இளமை இதோ! இதோ!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 9,312 
 

வருடம் 2013

சென்னை : பருவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர். பருவா! ஆரம்பிக்கலாமா?”

பருவா தலையசைத்தார். யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டன. திரை உயிர்பெற்றது. அதிலிருந்து ஒரு நோயாளியின் சோர்ந்த முகம் ஒன்று மெதுவாக தெரிந்தது.

“இதோ இந்த திரையில் தெரிகிறானே இந்த நோயாளியின் பெயர் சாமிநாதன். இவனுக்கு வந்திருப்பது ஒரு மரபணு நோய். பத்து லட்சத்தில் ஒருவருக்கே இந்த நோய் தாக்கும்” – நிறுத்தினார் யயாதி. எல்லோரும் திரையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

யயாதி தொடர்ந்தார் “ இவனது தலைமுடி அனைத்தும் கொட்டிவிட்டது. இத்தனைக்கும் கீமோ தெரபி எதுவும் கொடுக்கவில்லை. இதோ பாருங்க, இவனது தோல் சுருங்கி விட்டது. கண் பார்வை மங்கி விட்டது. காது கேட்காது. வாய் குழறும். நினைவு அடிக்கடி தப்பும். இவனது தமனிகளும் சிரைகளும் இறுகி விட்டன. இதய நோயும் , மூட்டு நோயும் இவனை தாக்கிவிட்டன.”

முக்கிய விருந்தாளி பருவா குறுக்கிட்டார் “ இது மூப்பு. எல்லா வயதானவருக்கும் வருவது தானே? “

“ஆமா சார், இது மூப்பு தான், ஆனால், சாமிநாதன் ஒரு சிறுவன். வயது இன்னும் பனிரண்டு கூட முடியவில்லை.”

“என்னது?” ஆச்சரியபட்டார் பருவா. “அமிதா பச்சன் கூட ‘பா’ படத்திலே இப்படி நடிச்சிருக்காரில்லே?”

“எஸ் சார், இங்கே சாமிநாதனை தாக்கியிருப்பது ப்ரோஜெரியா என்னும் மரபு நோய். ‘ஹச்சிகன் கில்போர்ட் ப்ரோஜெரியா’. இந்த நோய் வந்தால், முதுமை பத்து மடங்கு வேகத்தில் நோயாளியை தாக்கும்.”

“இந்த நோயை குணப்படுத்த முடியாதா?” பருவா ஆதங்கத்தோட கேட்டார்.

“இன்னி வரைக்கும் முடியலே சார். ஆனா, இந்த விஷயத்திலே நாங்க இந்த பரிசோதனை கூடத்திலே, கிட்ட தட்ட ஒரு தீர்வு கண்டு பிடிச்சிருக்கோம்.”. மரபணு விஞ்ஞானி டாக்டர் யயாதி மெதுவாக

“ம். இப்போ எனக்கு புரியுது. இந்த பரிசோதனைக்கு தேவையான நிதியுதவி வேணும். நான் காபிடல் கொடுப்பெனான்னு கூப்பிட்டிருக்கீங்க. சரியா?”- பருவா சிரித்துக் கொண்டே கேட்டார்.

அப்போது, பருவா பக்கத்திலிருந்த மருத்துவமனை டீன் டாக்டர் செல்வம் சொன்னார். ”அதிலே பாருங்க பருவா, இந்த ப்ரோஜெரியா நோய்க்கு வரும் உடல் மாற்றங்கள், அவதிகள் , கிட்ட தட்ட எல்லாமே முதுமைக்கும் பொருந்தும். அதனாலே, இந்த நோய்க்கு மாற்று மருந்து கண்டுபிடித்தால், அதை வைத்து வயோதிகத்தை தவிர்க்கலாமே! எல்லோரும் இளமையாகவே இருக்க வழி செய்யலாமே? இயற்கை மரணத்தை தள்ளிப் போடலாமே? எல்லோரும் 150-200 வயது வாழலாம்.”

செல்வம் தொடர்ந்தார் “என்ன சொல்றீங்க பருவா? உங்களுக்கும் இது பெரிய லாபமான முதலீடாக இருக்கும்!. இந்த நூற்றாண்டிலேயே இது ஒரு அரிய கண்டுபிடிப்பாக இருக்கும். உங்க அரசியல் பலத்தாலே எங்களுக்கு அரசு அனுமதிகளையும் வாங்கி கொடுக்க முடியும்!”

“நீங்க சொல்றது சரிதான்!. ஆனால், இது நடக்குமா? நான் என்னவோ, வயதாவது என்பது இயற்கை, தவிர்க்க முடியாதுன்னு எண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மோட்டார் வாகனம் தேயறது மாதிரிதான் நம்ம உடம்பும்னு படிச்சிருக்கேன். நீங்க வேற மாதிரி சொல்றீங்க?“ கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் கேட்டார் பருவா. முதலீடு அவருடையதாயிற்றே!

“சரியாக சொன்னீர்கள் பருவா. ஆனால், அந்த கூற்று மாறிகிட்டே வருது. தேய்மானம் என்பது நமது உடலுக்கு பொருந்தாது என கண்டு பிடித்திருக்கிறார்கள். நமது உடல் தன்னைத்தானே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. நம்ம உடல்லே கோடிக்கணக்கான செல்கள் இறக்கிறது. பிறக்கிறது. வயசானவங்களுக்கு இந்த செல் மீண்டும் மீண்டும் பிறப்பது குறையுது. இதற்கு , ஹெப்ளிக் லிமிட் , டோலேமேர்ஸ் இவை தான் காரணம். இவைகளை நாம் கண்ட்ரோல் பண்ண முடியும் என்பது டாக்டர் யயாதியின் கருத்து. எனக்கு அதிலே நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு:” அடித்து சொன்னார் டீன் செல்வம்.

“நீங்க சொல்றது எனக்கு புரியுது. இந்த உலகத்தை புரட்டி போடறா மாதிரி ஒரு மருந்து தயார் பண்ணப் போறீங்க.! இன்னொரு வயக்ரா மாதிரி, பெனிசிலின், எக்ஸ்ரே மாதிரி. ஓகே. எனக்கு இதில் பங்கு கொள்ள சம்மதம்.. எனக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்புங்க. தேவையான உதவி செய்யறேன். ஆமாம், என்ன பெயர் வைக்கப் போறீங்க?”- பருவா

“ஸ்டாபேஜ்- பேர் நல்லாயிருக்கா? ” கோரசாக யயாதியும் செல்வமும் சொன்னார்கள்

“வெரி குட் யயாதி. வாழ்த்துக்கள்” பருவா விடைபெற்றார்.

***

வருடம் 2014

‘ஸ்டாபேஜ்’ மருந்து ஒரு காய கல்பமாக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வந்து விட்டது. டாக்டர் யயாதி, டாக்டர் செல்வம் மற்றும் பருவா மூவருக்கும் ‘ஸ்டாபேஜ்’ சிறந்த பெயர் பெற்று கொடுத்து விட்டது. கோடிக்கணக்கில் பணம் புரள ஆரமபித்து விட்டது.

யயாதி “பத்மபூஷன்” பட்டம் பெற்றார்.

இந்த ‘ஸ்டாபேஜ்’ ஊசி ஒரு தடவை போட்டுக் கொண்டால், வயதாவதை தடுத்து விடலாம். “என்றும் இளமை இளமை” என வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்கலாம். இந்தியாவில் மட்டும் சுமார் அறுபது லட்சம் பேர் 2014ல் இந்த ஊசியை போட்டுக் கொண்டார்கள்.

***

நாற்பது வருடங்களுக்கு பிறகு : வருடம் 2054

டெல்லி அரசு மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மனை

டீன் டான்டேகர் கனைத்தார். “ என்ன டாக்டர் நாஞ்சே? எல்லாம் தயார் தானே? ப்ரொபசர் கிஷன் சந்த், ஆரம்பிக்கலாமா?”

கிஷன் சந்த் தலையசைத்தார். அவர் அரசு திட்ட கமிஷன் மற்றும் பிரதம மந்திரியின் ஆலோசகர். அவர் தலைமையில், அந்த ஆராய்ச்சி மையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஆரம்பித்தது.

டாக்டர் நாஞ்சே ஆரம்பித்தார். “ நாற்பது வருடங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு மருந்து கண்டு பிடிக்கப் பட்டது. ‘ஸ்டாபேஜ்’. இயற்கைக்கு எதிரான விளைவுகளை கொண்ட இந்த மருந்தால் இன்று நாடே ஸ்தம்பித்து கொண்டிருக்கிறது. ”

நான்சே தொடர்ந்தார். “இந்த மருந்தை செலுத்திக் கொண்டால், மக்கள் வயதாவதை தவிர்க்க முடியும். நம் நாட்டிலேயே இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் இருபது கோடிக்கு மேல் என்று சொல்லப் படுகிறது. ஆனால், இன்று நம்மிடையே உள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த மருந்தின் பக்க விளைவுகளால், கிட்டதட்ட இரண்டு கோடி மக்கள் கடுமையான புற்று நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். செல்கள் உருமாறி, லுகேமியா, எலும்பு கான்சர், நுரையீரல் புற்று போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது லக்ஷம், புற்று நோயின் இறுதி கட்டத்தை நோக்கி. அவர்களை உபாதையிலிருந்து விடுவிக்க ஒரே வழி கருணை கொலை மட்டுமே. வேறு வழி தெரியவில்லை.”

“இது மட்டுமல்ல, வாழும் காலம் நீட்டிக்கப் பட்டதால், மக்கள் தொகை மிக அதிகமாகி விட்டது. எங்கும் பஞ்சம், பட்டினி. தண்ணீர், காற்று எல்லாவற்றிற்குமே பிரச்னை ஆகி விட்டது. வாழ்வாதாரமே இன்று ஆட்டம் கண்டு விட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இதே பிரச்னை தான். இட மற்றும் உணவு தேவைக்காக, நாடுகள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இது பக்க விளைவுகளல்ல. பக்கா விளைவுகள் !” நிறுத்தினார் நாஞ்சே, மூச்சு வாங்கி கொள்ள. ‘ஒரு வேளை, எனக்கும் புற்று நோய் தாக்கி விட்டதோ? போய் பரிசொதனை செய்து கொள்ள வேண்டும்’. நாஞ்சேக்கு லேசான கலவரம் தலை தூக்கியது.

கிஷன் சந்த் காதை பென்சிலால் குடைந்து கொண்டே கேட்டார் “இதுக்கு என்ன வழி?”

“ஸ்டாபேஜ் மருந்தை தடை செய்ய மத்திய அரசுக்கு நீங்கள் தான் பரிந்துரை செய்ய வேண்டும். அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் , முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்துவிட்டனர். நம் நாட்டில் மட்டும், அரசு வருமானம் கருதி , இன்னும் தடை செய்யப்படவில்லை. அது மட்டுமல்ல… ” – நாஞ்சே தொடரு முன், டீன் கை அசைத்தார்.

டீன் டான்டேகர் தொண்டையை செருமினார். “டாக்டர் நாஞ்சே, ஒரு நிமிடம். இது விஷயமாக பேச சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, இப்போ பிரச்னைக்கு மூலமான , ஸ்டாபேஜ் மருந்தை கண்டுபிடித்த பத்மபூஷன் டாக்டர் யயாதி. அவர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்போமே”

ஒரு 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் எழுந்தார். “ நன்றி டீன். டாக்டர் நாஞ்சே சொன்னது அத்துனையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் சொல்வது எல்லாம் உண்மை. அது மட்டும் போதாது. இந்த மருந்தின் தீய விளைவுகளை மாற்ற வேறு ஒரு மருந்து நாம் உடனே கண்டு பிடிக்க வேண்டும்”

கிஷன் சந்த் “ என்ன இது! உங்கள் கண்டுபிடிப்பை நீங்களே தடை செய்ய கூறுகிறீர்களே! ஆச்சரியமாக இருக்கு”

யயாதி வெற்றாக சிரித்தார். “மன்னிக்க வேண்டும், இந்த மருந்தால் மிகவும் பாதிக்கப் பட்டவன் நான். எனக்கு சொத்து இருக்கலாம். இளமை இருக்கலாம். ஆனால், திருப்தி? அது சுத்தமாக இல்லை. இப்போது எனது வயது 75. முப்பத்தி ஐந்து வயது வாலிப தோற்றம் எனக்கு. எனது மனைவியின் வயது 70. அவளுக்கு 30 வயது இளமை முறுக்கு. ஸ்டாபேஜ் மருந்தை செலுத்திக் கொண்டபிறகு, கிட்டதட்ட நாற்பது வருடங்களாக, ., நாங்கள் இப்படியே இளமையாகவே இருக்கிறோம்.”

ஒரு நிமிடம் நிறுத்தி , முகத்தை துடைத்துக் கொண்டு யயாதி தொடர்ந்தார். “ஆனால், என்ன பிரயோசனம்? எங்களுக்கு நிம்மதி இல்லை. எங்கள் வீட்டில் சந்தோஷம் இல்லை. விரக்தியின் எல்லையில் இருக்கிறோம். நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் வேதனையான உண்மை. முதலில், இந்த காணொளியை பாருங்கள். பின்னர் சொல்கிறேன்.”

டாக்டர் யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டன. திரை உயிர்பெற்றது. அதிலிருந்து இரண்டு சிரித்த முகம் மெதுவாக தெரிந்தது. பனிரண்டு வயது பையன், பத்து வயது பெண்.

“இதோ இந்த திரையில் இருக்கும் இருவரும் எனது குழந்தைகள். பெண்ணின் வயது 45. பையன் வயது 50. ஸ்டாபேஜ் செய்த கொடுமையை பாருங்கள் . ஸ்டாபேஜ் உட்கொண்டதால் , இவர்கள் நாற்பது ஆண்டுகள் கழித்தும், திருமண பந்தம் , இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற வயதுக்கு வரவில்லை. வாழ்க்கையை அனுபவிக்க மனம் விரும்பினாலும், உடல் இடம் கொடுக்க வில்லை. இதுவா இளமை?. இது கொடுமை. இவர்கள் கல்யாண வயதுக்கு வர இன்னும் முப்பது ஆண்டுகள் ஆகலாம்.

நானும் எனது மனைவியும் இப்போதே புற்று நோயாளிகள்.இன்னும் முப்பது ஆண்டுகள் எங்களை கான்செர் விட்டு வைக்காது. இப்போது சொல்லுங்கள்! ஒரு தந்தையாக சொல்லுங்கள். இந்த ஸ்டாபேஜ் தேவைதானா?”

ஒரு நிமிடம் அரங்கம் அமைதியை போர்த்திக் கொண்டது. கிஷன் சந்த் அந்த கனத்த மௌன திரையை, தொண்டையை கனைத்து கலைத்தார்.

”டாக்டர் யயாதி, உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. நீங்கள் சொல்வது சரியே. இயற்கையின் நியதி எப்போதும் ஒரு மாற்றத்தை நோக்கி போவது தான். மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும். நாம் அதை தவிர்க்க கூடாது. தவிர்க்க முயற்சி செய்தால், பக்க விளைவுகள், இது போன்ற எதிர்பாராத துயரத்தை தான் தரும். ”

கிஷன் சந்த் தொடர்ந்தார். “இன்னொன்றும் உள்ளது. இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல, மிருகம், பறவை, நம்மை சுற்றியிருக்கும் கிருமி, ஏமாந்தால் தாக்கும் வைரஸ், உடலுக்குள் உள்ள பல கோடி மைக்ரோப்கள், இப்படி எல்லாருக்கும் இந்த உலகத்தில் வாழ உரிமை உள்ளது. . சொல்லப் போனால், ஒன்றின் அழிவில் தான் மற்றொன்று பிறக்கிறது. ரிசைக்ளிங். ஒன்று மட்டும் நிச்சயம். புதிதாக பிறந்து வரும் மனித இனத்துக்கு, நாம் வழி விட வேண்டும். அதை மாற்றக் கூடாது.

இதைஎல்லாம் கருத்தில் கொண்டு, இந்த மன்றம் ஸ்டாபேஜ் மருந்தை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. டாக்டர் யயாதி, ‘முதுமை தொலைய’ ஸ்டாபேஜ் கண்டுபிடித்த நீங்களே, இப்போது அதற்கு மாற்றாக “இளமை தொலைய” மருந்து கண்டு பிடியுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும். உங்கள் குழந்தைகள் முதுமை அடைய வாழ்த்துக்கள்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *