பொன்னையா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,254 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னா, சின்னி ! வயிற்றைக் கிள்ளுது; சோத்தை யாச்சும் வடிச்சயா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா.

“நீயும் கேட்கிறயே! வெட்ட வெளியிலே அடுப்பைப் பத்த வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துப் படுத்துக் காலையிலேருந்து காயலாக் கிடக்குது. எனக்கு வேலையே ஒண்ணும் ஓடலே. அடிக்கிற காத்துலே இந்த அடுப்பு கொஞ்சமாச்சும் எரியுதா?” என்று எரிந்து விழுந்தாள் சின்னி.

“என்னை என்ன பண்ணச் சொல்றே, சின்னி? என் அப்பன் எனக்கு ஆஸ்தியா வச்சுட்டுப் போன அந்த ஒரே ஒரு பொத்தல் குடிசையையும் பாழாய்ப் போன வெள்ளம் வந்து அடிச்சுக்கிட்டுப் போயிடிச்சி. இப்ப அந்த வீட்டைக் கட்டறதுன்னா கையிலே காசில்லே…”

“எதுக்குத்தான் ஒங்கிட்ட காசு இருக்குது? நீயும் வந்து வெடிஞ்சயே, என் தலையிலே! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? நகை உண்டா, நட்டு உண்டா? இல்லை, நல்ல புடவையாச்சும் ஒண்ணு உண்டா? நான் வந்த வழி! ஊ…ஊம்…ஊ…ஊம்…” என்று தன் புடவையின் மேலாக்கை எடுத்துக் கண்களைக் கசக்கிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் சின்னி.

“அழு, அழு! நல்லா அழு! நான் அந்தத் தெருப் பக்கமாப் போயிட்டு வாரேன்!” என்று கீழே வைக்கப் போன அடைப்பத்தை மீண்டும் தூக்கி அக்கத்தில் வைத்துக்கொண்டு நடந்தான் பொன்னையா.

***

வீட்டுக்கு வீடு ‘ஸேப்டி ரேஸர்’ வைத்துக் கொண்டிருக்கும் இந்த நாளிலே, பொன்னையாவின் பிழைப்பு க்ஷண தசையை அடைந்திருந்தது. கிடைத்ததைக்கொண்டு வயிற்றைத் திருப்தி செய்துகொள்ளவே அவனால் முடிய வில்லை. இந்த லட்சணத்தில் அவன் இழந்த வீட்டை மீண்டும் கட்டிக் கொள்வதென்றால் குறைந்தது ஐம்பது ரூபாயாவது வேண்டுமே!-அடே அப்பா ! இந்த ஜன்மத்தில் அத்தனை ரூபாயை அவன் கண்ணாலாவது பார்க்க முடியுமா?

உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது தான்; அது எல்லோருக்கும் சொந்தம்தான். ஆனால் பணக்காரர்கள் சிலர் அதை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டு, “இது என்னுடையது; அது உன்னுடையது!” என்று உரிமை கொண்டாடுகிறார்களே, அவர்களுக்கு மத்தியில் ஏழை பொன்னையாவுக்கு வாழ இடமுண்டா?

“எல்லோரும் ஓர் குலம் என்பதெல்லாம் எழுத்திலே, வெறும் பேச்சிலே!- நடை முறையிலோ?

நாடு நகரங்களில் எத்தனையோ மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்! மேல் ஜாதியைச் சேர்ந்த எத்தனையோ பேர் அவற்றில் ஒண்டுக் குடித்தனம் செய்கின்றனர். அவர்களுடன் நாய்கூடச் சரிசமானமாக வாழ்ந்து வருகிறது! – ஆனால், பொன்னையா? அவன் தான் கீழ் ஜாதியாச்சே! மரணமடைந்த பின் மயானத்தில்கூட அவனுக்குத் தனி இடந்தானே?

***

“சின்னி! எனக்கொரு யோசனை தோணுது; எங்கேயாச்சும் ஒண்டுக் குடித்தனம் இருக்கலாம்னு பார்க்கிறேன்!” என்றான் ஒருநாள் பொன்னையா.

“நல்ல யோசனை தான்; நமக்கு யார் வீடு விடுவாங்க?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் சின்னி.

“நம்ம ஜில்லா போர்டுக்குத் தலைவராயிருக்காரே தர்மலிங்கம், அவர் எப்பப் பார்த்தாலும் ‘எல்லோரும் ஓர் குலம் னு பேசிக்கிட்டிருக்காரு; நம்ம ஜாதியும் அவரு ஜாதியும் ஒண்ணுன்னு சொல்றாரு. அதாலே அவரைக் கேட்டா நமக்குக் கொஞ்சம் இடம் விடுவாரு, இல்லையா?”

“என்னமோ கேட்டுத்தான் பாரேன்?”

“இரு, கேட்டுக்கிட்டு வாரேன்!” என்று சொல்லி விட்டு, அவருடைய வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான் பொன்னையா.

***

“அம்மா! ஐயா இருக்காரா?”

“யாரடா அது ? பொன்னையாவா?” என்று கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்தார் தர்மலிங்கம்.

“ஆமாங்க!”

“எங்கே வந்தே?”

“வெள்ளம் வந்து என் வீட்டை அடிச்சிக்கிட்டுப் போயிட்டுதுங்க; அதைத் திருப்பிக் கட்டலாம்னா கையிலே காசில்லேங்க! பனியிலே படுத்துப் படுத்துக் குழந்தை வேறே காயலாக் கிடக்குது. அதாலே உங்க வீட்டுத் திண்ணையிலாச்சும் கொஞ்சம் இடம் கொடுத்தீங்கன்னா, என்னமோ நாங்க பொழைச்சுப் போவோம்!”

இதைக் கேட்டதும் தர்மலிங்கத்துக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. பொன்னையாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. எதற்கும் தமது மனைவியுடன் கலந்து யோசித்துப் பார்க்கலாம் என்று எண்ணியவராய், “சரி, நாளைக்கு வாடா!” என்று சொல்லி, அவனிடமிருந்து அந்த நிமிஷம் தப்பிவிட்டார்!

***

“பத்மா! பொன்னையாவின் வீடு வெள்ளத்திலே போயிடுத்தாம்; நம்ம வீட்டுத் திண்ணையிலே கொஞ்சம் இடம் வேணும்னு கேட்கிறான்!” என்று எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக ஒடுக்கிக்கொண்டு, தம் மனைவியிடம் தாழ்மையோடு விண்ணப்பம் செய்துகொண்டார் தர்மலிங்கம்.

“ரொம்ப அழகாத்தான் இருக்கு! போயும் போயும் அந்தக் கீழ்ஜாதி நாயைக் கொண்டு வந்து…” என்று ஆவேசத்துடன் இரைய ஆரம்பித்துவிட்டாள் அவள்.

“உஸ்! யாராவது கேட்டுக் கொண்டே உள்ளே வந்து விடப் போகிறார்கள்!” என்று அவள் வாயைப் பொத்தினார் தர்மலிங்கம்.

அவள் வாசல் வரை சென்று எட்டிப் பார்த்துவிட்டு வந்து, “யாரையும் காணோம்!- ஆமாம், அதற்கு நீங்கள் என்ன சொல்லித் தொலைத்தீர்கள்?” என்று கேட்டாள்.

“என்னத்தைச் சொல்வது? ‘எல்லோரும் ஓர்குலம்’னு எடுத்துக்கெல்லாம் தொண்டை கிழியக் கத்தும் நான், என் வீட்டுத் திண்ணையில் அவனுக்குக் கொஞ்சம் மில்லையென்றால்…?”

“அதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், கேளுங்க!” என்று சொல்லிக் கொண்டே பத்மா ஓடோடியும் வந்து, அவர் காதோடு காதாக ஏதோ சொல்லி வைத்தாள்.

அதைக் கேட்டதும் தர்மலிங்கத்தின் முகம் தாஜ் வல்யமாகப் பிரகாசித்தது. “அடியே! ‘பெண் புத்தி பின் புத்தி’ என்று சொல்கிறார்களே, அவர்களைக் கொண்டு போய் உடைப்பில்தான் போடவேண்டும்!” என்று அகங் கனிந்து சொல்லி, அவளை அன்புடன் தழுவச் சென்றார்; அவள் விலகிக்கொண்டாள்!

***

மறு நாள் பொன்னையா வந்தான். அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, “ஏண்டா, பொன்னையா! எத்தனை நாளைக்கு நீ என் வீட்டுத் திண்ணையில் பொங்கித் தின்றுகொண்டிருக்க முடியும்? இந்தா, இந்த ஐம்பது ரூபாயைக் கொண்டுபோய் உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள்!” என்று அவனிடம் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார் தர்மலிங்கம்.

நல்ல வேளையாகப் பொன்னையா மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விடவில்லை. இரு கைகளையும் ஏந்தி அந்தப் பணத்தைப் பக்தி சிரத்தையுடன் பெற்றுக் கொண்டான்; “நீங்க நல்லாயிருக்கணும், சாமி!” என்று நெடுமரம் போல் அவர் காலில் விழுந்து, கரை புரண்டு வந்த கண்ணீரால் அவருடைய பாதங்களை நனைத்தான்.

“ஆமாம்; இவனுக்குப் பணம் கொடுக்காவிட்டால் நான் கெட்டுப் போய்விடுவேனாக்கும்!” என்று தம்முள் முணுமுணுத்துக் கொண்டார் தர்மலிங்கம்.

***

ஆனந்தக் கடலில் நீந்திக்கொண்டு வந்த பொன்னையா, அடுத்த நிமிஷத்தில் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

ஆவலே உருவாய்த் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சின்னியிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்தான்.

“ஐயோ சாமி,இத்தனை பணம் உனக்கு ஏது?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் சின்னி.

“ஐயாதான் கொடுத்தாரு!” என்றான் பொன்னையா. “மவராஜர்! இந்த ஏழைகளுக்கு இவ்வளவு பணம் கொடுத்தாரே, அவரு மனுசர் இல்லே; தெய்வம்!”

“தெய்வந்தான்! இல்லேன்னா, என்னை உன் வாயிலேயிருந்து காப்பாத்தியிருக்க முடியுமா?” என்றான் பொன்னையா சிரித்துக்கொண்டே.

அந்தப் பணம் மனமுவந்து கொடுத்த பணமல்ல மனைவி சொன்ன யோசனையின்பேரில் தம் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொடுத்த பணம்; தன்னை எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவனுக வாழச் செய்யும் பணம் அது என்பது ஏழை பொன்னையாவுக்கு எப்படித் தெரியும்?

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *