நேர்மை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 7,654 
 

என் பேரு குப்பணங்க. ஒரு ரிக்ஸா தொழிலாளி. இந்த தொயில்ல எல்லார்கிட்டயும் இருக்கும் குடி , குட்டி , தம்மு…. என்கிற எல்லா கெட்ட பயக்கங்களும் என்கிட்டேயும் இருக்குங்க . ஆனா நான் ஒரு நேர்மையானவங்க. என்ன ஆச்சரியப்படுறீங்களா…? சத்தியமா சொல்றேன் நான் நேர்மையானவங்க.

நேத்திற்குக் காலையிலிருந்தே சரியா சவாரி அமையலைங்க. ஒன்னு ரெண்டு கிடைச்சுது. சரியான சாவு கிராக்கிங்க. கிடைச்ச துட்டுகளை ஊட்டுக்குக் குடுத்து அனுப்பிச்சிட்டேன்.

மத்தியானம் நல்ல பசி கியிஞ்சி போன என் மேல் சட்டைப் பையைத் தடவிப் பார்த்த…. பிசாத்து ஒத்த ரூபா துட்டு தட்டுப்பட்டுச்சு நாஸ்த்தாவுக்குப் பத்தாதே. ! ஒரு பீடி வாங்கி நாலு வளி வளிச்சா பசி மரத்துப் போயிடும் என்கிறதுனால அதோ அந்த பங்க் கடையாண்ட போய் வரிசையா அடுக்கி வச்சிருக்கிற முட்டாய்ப் பாட்டுலுங்க மேலே அந்த ஒத்த ரூபா துட்ட வச்சி…

” பீடி… குடுங்கன்னேன். ”

ரொம்ப மும்முரமா படிச்சிக்கிட்டிருந்த கடைக்காரரு ரெண்டு பீடியை எடுத்து பாட்டிலை மேல வச்சி காசை எடுத்து கல்லாவுல போட்டுட்டு… திரும்ப ஒரு ஒத்து ரூபா துட்ட எடுத்து பீடிக்குப் பக்கத்துல வச்சாரு .

ஒத்த ரூபா துட்ட ரெட்டை ரூபா துட்டா நெனைச்சி ஆள் மீதி காசை வச்சிருக்காரு என்கிறது எனக்குப் புரிஞ்சி போச்சி.

நான் மனா வச்சா… எதுவும் பேசாம அந்த காசை எடுத்து வந்திருக்கலாம். ஆனா… நான் அப்படி செய்யலை. அவருதான் ஏதோ நெனப்புல ஏமாந்து கொடுக்குறாருன்னா நாம ஏமாத்தலாமாங்க. ? !

அடுத்தவங்க காசு நமக்கெதுக்கு..? அவுங்களும் நம்மபளைப் போல உயக்கிற ஆள்தானே…! என்ன…. நான் கஷ்ட்டப்பட்டு ரிக்ஸா வலிச்சி சம்பாதிக்கிறேன். அவர் கடையில மொத்தமா காசைப் போட்டு நிழல்ல உட்கார்ந்து சம்பாதிக்கறாரு. அதுதானே வித்தியாசம்.

அதனால நான்…..

”இன்னா நயினா..! நாங் குடுத்தது ஒத்த ரூபா. நீ ரெண்டு ரூவான்னு நெனச்சி மீதி காசை வக்கிறே… ? ” கேட்டேன்.

ஆள் அப்படியே அதிர்ச்சி ஆயிட்டாரு.அவர் என்னை அதிசயமா பார்த்து….

” ஏம்ப்பா…! அவனவன் அடுத்தவன் எப்ப ஏமாறுவான். நாம எப்படி ஏமாத்தலாம்ன்னு பார்த்துக்கிட்டு இருக்கான் நீ என்னடான்னா இவ்வளவு நேர்மையா இந்தக் காலத்துல இருக்கியே..! ” சொல்லி காசை எடுத்து கல்லாவுல போட்டுக்கிட்டாரு.

” அட போ நயினா..! ஒயக்கிற காசு ஒட்டினாப்போதும்…! ” சொன்னேன்.

” இந்த நெலமையிலும் நீ இவ்வளவு நேர்மையா இருக்கியே. சத்தியமா உன்னைப் பாராட்டணும்ப்பா. உன்னெ மாதிரி ஆளுங்க இருக்கிறதுனாலதான் நாட்டுல போனாப் போவுதுன்னு மழையே பேயுது. ” சொன்னார் .

” இதெல்லாம் பெரிய வார்த்தை நயினா . உன்னை நான் ஏமாத்துனா என்னை எவனாவது ஏமாத்துவான்.” கிளம்பினேன்.

” நில்லு. உன் நேர்மைக்கு இந்தா இன்னொரு பீடி. ” – சொல்லி….. ஒன்னை எடுத்துப் பாட்டிலுங்க மேல வச்சாரு.”

” வேணாம் நயினா அன்பளிப்பு , மரியாதை..! ” சொல்லி நான் திரும்பி பார்க்காம வந்துட்டேன்.

ஆனாலும்… அவர் பாராட்டு, மரியாதை… கேட்க, பார்க்க… மனசுக்கு ஒரு இதமா, கிளுகிளுப்பா கிறுகிறுப்பா இருக்கிறது சாத்தியமான உண்மைங்க.

அட..! அத்த உடு. இன்னிக்கு யாரு மொகத்தத்துல முயிச்சேனோ தெரியலஇன்னிக்க நிறைய்ய்ய சவாரிங்க ஐநூறு ரூபாக்கு மேல கை மேல காசு கரீட்டா ராவு எட்டுமணிக்கெல்லாம் வண்டி மொதலாளியாண்டா நூறை குடுத்துட்டு வண்டியை வேகமா வலிச்சிக்குனு போய் டாஸ்மாக் கடையாண்ட நிறுத்தி ஒரு குவாட்டர் வாங்கி ஊத்திக்கிட்டு , அதுக்கு மேல ஒரு அவிச்ச முட்ட , ரெண்டு தோசை , ரெண்டு முட்ட பரோட்டா எல்லாத்தையும் பார்சல் வாங்கி கட்டி சீட்டுக்கு அடியிலப் போட்டுக்கிட்டு ரிக்ஸா மேல ஏறி உட்கார்ந்ததும் மனசு சந்தோசமா இருந்துச்சி இதுனால பாட்டு வேற புடுங்கிடுச்சி பாடிக்கிட்டே ஒரு அரை பர்லாங் வந்தா.. ” ரிக்ஸா..! ரிக்ஸ்சா…!”ன்னு யாரோ கூவுற மாதிரி இருந்துச்சி. நம்ல இல்ல வேற யாரையோன்னு நெனச்சி கண்டுக்காம வந்தா… ஒரு ஆளு இரைக்க இரைக்க பின்னாலேயே தொங்கு தொங்குன்னு ஓடி வராரு. பாக்க மனசு சங்கடமா பூடுச்சு பிரேக் புடுச்சி… நான் …” இன்னா ? ” ங்குறதுக்குள்ள

” ஏம்ப்பான்னாரு.உன்னைத்தானே…! ” ன்னாரு.

இந்நாடாது… பெரிய பேஜாராப் பூடுச்சி இன்னிக்காச்சும் நேரா நேரத்தோட ஊட்டுக்குப் போயி புள்ளைங்களோட கொஞ்சிட்டு பொஞ்சாதி கையால சோறு வாங்கி தின்னுட்டு நிம்மதியா படுக்கலாம்ன்னா… நெனைச்சி

” இல்ல சாரு வண்டி சவாரிக்கு வராது ! ” சொன்னேன்.

அவரு பாக்க பெரிய மனுசனா வயசு நாப்பத்தஞ்சுக்கு மேல இருக்கும். ஆளு தொந்தியும் தொப்பையுமா… ஓடி வந்ததுல மேல் மூச்சி கீல் மூச்சி வாங்க கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு …

” நானும் என் சம்சாரமும் ஒரு மணி நேரமா இங்க நின்னுக்கிட்டு இருக்கோம். ஒரு ஆட்டோ , டெம்போ , ரிக்ஸா , டாக்சி கூட வரல ரொம்ப இருட்டா வேற இருக்கு. மணி வேற ஒம்பதுக்கு மேல ஆகுது. நான் மட்டும்மின்னா கூட நடந்து பூடுவேன். வயித்துல ஆபரேஷன் பண்ணின என் சம்சாரமும் கூட இருக்கிறதுனால அப்புடி முடியாது. அதனால கொஞ்சம் தயவு பண்ணி….” அந்த ஆளு கெஞ்சறதைப் பாக்க ரொம்ப பாவமா பூடுச்சு . நான் வரலேன்னு சொன்னா நிச்சயமா அயுதுடுவாரு போல இருந்துச்சி.

” சரி சார். எங்க போவணும்..? ” கேட்டேன்.

” நேரு நகருப்பா…”

‘ போற வயித்தான் !’ ன்னு மனசுல நெனச்சிக்குனு ..

” சரி. குந்து. ”

அவரு ஏறி உக்கார்ந்த்ததும் கொஞ்ச தூரத்துல இருக்கிற அவரு பொஞ்சாதியையும் ஏத்திக்கிட்டு வண்டிய வேகமா வலிச்சா… மேடு பள்ளத்துல வண்டி தூக்கி தூக்கிப் போடுது . வேண்டா வெறுப்புல சவாரிய ஏத்திக்கிட்டு ‘ தண்ணிய’ வேற அடிச்சிக்கிட்டு இந்தப் பய தடாம் பூடாம்ன்னு ஓட்டுறானேன்னு சவாரி நெனச்சிதப்புடாதேன்னு கொஞ்சம் லெவலா மிதிச்சிக்கிட்டு…அவுங்க ஊட்டாண்ட எறக்கி உட்டுப்புட்டு , காச வாங்கி கால் சட்டைப் பையில போட்டுக்கிட்டு ஊட்டுக்கு வந்தா ஆயிடுச்சி.

குடிசையாண்ட வந்து வண்டிய நிப்பாட்டிட்டு வாங்கி வச்ச பார்சலை எடுக்க சீட்டை தூக்கினதும் என்னமோ ‘ பொத்து’ன்னு வியந்த சத்தம் கேட்டுச்சு. இருட்டுல ஒன்னும் தெரியல கால் சட்டைப் பையில கைய உட்டு தீப்பெட்டிய எடுத்து ஒரு குச்சியை எடுத்து தட்டிப் பாத்தா…’ பர்ஸு ‘ . அவரசமா எடுத்துப் பிரிச்சிப் பாத்தா… உள்ளாற வெறும் ஐநூறு ரெண்டாயிரம் நோட்டுமாஇருக்கு. எனக்கு அப்புடியே ‘ஷாக்’ ஆயிடுச்சி ..

‘ யாரு உட்டுட்டுப் போயிருப்பா..? ‘ உடனே மண்டைக்குள்ள குடைச்சல்.

சாராயக் கடையில மீனு பார்சல வெக்கிறதுக்கு சீட்டைத் தூக்கினோம். அப்ப கவனிக்கல… இந்த கடைசி சவாரிதான் பர்சை உட்டுட்டுப் போயிருக்கணும் ! புரிஞ்சிச்சி .

ஐயோ பாவம் ! முடியாத ஊட்டுக்காரிக்கு வைத்திய செலவுக்கு வெச்சிருப்பாரே .. பர்ஸு காணோம்முனு தெரிஞ்சதும் மனுசன் அதிர்ச்சியாகி துடிச்சிப் புடுவாரே. இன்னா செய்யிறது..? சரி கொண்டு போய் குடுத்துடுவோம் ‘ன்னு தீர்மானம் பண்ணிக்கினு ரிக்ஸாவை த் திருப்பிக்கிட்டு வேகமா வேர்க்க விறுவிறுக்கப் போயி அவரு ஊட்டு காலிங் பெல்ல முடிச்சதும் கதவைத் தொறந்த அவருகிட்ட…. ” சாறு..! பர்ஸை ஊட்டுப்புட்டு வந்துட்டீங்களே..!” ன்னு சொல்லி பர்சை நான் நீட்டினதும் அவரு அவசரமா வாங்கிட்டதும்

சாரு ! சரியா இருக்கான்னு பாருங்க ” ன்னு நான் சொன்னதும் அவரு பதற்றத்தோட எண்ணிப் பார்த்து….

” சரியா இருக்குன்னு !” ன்னு சொன்னவரு டக்குன்னு ஒரு ஐநூறு தாளை உருவி என் கையில திணிக்க… ” வேண்டாம் சாரு . பாவம் நீங்க இந்த ஐநூறு சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்களோ. எனக்கு… நான் ஓயக்கிற காசு உடம்புல ஓட்டினா போதும் சாரு ! ”நான் திரும்பி நடக்க.. அவரு அப்புடியே திகைச்சுப் போய் என்னா நெனைச்சாரோ எம் பின்னாலேயே ஓடி வந்து எங் கையைப் புடிச்சி… ” தம்பி ! இந்தா … சத்தியமா இது எம் பணம் இல்ல இது தெரியாது. இவ்வ்ளவு பணத்தைப் பார்த்ததும் கொஞ்சம் தடுமாறிட்டேன் . உன்னுடைய நேர்மையான செய்க அந்த தீர்க்கமான நேர்மையான பேச்சு இதையெல்லாம் கண்டதும் சாத்தியமா நான் நெதானப்பட்டுட்டேன். இவ்வளவு பெரிய வசதி இருந்தும் சலனப்பட்ட என்னை உன் நேர்மையால திருத்திட்டே இதைக் கொண்டு போய் போலீஸ்ல குடுத்துடு . பணத்தைத் தொலைச்சவங்க புகார் கொடுக்கும்போது பணத்தை அவுங்க அவுங்ககிட்ட ஒப்படைச்சுடுவாங்க . தைரியமாய் போ ” சொல்லி ஒரு கூனிக் குறுகி வீட்டுக்குள்ள போய்ட்டாரு.

‘ அடப்பாவி ! ‘ நான் அப்புடியே ஷாக் ஆகிட்டேன் .

அவரு சொன்னபடியே நானும் போலீஸ்ஒப்பாரிச்சிட்டேன்.

ஏங்க….. அவுங்க.. தொலைச்ச ஆள்கிட்ட கொடுத்துடுவாங்கதானே..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *