கோடுகளும் கோலங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 1,542 
 
 

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

“யக்கோ…”

“என்ன கன்னிப்பா ஒரே சந்தோசமா இருக்கே! என்ன விசயம்?”

“அக்காவக் கூப்பிடுங்க மாமா. அவங்ககிட்டத்தா மொதல்ல சொல்லணும்.”

“செவந்தி, கன்னியப்பன் கூப்பிடுறான்…” கணவன் முற்றத்தில் நின்றபடி கூறுகிறான்.

“என்னன்னு கேளுங்க! நா சோறு வடிச்சிட்டிருக்கே. சரோ காலேஜிக்குக் கிளம்பிட்டிருக்கு…!”

உள்ளிருந்தபடியே அவள் குரல் கேட்கிறது. சரோ இப்போதெல்லாம் பாவாடை தாவணி சேலை அணிவதில்லை. இரண்டு செட் சல்வார் கமிஸ் வாங்கியிருக்கிறாள். காலை ஏழரை மணிக்குள் வீடு விட வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சித்தமாகிறாள். எப்போதுமே சரோவுக்கு சுத்தமாக மடிப்பாக உடை அணிய வேண்டும். பள்ளியில் படித்த நாட்களிலும் சீருடையைத் துவைத்து உலரப் போட்டிருந்தால் விரித்து விட்டு அழகாக மடித்துக் கொள்வாள். இப்போது கூடுதலாக இந்த உணர்வு வந்திருக்கிறது. காலையிலேயே சோப்பு போட்டு அலசி உள் முற்றத்துக் கயிற்றில் உலர்த்தி விடுகிறாள்.

“ஏம்மா நா நல்லா அலசி உலர்த்த மாட்டேனா உனக்கு நேரமாகுமில்ல?”

“நீ பிரிக்கவே மாட்டே. நான் உலர்த்தி மடிச்சிப் பெட்டிக் கடியில் வச்சா, இஸ்திரி போட்ட மாதிரி இருக்கும்” என்று சொல்கிறாள்.

கன்னியப்பன் முற்றத்தில் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

“என்ன சமாச்சாரம் எங்கிட்டச்சொல்லக் கூடாதா?”

“உஹூம்… அம்மாகிட்ட மட்டும் தான் சொல்லுவ…” என்று வெள்ளைச் சிரிப்புடன் நெளிகிறான்.

“சரி சரி அம்மா நீ போயிக் கேளு. நா சாப்பிட்டுக்கிறே…”

“என்னவாம் அவனுக்கு அவுசரம் இப்ப?” சுடு சோற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கிறாள். தட்டில் ஒரு ஈடு இட்டிலியைத் தட்டி சாம்பார் கிண்ணத்தை நகர்த்தி வைக்கிறாள்.

சரோ தண்ணிர் குப்பியில் தண்ணிர் ஊற்றித் திருகிக் கோணிப்பை போல் பெரிதாக இருக்கும் பையில் வைத்துக் கொள்கிறாள். உள்ளே சாப்பிட உட்காருகிறாள்.

“அம்மா, டிபன் டப்பியில் ஒரு ஸ்பூன் வேணும். நேத்து ஸ்பூன் எங்கோ விழுந்திருக்கு தெரியல…”

“என்ன கன்னிப்பா? என்ன விசயம்? மீசைக்காரரு சொல்லி அனுப்பினாரா?”

அவன் அவளை நடை வரை தள்ளிச் செல்கிறான்.

“வந்து… இன்னிக்கி சாயங்காலம் நீங்களும் மொதலாளியும் வரீங்க. அதுக்கு மின்னாடி காலம காஞ்சிபுரம் வர்ரீங்க…”

“எதுக்கு? என்ன சொல்லுற நீ?”

“அதாங்க, உங்களுக்கு தெரியுமேக்கா…! மீசக்காரரு, இன்னிக்கி நிச்சிதார்த்தம் வச்சிக்கலான்னு…”

செவந்தி சுதாகரித்துக் கொள்ளு முன், சரோ சாப்பிட்டுக் கை கழுவுவது தெரிகிறது.

“அக்கா உங்களையும் முதலாளியையும் வுட்டா எனக்கு ஆரிருக்காங்க!” குரல் நெகிழ்கிறது.

செவந்தி புரிந்து கொள்கிறாள்.

“ஓ, அப்படியா? லட்சுமி மாமா சம்மதிச்சிட்டாரா? என்னங்க” உட்பக்கம் கணவரைக் கூவி அழைக்கிறாள். அம்மா இப்போது தான் பல்விளக்கிவிட்டுக் கொல்லையில் இருந்து வருகிறாள்.

“அவங்கதா இன்னைக்கு நாளு நல்லாருக்கு, நிச்சயதார்த்தம் வச்சிக்கலான்னு சொன்னாங்க. நீங்களும் மொதலாளியும் காலம ஏங்கூட காஞ்சிபுரம் வரணம். அதுக்கு நல்லதா ஒரு சீல எடுக்கணுமுங்க…”

“ட்டேயப்பா கன்னிப்பன் மொகத்தப் பாருங்க! இன்னிக்கு நிச்சியதார்த்தமாம். காஞ்சிபுரம் போயிச் சீல எடுக்கணுமாம்!”

சரோ பையுடனும், வரிச்சட்டத்துடனும் வருகிறாள். வாசலில் நிற்கும் சைகிளில் பையை மாட்டுகிறாள்.

“சரோ நெதக்கிம் காஞ்சிபுரம் போயிப் படிக்கிதில்ல? ஆமா கிறிஸ்தவங்கசாமி சிலுவ போல அதொன்னு கொண்டிட்டுப் போற? இப்பவும் சிலுவக் காலேஜியா? இத சொந்தமா வச்சிட்டுக் கும்பிடணுமா? வேதத்துல சேத்துடுவாங்களா?”

“இது கும்புடறுதுக்கில்ல. இதுக்குப் பேரு ‘டிஸ்கொயர்’ இத்த டிராயிங் போர்டில் வச்சி வரையிவோம். பிளான் எல்லாம். நீங்க காஞ்சிபுரம் வாரீங்களா? எங்க இன்ஸ்டிட்யூட் தெரியும்…”

“நீயெல்லாம் ரொம்பப் படிச்சி, பேப்பரிலல்லாம் பேரு வந்திடிச்சி. எனக்கு அதெல்லாம் புரியாது சரோ. நா அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டுப் போற. இன்னிக்குச் சாயங்காலம் பட்டாளக்காரர் வூட்டுக்கு நீயும் வரணும்…”

“விருந்து உண்டா? லட்டு, பாயிசம், வடை அப்ப வாரேன்…”

“நிச்சயம் உண்டு. சரோ வந்திடு.”

அவள் சிரித்துக் கொண்டே சைகிளில் ஏறிச் செல்கிறாள்.

பத்து மணியளவில் கன்னியப்பன் பளிச்சென்ற வேட்டியுடுத்தி கோடு போட்ட நீலச்சட்டை அணிந்து, துவாலைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறான். செவந்தியின் அப்பா வாசல் திண்ணையில் இருக்கிறார்.

“கன்னியப்பனா? ஏய் மாப்பிள கணக்கா இருக்கிற. உக்காரப்பா” அவனைப் பற்றி பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார்.

“உங்களக் கும்புடறே மாமா. எனக்கு நெனப்புத் தெரிஞ்சா நாள்ளேந்து இந்தூடுத்தா பெறந்த வூடு. ஆயியப்பந் தெரியாத எனக்கு…”

“கன்னிப்பா, செவந்தி வெவரம் சொல்லிச்சி. நீ ரொம்ப ஒசந்து போயிட்டப்பா! எங்களெல்லாம் காட்டியும் ஒசந்தவ. பொண்ணும் பூமியும் ஒண்ணுதா. மேமயா பாவிக்கணும். பூமில அழுக்கும் கூளமும் போடுறோம். அத்தையே நமக்குப் பயிரா, தானியமாத் தருது. பொன்னா மாத்தித்தருது. பொம்புளயும் அப்படித்தா. நீ எத்தினி குத்தம் பண்ணினாலும் பொறுக்குறா. சகிக்கிறா. அத்த மனசுல வச்சிட்டு அதுக்கு அன்பா அனுசரணையா தாய்க்கு சமானமா மதிச்சி நடக்கணும். பூப்போல வச்சிக்கணும்…”

“ஏதேது கன்னிப்ப மாட்டக் கூட அடிக்க மாட்டா. வாயால ட்ராய் ட்ரய்ன்னு வெறட்டுவா லட்சுமிதா இவன வெரட்டப் போற…” என்று கூறிக் கொண்டு செவந்தி வருகிறாள். ரங்கனும் வாயிலில் வந்து நிற்கிறான்.

முன்பெல்லாம் சாமி கும்பிட, சாமான் வாங்க என்று ரங்கன் அடிக்கடி காஞ்சிபுரம் செல்வான். தான்வா பயிற்சி பெற்றபின், சாந்தியுடன் காஞ்சிபுரம் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. விரிவாக்க அலுவலர் அலுவலகத்துக்கு விதைகள் பற்றி தீர்மானிக்க, வாங்க, இரண்டு மூன்று தரம் தான்வா மகளிர்கூட்டம் நடந்தது. பெரிய மேடம் வந்திருந்தார்.

சரோவின் கல்லூரியை எட்ட இருந்து ரங்கன் பஸ்ஸில் போகும் போதுகாட்டுகிறான்.

ஒரு புதிய பாதையில் அவர்கள் செல்கிறார்கள். இரண்டு தடவை பயிர் வைத்தாயிற்று. கொல்லை மேட்டில் போட்ட பயிரில் பட்டாளத்தாரின் கடனைக் கட்டி, மேல் பணமும் கையில் தங்கியிருக்கிறது. இனி மழைக்கு முன் வீட்டுக் கூரையைச் செப்பம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டில் முன்பு அண்ணன் கலியாணத்தின் போது, வைத்த பூமியையும் மீட்க வேண்டும். அதில் தென்னை இருக்கிறது. கிணறு பம்ப் எல்லாம் இருக்கின்றது. அதில் சாகுபடி செய்தால், அண்ணனுக்கு ஏதேனும் அனுப்பி வைக்கலாம். மூன்று வருசம் சரோ படிக்க, பையன் படிக்க செலவுகள் அதிகம்தான். இடையில் சரோவுக்கு ஏதேனும் நகைகள், பண்ட பாத்திரங்கள் வாங்கிச் சேமிக்க வேண்டாமா?

நிறுத்தத்தில் வந்து இறங்குகையில் ஊமை வெயில் எரிக்கிறது. நேராகக் கடைக்குப் போகிறார்கள். தாமரைப் பூக்கலரில், அரக்குக் கரையில் இரண்டிழை சரிகை போட்ட ஒரு சேலை எடுக்கிறார்கள். எண்ணுற்று ஐம்பது ரூபாய். அரக்கில் சரிகைக் கட்டம் போட்ட ரவிக்கை. அந்தக் குழந்தைக்கு ஒரு கவுன். நூற்றிருபது ரூபாய்…

“ஓட்டலுக்குப் போய், சாப்பிடலாம் வாங்க…” என்று கன்னியப்பன் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, வூட்ட சாப்பிட்டதே செரிக்கல. எதுக்கு ஒட்டல் இப்ப? பணத்த ஏன் விரயம் பண்ணுற?” என்று ரங்கன் மறுக்கிறான்.

“மொதலாளி, இன்னிக்கு நான் சொல்லுறத நீங்க தட்டக் கூடாது, நீங்க சாப்பிடணும்.”

“அட வூட்ட சோறாக்கி வச்சிருக்க. வீணாகும். எதானும் டி.பன் சாப்பிடுவம் போதும்!”

“சரி அப்ப டிபன் சாப்புடலாம் வாங்க!”

ஓட்டலில் எந்த நேரத்திலும் கும்பல் இருக்கும் போலும்! கன்னியப்பனுக்கு இந்த மாதிரி வெளிப்பாடு என்றோ ஒரு நாள் தானே? மேசையில் உட்காருகிறார்கள்.

“யப்பா, மூணு அல்வா, மூணு மசால்தோசை, கொண்டா!”

“தோசைவேற என்னாத்துக்கு? ஸ்வீட் போதும்…”

“அட நீங்க சும்மா இருங்கக்கா” மஞ்சளாக அல்வா ஒரு தட்டில் வருகிறது.

கன்னியப்பன் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக் கொள்கிறான்.

“நல்லாருக்கா… அன்னிக்கொருநா வேறொரு ஒட்டல்ல மைசூர் பாக் வாங்கின. ஒரே காரல் கசப்பு…” என்றுபேசிக் கொண்டே அநுபவிக்கிறான்…

“கன்னியப்ப நெறையப் பணம் சேத்து வச்சிருக்காப்பல?”

அரும்பு மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அவன் சிரிக்கிறான்.

“எவ்வளவு வச்சிருக்கேப்பா சும்மா சொல்லு!”

“என்ன மொதலாளி, நீங்க?”

“எவ்வளவு? பத்துத் தேறுமா?”

“அவ்வளவுக்கில்லீங்க. ஏழுக்கு ஒரு பத்திரம் வாங்கி வச்சிருக்கிறேன். ஆறு வருசத்துல ரெண்டு பங்காகும்னாங்க. அதிர்ஷ்டம் இருந்தா டி.வி. காரு எல்லாம் பிரைஸ் கூட வருமாம்…” சிரிப்பாய் வழிகிறது.

“வந்திச்சின்னா, சொந்தத்துக்கு ஒரு அரக்காணி, கால்காணினாலும் வாங்கணுங்க…”

“இப்பத்தான் உனக்குப் பொஞ்சாதி வழி வருதில்ல? ரெண்டேகராவுக்கு மேல இருக்குமே?”

“நமக்குன்னு ஒரு அம்பது சென்ட்ன்னாலும் இருக்கணுங்க”

“கிணறு இருக்கு. உன் உழைப்பு இருக்கு. ஜமாய்சிடுவ. உங்காயா சம்மதிச்சிச்சா?”

அவன் பேசவில்லை.

செவந்தி பேச்சை மாற்றுகிறாள்.

“லட்சுமி நல்ல பொண்ணு. பட்டாளத்தாரு முதலிலேயே அவளுக்கு அவள வச்சிட்டு சந்தோசமா குடும்பம் நடத்தற ஒருத்தனுக்கு கட்டி வைக்கணும்னு நல்ல யோசனை, நல்ல முடிவு. அந்தப் பய அழிச்சது போக, பத்து சவரன் நகை இருக்கு. அவம்மா தாலிய பத்திரமா வச்சிருக்கிறேன்னெல்லாம் சொன்னாரு. கன்னியப்பனுக்கு நல்ல எடம். அவளுக்கும் கன்னியப்பனைப் போல ஒரு புருசன் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்… நல்லாருப்பீங்க.”

“இப்பக் கூட தாலிக் கூறை வாங்குறது நம்ம முறைன்னு தோணிச்சி. நா அதுக்குன்னே ஆயிரம் ரூபா தாரேன்னு சொன்ன. அதுக்கு அவரு, என் சம்சாரம் போட்டுட்டிருந்த தாலி. அவ நல்லா வாழ்ந்தா. அத்த அழிச்சி செஞ்சி வச்சிருக்கிறேன். நீ பணம் வச்சிக்கன்னாங்க. அதா சீல நல்லா வாங்கணும்னு வந்த மொதலாளி…”

“சும்மா என்ன மொதலாளி மொதலாளின்னு கொழப்ப தாப்பா. மாமோன்னு கூப்டு போதும். கலியாணம் எங்க வச்சி நடக்க?”

“நம்ம ரோட்டோரத்து அம்மங் கோயில்ல வச்சித் தாலி கட்டிட்டு ரிஜிஸ்திரார் ஆபீசில பதிவு பண்ணனும்னு பட்டாளத்தார் சொல்லிட்டாரு. சரின்னே… சரிதானேக்கா?”

“ரொம்ப சரி…”

“எம்பக்கம் நீங்கதாங்க மனுசா…”

நெஞ்சு நிறைந்திருக்கிறது.

அன்று சாயங்காலம் சைகிளில் புருசனும் பெண் சாதியுமாகப் போகிறார்கள். பட்டாளத்தாரின் தங்கை வீடு கூரை வீடுதான். ஆனால் பெரிய வசதியான வீடு. பளிச்சென்று துடைத்துக் கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரித்திருக்கிறார்கள். ஒயர் இழுத்து வாசல் கம்பத்தில் இரண்டு வாழைத்தண்டு விளக்குகள் போட்டிருக்கிறார்கள். லட்சுமியே வாசலில் வந்து “வாங்கக்கா!” என்று அழைக்கிறாள். பூப்போட்ட ஒரு பச்சை சில்க்குச் சேலை அணிந்திருக்கிறாள். பின்னல் பின்னித் தொங்கவிட்டு ரிப்பன் முடிந்து, நிறையப் பூச்சூடி இருக்கிறாள். காதில் தோடு, மாட்டல், இரண்டு மூக்கிலும் மூக்குத்தி அணிந்து, புதுமையாக காட்சித் தருகிறாள். பெண் குழந்தை, அவன் வாங்கி வந்திருக்கிற புதிய கவுனை அணிந்திருக்கிறது. ராமையா, பின்புறம் சமையல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர், இவர்களைக் கண்டு விரைந்து வருகிறார்.

“வாங்க, வாங்க சம்பந்தி அம்மா…எங்க நம்ம இன்ஜினிர் பொண்ணு வரல?”

“வருவா. முன்ன பின்ன வூடு வர ஆறு மணி ஆகுது சில நாள்ள. வந்ததும் வந்திடுவா.”

“சின்னப் பய்யன் வரல?”

“அவ கூட வருவான். படிச்சிட்டிருக்கச் சொன்னேன்…”

வெற்றிலைப் பாக்கு, பழம், கல்கண்டு, சர்க்கரை எல்லாவற்றையும் எடுத்துத் தட்டுக்களில் வைக்கிறார்கள்.

“மாப்புளயக் காணல?”

“இத வந்திடுவா. நீங்க காபி சாப்பிடுங்க!”

லட்டு காராபூந்தி கொண்டு வைக்கிறாள் லட்சுமி. அவள் அம்மா காபி கொண்டு வருகிறாள்.

சற்றைக்கெல்லாம் புது மாப்பிள்ளையாக, கன்னியப்பன் வருகிறான். நெற்றியில் சந்தனம், குங்குமம், மில்காரர் அங்கவஸ்திரம் விசிற வந்து உட்காருகிறார். அண்டை அயல்காரர்கள், வங்கிக்காரர் ராமலிங்கம், எல்லோரும் வர களை கட்டி விட்டது. ஆடியோ காசெட், நாதசுரம் ஒலிக்கிறது. ரங்கனும் செவந்தியும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ராமையாவும் அவர் சகோதரியும் நின்று பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள்.

சரோசா சொன்னபடி சரவணனுடன் வந்து விடுகிறாள்.

இரவு சிரிப்பும் கேலியுமாகச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்புகையில் மணி பத்திருக்கும். ஆவணி மாசம். நிலவு பாதியாகத் தெரிகிறது. சைகிளில் தொங்கும் பையில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பழமும், லட்டும், வடையும், வெற்றிலைப் பாக்கும் கொண்டு வருகிறார்கள். அப்பா வாயில் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள். லேசாக இழுப்பு இருக்கிறது.

குடித்திருக்கிறார் என்று தோணுகிறது.

“கலியாணம் ஆயிடிச்சா?”

“கலியாணம் சொர்ணவாளிப்பட்டம் அறுவடையான பின் அப்பசிக்குப் போயிடும். அப்ப அவங்க மக பிள்ளைங்க வருவாங்க போல. இது நிச்சியம்தான? கன்னியப்பனுக்கு நல்ல அதிர்ஷ்டம்தா…” என்று செவந்தி சொல்லி பையில் இருந்து லட்டு வடை எல்லாம் எடுத்து அப்பாவிடம் கொடுக்கையில் அம்மாவும் அங்கே இருப்பது தெரிகிறது.

“என்ன பெரிய அதிர்ஷ்டம். அறுத்தவளப் போயிக் கெட்டுறா! ஆயா வந்தாளா? எடுத்து வளர்த்தவளக் கால வாரிவுட்டுப் போட்டு ஆக்கம் கெட்டவளப் போயிக் கெட்டுவானா?”

“சீ! வாயை மூடு” என்று அப்பா கத்துகிறார்.

“என்ன பேச்சுப் பேசுற நீ! அந்த ஆயா ஒரு மூதேவி. மகள இதுவே சாதிக் கெட்டவன் பின்னே போனன்னு குத்தி சாகடிச்சிருக்கும். இங்க வந்து உக்காந்து திட்டுது. எனக்குக் கெட்ட கோவம் வந்திடிச்சி. இந்த வூட்டுப்படி இனி வராதேன்னு தெரத்தின.”

“ஆமா உங்களுக்கு ஏ அறுத்தவள்னு சொன்னா கோபம் வருது? முதமுதல்ல இவம் போயி அவ வூட்ல விழலாமா? கன்னி கழியாத புள்ளகளா இல்ல? அவப்ப என்ன சாதியோங்கறது சரியாத்தா இருக்கு. அதும் மொதல்ல கட்னவனுக்கு ஒரு பொட்டப் புள்ள வேற…”

“தா பேசக்கூடாதுன்னா பேசாத! உன்னிய வெட்டிக் கொன்னிருவ! அன்னிக்கே நம் மூட்டில் இப்படி ஒரு கலியாணம் நடந்திருக்க வேண்டியது. வூடு தேடி வந்து பொண்ணு கேட்டாரு. அவர ஏசி அனுப்பிச்சிட்டு, இந்தப் பாவி எவனையேனும் கட்டிட்டு சொத்தப் பிரிசிட்டுப் போயிடுவான்னு; அவ பங்குக்கு ஒண்ணுமில்லாம இவப்பனே எழுதிட்டா… அந்தப் பாவம் என்னிக்கின்னாலும் தலை மேலதா தொங்கிட்டிருக்குங்குறத மறந்திடாதே!”

கொல்லென்று அமைதித் திரைபடிகிறது.

அத்தியாயம்-20

வயசுப் பெண்ணைத் தனியாகப் பஸ்ஸில் அனுப்புவது, ஆண் பிள்ளைகள் பழக இடமுள்ள கல்லூரியில் படிக்க வைப்பது என்பதை நினைத்தும் பாராத ஒரு குடும்பத்தில் செவந்தி துணிந்து தன் மகளை அனுப்பி இருக்கிறாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவள் எத்தனை பழிகள், மனதோடு எத்தனை நெருப்புக் கண்டங்கள், கவலைகளுக்கு மனசைக் கொடுத்திருக்கிறாள்?

அடுப்படியில் இருந்தாலும் கொட்டிலில், கழனியில், களத்து மேட்டில் எங்கிருந்தாலும் சரோ அடிமனசில் ஒரு சக்தியாக வியாபித்திருக்கிறாள் என்றால் தவறில்லை.

சில நாட்களில் ஐந்து மணியுடன் வந்து விடுவாள். அவள் சைக்கிள் வந்து நிற்கும் ஒசை, அவள் வேக நடை, அம்மா என்று நடையிலேயே கொடுக்கும் குரல், ஆகியவற்றில் நெஞ்சுக்கனம் எப்படி உருகும்!

சரோ இப்படி ஒரு சக்தியாக உருவாவாள் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. ஒரு காசு அவளறியாமல் செலவழிக்கவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்; முட்டல்கள், மோதல்கள்! ஆனால் முன் இருந்திராத நம்பிக்கையல்லவோ அவர்கள் மாற்றி மாற்றிப் பயிர் விளைவிக்கச் செய்கிறது?

சென்ற ஆண்டில் சுவர்ணவளி நெல்லைப்போட்டு அது அறுவடையாகும் சமயத்தில் மழை கொட்டிப் பயிர் நஷ்டமாகிவிட்டது. வீட்டைச் சுமாராகச் செப்பனிட்டிருக்கிறாள். ஆனால் போக்கியத்துக்கு விட்ட நிலத்தை மீட்பது லட்சியமாகவே இருக்கிறது.

“அம்மா லீவு நாளில் நடவு வைத்துக்கொள். நானும் ஒரு கைக்குவாரேன்” என்று சரோ நிலத்து வேலையில் ஈடுபடுவது சாதாரணமாகி விட்டது. சாந்தி சைக்கிளில் வந்து நடவு நடுவதை விட கால் சட்டையைச் சுருட்டி விட்டுக் கொண்டு சேற்றில் இறங்கும் மகள் புதுமையாகிறாளே? முடி, பின்னல் நீண்டு விழும். அதிகாலையில் எழுந்தாலும் சீவிச் சிடுக்கெடுக்க எண்ணெய் முழுக்காடி நேரம் செலவழிக்க முடியவில்லை. மரபுகள், கோடுகள் அழிக்கப்படுகின்றன. அவளே ஓரளவு முடியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு அளவாக அம்மாவையே கத்திரிக் கோலால் வெட்டி விடச் சொல்லி விட்டாள்.

“இதென்னடீ அநியாயம்? வாழுற வூட்டுப் பொம்புள இப்படிச் செய்யலாமா” என்று பாட்டி ஆரம்பித்ததுதான் தாமதம். பட்டென்று சென்று வாயைப் பொத்துவாள் சரோ.

“பாட்டி உங்க காலம் அது. இது எங்க காலம் சும்மாருங்க! இங்க நா முடி சிங்காரிச்சிட்டிருந்தேன்னா பஸ் போயிடும்” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள்.

கோடுகள் அழியப்படும் போது கூக்குரல்கள் எழத்தான் எழுகின்றன. ஆனால் மன உறுதிக்கு முன் அந்தக் கூக்குரல்கள் எடுபடாதுதான். செவந்திக்குத்தான்மகள் எது சொன்னாலும் நியாயமாக வேத வாக்காக இருக்கிறது.

“ஆம்புளப் புள்ளங்க கூட படிகிறதுன்னா, தொட்டுப் பழகாமலா இருக்கும்? சதா சினிமா டி.வி.ல காட்டுறாங்களே? செவந்தி புத்தி கெட்டு இந்தப் பொண்ண வுட்டு போட்டா. என்ன கொண்ட்டு வரப்போகுதோ…” என்று அம்சுவின் அத்தை பிரலாபித்தது அவள் செவிகளில் விழுந்து விட்டது. விடுவிடென்று போகிறாள்.

“ஏ, பெரியம்மா? உங்களுக்கு வேற வேல இல்ல? நீங்க வயலுக்குப் போகலே? கடைக்குப் போகல? பொம்புளயும் பொம்புளயும் நாலு முருங்கைக்காக முடி புடிச்சி இழுத்திட்டுக் கேவலமா ஊரக் கூட்டல கழுநீருக்கும் கருமாதிக்கும் வித்தியாசம் இல்லாம தொண்டத் தண்ணி வத்த கத்தல? அத்தவுட நான் காலேஜுக்குப் போய் படிப்பது கேவலமின்னா இருக்கட்டும். இன்னொரு தடவ என் காதுல இப்படி இங்க யாருன்னாலும் அடுத்த வூட்டுச் சங்கதியக் காது மூக்கு வச்சிப் பேசட்டும். போலீசக் கூட்டியாந்துடுவே! இப்பல்லாம் பொம்புள போலீசு இருக்கு. ஜாக்கிரதை” வாயடைத்துப் போயிற்று.

கல்வியறிவு, வெளி உலகத்தின் அன்றாடத் தொடர்புகள் இரண்டும் பெண்ணுக்கு நிமிர்ந்து நிற்கும் உறுதியை மட்டும் கொடுக்கவில்லை. கசடுகளை ஒதுக்கிக் கொண்டு முன்னேறவும் துணிவைக் கொடுப்பதுமாகச் செவந்தி புரிந்து கொள்கிறாள்.

ரங்கன் சைகிள் கடை இருந்தாலும், முழுமனசுடன் அவள் ஊன்றிய விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறான்.

“செவந்தி பூச்சி இருக்குது. அதோட அதைச் சாப்பிடும் நன்மை செய்யும் இனமும் இருக்கு. இப்ப மருந்து வானாம். விளக்குப் பொறி வச்சிப் பாக்கலாமா?” என்று அவளிடத்தில் யோசனை கேட்கிறான்.

“ஆமாங்க மருந்தடிச்சா நல்ல பூச்சியும் அழிஞ்சிடும்… ப்யூட்ரான் போட்டிருக்கு பார்ப்போம்…” என்று அவள் சொன்னால் ஒத்துக் கொள்கிறான்.

பொம்புள சொல்லிக் கேட்பது கேவலம் என்று ஊன்றியிருந்த மனப்பான்மை தகர்ந்து விட்டது.

படிப்பு, படித்து ஏற நல்லது கெட்டது பிரித்தறியும் விவேகமும் விரிவாவதைச் செவந்தி உணருகிறாள்.

செயல் முறை அறிவுக்காகச் சென்னையின் எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு சக மாணவர்களுடன் செல்ல வேண்டி இருக்கும். தனி வகுப்புகள் ஆலோசனை விவாதங்கள் என்று நேரம் கழித்து வீடு திரும்புவதைத் தவிர்க்கவியலாது. இறுதிப் பரிட்சை முடிந்த பின் நேர்முகப் பயிற்சி என்ற அளவில் ஒரு தொழிலகத்தில் சில நாட்கள் அவள் சேர வேண்டும். கிண்டியில் அந்தத் தொழிற்சாலை இருக்கிறதாம்.

அவருடைய தோழி ஒருத்திக்கு சென்னையில் வீடு இருக்கிறதாம். வசதியாகத் தங்கிக் கொள்ள அழைத்திருக்கிறாள். அவளுடன் தந்தையும் சென்றிருக்கிறார்.

சின்னம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற அவா இன்னமும் ஈடேறவில்லை. இரண்டொரு முறை செவந்தியும் சாந்தியும் சென்னைக்குச் சென்றார்கள். தான்வா அலுவலகம் சென்று பெரிய மேடத்தைப் பார்த்தார்கள். திருவள்ளுர், காரணை ஆகிய இடங்களில் நடந்த சிறப்புப் பயிற்சிக்குப் போனார்கள். இப்போது இங்கேயே தான்வா மகளிர் சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். செவந்தி தலைவர். சாந்தி செயலாளர். சுந்தரி, வேனி, எல்லோரும் தான்வா பயிற்சி பெற்று சுயமாகத் தங்கள் நிலங்களில் பயிர் செய்கிறார்கள்.

மொத்தத்தில் திண்ணையில் குந்தி இருந்து ஏதேனும் பேசக் கூடப் பொழுது இல்லை.

இந்த நவரைப் பட்டம் கொல்லை மேட்டில் இவர்கள் கடலையும் மிளகாயும் பயிரிட்டிருக்கிறார்கள்.

கத்திரி வெய்யில் சுட்டெரிக்கக் காலையிலேயே சென்ற கணவனை எதிர்பார்த்து செவந்தி நிற்கிறாள். கோயில் தோப்பு புளிதான் வாங்கி உடைத்து, கொட்டை எடுக்கிறார்கள்.

“ராவிக்கு சரோ வராதா?”

அம்மா சும்மா இருக்கமாட்டாளே?

“நீ சும்மா துணப்பாத அது பத்து நா ட்ரெய்னிங் இருக்கப் போகுது. அதா அப்பா போயிருக்காரில்ல? எங்களுக்கு இல்லாத கவல உனக்கென்ன…”

இரவு ஒன்பது மணிக்கு ரங்கன் வரும்போது அம்மா வீட்டில் இல்லை. நீலவேனி டி.வி. வாங்கிவிட்டாள். அம்மா மட்டுமில்லை. சரவணனும் அங்கே போய்விடுகிறான். சரோ இருந்தால் தான் கண்டிப்பு அவனுக்கு. வாசல் திண்ணையில் ஒரு விசிறியை வைத்து விசிறியபடி அப்பனுடன் அவள் இருக்கிறாள். அவன் விர்ரென்று சைகிளில் வந்து இறங்குகிறான். உள்ளே வருகிறாள். கையில் இருக்கும் பையை அவளிடம் கொடுக்கிறான்.

மாம்பழங்கள்… ஏதோ புத்தகம்…

“சரவணன் எங்கத் துரங்கிட்டனா? அவனுக்குத்தா சரோ மாடல் பேப்பர் வாங்கிக் குடுத்திச்சி!”

“சரோ… எங்க அவங்க பிரண்ட் வீட்டிலா இருக்கு?”

“அங்கதாம் போன. இவங்க… பாக்டரிக்குக் காலம எட்டு மணிக்குள்ள வரணும். அவங்க வூடு, திருவான்மியூர் பக்கத்தில இருக்கு. ரெண்டு பேரும் வர்றதுன்னா பரவாயில்லை. அது எலக்ட்ரானிக்ஸ் எடுத்திருக்கு. இது மெக்கானிக்கல். அம்பத்துரில் இல்ல. இங்க கிண்டி எஸ்டேட்டுக்குள்ள நிறைய சின்ன சின்ன தொழிலகங்கள் இருக்கு. இவங்க பாக்டரில டிரெயின்ங் எடுக்கலாம்னு லெட்டருக் குடுத்துச் சொல்லிருக்காரு. தான்வா அம்மா, அம்பத்துரில் பவர் டிரில்லர்… பாக்டரிக்கு சரோ மின்னியே பாத்து பேசிருக்குப் போல… திருவான்மியூரிலிருந்து இது பல்லாவரத்து தங்கிக்கிறதுன்னு முடிவு பண்ணி சேத்துட்டே கிண்டி கிட்டக்க. நிறைய பஸ் இருக்குது.”

இவளுக்கு ஆவல் துடிக்கிறது.

“பல்லாவரம்ன்னா…. அங்க எங்கே?”

“சின்னம்மா இருக்காங்கல்ல, அவங்க இருக்கிற ஆஸ்டல்தா.”

“திருவான்மியூர்ன்னு இடம் வச்சிட்டு கிண்டி பாக்டரில வந்து பார்த்துக்கிட்டோம். பால் பேரிங் எல்லாம் செய்யற பாக்டரியாம். அங்கேந்து சின்னம்மாவப் பார்க்க ஹோமுக்கு வந்தோம். அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். உடனே வெளியே ஆளனுப்பி காபி மிக்சர் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்திச்சி. சின்னம்மா பேருல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு. அங்கே சமையல் வேலை செய்யிது. கூட ரெண்டு எடுபிடி பொம்பிளங்களாம். எல்லாம் பொம்புளங்க. திருவான்மியூர்லேந்து ஏவாரணும். என் ரூமில தங்கிக்கட்டும் பாப்பா. இங்க ஆஸ்டல்ல எல்லாம் வேலை செஞ்சிட்டுத் தனியா இருக்கிற லேடீஸ்தா. ஸ்ட்டுடண்ட்ஸ் கூட போன வருசம் ரெண்டு பேர் இருந்தாங்க. பிறகு இப்ப வேலைக்குப் போறவங்களுக்கு மட்டும்ன்னு வச்சிருக்காங்க. ரொம்பப் பாதுகாப்பு. கிறித்தவங்கதான் நடத்திட்டிருந்தாங்க. ஆனா இங்க இதுக்கு தலைவியாக இப்ப இருக்ற அம்மா சொர்ண லலிதா பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க மின்ன எம்பியா இருந்தவங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. ரொம்ப நல்ல மாதிரி. இவங்களுக்கு ரெண்டு பையன்க அமெரிக்காவுல டாக்டராக இருக்காங்க. இங்க இந்த ஹாஸ்டல் தவிர, நீலாங்கரையில் பெரிய முதியோர் இல்லம் நடத்தறாங்க. பார்வையில்லாத வங்ளுக்காக ஒரு சங்கம் கூட அவங்க தலைமையில் நடக்குது… எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. எப்படியோ ஆடிக்காத்துல பறந்து வந்து இப்படி ஒரு பத்திரமான எடத்துல விழுந்திட்ட… ன்னு சொல்லிச்சு. நமக்கு அது குத்தாறப்பில இருந்தாலும் பெரிசா எடுத்துக்கறதுக்கில்ல.

“பத்து நாட்களுக்கு எங்கூடத் தங்க அம்மா பர்மிசன் குடுப்பாங்க. இல்லாட்டி இப்ப ஒரு ரூமில மூணு பேர் இருக்கிற இடத்துல ஒண்னு காலி இருக்கு. பத்து நாளைக்கு நூறு ரூபா கேட்பாங்க. குடுத்திடலாம். பிரச்சன இல்லன்னிச்சி. காலம ஏழரைக்குள்ள உனக்கு நாஷ்டா குடுத்திடறேன். பகலுக்கு அங்க காண்டின்ல எதானும் சாப்பிட்டுக்க. இங்க எட்டரைக்கு நாஷ்டா சாப்பிட்டு கையில் ஒரு சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் லஞ்ச் கட்டிட்டு போற வங்க இருக்காங்க. அது ஏழரைக்குள்ள ஆவாது. ராத்திரிக்கு எட்டுக்குள்ள டின்னர் ரெடியாயிடும்னிச்சு. இதவிட பத்தரமா வசதியாக நம்ம குழந்தையைப் பாத்துக்கப்போறவங்க யாரு? அதுதா சொல்லச் சொல்லக் கேக்காம இந்த மாம்பழம் வாங்கிக் கொடுத்திச்சி.”

இவர்கள் சமையலறையில் தணிந்த குரலில் பேசுவது அப்பனுக்கு எப்படி எட்டியதோ?

“ஏம்பா ராசாத்திய பாத்தியா? ஒரு நட இங்க வரச் சொன்னியா?”

“பாத்த மாமா. அவங்க கூடத்தா இப்ப சரோவ வுட்டிருக்க…”

“எப்பிடி மக கூட இருக்காளா? மக நல்லபடியா வச்சிக்கிதா?”

“மக அவங்ககூட இல்ல. இவங்க ஒரு ஆஸ்ட்ல்ல இருக்காங்க. சமையல் வேலதா. ஆனா நல்லபடியா இருக்கேன். பிரச்னை எதும் இல்லைன்னு சொல்லிச்சி…”

செவந்தி மாம்பழத்தைக் கழுவி நறுக்குகிறாள்.

மெல்லியதோல். உருண்டையான ருமானி. ஒரு துண்டை அப்பனுக்குக் கொடுக்கிறாள். அப்பன் அதை வாயில் போட்டுக் கொள்கிறான். கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் பெருகிறது.

“ஏம்ப்பா… இப்ப இஸ்கூல் லீவுதான. ராசாத்தி மகளையும் பிள்ளைகளையும் மருமவனையும் ஒரு வாட்டி கூட்டிட்டு வரச் சொல்லலாமில்ல. மக ருக்கு நல்லபடியாக இருக்கிறதா ருக்குமணி அவ ஆத்தா பேரை அதுக்கு வச்சிது. அதுக்கு ஒரு நெல்லது செய்யல பாவி நாங்க…” உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அறைந்து கொள்கிறார்.

“அப்பா…. என்ன இது? உங்ககிட்ட எதும் சொல்ல முடியல. அவங்கள நினைச்சா ஒடம்புக்கு ஆவறதில்ல இல்ல.”

“இல்ல செவந்தி. நெஞ்சு ஆறாத புண் இது. உங்கம்மா பழிகாரிதா என்ன அப்படி தடுத்துப் போட்டது. ஒரு பாவமும் அறியாத அவ மேல அபாண்டம் சுமத்தினா. அந்தப் பாவம் இங்க புண்ணா இருக்கு. அவ இங்க வந்து நா மனசில வச்சுக்கல என்று சொல்லுற வரைக்கும் ஆறாது…”

ரங்கன் மெளனமாக கலத்தில் போட்ட சோற்றைச் சாப்பிடுகிறான். அப்போது தான் பாட்டியும் பேரனும் டி.வி. பார்த்து விட்டு வருகிறார்கள். “ஏய் இங்க வா! படிக்கிறப்ப இப்படி ராத்திரி பத்து மணிக்கு டி.வி. பாத்திட்டு படிச்சி எப்பிடித் தேருவே? ரெண்டாயிரம் கட்டி சேர்த்திருக்கு. சரோக்கு ஒரு பத்து பைசா அதிகமா செலவு பண்ணல. இன்னி வரையிலும் அவங்க டீச்சர் எல்லாம் பெருமையா பேசும்படி வந்திச்சி. நீ…” இழுத்து வைத்து முதுகில் ஒர் அறை விடுகிறான்.

உடனே சரவணன் பெரிதாக அழத் தொடங்குகிறான். “மூடுமூடு ராஸ்கல். சத்தம் போட்டே பலி வச்சிடுவே. மூடு. அக்கா மாடல் கொஸ்சின் பேப்பர் அவங்க பிரண்ட்கிட்டந்து வாங்கிக் கொடுத்திருக்கு, போயி சோறு துன்னிட்டுப் படுத்துக்க. விடிகாலம நாலு மணிக்கு எழுப்பி விடுவே.. படிக்கணும்! போ…”

பாட்டிக்குப் பொறுக்கவில்லை. “அது வரலன்னுதா சொல்லிச்சி. நாந்தா கூட்டிட்டுப் போன. அங்க அவன் புஸ்தகம் வச்சி படிச்சிட்டுதா இருந்தா.”

“அது சரி கெடுக்கறதே நீங்கதா. நீங்க டி.வி. பார்க்கப் போனா அவ எதுக்கு? போங்க! போங்க!”

வேலை முடிந்து மாட்டுக்கு வைக்கோல் போட்டுவிட்டு செவந்தி சேலையை உதறிக் கொண்டு வாயிலுக்கு வருகிறாள். ஒரே புழுக்கமாக இருக்கிறது. காற்றே வரவில்லை. தரையில் தலைப்பை உதறிக் கொண்டு தலை சாய்கிறாள்.

“செவந்தி… ஒரு விசயம் சொல்ல வானாம்னாலும் சொல்லாம முடியல… முருகன் இப்ப பத்து நாள் மின்னக் கூட பட்டணம் வந்திருந்தானாம். வயிற்றுவலி அல்சர்ன்னு வைத்தியம் பண்ணிக்கிறானாம். இளைச்சிப் போயிட்டான். அவங்க மச்சினிச்சி வீட்டில் பார்த்தேன்னு சின்னம்மா சொல்லிச்சி. ருக்கு அங்கதா ஏரிக்கரைப் பக்கம் குடிசையில் இருக்காப்பல. இவங்க ஏரிக்கரைப் பக்கம் ஜீவா நகர்ன்னு புதிசா வீடுகள் கட்டிருக்காங்க. அங்க இருக்காங்க. எனக்கென்னமோ, ஒரு நடை போயி பாத்துட்டு ஒராயிரம் ரூபான்னாலும் குடுத்திட்டு வரணும்னு. ஏன்னா, அப்ப நான் சரோவக் கூப்பிடப் போனப்ப, அண்ணி குத்தலா பேசிச்சி. நாம ஒண்ணும் அவங்க சொத்த அபகரிக்கலன்னு காட்டணும். அம்மா அப்பாக்கு சோறு போட்டு வைத்தியம் பண்ணி நல்லபடியா வச்சிருக்கிறம்… நீ சொல்லு நாயத்த…”

“நீங்க நினைச்சா சரி. சரோவும் படிப்பு முடிச்சிட்டது. எங்கனாலும் வேலைக்குப் போயிடும். நடவுக்குன்னு பணம் வச்சிருக்கிற. நாளக்கே ஆயிரம் போல எடுத்திட்டு போய் வந்திருங்க. ஆனா இது விசயம் அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”

அத்தியாயம்-21

இதற்கு முன் இந்த தான்வா திட்டத்தின் பெரிய ‘மேடம்’ என்று சொல்லப்படும் ஆபிசரைப் பல தடவைகள் செவந்தி பார்த்திருக்கிறாள். அவர் அவள் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து ஒவ்வொரு மறுப்பையும் பொருட்படுத்தாமல் ஊக்கி இருக்க வில்லையெனில் இன்று இந்தப் பெரிய ஆபிசில் அடி வைக்க அவளுக்குத் தகுதி வந்திருக்குமோ? வாசல் கூர்க்கா முன்னறைப் பெண்மணி எல்லோரையும் தாண்டி அவளும் சரோவும் சில்லென்று குளிர்ச்சி அணையும் அந்த அறைக்குள் வருகிறார்கள்.

உள்ளே வரும் போது ஒரே அச்சம். ஒரு கூச்சம்; அச்சம்.

‘இந்தம்மா எவ்வளவு எளியராக இருந்தார்? ஆனால் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்’ என்ற வியப்பு.

உள்ளே நாற்காலியில் ஒரு பருமனான பெண்மணி, காதில் பெரிய தோடு மூக்குத்தி, தங்கச்சங்கிலி வளையல்களணிந்து உட்கார்ந்திருக்கிறாள். அவளுடன் ஒரு பதினான்கு பதினைந்து வயசுப் பெண்ணும் நிற்கிறாள்.

“அடடே வாங்க செவந்தியம்மா. வா சரோ. உட்காருங்க” என்று நாற்காலிகளைக் காட்டி உட்காரச் சொல்கிறார்கள்.

சரோ “தேங்க்யூ மேடம்” என்று சொல்லிக் கொண்டு உட்காருகிறாள்.

“இந்தம்மா தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்திருக்காங்க. வளர்மதின்னு பேரு. தான்வா பயிற்சியெடுத்தவங்க. இப்ப விவசாயத்தோட பால் மாடு வாங்கி கூட்டுறவு சங்கத்தில் நூறு பெண்களை ஈடுபடுத்தி இருக்காங்க. அவங்க அனுபவம் கேளுங்க.”

“வணக்கம்” என்று சரோ அவளைப் பார்த்துக் கை குவிக்கிறாள்.

“நூறு மாடுன்னா, எப்படிங்க?”

“அதான் தான்வா மகளிர் சங்கம்ன்னு ஒண்ணு வச்சிட்டோம். அதில் நூறு பெண்களுக்கு லோன் வாங்கி மாடு வாங்கினோம். பெண்களுக்கு இதில் உபரியாய் வருவாய் இருக்கு. லோன் அடைஞ்சு அதிகமாக வருவாய். மேலும் மாடுகள் விருத்தியாகுது. இப்ப சொசைட்டிக்கு பால் விட்டது போக கூடுதலாகக் கிடைக்குது. இதை எப்படித் தொழில் பண்ணலாம்னு யோசனை கேட்க வந்தேன்.”

செவந்தி வியந்து நிற்கிறாள்.

“ஏம்மா பவர் டிரில்லர் பற்றிக் கேட்டியே. பாக்டரிக்கு போய் பார்த்தாயா?” என்று சரோவிடம் அவர் கேட்கிறார்.

“அந்த மேடத்தை ஆபீசில் பார்த்தேன். ஆனால் பாக்டரிக்கு போகவில்லை. ரிசல்ட் வந்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்டேன் மேடம்.”

கையில் வைத்திருக்கும் பையில் இருந்து பால்கோவாப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.

“வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசம், சரோ.”

அந்தப் பெண்மணியிடமும் நீட்டுகிறாள். அவள் ஒரு துண்டை எடுத்துக் கொள்கிறாள். “நீயும் எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்ணிடமும் நீட்டிவிட்டு பெட்டியை மேசை மீதே வைக்கிறாள்.

“மேடம், நீங்க அன்னிக்கு வந்து என்னிய தூண்டிவிட்டு இழுத்திங்க. எங்க வீட்ல மகா லட்சுமி அடி வச்சதா நினைக்கிறேன். இப்ப எங்க பக்கம் ஒரு காணி அரைக்காணி வச்சிருக்கும் வீடுகள்ள ஆம்புளய எதிர்பார்க்காமல் பெண்களே விவசாயம் செய்யிறாங்க. நாங்களும் தான்வா மகளிர் சங்கம் வச்சிருக்கிறோம். மீனாட்சி மேடமும் பத்மாவதி மேடமும் வந்தாங்க. அடுத்தாப்பல உரம் ஊட்ட மேற்றுவதற்கு மண்புழு பத்தி சொன்னாங்க.. அதும் செய்யணும்னு இருக்கிறோம்…”

“நீங்களெல்லாரும் கிராமங்களை விட்டு வந்து பட்டணங்களில் அல்லல் படாமல் முன்னேறனும். நன்றாக வாழ வேண்டும். சமுதாயம் வளமடையனும் என்பதே தான்வாவின் நோக்கம்.”

“பெண்கள் எல்லாம் செய்கிறோம். உழுவதற்குத்தான் சரியாக ஆள் கிடைப்பதில்லை. ரொம்பக் கூலியாகுது. பெண்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்கிறோம். ஒருகாணி, அரைக்காணி, நடவு அறிப்பு என்றால் ஒரே மாதிரியான கூலிதான். அவங்க உழவுக்கு எம்பது நூறு நமக்குப் பதினைஞ்சான்னு கேட்டுக்கறாங்க. ஆனா நாங்க எங்களுக்குள்ள கூட்டிக்கிட்டா எல்லாருக்கும் தானே கஷ்டம்னு உசத்தல. ஆனா இதுபத்தி பேச்சிருக்கு. எங்கூட்டுக்ககாரரு லோன் எடுத்து டிராக்டர் வாங்கலாங்கறாரு. அவரே ஒட்டக் கத்துக்கறாரு. ஆனா ரொம்ப வெலயாவுது… போக்கியத்துக்கு வுட்ட பூமிலன்னாலும் திருப்பலான்னு…”

சரோ, அம்மாவின் முழங்காலில் மெள்ள இடிக்கிறாள். இந்த அம்மா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அதற்குப் பொருள்.

“நீங்க வேணுமானால் ‘பவர் டிரில்லர’ப் போய்ப் பாருங்களேன். அதை ஒரு அம்மாதான் தயாரிக்கிறாங்க. டிராக்டர் விலை வராது. உண்மையில் பெண்கள் ஓட்டணும்னு தயாரிக்கிறாங்க.”

“அப்படீங்களா? ஆம்புளங்க இல்லாம நாமே எல்லாம் செய்ய முடியுங்களா?”

“கேளு, சரோக்கிட்டச் சொன்னேன். டிரெயினிங் புரோகிராமுக்கே போக லெட்டர் கேட்டா; குடுத்தேன்.”

“நான் அவங்கள இங்க ஆபீசில் பார்த்து அனுமதி வாங்கிட்டேன். ஆனா கிண்டியிலேயே டிரெயினிங் புரோகிராம் முடிச்சிட்டேன். இப்பக் கூட அவங்க ஒரு லேடி தொழில் முனைவராக இருப்பதால் எங்கள போன்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பாங்களான்னு கேக்கலாம்னு வந்தேன்… பவர் டிரில்லரையும் பார்க்கலாமே?”

“ஓ… தாராளமாய் போய்ப் பாருங்க!”

அந்த அலுவலகத்தைவிட்டு அவர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டைக்குப் பஸ் ஏறி வந்து இறங்குகிறார்கள். பவர்டிரில்லர் தொழிற்சாலையைத் தேடி வரும்போது நண்பகல் நேரம். புரட்டாசி மாதப் புழுக்கம். கூர்க்காவிடம் சொல்லி வரவேற்பில் சரோ முன்பே பெற்று வந்த கடிதம், தான்வா மேடம் கொடுத்த கடிதம் எல்லாவற்றையும் காட்டுகிறார்கள்.

உள்ளே நுழையும் போதே நான்கு சக்கரமுள்ள ஒரு டிராக்டர் மிகச் சிறியது நிற்கிறது. இன்னொரு பக்கம் இரண்டே சக்கரமுள்ள கையால் தூக்கி உழக்கூடிய பவர் டிரில்லர்.

உள்ளிருந்து நடுத்தர வயசில் ஒரு ஒட்டு மீசைக்காரர் வருகிறார்.

“நாங்கள் ‘தான்வா’ பெண்கள். இந்தப் பாக்டரி, டிரில்லர் பார்க்க வந்தோம்” என்று சரோ, தன் ஈடுபாட்டை படிப்பைச் சொல்லுகிறாள்.

“புரொப்ரைட்டர் மேடம் இருக்காங்களா?”

“அவங்க பாக்டரிக்குக் காலமே வந்திட்டுப் போயிட்டாங்க; நீங்க வாங்க, பாருங்க.”

தொழிற்சாலையில் நீளப் பல பகுதிகள் இருக்கின்றன. இயந்திரங்கள் இயங்குகின்றன. அராவுதல் வெட்டுதல் வட்ட வடிவமாக்கல் என்று…

செவந்தி மலைப்புடன் பார்த்து நிற்கையில் சரோ, ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியிலும் சென்று பார்க்கிறாள். வரைதல் என்று ஒரு தனிப்பகுதி. அதையும் கடந்து அவர்கள் முழுதாக உருவாக்கப்பட்ட இயந்திரக் கலப்பை நிற்கும் ஓரிடத்திற்கு வருகிறார்கள்.

“இங்க இப்ப டிமான்ஸ்ட்ரேட் வசதி இல்ல” என்று சொல்லிவிட்டு அவர் பல இணைப்புகளைக் காட்டுகிறார்.

“இத பாருங்க இது புழுதி உழவு. ரோடோடில்லிங்.”

“இதுதா பட்லர் இல்ல?”

கட்டிகளை உடைக்கும் சீப்பு போன்ற கொழு முனைகள். இவர்கள் மாட்டுடன் இணைக்கும் மத்துக் கடைவது போல் சேற்றைக் குழம்பாக்கும் பட்லர்.

“இது என்ன கத்தி கத்தியாக?”

“இதுதான் அறுவடை செய்யும்.”

“நீங்க வாங்கறதானா ரெண்டே நாள் டிரெய்னிங் போதும். அது நாங்களே தாரோம்.”

“எவ்வளவு டீசல் ஆகுதுங்க ஒரு ஏகர் உழ?”

“ஒரு மணிக்கு ஒண்ணரை லிட்டர் ஆகும். ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலை செய்தால் மூணரை ஏக்கர் உழலாம்.”

“ஏயப்பா..” என்ற செவந்தி மலைக்கிறாள்.

“மூணு ஏர் மூணு சோடி மாடு…”

கணக்குப் போடுகிறாள்…

ஒன்றும் புரியவில்லை.

ஆனால் சரோதான் வெகு நேரம் அவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுகிறாள். தன் கைகளால் அதன் கைகளைத் தூக்கி நிமிர்த்திப் பார்க்கிறாள்.

மதிய உணவு நேரம் வந்து விடுவதால் அவரவர் கலைந்து வருகிறார்கள்.

“என்னப்பா வின்சென்ட்” என்று கேட்டுக் கொண்டே அங்கே முன்புறம் வழுக்கையாக ஒருவர் வருகிறார்.

சரோவைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்.

“ஏய்… நீ… சுகந்தா அவங்க வீட்டுக்கு வந்திருக்கல?”

“ஆமாம்.நீங்கள் மிஸ்டர் கருணாகரன் இல்ல. அவங்க என் மாமி…”

“நீ டி.எம்.ஈ. படிச்சிட்டிருந்தேல்ல.”

“முடிச்சிட்டேன் சார். நீங்க மாமி தங்கச்சி வீட்டுக்குப் பின் வீட்டில இருகிறவங்கல்ல? நீங்க இங்கே வேலை பண்ணறீங்களா ஸார்?”

“ஆமாம்மா. ஆப்டர் ரிடயர்மெண்ட் இங்க இருக்கிறேன். நான் டிராயிங் போர்ட் பக்கமிருந்து பார்த்தேன். ஏதோ தெரிஞ்சாப்பல இருந்தது.”

“அம்மா, நம்ம மாமி தங்கச்சி இருக்காங்கல்ல. அவங்க வீட்டுக்குப் பின்னாடி உள்ள வீட்ல இருக்காங்க. இவங்க மக அருணா இவங்க எல்லாரும் அப்ப மதுரைக்கு வந்தாங்க. பயணம் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி சார். ரொம்ப சிரிக்க சிரிக்க பேசுவாங்க. நேரம் போனதே தெரியாம. அருணா என்ன பண்ணுது சார்?”

“அவ மியூசிக் காலேஜுக்குப் போறா. உங்க மாமா கூடப் போன மாசம் ஏதோ அல்சர்ன்னு டாக்டர்ட்ட காட்ட வந்தாப்பல. செயின் ஸ்மோக்கரா இருந்தாரு. இப்ப வுட்டுட்டேன்னாரு…”

“பெரிய வங்களுக்கு யார் புத்தி சொல்லுறது? பட்டாத்தான் தெரியும்” என்று செவந்தி முணுமுணுக்கிறாள்.

“பவர் டிரில்லர் வாங்கப் போறீங்களா?”

“விலை ரொம்ப இருக்குமே சார்.. யோசனை பண்ணனும். டிமான்ஸ்ட்ரேட் பண்ணி காட்டுவாங்கன்னு நினைச்சேன். மேலும் டீசல் இல்லாம மான்யூல் டிரில்லர் பெண்கள் ஒட்டலாம்ன்னு சொன்னாங்க.”

“ஒண்ணு பண்ணாங்க… வொர்க்அவுட் ஆகல..”

“சார் எனக்கு இங்க வேலை கிடைக்குமா? பெண் தொழில் முனைவோர்ன்னு சொன்னாங்க. ரிசப்ஷன் டிராயிங்கலேந்து கடைசிவரை ஒரு பெண் கூட இல்லை. எங்களைப் போல இருக்கறவங்களுக்கு இங்கே வாய்ப்பே இல்லையா?”

அவர் சிரிக்கிறார்.

“இங்கே அவங்க பெண்களை வேலைக்கே எடுப்பதில்லை. முன்பு ஒரு பெண்ணை டிராயிங் செக்ஷனில் வேலை கொடுத்து வைத்தாராம். அவள் நிமித்தமாக இங்கே காதல் ஊதல்ன்னு பிரச்னை வந்திட்டதாம். அதற்குப் பிறகு பாலிசியாகவே வச்சிட்டதாகக் கேள்வி. நீங்க கேட்டுப் பாருங்க…”

சரோ ஒன்றும் பேசவில்லை.

செவந்திக்கும் உவப்பாக இல்லை. வெளியே வருகிறார்கள்.

மணி இரண்டடித்து விட்டது.

ஓர் ஓட்டலைக் கண்டுபிடிக்கிறார்கள். எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

செவந்தி சின்னம்மாவுக்காக அரை கிலோ திராட்சைப் பழம் வாங்கி வைத்துக் கொள்கிறாள்.

இருவரும் மூன்று மணியளவில் அந்த விடுதியை நாடி வருகின்றனர். பகலின் அமைதியில் விடுதி உறங்குகிறது.

சரோவைப் பார்த்ததும் கூர்க்கா உள்ளே விடுகிறான்.

முன்னே உள்ள விருந்தினர் கூடத்தில் வந்து மணி அமுக்குகிறாள். வார்டன் அம்மா எட்டிப் பார்க்கிறாள்.

“ஓ… ராசாத்தியப் பார்க்க வந்தவங்களா? ராசாத்தி…?”

சின்னம்மா கிரைண்டரில் மாவழித்து கொண்டிருந்தாள் போலிருக்கிறது. அவசரமாகக் கையைத் துடைத்த வண்ணம் வருகிறாள்.

“சரோ, செவந்தி வாங்க!”

உள்ளே சென்று நன்றாகக் கை கழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

செவந்திக்குக் கண்ணிர் முட்டுகிறது. அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“சின்னம்மா, நீங்க எங்களத் தல குனிய வச்சிட்டீங்க. அப்பா நிதம் புலம்பிட்டிருக்காரு. அவரு உடம்பும் சரியில்ல. அத்தயும் இத்தயும் நினைச்சி குடிச்சிடிட்டு வாராரு. அம்மாவுக்கும் அவருக்கும் கொஞ்சம் கூட நெரப்பில்ல. எந்நேரமும் பிருபிருப்பும் சண்டையுந்தா. நீங்க ஒரு நடை வரணும். சின்னம்மா பழசெல்லாம் மறந்திடணும். உங்க கால்ல விழுந்து நான் கும்புடறேன்.” அவள் காலடியில் விழுந்தே பணிகிறாள்.

“சீ, இதென்னம்மா செவந்தி. அதது அந்தந்த நேரக் கோளாறு. நடந்திச்சி. பாப்பா எங்கூட இங்க வந்து தங்கிச்சி. பெரும்மையாக இருந்திச்சி. நல்ல கொணம். இங்க அத்தினி பேருக்கும் இதும் பேரில் இஷ்டம். எல்லாம் விசாரிப்பாங்க. மேக் கொண்டு வேலைக்குப் போகப் போவுதா? மாப்புள பாத்திருக்கிங்களா?”

“அதெல்லாம் ஒண்ணும் இப்ப யோசனை இல்ல. ஒங்க கொல்ல மேட்டுப் பூமில வெள்ளாம செய்யிறம். நெல்லுப் போட்டோம். கடல போட்டோம். முளவா போட்டோம். போன வாட்டி நீங்க சரோ இங்க இருந்ததுக்குக் கூட எதும் வாணாம்னு சொன்னிங்களாம். இப்ப இத்த வாங்கிக்கனும்…” கைப்பை கவரில் வைத்திருக்கும் ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டுகிறாள்.

“அய்ய இதென்ன! நீ போட்டுருந்த சங்கிலியக் கழட்டி வாங்கிட்டு வந்தேனில்ல? சும்மாவா குடுத்தீங்க. அது கெடக்கட்டும். வச்சிக்க. நாளையு மின்னியும் நீங்க ஒர முற நல்லாயிருந்தா எனக்குத்தா சந்தோசம். போன மாசம் முருகன் பொஞ்சாதிய அழச்சிட்டு வந்தான். ஒடம்பு சரியில்லாம எளச்சிப் போனா. மனசு சங்கடப்பட்டுது. நீங்க வந்திட்டுப் போயிருக்கிறதே எனக்குப் பெரிசு. செவந்தி பணத்த உள்ள வையி.”

“இல்ல, நீங்க உங்களுக்கில்லன்னாலும் ருக்குவுக்கு ஏதானும் வாங்கிக் குடுங்க. லீவு வந்திச்சின்னா புள்ளங்கள அழச்சிட்டு நீங்களும் வாங்க சின்னம்மா”

அந்தக் கவரை அவள் கைகளில் வைத்து மூடிவிட்டு அவள் மகளுடன் திரும்புகிறாள்.

ஊரில் வந்து இறங்கும் போது மணி ஏழு.

சைக்கிள் கடை வெளிச்சத்தில் பட்டாளத்தார் நிற்கிறார். ரங்கன் இருக்கிறான்.

இத வந்திட்டாங்க.

“செவந்தி! கன்னிப்பன் அப்பாவாயிட்டான். காஞ்சீபுரம் ஆசுபத்திரில காலம பொண் ஒண்ணு, ஆணொன்னு.”

முதலில் லட்சுமிக்கு இருக்கும் பெண்ணைச் சேர்த்துச் சொல்லுவதாக செவந்தி எண்ணுகிறாள். “அப்ப ஆம்புளப்புள்ள பொறந்திருக்கா. நா அப்பமே நினைச்சே. சுகப்பிரசவந்தானே.”

“முதல்ல பொண்ணு பிறந்து அரைமணி கழிச்சி ஆம்புள. இங்க இந்த விலாசினி டாக்டரம்மா ரெட்டயா இருக்கும்னு கூட சொல்லல, பாருங்க. நா இப்பதா பாத்திட்டு வேணுங்கற சாமானெல்லாம் வாங்கிக் குடுத்திட்டு உங்கள கூட்டிட்டுப் போகலான்னு வந்தே…”

“நாங்க இவ வேல விசயமா போனோம். எப்படியோ சுகமாயிட்டது இல்ல? கன்னியப்பனுக்கு ரொம்பப் பொறுப்பாயிட்டது.”

“இருக்கட்டும் இருக்கட்டும். இன்ஜினிர் பொண்ணு வேலை கெடைச்சிச்சா?”

“இல்ல தாத்தா. பட்டளாத்துலதான் சேர வோணும்.”

“பலே! பலே! சேத்து வுட்டுடலாம்! இப்பதா பட்டாளத்துல உங்களையும் எடுக்கிறாங்களே!”

“அந்தப் பட்டாளம் இல்ல தாத்தா. சோத்துப் பட்டாளத்த சொல்றேன். இத்த உற்பத்தி பண்ணாத்தானே ரெட்டையும் ஒத்தையுமாப் பெருகுற உற்பத்திக்கு ஈடுகொடுக்கலாம்? பவர்டில்லர் பார்த்தம். எழுபதாயிரம் ஏறக் குறைய ஆகும். அது சரி. நமக்கு அங்க எதினாச்சிம் வேலை வாய்ப்பு இருக்குமான்னு பார்த்தே. அந்தம்மா, பொண்ணுங்கள பாக்டரில வேலைக்கு வச்சா காதல் பிரச்னை வந்திடுமாம். அதுனால எல்லாம் மீசைக்காரங்களாவே வைச்சிருக்காங்க… நாமுடிவு பண்ணிட்ட… முதல்ல பால் மாடு வாங்குவோம். பால் உற்பத்தி கூட்டுறவு. பிறகு பவர் டில்லர், அதுக்குள்ளே நாமே ஏதாலும் காம்பொனன்ட் பண்ணும் தொழில்முனைவர் இங்கேயே இங்கேயே!”

“பலே!” என்று ராமையா மீசையில் கை வைக்கிறார்.

– தொடரும்…

– கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *