கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 12,914 
 

பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு மனம் தாளவில்லை; பதைத்துப் போனாள்.

“என்னம்மா நளினா, தலை வலிக்குதா? தைலம் வேணாத் தடவி விடட்டுமா?” என்று அருகில் சென்றாள். நளினாவின் நெற்றியில் கனிவுடன் கை வைத்துப் பார்த்தாள்.

“வலியெல்லாம் இல்லம்மா… கொஞ்சம் மனசு சரியில்லை அதான்!”

“படுத்திட்டிரு. இதோ வரேன்!” என்று திரும்பி அடுக்களைக்குப் போன நளினாவின் தாய். சூடாகக் காபி போட்டு எடுத்து வந்தாள்.

“இந்தக் காபியைக் குடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு நளினா!” நளினா வாங்கி ஒரு வாய் பருகிவிட்டு, தம்ளரைக் கீழே வைத்தாள்.

“அம்மா… எங்க ஸ்கூல் ஹெட்கிளார்க் ராமசாமி, ஆபீஸ் கண்காணிப்பாளர் நாகு.. இந்த இரண்டு பேரும் கொடுக்கிற தொல்லை தாங்க முடியலம்மா. பேரண்ட் டீச்சர்ஸ் அசோசியேஷன்னு பள்ளி வளர்ச்சிக்குத் தேவையானதைச் செய்யறதுக்கு எங்க ஸ்கூலில் ஒரு சங்கம் இருக்கு. அதன் தலைவர் ஆதிமூலம் ஒரு ரௌடி. இவங்க எல்லோரும் கூட்டுச் சேர்ந்துகிட்டு சதி பண்றாங்கம்மா. ஸ்கூலுக்கு கம்ப்யூட்டர் லாபரெட்ரி கட்டறேன் பேர்வழின்னு புதுசா அட்மிஷன் ஆகற
ஸ்டூடண்ட்ஸ்கிட்டே அஞ்சாயிரம், பத்தாயிரம்னு கட்டாய டொனேஷன் வசூல் பண்ணினாங்க. அந்த வகையில இப்ப சில லட்ச ரூபாய்கள் சேர்ந்திருக்கு. அந்தப் பணத்தில் கட்டிடமே கட்டாமல் அபேஸ் செய்ய இந்த மூவர் அணி திட்டம் போட்டிருக்கு. நன்கொடை வசூல் பண்ணினப்ப கொடுத்த ரசீது புக் அடிக்கட்டை, வசூல் கணக்கு விவரம் கொண்ட நோட்டு எல்லாம், அக்கவுண்டண்ட் என்ற முறையில் என்கிட்டேதான் இருக்கு. அது எல்லாத்தியும் கொடு. கொளுத்திடறோம். வசூல்
செஞ்சதுக்கான ஆதாரமே பள்ளிக்கூடத்துல இல்லாமப் போயிடும். யாராவது வந்து கேட்டால், கிடைச்ச நிதி போதலை; அடுத்த வருஷமும் வசூல் பண்ணினாத்தான் கட்டடம் கட்ட முடியும்னு சொல்லிக்கலாம்கறாங்கம்மா!”

“அடப் பாவிகளா! சரிம்மா, அதுக்கு நீ என்ன சொன்னே?”

“நான் ஹெச்.எம்.கிட்டே இதைப் போய் சொன்னேன். அவர் என் பேச்சைக் காதிலேயே போட்டுக்கலை. அந்த பி.டி.ஏ. சங்கத் தலைவர் பொல்லாதவன்மா. அரசியல்வாதி வேற. நமக்கு என்னம்மா வந்துச்சு? அவங்க கேட்கறதைக் கொடுத்துடுங்கறார்!”

பங்கஜத்தின் முகத்தில் கருமை சூழ்ந்தது. மகளை அணைத்துக் கொண்டாள். “உங்க ஹெச்.எம்.கிட்டே சொல்ல வேண்டியது உன் கடமை. அதை நீ சரியா செஞ்சுட்டே. அதுக்கப்புறம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய வேலை! அவர் தன் கடமையிலிருந்து தவறினா நமக்கு என்ன வந்தது? அவர்
சொல்கிறபடி அவங்க கேக்கறதைக் கொடுத்திட்டு நீ உன் வேலையைப் பாரும்மா! நீ பத்திரமா இருக்கணும்கிறதுதான் என் கவலை! உங்க அப்பா மாதிரி… உங்க அப்பா மாதிரி…”

பங்கஜத்தின் உடல் குலுங்கியது. கண்களில் நீர் கரகரவென்று வழிந்தது.

நளினாவின் தந்தை தசரதன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். பெங்களூர் சாலையில் அம்பேத்கர் சிலை அருகே இருந்த அந்தத் தேசிய வங்கியில் ஒரு நீளத் துப்பாக்கியுடன், காக்கிச் சீருடையில் வங்கியின் நுழைவாயிலில் கம்பீரமாக நிற்பார். அங்கு அவருக்கு பாதுகாவலர் வேலை.

ஒருநாள் மதியம் 12 மணி இருக்கும்.

நளினா வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு போன்கால் ஒன்று வந்தது. அப்பா வேலைம்செய்யும் வங்கியின் மேலாளர் சிவராமன் அவளை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.

பதறிக் கொண்டு ஓடினாள் நளினா.

வங்கியில் நுழைந்த சில முகமூடிக் கொள்ளையர் அப்பாவைக் கத்தியால் குத்திவிட்டார்களாம். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அப்பாவை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். இருந்தும் நிறைய ரத்த சேதம் காரணமாக நளினா அங்கு போயதற்குள் அப்பாவின் உயிர் பிரிந்து
விட்டது.

“அஞ்சு பேர் வந்தாங்கம்மா. உங்கப்பாவை அடிச்சுக் கீழே தள்ளி அவர்கிட்டே இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிட்டான் ஒருத்தன். வெடிகுண்டைக் காட்டி மிரட்டி எங்க எல்லோரையும் ஹாலுக்கு இழுத்துப் போய் ஓரமாக நிற்க வெச்சாங்க. கையோடு கொண்டு வந்திருந்த பெரிய சாக்குப் பையில் கட்டுக் கட்டாகப் பணம், அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாத்தியும் கொட்டிக் கட்டினாங்க…அந்த நேரத்தில்தான் அது நடந்தது. அடிபட்டு விழுந்து கிடந்த உங்கப்பா எழுந்து என் அறையை நோக்கிப் பாய்ந்தார். என் மேஜைக்கு அருகே இருந்த அபாயமணி ஸ்விட்சை அழுத்தினார்.

அது வங்கியின் வெளியே கர்ண கொடூரமாய் ஒலிக்க ஆரம்பிச்சுது. சற்றுத் தள்ளி உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பொருத்தப்பட்டு இருக்கும் அபாய மணியும் சத்தம் போட ஆரம்பிச்சுது.

நியாயமாப் பார்த்தால், அது நான் செய்திருக்க வேண்டிய வேலை. ஆனால், வெடிகுண்டைக் காட்டி மிரட்டி என்னை ஹாலுக்கு இழுத்துகிட்டுப் போயிட்டாங்களே.. உன் அப்பா மட்டும் துணிச்சலாகவும் சமயோசிதமாகவும் அந்த ஸ்விட்சை அழுத்தாமலிருந்தால் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பணம், வாடிக்கையாளர்களோட நகைகள் எல்லாம் பறிபோயிருக்கும்! அபாய மணி ஒலிச்சதுமே போலீஸாரும் பொதுமக்களும் வங்கி வாசல்ல வந்து வளைச்சுகிட்டாங்க. கொள்ளையர்களும்
மடக்கப்பட்டாங்க. ஆனால், உங்கப்பாவால தான் தாங்கள் சிக்கினோம்கிற ஆத்திரத்துல கொள்ளையர்களில் ஒருவன் அவரைக் கத்தியால் சரமாரியாக் குத்திட்டாம்மா” நாத்தழுதழுக்கக் கூறினார் வங்கி மேனேஜர் சிவராமன்.

“அப்பா! அப்பா!” தாயுடன் சேர்ந்து கதறி அழுதாள் நளினா.

அந்தத் துர்ச்சம்பவம் நடந்து ஆறு மாதம்தான் ஆகியிருக்கும். மனதிலிருந்த ரணம் இன்னும் ஆறவில்லை.

பங்கஜம் சொன்னாள்: “வேண்டாம் நளினா… இந்த வீட்டில் நான் ஒருத்தரைப் பறிகொடுத்தது போதும், அவங்க கேட்டதைக் கொடுத்துடு. அப்படி உனக்கு இஷ்டம் இல்லையா, அந்தப் பாழாய்ப் போன வேலையை வேண்டாம்னு உதறிட்டு வந்துடு. கெட்ட ஆளுங்ககிட்டே நமக்கு வம்பு வேணாம்மா!”

நளினா அம்மாவைத் தேற்றினாள். “நீ சொல்றது சரிதாம்மா. அப்பா தான் ஊருக்காக உயிரை விட்டார். நானும் அப்படிப் போயிட்டால், உன்னை யாரும்மா காப்பாத்துவாங்க? எனக்கு அதுகூடப் புரியாதாம்மா?”

மறுநாள் காலை பதினோரு மணி.

பள்ளிக்கூட வாயிலில் டஸ்ட்டர் கார் ஒன்று வந்து நிற்க, அரசியல் கட்சிப் பிரமுகரும் அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான ஆதிமூலம் இறங்கினார். காரின் பின்புறமிருந்து தொப்பென்று கரடு முரடான ஆட்கள் குதித்தார்கள்.

வாசலில் நின்று பெரிய கும்பிடாகப் போட்டு வரவேற்றார்கள் ஹெட்கிளார்க் ராமசாமியும், கண்காணிப்பாளர் நாகுவும்.

தலைமை ஆசிரியரின் அறையில் போய் அமர்த்தலாக உட்கார்ந்தார் ஆதிமூலம். தலைமை ஆசிரியர் கேசவன் எழுந்து நின்று பவ்யமாக “வணக்கம் ஐயா!” என்றார்.
“என்யா அந்தக் குட்டி நளினா வந்தாச்சா? பேரண்ட் டீச்சர்ஸ் சங்க வசூல் பணத்தைப் போட்டு வெச்சிருந்த பேங்க் பாஸ்புக், செக் புக் எல்லாத்தியும் எடுத்துகிட்டு வரச் சொல்லுய்யா! அப்படியே கணக்கு நோட்டு, ரசீது புஸ்தகம்…”

“இதோ இப்பக் கொண்டுவரச் சொல்றேங்கய்யா!” என்றபடி நாகு அவசரமாக ஓடினார்.

சற்று நேரத்தில் நளினா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“வணக்கம் சார்!”

“வணக்கம்லாம் இருக்கட்டும் களுதை, செக் புக், கணக்கு புக் எல்லாம் நாலு நாளாக் கேட்டும் எனக்கே தண்ணி காட்டுறியா? நான் யாரு தெரியுமில்லே?” என்று நக்கலாகச் சிரித்தார் ஆதிமூலம்.

“அது போகட்டும். என்ன வெறும் கையோடு வந்து நிக்கறே? எங்கே நான் கேட்ட கணக்குப் புஸ்தகங்கள்?”

நளினா மெல்லச் சிரித்தாள். “இன்னிக்குக் காலைல ஆறு மணிக்கு டி.இ.ஓ.வீட்டுக்குக் கொண்டு போய் நீங்க கேட்ட எல்லாத்தியும் ஒப்படைச்சுட்டேன். அப்படியே நீங்களும் இங்கே இருக்கிற சிலரும் என்னை மிரட்டுற விஷயத்தை சி.இ.ஓ., டி.இ.ஓ. ரெண்டு பேர் கிட்டேயும் நேரடியாகவும் எழுத்து முலப் புகாராகவும் கொடுத்துட்டேன்!..”

“இன்னாம்மா கண்ணு, மெரட்டறயா? டி.இ.ஓ., சி.இ.ஓ.வுக்கு எல்லாம் பயப்படற ஆளு இல்லே நான்! இனிமே உன் கதை கந்தல்தான்! யோவ் நாகு, கத்தி கபடாவோட வெளியே நிக்கிற நம்ப ஆளுகளையெல்லாம் கூப்பிடுய்யா!”

“அட இருங்க ஆதிமூலம் சார், அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? காலையிலே மாவட்ட கலெக்டரை அவர் பங்களாவுல போய் சந்திச்சு விவரம் சொல்லி மனு கொடுத்தேன். அவர் காவல் துறை எஸ்.பி.க்கு போனில் விஷயம் சொல்லி எனக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்படி உத்தரவு
போட்டிருக்கார். கொஞ்சம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்க!”

ஆதிமூலம் எட்டிப் பார்த்தார். போலீஸ் ஜீப்கள் இரண்டு, ஒரு வேன் நிறையப் போலீஸார்…

“ஏய் பொண்ணு, யாருகிட்டே மோதறேன்னு தெரிஞ்சுதான் மோதறியா? நான் ஆளும் கட்சிக்காரன். உன்னை என்ன பண்ணுவேன் தெரியுமா?” கொதிப்புடன் கொக்கரித்தார் ஆதிமூலம்.

“அதுக்கும் ஒரு வேலை பண்ணியிருக்கேன் ஆத்மூலம் சார். சி.எம்.முக்கு ஃபேக்ஸ் மூலம் உங்க வண்டவாளத்தை விரிவான செய்தியா அனுப்பிட்டேன். அநேகமா உங்க அரசியல் பதவியைப் பறிச்சதா சி.எம்.மிடமிருந்து உங்களுக்கு சீக்கிரமே ஓலை வரலாம்!”

அடிபட்ட வேங்கையாகத் துள்ளி எழுந்தார் ஆதிமூலம்.

“இது பள்ளிப் பிள்ளைகளின் படிப்புக்காகப் பெற்றோர்கள் கொடுத்த பணம். இது திட்டமிட்டபடி கட்டடம் கட்டத்தான் பயன்படுமே தவிர, உங்களை மாதிரி ஆட்கள் ஸ்வாகா பண்ண விடமாட்டேன்!” என்றாள் நளினா.

நளினாவைப் பிரமிப்புடன் பார்த்தார் ஹெச்.எம். “உன் துணிச்சலைப் பாராட்டறேன் நளினா! ராணுவ வீரர் தசரதனின் வீரமான வாரிசுங்கறதை நீ நிரூபிச்சுட்டே! நீ நல்லா இருக்கணும்மா!” என்று மனதாற வாழ்த்தினார்.

அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட தன் அடியாட்களை ஜாமீனில் எடுக்க முடியுமா என்று கேட்பதற்காக, பொருமிக் கொண்டே வக்கீல் வீட்டைத் தேடிக் கிளம்பினார் ஆதிமூலம்.

(ஆனந்த விகடன் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *