட்டுப்பத்தியை நோக்கி வேகமாக அவன் வருவான். நீலநிறக் கழிசான், அதற்குப் பொருந்தாத அவன்மாதிரி ஐந்துபேர் நுழையக்கூடிய பெரியசைஸ் சேர்ட், சாம்பல்புழுதிக் கால்கள் என்று அவன் வந்து நிற்கும் அழகைப்பார்க்கவே சரசுமாமிக்குச் சிரிப்புச் சிரிப்பாக வரும். அவன் சைக்கிளால் இறங்கும்வரையும் காத்திருக்கப் பொறுமை கெட்டு, ஓடிப்போய் கோர்வையை வாங்கிவிடுவார். ஒவ்வொரு மீனும் திமிறிக்கொண்டு கிடக்கும். பனை ஈர்க்கு செருகுவதற்காக பிரிக்கப்பட்டிருந்த அவற்றின் தலைப்பூ இரத்தச்சிவப்பாக, தொட்டால் நசியாமல். அசல் உடன் மீன்.

சரசுமாமி ஆர்வமிகுதியில் கூவியேவிட்டார்.

“யெஸ்”

சென்றவாரம் பார்த்த அதே விளமீன். வெள்ளை நிறத்தில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறச் செதில்களோடு. குளிரூட்டிக்குள்ளிருந்து எப்படியோ தேடி எடுத்திருந்தார்கள். சரசுமாமி மீண்டும் சொன்னார்.

“யெஸ். திஸ் இஸ் த வன்”
“யூ ஆர் லக்கி மெடம். வி ஒல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்.”

சரசுமாமிக்கு கடைக்காரரின் ஆங்கிலம் புரியவில்லை.

“ஹவ் மச்?”

கடைக்காரர் சிரித்தார்.

“போர் யூ, இட்ஸ் ப்ரீ மெடம்.”
“நோ நோ … ஹவ் மச்? ப்ளீஸ் டெல்.”
“ஓகே … கிவ் மீ டூ டொலர்ஸ்.”

சரசுமாமி சில்லரைக்குற்றிகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்துக் கொடுத்தார்.

“யூ வோண்டு கட் இட் அண்ட் கிளீன்?”
“வட்? டூ டொலர்ஸ் நோ?”
“நோ நோ …. கட் அண்ட் கிளீன்?”

கடைக்காரர் சைகையில் மீனை வெட்டிக்காட்டினார்.

“நோ நோ .. ப்ளீஸ் நோ”

சிரித்தபடியே முழு மீனையும் ஒரு பேப்பரில் சுற்றிப் பின்னர் பிளாஸ்டிக் பையில் போட்டு கடைக்காரர் சரசுமாமியிடம் கொடுத்தார்.

“யூ லைக் திஸ் பிஷ்?”
“ஐ லைக் இட் வெரி மச்”
“திஸ் இஸ் எ ரெயார் பிஷ். கிவ் யுவர் நம்பர். ஐ வில் கோல் யூ வென் இட் கம்ஸ் நெக்ட் டைம்”
“வட்?”
“கிவ் யுவர் டெலிபோன் நம்பர்”

கடைக்காரர் மீண்டும் காதில் கை வைத்துச் சைகை காட்டினார். சரசுமாமி, வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை ஊர் பேர் தெரியாத ஒரு மீன் கடைக்காரரிடம் கொடுக்கலாமா என்று கணம் யோசித்தார். இதில் என்ன ஆகிவிடப்போகிறது? இந்த விளமீன் வேறு இனி எப்போது கடைக்கு வரும் என்றும் சொல்லமுடியாது. அவராலும் அடிக்கடி இத்தனை தூரம் பயணம்செய்து வெறுங்கையோடு திரும்பவும் முடியாது. கொடுத்தால்தான் என்ன? கடைக்காரர் கொடுத்த கொப்பியில் பெயரையும், தொலைபேசி இலக்கத்தை எழுதிக்கொடுத்தார்.

“யூ இண்டியன் மெடம்?”
“நோ .. ஸ்ரீலங்கன்”

சந்தையை விட்டு வெளியேறியபோது வெயில் உடலெல்லாம் பட்டுச் சிலிர்த்தது. சரசுமாமியின் கைப்பையில் அந்த விளமீன். அவராக பஸ் பிடித்து, ரயில் பிடித்து, கடையில் கதைத்துப்பேசி வாங்கிய விளமீன். அவருக்காகவே சமுத்திரங்கள் கடந்து, ஆழ்கடலில் பிடிபட்டு, குளிரூட்டியில் காத்திருந்து கைசேர்ந்த அவரின் விளமீன். சரசுமாமிக்கு இந்தச் சந்தோசத்தை யாரோடாவது பகிரவேண்டும் போலிருந்தது. ஆனால் இந்த ஊரில் அவருக்கு யாரைத்தெரியும்? ராசனும் ரூபிணாவும் இவரின் கதைகளை காது கொடுத்தே கேட்கமாட்டார்கள். வகுப்பில் சொல்லிக்கொள்ளலாம். ஆங்கிலம் அப்படி, இப்படி என்றாலும் எல்லோரும் எப்படியோ புரிந்துகொள்வார்கள். அவர்களையும் ஒருநாள் சந்தைக்குக்கூட்டிவரலாம். எல்லோரும் கூடி உட்கார்ந்து, கோப்பி குடித்து, கதைகள் பலபேசி.

சரசுமாமி சந்தையிலிருந்து வீடு திரும்பும்போது மதியம் பன்னிரண்டு மணியாகியிருந்தது. மூன்று மணிக்குத்தான் ஹரீஷை குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்துவரவேண்டும். ரூபிணாவும் ராசனும் வீடு வர எப்படியும் ஐந்து மணிக்கு மேலேயாகும். நேரம் நிறைய இருந்தது. தலையைப் போட்டு ஒரு சொதி. மூன்று துண்டுகளைப்போட்டு குழம்பு. வாற்பகுதியைப் பொரிக்கலாம். மாமி கத்தியை எடுத்து வெளியே செங்கல் சுவரில் நன்றாக இரண்டுபக்கமும் தீட்டினார். விளமீனைக் கழுவி எடுத்து, அதன் செதில்களைப்பிறாண்ட ஆரம்பித்தார்.

“எடேய் … ஓடிப்போய் வாளிக்க தண்ணி நிரப்பிவா”

குழந்தை ஊமல் கொட்டைகளை வானத்தில் எறிந்து, பனைமட்டையால் அடித்து விளையாடிக்கொண்டிருப்பான். மாமியின் குரல் கேட்டதும் கிணற்றில் தண்ணிவார்த்துக்கொண்டுவந்து மீன் கழுவ ஊற்றுவான்.

“என்னக்கோய் … உனக்கு ஒரே மீன்கறியை ஒவ்வொருநாளும் திரும்ப திரும்பச் சாப்பிட அலுப்படிக்காதா?”

குழந்தைக்கு சரசுமாமியைவிட இரண்டு வயது அதிகமென்றாலும் அவரை அவன் அக்கா என்றே அழைப்பான். மாமி இளையவர் என்றாலும் அவனை அடேய் என்றே அழைப்பார்.

“ஒரே மீன்கறி இல்லையப்பன். ஒரொரு நாளும் ஒரொரு மீன். ஒரொரு மீனுக்கும் ஒரொரு ருசி. ஒரொரு கறிக்கும் ஒரொரு பதம். நேற்று சமைக்கேக்க இருந்த கை இண்டைக்கு இல்ல. நேற்று சாப்பிடேக்க இருந்த நாக்கு இண்டைக்கு இல்ல. விளங்குதா?”

“எனக்கெண்டால், குழைச்சடிச்சால் எல்லாக்கறியும் ஒண்டுதான் அக்கோய்”

வாளியை வைத்துவிட்டு குழந்தை மீண்டும் விளையாடப்போய்விடுவான்.

மாலையில் திரும்பிய ரூபிணா மூக்கைப்பொத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

“ஆரு இப்படி நடு வீட்டுக்க மீனைக்கொண்டுவந்து சமைச்சது? ச்சக். நாறுது”

அவள் போட்ட சத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த சரசுமாமியோடு ஹரீஷும் விழித்துவிட்டான். மாமி கட்டிலிலிருந்து எழாமல் அறைக்குள்ளேயே இருந்துகொண்டார். ரூபிணாவின் எந்தச் சத்தத்துக்கும் பதில் கொடுக்கவில்லை.

“இந்த வீட்டில இருக்கிறதுகளுக்கு கொஞ்சமெண்டாலும் ஒரு சென்ஸ் இருக்கா? நாறல் மீனை எங்கனயிருந்தோ கொண்டுவந்து வீட்டை நாறடிக்குதுகள்”

ரூபிணா புறுபுறுத்துக்கொண்டே யன்னல்களைத் திறந்துவைத்து, வாசனைத்திரவியத்தை எடுத்து வீடு முழுதும் விசிறி அடித்தாள். கறிச்சட்டி திறந்துபார்க்கப்படும் சத்தம் கேட்டது. ஆனால் ஏனோ அவள் சரசுமாமியிடம் நேரில் வந்து எதுவும் கேட்கவில்லை. யார் போய் மீன் வாங்கியது? எங்கிருந்து வந்தது? எதையும் விசாரிக்கவில்லை. குளித்துவிட்டு வந்த பிற்பாடும் புறுபுறுத்துக்கொண்டிருந்தாள். ஏதோ தீவுக்கூட்டம் என்று அவள் சொன்னதும் மாமியின் காதுகளுக்குள் எட்டியது. மாமி தன் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை.

சரசுமாமிக்குத் திருமணமாகிச் சரியாக எட்டாம் நாள் அது. அன்றைக்குத்தான் அவர் கணவன் விடுமுறைக்குப்பின்னர் வேலைக்குத் திரும்பிப்போகிறான். பத்துமணியளவில் பெட்டி மீன்காரரின் ஹோர்ன் சத்தம் கேட்டதும் மாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. பெட்டியிடம் இரண்டு ஓரா மீன்களை வாங்கிக் குழம்பு, சொதி, பொரியல், முளைக்கீரை என்று மத்தியானச் சமையலை அமர்க்களப்படுத்தி, கணவன் வீடு திரும்புவதற்காக காத்திருக்கிறார். இரண்டுமணிக்குப் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய புதுக்கணவன், கிணற்றடியில் கால் கழுவும்போது கத்தினான்.

“ச்சிக். எங்காலயிருந்து இந்தச் செலிட்டு நாத்தம் வருகிது? அரியண்டம்”

கணவனுக்குக் கடலுணவையே கண்ணில் காட்டக்கூடாது என்று அன்றைக்குத்தான் சரசுமாமிக்குத் தெரிந்தது. அதற்காக, எட்டுநாள் புதுமனைவிமீது அவனேன் அவ்வளவு கோபப்பட்டான் என்று இதுநாள்வரையிலும் சரசுமாமியால் விளங்கிக்கொள்ளவே இயலவில்லை. யாரேனும் இந்த அளவுக்கு ஒருவரை மோசமாகத் திட்டமுடியும் என்றும் அன்றைக்குத்தான் அவருக்குத் தெரிந்தது. தேவையேயில்லாமல் அவன் சரசுமாமியோடு அவர் தீவையும் இழுத்துத் திட்டினான். மாமி அவர் வீட்டில் ஒரே பிள்ளை. ஐயாவின் செல்லம். ஒரு மீன்குழம்பு சமைத்ததற்காக இவ்வளவு திட்டு வாங்கவேண்டிவரும் என்று அவர் கனவிலும் நினைத்துப்பார்த்திருக்கவில்லை. ஆனால் அன்றைக்கு மாமி கணவன் பேச்சுக்கு மறுபேச்சு எதுவும் பேசவில்லை. அழக்கூட இல்லை. அவருக்கு எவர்மீதும் கோபமும் வரவில்லை. கறிகளை உடனேயே பத்திப்பக்கம் வெட்டித்தாட்டுவிட்டு, வீடு முழுதும் சாம்பிராணிப்புகை போட்டு, அவசர அவசரமாக ஒரு கத்தரிக்காய்க்குழம்பு வைத்து, கணவன் முன்னே சிரித்தபடி போய் நின்றார். அன்றைக்கு ஆரம்பித்தது, இந்த முப்பத்தைந்து வருடங்களில் பெரிதாக எதுவுமே மாற்றமடைந்துவிட்டது என்று சொல்லமுடியாது.

ரூபிணா இன்னமும் ரோந்துவிமானம்போல விடாமல் புறுபுறுத்துக்கொண்டேயிருந்தாள். அறைக்கு வெளியே செல்லத்தோன்றாமல் சரசுமாமி புரண்டு படுத்துக்கொண்டார். வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ராசனும் வந்துவிட்டான்.

“ச்சிக்… ஆரு நடு வீட்டுக்க கொண்டுவந்து மீன் சமைச்சது?”

மாமி அடுத்தபக்கம் புரண்டு படுத்தார்.

000

அந்த மீன் குழம்பின் நறுமணம் ஒரு வாசனைத்திரவியத்தைப்போல அன்றிலிருந்து சரசுமாமியோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. நினைக்கும்போதெல்லாம் அதன் வாசம் மூக்கில் எட்டியது. உடைகளைத் தோய்த்தாலும், எத்தனைதடவை குளித்தாலும் அது அவர் உடலைவிட்டு விலகவேயில்லை. செல்லும் இடமெல்லாம் அதுவும் அவரோடு கூடவந்தது. ஆங்கிலவகுப்புக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும், மாலையில் நடைப்பயிற்சியின்போதும் அதன் வெடுக்கும் சேர்ந்து நடந்தது. அவரின் கடைவாய்ப்பல் இடுக்குகளில் அந்த விளமீனின் சிறுதுகள் ஒன்று சிக்கிக்கொண்டு எந்நேரமும் இடறிக்கொண்டிருந்தது. இரண்டே நாளில், மீண்டும் சந்தைக்குப்போகலாமா என்று எழுந்த சிந்தனையைக் கட்டுப்படுத்த மாமி சிரமப்பட்டார். வேண்டாம். அந்தச்சனியனை வாங்கிக்காய்ச்சி, தேவைக்கில்லாமல் ஏச்சு வாங்கவேண்டாம். இனிமேல் மீன் என்ற சாமானே வீட்டில் சமைக்கவேண்டாம். மாமி மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டார்.

நாலு நாள், ஒரு வாரம், இரண்டு வாரங்கள் எப்படியோ கழிந்தன. மெது மெதுவாக அந்த விளமீனின் வாசம் அவரினின்று வடிந்துகொள்ள ஆரம்பித்திருந்தபோதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டில் யாருமிருக்கவில்லை.

“கான் ஐ ஸ்பீக் டு ஸரஸ்வடி மெடம்”
“ஐ ஆம் சரஸ்வதி ஸ்பீக்கிங்”
“மெடம் .. ஹவ் ஆர் யு? யுவர் பிஷ் இஸ் ஹியர்”
“வட்?”
“யுவர் பிஷ் மெடம் .. புரம் ப்ரெஸ்டன் மார்க்கட்”

சரசு மாமிக்கு அப்போதுதான் விடயம் உறைத்தது. சந்தைக்கடையிலிருந்து தொலைபேசி எடுக்கிறார்கள். மீண்டும் அந்த ஊர் விளமீன் சிக்கியிருக்கிறது. இவரின் ஞாபகம் வந்து அழைத்துச் சொல்கிறார்கள். காக்கைதீவில் விட்டுவந்த நாய்க்குட்டி மீண்டும் வீடுதேடி வந்து சேர்வதுபோல, மீன்குழம்பின் நினைப்பு மீண்டும் சரசுமாமியிடம் நெருங்கி வந்து ஒட்டிக்கொண்டது. வேண்டாம். மீண்டும் மகனோடும் மருமகளோடும் சில்லெடுக்க முடியாது. சந்தைக்குப்போகவேண்டாம். மாமி டிவியைப்போட்டு கொஞ்சநேரம் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒழுங்காயிருந்த படுக்கையை மீண்டும் உதறிப்போட்டு விரித்தார். வேண்டாம், அரியண்டம். மத்தியானச் சமையலுக்கு வெந்தயக்குழம்பு செய்யலாம் என்று உள்ளி, வெங்காயம் உரித்துவைத்தார். உடுப்புகளை உதறி அடுக்கிவைத்தார். மீண்டுமொருமுறை குளித்தார். மணிக்கூடு பதினொன்று காட்டியது. இப்போது புறப்பட்டால் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு ஒரு மணிக்குள் திரும்பிவிடலாம். ஆனால் வீட்டுக்குள் சமைத்தால் ராசனும் ரூபிணாவும் நெருப்பு எடுப்பார்களே? சரசுமாமி சற்றுநேரம் உட்கார்ந்து யோசித்தார். பின் ஒரு முடிவோடு சேலையொன்றை அவசரமாகச் சுற்றிக்கட்டி, வீட்டைப்பூட்டிக்கொண்டு பேருந்துத் தரிப்பிடத்துக்கு ஓடினார்.

அன்று சந்தையிலிருந்து வீடு திரும்பும்போது மாமியின் கையில் மீன் பையோடு சிறிய எரிவாயு அடுப்பும் கூடவிருந்தது. பிக்னிக் போகிறவர்கள் பயன்படுத்தும் அடுப்பு அது. அடுப்போடு மிகச்சிறிய எரிவாயு சிலிண்டர்களையும் சந்தையிலிருந்த சைனீஸ் கடையில் வாங்கி வந்திருந்தார். வீட்டின் பின்வளவில் இருந்த தோட்டக்கருவிகள் வைக்கும் சிறிய தகரக் கொட்டகையை அவசரமாக ஒதுக்கி, அடுப்பை வைத்து, அங்கேயே மீனைக் கழுவி, வெட்டி, குழம்பு காய்ச்சி, மதியம் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மீதிக்கறியையும் அந்த இடத்திலேயே மூடி வைத்தார். ஹரீஷைக் கூட்டப்போவதற்கு முன்னர் வீடு முழுதும் சாம்பிராணிப்புகை போட்டார். புதினமாக வீட்டினுள் சாம்பிராணிப்புகை போடப்பட்டிருந்ததைப்பற்றி மாலையில் வீடு திரும்பிய ரூபிணா எதுவும் கேட்கவில்லை. ராசன் கவனிக்கவேயில்லை.

அடுத்தவாரமும் சந்தைக்கடையிலிருந்து தொலைபேசி அழைத்தார்கள். அதற்கடுத்தவாரமும் இதே நடைமுறை தொடர்ந்தது. பருவகாலமாக இருக்கவேண்டும். விளமீன் வாராவாரம் கடைக்கு வந்துகொண்டிருந்தது. சரசுமாமி விளமீன் தவிர்த்து ஒட்டி, அரக்குளா, சூடை என்றும் மீன்களை வாங்க ஆரம்பித்தார். அந்தச் சீக்கிய ஓட்டுநரின் பெயர் ஹர்வீந்தர் என்று தெரியவந்தது. இன்னொரு துருக்கியப் பேருந்து ஓட்டுநரும் சரசுமாமிக்குப் பரிச்சயமானார். சந்தையில் ஓரிரு முதியவர்கள் மாமியை இனங்கண்டு அறிமுகமாய்ப் புன்னகைக்க ஆரம்பித்தனர். மாமி நாளடைவில் மீன் வாங்கிவிட்டு அரக்கப்பறக்கத் திரும்பாமல், சந்தையிலேயே ஆற அமர உட்கார்ந்து கோப்பிக்கடையில் கப்புசீனோ வாங்கிக்குடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மூன்று சரை ஈகுவல் சீனி போட்டவர் பின்னர் இரண்டு, ஒன்று என்று குறைத்து, சீனியே போடாமல் குடிக்கவும் பழகினார். சமயத்தில் ஆங்கிலவகுப்பில் அவரோடு கூடப்படிக்கும் சூடானிய வயோதிபர் ஒருவரும் மாமியோடு இணைந்துகொள்வதுண்டு. முந்தையநாள் சமைத்த மீன் கறி மீதமிருந்தால், சோற்றோடு கட்டிக்கொண்டுவந்து சந்தையில் வைத்தே சூடானியருக்கும் கொடுத்து மாமி சாப்பிடுவார். “வாவ் இட் ஸ்மெல்ஸ் நைஸ்” என்றபடி அவர்களுக்குக் கைகாட்டியபடி மனிதர்கள் கடந்துபோவர். வாரத்துக்கு இரண்டு தடவையேனும் மாமி இப்படி சந்தைக்கு வர ஆரம்பித்தார். ஏனைய ஐந்து நாட்களும் அந்த இரண்டு நாட்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

000

“ஷிட் … ஆரு இந்த விசர் வேலை பாத்தது?”

ஒருநாள் பின்வளவு கொட்டகையிலிருந்து ராசன் கத்தியபோது சரசுமாமி கொடியில் உடுப்புப்போட்டுக்கொண்டிருந்தார். என்றோ இது நடக்கும் என்று அவர் எதிர்பார்த்ததுதான். மாமி பதில் எதுவும் பேசாமல் ஈர உடுப்பைத் தொடர்ந்து விரிக்க ஆரம்பித்தார்.

“எவ்வளவுநாளா இது நடக்குது அம்மா? இதுக்குள்ள வச்சு சமைச்சிருக்கிறீங்கள்? ச்சிக் நாறுது. பக்கத்துவீட்டுக்காரன் கொம்ப்பிளெயின் பண்ணினா கதை சரி … நெருப்பு பிடிச்சால் இன்சூரன்ஸ் வேற குடுக்கமாட்டாங்கள்”

மாமி ராசனை ஏறெடுத்தும் பார்க்காமல் உடுப்பைக் கொடியில் விரித்தபடியே சொன்னார்.

“வீட்டுக்கையும் சமைக்கேலாது … வெளியையும் சமைக்கேலாண்டா வேற எங்கை வைச்சுத்தான் சமைக்கிறது அப்பன்?”
“சமைக்காதீங்கோ … மீன் சமைக்காட்டி என்ன குடியா முழுகிடும்? ”

மாமி எந்தப் பதட்டமுமில்லாமல் சோட்டியைப் படக்கென்று ஒரு உதறு உதறிவிட்டுக் கொடியில் போட்டார்.

“எனக்கு முழுகிடும்தான். உனக்குச் சொல்லி விளங்கப்படுத்த ஏலாது ராசன். எதுக்கு வீணாப் பிரச்சினை? நான் பேசாம தனியா ரூம் எடுத்துப் போயிடுறன்”

ராசன் தாயிடமிருந்து அப்படியொரு பதில் வருமென்று எதிர்பார்க்கவேயில்லை. தடுமாறிப்போய் நின்றவன் விடுக்கென்று வீட்டுக்குள்ளே போய்விட்டான். அன்று முழுதும் யாரும் மாமியோடு பேசவில்லை. அடுத்தநாளும் பேசவில்லை. அன்றைய சரசுமாமியின் பதிலுக்குப்பின்னர், பின் கொட்டகையில் மீன் குழம்பு சமைப்பது எவராலும் பிரச்சனையாக்கப்படவில்லை. வாராவாரம் சரசுமாமி சந்தைக்குப்போவதும் மீன் சமைப்பதும் தொடர்ந்தே வந்தது. அந்த சூடானியரோடு சேர்ந்து ஒரு மசிடோனியத் தம்பதியரும் மாமியின் சந்தைப்பயணங்களில் இணைந்துகொள்ள ஆரம்பித்தார்கள். நாளடைவில் ப்ரெஸ்டன் சந்தை தவிர்த்து வேறு இடங்களுக்கும் அவர்கள் போய்வர ஆரம்பித்தார்கள். மெல்பேர்ன் நகர மையத்துக்குப் போனார்கள். விக்ரோறியா சந்தைக்குப் போனார்கள். பெண்டிகோ, பலராட் போன்ற தூர இடங்களுக்கு ஒருநாள் பயணமாகப் போய்த் திரும்பினார்கள். திரையரங்குக்குச் சென்று படம் பார்த்தார்கள். மாமி தனக்கென ஒரு கைத்தொலைபேசியும் வாங்கி வைத்துக்கொண்டார். ஒவ்வொரு வாரமும் எங்கெங்கெல்லாம் போவது? என்னென்னவெல்லாம் செய்வது? என்பதையெல்லாம் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி ஒழுங்கமைத்தார்.

ஒருநாள், “How to cook a white snapper curry?” என்று ஆங்கிலத்தில் சிறு செய்முறைக் கட்டுரை ஒன்றை எழுதி மாமி வகுப்பில் காட்ட, அது ஆசிரியருக்குப் பிடித்துப்போய், அவர் அதை உள்ளூர் நகரசபை வாரச் சஞ்சிகைக்கு அனுப்பிவைத்தார். அடுத்தவாரமே அந்தச் சஞ்சிகையில் “திருமதி சரஸ்வதி பேரம்பலம்” என்ற மாமியின் முழுப்பெயரோடு அவரின் சிறுபடமும் போட்டு, இருபத்துநான்காம் பக்கத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது. உற்சாகத்தில் மாமி வாராவாரம் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். விளமீன் புட்டு, விளமீன் பொரியல், பத்தியக்கறி, சுறா வறை, இறால் தலைச் சொதி என்று அவருடைய கைப்பக்குவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தன. சமையல் படங்களையும் அவரே கைத்தொலைபேசியில் பிடித்து, கடையில் பிரிண்ட் பண்ணி எடுத்து, சஞ்சிகைக்கு அனுப்புவார். ஒருகட்டத்தில் பத்திரிகையில் எழுதவேண்டும் என்பதற்காகவே புதுப்புதுக் கறிகளை சரசுமாமி செய்துபார்க்க ஆரம்பித்தார். புதுப்புது மீன்களை வாங்கிச் சமைக்கலானார். வாரம் மூன்று நாட்கள் சந்தைக்குப் போக ஆரம்பித்தார். அந்த மீன் கடைக்காரரும் மாமிக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார்.

“வீ ஆர் மூவிங் மெடம்.. கோயிங் டு புட்ஸ்கிரே”
“பார்டன்?”
“வி ஆர் குலோசிங் திஸ் ஷோப். நெக்ஸ்ட் மந்த் வீ ஆர் இன் புட்ஸ்கிரே”
“விச் ஸ்டேஷன் இட் இஸ்?”
“இட்ஸ் டூ ஃபார் மெடம்… யு டேக் டூ ட்ரெயின் அண்ட் எ பஸ்”

அந்த மீன்கடை நிரந்தரமாகவே புட்ஸ்கிரே என்கின்ற தொலைவிலுள்ள ஊருக்கு இடம்மாறுகிறது என்பதை மாமியால் சீரணிக்கவே இயலவில்லை. அபூர்வமாக அந்த ஒரு கடையில்தான் விளமீன் வந்துகொண்டிருந்தது. விளமீன் வரத்து இல்லையென்றால் பிரெஸ்டன் சந்தைக்குத் தொடர்ச்சியாக வரவேண்டிய தேவையும் நின்றுவிடும். அந்தப்பயணம் கொண்டுவந்து சேர்த்த அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றுவிடும். என்ன செய்யலாம்? மாமிக்குத் தான் இத்தனை நாள்களும் மீளக்கட்டியமைத்த வாழ்வு தம்மைவிட்டு நழுவித்தப்பி நீந்தி ஓடுவதுபோலத் தோன்றியது. ஏதாவது செய்யவேண்டுமே. என்ன செய்யலாம்? புட்ஸ்கிரே சந்தைக்குப் இலகுவாகப் போய்வருவதற்கு வழி என்ன? இரண்டு ரயிலும் இரண்டு பேருந்தும் எடுத்து எப்படி சந்தைக்குப்போவது?

000

சரசுமாமி கிட்டத்தட்டத் துள்ளியே குதித்துவிட்டார்.

மூன்றாவது தடவை அந்த அதிசயம் நிகழ்ந்துவிட்டது. சரியான வேகத்தில் சென்று, சரியாக விதிகளைப் பின்பற்றி, முறையாகப் பார்க்கிங் செய்துகாட்டி, ஓட்டுநர் பரீட்சையில் மாமி சித்தியடைவார் என்று ஆறு மாதங்களுக்கு முன்னர் யாரேனும் சொல்லியிருந்தால் அவரே விழுந்து விழுந்து சிரித்திருப்பார். ஆனால் வென்றுகாட்டிவிட்டார். ரூபிணாவின் முகச்சுழிப்பு, ராசனின் நக்கல், பயிற்சியாளரின் திட்டு என எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு, பரீட்சை எழுதி, செயன்முறையில் முதல் இரண்டு தடவைகள் தவறினாலும் மூன்றாவது தடவை சித்தி எய்தி, பெருமிதத்தோடு வீட்டில் வந்து சொன்னபோது, ராசனுடைய பதில்,

“இந்த வயசில கார் ஓடி, அடிபட்டுக்கிடந்தா நாங்கள்தான் ஆஸ்பத்திரிக்கு அலையோணும்.”

மாமி கணக்கே எடுக்கவில்லை. தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைத்திருந்த மூவாயிரம் டொலர் காசில் பழைய டோயோட்டோ கொரொல்லா ஒன்றை மசிடோனியத் தம்பதியின் உதவியோடு வாங்கிக்கொண்டார். முதல்வாரம் அவர்களுடைய வீதியில் ஓடிப்பார்த்தார். நம்பிக்கை வந்தது. இரண்டாம்வாரம் எப்பிங் பிளாசாவரை போய்வந்தார். தைரியம் வந்தது. மூன்றாவது வாரம் அதிவேகசாலையில் நுழைந்துபார்த்தார். நான்காம் வாரம்.

விஸ்தாரமான புட்ஸ்கிரே சந்தையில் மீன்கடையைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகச்சிரமாக இருந்தது.

“ஹலோ செஃப் மெடம். யூ ஆர் ஹியர். ஹவ் டிட் யு கம்?”

மாமி சற்றே கூச்சத்தோடு சொன்னார்.

“ஐ டிரைவ் மை கார்”
“வாவ்… வொண்டர்புல் மெடம். சொறி. யுவர் பிஷ் இஸ் நொட் கமிங்… நோ சீசன்”

மாமிக்கு முகம் தொங்கிப்போனது. ஊர் விளமீனோடு தான் டிரைவிங் லைசன்ஸ் எடுத்த விடயத்தைப் பகிரவேண்டும்போல இருந்தது. ஆனால் அதிஷ்டம் இல்லை. மீனை பின் சீட்டுக்கடியில் வைத்து, பாட்டுக்கேட்டுக்கொண்டே டிரைவ் பண்ணும் அதிஷ்டம் அவருக்கு இல்லை. அந்த மீனுக்கும் இல்லை. இனி அது எப்போது சந்தைக்கு வருமோ?

“ப்ளீஸ் கோல் மீ இப் இட் கம்ஸ். யூ நோ மை நம்பர்?”
“யெஸ் .. யெஸ்.. ஐ வில் கோல் யூ”

மாமி சீலா மீனையும் சில மரக்கறிகளையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். கார் ஓடப் பழகியதால் கடைக்குப்போய் சாமான்கள் வாங்குவதிலிருந்து கிளினிக்குக்குப் போவதுவரை எல்லாவற்றையும் மாமியே செய்ய ஆரம்பித்தார். காலையில் எழுந்ததுமே எங்கே போகலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அந்த சூடானியரையும், மசிடோனியத் தம்பதியையும் ஏற்றிக்கொண்டு கோயில்களுக்குப்போய்வந்தார். அவர்களுடைய தேவாலயங்களுக்குப்போனார். வைன் தோட்டங்களுக்குப் போனார். ஓய்வூதியம் கிடைக்க ஆரம்பித்ததால் ஆங்கில வகுப்புக்குப்போவதை நிறுத்திவிட்டார். சமையல் குறிப்புகளையும் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீன்கடையிலிருந்தும் அழைப்பு வராததால் சந்தைக்கும் அடிக்கடி போவதில்லை.. இப்போதெல்லாம் மாமி வீட்டில் மீன் சமைப்பது குறைந்துவிட்டது. ஏன், சமைப்பதே இல்லை எனலாம். வீட்டிலேயே இருப்பதில்லை.

000

“அக்கோய், நீ கலியாணம் கட்டிப்போனா, ஆரு இப்பிடி மீன் குழம்பு சமைச்சுத்தருவினம்?”

சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் குழந்தை ஒருநாள் திடீரென்று கேட்டான். குழந்தை பொதுவாக வீட்டுப்பின்பத்தியிலிருந்துதான் சாப்பிடுவான். ஐயாவும், அம்மாவும், சரசுமாமியும் சாப்பிட்டபின்னர், மாமி அவனுக்குப் போட்டுக்கொண்டுவந்து கொடுப்பார். அவனுக்கென்று தனியாக பொரிச்சமீன் எடுத்து வைத்திருப்பார். அவன் சாப்பிட்டு முடியும்வரை மாமிக்கும் பத்தியிலேயே ஏதேனும் ஒரு அலுவல் நிச்சயம் இருக்கும். சாப்பிடும்போது குழந்தைக்கு உலகம் என்ற ஒன்று சுற்றிக்கொண்டு இருக்கும் பிரக்ஞையே இருக்காது. மீன் முள்ளைக்கூட இறைச்சி எலும்பைச் சூப்புவதுபோல சூப்பிச்சாப்பிட்டு உச்சுக்கொட்டுவான்.

“குழம்பெண்டா இதல்லோ குழம்பு … உந்த சட்டிக்க கிடக்கோணும் எண்டுதான் உள்ள மீனெல்லாம் தேடிவந்து களங்கண்டில ஆப்பிடுதுகள் அக்கோய்”

அவன் ஒருவன் ரசித்துச் சாப்பிடுவதைப்பார்ப்பதற்காகவே வாழ்க்கை முழுதும் மீன் சமைத்துக்கொட்டலாம்போல சரசுமாமிக்கு இருக்கும்.

“நான் கலியாணம் கட்டி எங்க போறனோ அங்கனயே நீயும் வந்துடு குழந்தை. உன்னை விட்டா எனக்கு ஆரு கோர்வை கொண்டுவாறது?”

குழந்தை ஆமோதிப்பதுபோலவே தலையாட்டியபடி, அப்படியே கோப்பையோடு எடுத்து மீதிக்குழம்புச்சொதியை உறிஞ்சுவான். புங்குடுதீவுவரை அவன் கோப்பை உறிஞ்சும் சத்தம் கேட்கும்.

நான்காவது தடவையும் தொலைபேசி மணி அடித்தது. ராசன்தான் எடுத்தான்.

“ஹலோ … ஸரஸ்வடி மெடம்?”
“ஹூ ஆர் யூ ஸ்பீக்கிங்?”
“வீ ஆர் புரம் பிஷ் மார்க்கட். தட் வைட் சினப்பர் பிஷ் இஸ் ஹியர்”
“வட்?”
“டெல் ஸரஸ்வடி மெடம் … ஹெர் வைட் சினப்பர் பிஷ் இஸ் ஹியர். இட்ஸ் சீஸன்.”

ராசன் தயக்கமாகச் சொன்னான்.

“சொறி … மெடம் இஸ் நோ மோர்”

மீன் காரரின் குரல் தடுமாறியது.

“வாட்?”,

ராசன் தெளிவாகச் சொன்னான்.

“ஷி பாஸ்ட் எவே எ மன்ந் எகோ. ஹார்ட் அட்டாக்.”

மறுமுனை பதிலேதும் சொல்லாமல் அமைதியானது.

நன்றி: புதியசொல் 6

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *