தன் உயிர் தோழியின் வருகைக்காக கால்கடுக்க பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள் சகனி.
சகனி வீட்டிற்கு ஒரே பெண். நல்ல வசதி. தந்தை தொழிலதிபர். பல கார்கள், பங்களா, ஓட்டுனர் என செல்வச்செழிப்பில் மிதந்தாலும் ரகனி என்ற தோழி கிடைத்த பின் அவளோடு கல்லூரிக்கு பேருந்திலேயே பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/07/கூடா-நட்பு.png)
திடீரென ஒரு கார் அவள் முன் கிரீச்சிட்டு நின்றது. தாடி வைத்த இளைஞர் ஓட்டுனர் இருக்கையிலிருந்து தான் போட்டிருந்த கூலிங்கிளாஸ் கண்ணாடியை மேலே உயர்த்தி தனது வலது கண்ணைச்சிமிட்டி சிரித்தான். காரின் பின் பக்க கதவு கண்ணாடி கீழிறங்க, உள்ளிருந்த ரகனி சகனியை அழைத்து காரினுள் அமரச்சொன்னாள். சகனி தயங்கினாள். “ஏண்டி தயங்கறே…? இவரு என்னோட அண்ணன் சபஸ்… பயப்படாதே…” என்ற ரகனியைப்பார்த்து, “இல்லடி, நீ கெளம்பு…” என்று உறுதியுடன் சகனி கூற கார் கிளம்பியது.
அப்போது சகனியின் தோள் மீது அழுத்தமாத ஒரு கை பதிய, அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள். தன் வயதொத்த பெண் நட்புடன் சிரிக்க, இவளும் ” ஹாய்” என்று சிரித்தாள்.
“என் பேரு ரகி. உண்மைலேயே உனக்கு ஜாதக நேரம் சூப்பரா இருக்கு. அந்த கார்ல போகாம விட்டது நல்ல விசயம்” என்றவளை ஆச்சர்யமாக நோக்கி, ‘ஏன்?’ என பெருவிரலை உயர்த்தி சாடையாக கேட்டாள் சகனி.
“அந்த கார்ல போராளே ரகனி, அவ எனக்கும் கொஞ்ச நாள் தோழியா இருந்தாள்” என்றாள்.
“அதென்ன கொஞ்ச நாள் தோழி…?தோழியென்றால் ஆயுளுக்கும் தோழிதானே….?” என்றாள் யதார்த்தமாக.
ரகி, பெரியதாக வறட்டுச்சிரிப்பை உதிர்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. அதைக்கண்டு சகனி அதிச்சியடைந்தவளாய் “சொல்லுங்க ” என்றாள்.
“ரகனிக்கு காரை ஓட்டிட்டு போறவன் சொந்த அண்ணன் கிடையாது. வறுமையிலுள்ள அவளை கட்டணம் கட்டி கல்லூரியில் சேர்த்து விட்டதே அவன்தான்”.
“எதுக்கு…?” என்று கேட்ட சகனியைப்பார்த்து ரகி தொடர்ந்து பேசினாள்.
“கல்லூரியில் படிக்கும் அழகான பணக்கார பெண்களை தோழிகளாக்கி, வசப்படுத்தி, பிறந்த நாள் பார்ட்டியென்று காரில் சுற்றுலா அழைத்துச்சென்று, அங்கே குளிர்பானத்தில் மதுகலந்து போதையேறவைத்து …..” அதற்க்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறினாள் ரகி.
“பெண்களுக்கு பெண்களே எதிரி. நானும் உன்னைப்போல வர மறுத்திருந்தால் என் வாழ்க்கை சீரழிந்திருக்காது. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, அதை முகநூலில் போடப்போவதாக மிரட்டி என்கிட்ட பணம் கேட்டார்கள். நானும் துணிந்து ‘போட்டா போடு அப்புறம் பார்த்துக்கிறே’ன்னு சொல்ல விட்டுட்டாங்க” என்று சொல்லக்கேட்ட சகனிக்கு தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது.
“பல பெண்கள் என்னைப்போல் பாதிக்கப்பட்டிருக்காங்க. குடும்ப கௌரவம் கருதி வெளில யாரும் சொல்லறதில்லை. அவனுகளுக்கு ஒரு நாள் ஜாதக நேரம் கெடும். அப்ப கடவுள் கண்டிப்பா தண்டனை வாங்கிக்கொடுப்பார்” என்ற ரகி பேருந்திலேறி கிளம்ப, சகனி கல்லூரிக்கு போக மனமில்லாமல் வீட்டுக்குச்சென்றவள் ரகனியின் செல் நெம்பரை போனிலிருந்தும், அவளது நட்பை மனதிலிருந்தும் டெலிட் செய்தாள்.