விலகுமோ வன்மம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,650 
 

தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா.

இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது!’

அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?”

வந்ததிலிருந்து இதே பாடம்தான்!

`சே! இந்த அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ! நல்ல ருசியா ஆக்கிப்போட்டுட்டு, அதை அனுபவிச்சு சாப்பிட முடியாம!’ என்ற மனத்துள் சலித்துக்கொள்ளத்தான் அவளால் முடிந்தது.

ரமா எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர் பாராதவளாக, தனது கேள்விக்குத் தானே பதிலும் அளித்தாள் அம்மா, ஒரு மட்டமான ஆசிரியையை ஒத்தவளாக. “நன்றி கொல்றதுதான் பாவத்திலேயே பெரிய பாவம்!”

மகளின் முகம் இறுகியது கண்டு, தாய்க்கே பரிதாபம் எழுந்திருக்க வேண்டும். அல்லது, இவளை இப்படியெல்லாம் வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால், சற்றுமுன் காட்டிய மிரட்டலிருந்து மாறினாள்.

“புவனா சித்தி ஒனக்கு சாப்பாடு போட்டு, படிக்க வெச்சிருக்காங்க. இப்ப அவங்க ஒடம்பு முடியாம கெடக்கறப்போ, நீ பாக்கப் போகாட்டி, நல்லாவா இருக்கு?” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

ஒருவழியாக வாயைத் திறந்தாள் ரமா. “சித்தி ஒண்ணும் என்னைப் படிக்க வைக்கலே. நான் புத்திசாலி! அதனால உபகாரச்சம்பளம் குடுத்தாங்க அரசாங்கத்திலே! பாட்டி சமைச்சுப்போட்டாங்க!”

அம்மாவின் முகத்தில் ஒரு புன்னகைக்கீறல்.

“இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்று மகள் எரிந்துவிழ, “ரமா! ஒன்னோட திமிர் இருக்கே, அது அப்படியே சித்திகிட்டேயிருந்து வந்திருக்கு!” என்றாள். புன்னகை விரிந்தது.

ரமாவுக்கு எரிச்சலும், அவமானமும் ஒருங்கே எழுந்தன. சித்தியைப்போலவா ஆகிவிட்டோம்! சீ! தலையை அதீதமாகக் குனிந்துகொண்டவளின் கை சோற்றை அடைபோல் தட்டிக்கொண்டிருந்தது.

“சாப்பாட்டுமேல கோவிச்சுக்கிட்டு என்ன புண்ணியம்? இப்பவாச்சும் நல்லா, நிதானமா சாப்பிடு. அமெரிக்காவிலேதான் வெந்ததும் வேகாததுமா நீயே ஆக்கிக் கொட்டிக்கறே!” தாய்க்கே உரிய பரிவுடனும், கரிசனத்துடனும் வந்தது குரல். ஆனால், ரமாவின் காதிலோ வேறொரு குரல்தான் ஒலித்தது.

“சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருடி. எப்பப் பாத்தாலும், பாட்டிகூட என்ன கதை?”

அவளுக்குப் பதினெட்டு வயதாகி இருந்தபோது கேட்ட வசவு. அதற்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அந்தக் குரல் அப்போதுதான் ஒலிப்பதுபோல் கேட்டு, அதே பாதிப்பை ஏற்படுத்தியது.

`இவளையும் என்னைமாதிரி ஒரு டாக்டரா ஆக்கிடறேன்கா. எனக்கு ஒரு மக இருந்தா செய்ய மாட்டேனா?’ என்று புவனா அவளைத் தன்னுடன் கோலாலம்பூர் அழைத்துப் போனபோது ரமாதான் எவ்வளவு சந்தோஷப்பட்டாள்!

அதே மூச்சில் அவள் சொன்னதோ! `இந்த தோட்டப்புறத்திலே இருந்தா, ஒன்னைமாதிரி பால்மரம் வெட்டத்தான் போகணும்!’

அம்மாவை அவள் மட்டம் தட்டிப்பேசியது ரமாவுக்கு என்னமோபோல் இருந்தது. ஆனால் அம்மா அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பெரிய படிப்பு படித்து, தான் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்ட தங்கை எது சொன்னாலும், செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. மகளும் இந்தப் பட்டிக்காட்டில் அல்லல் படவேண்டாம் என்று மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

“இந்தாடி, பட்டிக்காடு! இப்படி கைலியைக் கட்டிட்டு நிக்காதே! ஒனக்காக மூணு ஹவுஸ்கோட் வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு!” அவள்மீது வீசாத குறையாக எறியப்பட்டது ஒரு பிளாஸ்டிக் பை.

பாட்டியைக் குற்ற உணர்வோடு பார்த்தாள் ரமா. எப்போதும் கைலியும், மேலே தொளதொளவென ஒரு சீட்டிச் சட்டையும் அணிந்தவளாக வளையவருவாளே! ஒருவேளை, `பட்டிக்காடு’ என்று அவளை மறைமுகமாகத் தாக்குகிறாளோ?

`ஒங்க சித்திக்கு நாக்கிலே விஷம்!’ என்று பாட்டி அடிக்கடி சொல்வது லேசாகப் புரிய ஆரம்பித்தது.

யாருக்காவது ஏதாவது நல்லது செய்தால், அது தன்னைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடுமோ என்று அஞ்சியவள்போல், வார்த்தைகளிலேயே நஞ்சைக் கலந்து, யாரையாவது மட்டம் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் புவனாவுக்கு. பிறரைத் தாழ்த்துவதால் தான் உயர்ந்துவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிற சிறுபிள்ளைத்தனம்.

குழந்தைகளின் மருத்துவர் ஆனதால், அவர்களுடனேயே பழகிப் பழகி, சித்தியும் அவர்களைப்போல் ஆகிவிட்டாள் என்று ரமாவுக்குப் புரிய பல ஆண்டுகள் ஆயின.

புவனாவின் பெரிய படிப்போ, வாயோ, எதுவோ ஆண்களை மிரள வைத்தது. எதற்கும் அஞ்சாத மகளின் போக்கு பாட்டிக்கு அச்சத்தைத்தான் விளைவித்தது.

“இந்த ராத்திரியிலே தனியா எங்கம்மா போறே?” பயந்து, பயந்து அவளைத் தடுக்கப்பார்த்தாள் ஒரு முறை.

“படத்துக்கு. அதான் ரமாவையும் கூட்டிட்டுப் போறேன்ல?” வீறாப்பும், எரிச்சலும் கலந்து வந்தன அக்குரலில். தன்னை ஒருத்தர் — அது அம்மாவே ஆனாலும் — தட்டிக்கேட்பதா!

“சின்னப்புள்ள! அதெல்லாம் ஒரு துணையா! ஆம்பளைத்துணை இல்லாம..!” பாட்டி முணுமுணுத்தாள்.

“ஆம்பளை என்ன, பெரிய ஆம்பளை! ஒங்க காலத்திலே பொம்பளைங்களுக்கு சோத்துக்கு வழியில்லே. அதனால், புருஷன்காரன் எப்படி அடிச்சு ஒதைச்சாலும், ஒங்களை என்ன கேவலமா பேசினாலும் பொறுத்துப்போனீங்க!” என்று நேரிடையாகவே தாக்கிவிட்டு, “நான்தான் கைநிறைய சம்பாதிக்கறேனே!” என்று தலையை நிமிர்த்திக்கொண்டாள்.

படம் முடிய சில நிமிடங்களே இருந்தன. ரமாவின் யோசனை, `தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டாவது இப்படி ஒரு பாடாவதிப் படத்தைப் பார்க்காவிட்டால் என்ன!’ என்று போயிற்று.

திரைப்பட கதாநாயகன் தன்னைவிட இருபது வயது இளையவளாக இருந்த கதாநாயகியைக் கண்ட கண்ட இடங்களில் தொட்டுக் கொஞ்சியதைவிட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ததாகத் தெரியவில்ல.

சித்தி மட்டும் எப்படி இந்தக் கண்ராவியையெல்லாம் இவ்வளவு ரசிக்கிறாள், ரகசியச் சிரிப்புடன்?

ஒரு வேளை, தன்னையே அந்த கதாநாயகியாக உருவகப்படுத்திக்கொண்டாளோ?

“லீவு வருதே! அம்மாவைப் பாக்கப் போகட்டுமா, சித்தி?”

“அங்கே போய் என்ன கிழிக்கப்போறே? காலை நீட்டி படுக்கக்கூட எடம் கிடையாது. ஒங்கம்மாவுக்கும் சாப்பாடு மிச்சம்!” என்று தான் வளர்ந்த சூழ்நிலை என்றும் பாராமல் பழித்துவிட்டு, “இங்கேயே இருந்தா, லைப்ரரிக்குப் போய் படிக்கலாம்!” என்று புவனா சொன்னதை வாய்திறவாது ஏற்றுக்கொண்டாள் ரமா. சித்தியுடன் யாரால் தர்க்கம் பண்ண முடியும்! ஆண்களே அவளிடம் எவ்வளவு பணிவாகப் பேசுகிறார்கள்!

இரண்டு நாட்கள் கழிந்ததும், “பஸ் காசு செலவழிச்சுக்கிட்டு, நாள் தவறாம வெளியே போகாட்டி என்ன!” என்றாள் புவனா.

“நீங்கதானே சித்தி,” என்று ஆரம்பித்தவளை, “எதிர்த்துப் பேசாதே. ஒனக்காக எவ்வளவு செலவு, தெரியுமா? இந்த ஒலகத்திலே எதுவுமே இலவசமா கிடைக்காது. தெரிஞ்சுக்க. வீட்டைக் கூட்டி, சுத்தம் பண்ணு. பாட்டிகிட்ட சமைக்கக் கத்துக்க. மல்லி, கனகாம்பரம், கத்தரி, எல்லாச் செடிங்களையும் கொத்திவிட்டு, தினம் ரெண்டு வேளையும் தண்ணி விடு,” என்று அடுக்கினாள்.

ரமா முதலில் விழித்துக்கொண்டது அப்போதுதான். சித்திக்கு தன் காலில் விழுந்துகிடக்க, போட்டு மிதிக்க, யாராவது வேண்டும். தான் வசமாக மாட்டிக்கொண்டோம்!

மீண்டும் கல்லூரி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

அன்று கல்லூரி முடிந்ததும் நல்ல மழை. இரண்டு பஸ்களைத் தவறவிட்டு, இருட்டியபின் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

முகமெல்லாம் இறுகிப்போய், இடுப்பில் கைவைத்து, வாசலிலேயே காத்திருந்தாள் புவனா. “எவனோட சுத்திட்டு வரே?”

ரமா வாயடைத்துப்போனாள், இப்படி ஒரு சொற்கணையை எதிர்பார்த்திராததால்.

“சொல்லேண்டி!”

“மழை..பஸ்..!” என்று குழறினாள்.

“என்ன அளக்கறே? நீ எவனோ ஒருத்தன்கூட ஹோட்டலுக்குள்ளே நுழைஞ்சதைப் பாத்ததா யாரோ சொன்னாங்களே!”

பன்னிரண்டு பிராயம் வந்ததும், `இனிமே ஆம்பளைப் பசங்களோட விளையாடாதே. அனாவசியமா பேசவும் கூடாது!’ என்ற அம்மா விடுத்த எச்சரிக்கையின் அர்த்தம் புரியாதுபோனாலும், இன்னமும் ஆண்களைக் கண்டாலே அஞ்சி விலகும் தன்னைப் பார்த்து, இப்படி ஒரு பழிச்சொல்!

வீட்டின் வெளியிலேயே நின்றபடி ரமா அழ ஆரம்பித்தாள். திரும்பவும் மழை பொழிய ஆரம்பித்து, அதில் தான் நனைவதுகூட அவளுக்கு உறைக்கவில்லை.

அவளடைந்த திருப்தி முகத்தில் வெளிப்படையாகவே தெரிய, உதடுகளை வெற்றிச்சிரிப்புடன் இறுக்கிக்கொண்டு, உள்ளே நடந்தாள் புவனா.

எங்காவது ஓடிவிடலாமா?

எங்கு போவது?

மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த அண்ணன் ரமாவின் நினைவில் எழுந்தான்.

`அத்தை எங்கிட்ட தப்பா பழகப் பாக்கறாங்க, ரமா!’ என்று அவளிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டு, மீண்டும் தோட்டப்புறத்துக்கே வந்து ஒளிந்துகொண்டான்.

`அண்ணன் செய்த தவற்றை நானும் செய்ய மாட்டேன்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டாள் ரமா. `சித்தியைவிட வாழ்வில் உயர்ந்து காட்டுகிறேன்!

இறுதிப் பரீட்சைக்குச் சில மாதங்களே இருக்க, படிக்கும் சாக்கில், சித்தியுடன் பேசுவதைத் தவிர்த்தாள். பரீட்சை முடிந்தபின் எங்காவது தொலையலாம். சுதந்திரமாக இருக்கலாம்.

“பாட்டி! பரீட்சை முடிஞ்சிடுச்சு. அம்மா, மத்தவங்க எல்லாரையும் பாக்கணும்போல இருக்கு. காலையிலே போறேன்!” என்று யாருக்கோ அறிவிப்பதுபோல், பெரிய குரலெடுத்துச் சொன்னாள்.

`இவ்வளவு செஞ்சிருக்கேன். கொஞ்சமாவது நன்றி இருக்கா, பாரு!’ என்று சித்தி முணுமுணுத்ததை லட்சியம் செய்யவில்லை.

நன்றியாமே, நன்றி!

பாட்டி சமைத்துப்போட்டு, ஆதரவாக இருந்தாள். திட்டியதையும், மிரட்டி வேலை வாங்கியதையும் தவிர சித்தி என்ன கிழித்துவிட்டாள்!

அதற்குப் பிறகு அமெரிக்காவில் மேலும் இரண்டு பட்டங்கள் பெற்று, அங்கேயே வேலையும் தேடிக்கொண்டு விட்டாள். அன்பான கணவரும் அவளுக்கு வாய்த்திருந்தார். சித்திபோல் படங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியதில்லை.

நீண்ட காலத்துக்குப் பிறகு மலேசியா திரும்பியபோது, அனைத்துலக விமான நிலையத்தின் அருகே, கோலாலம்பூரிலேயே இருந்த சித்தியை, ஒரு மரியாதைக்குக்கூடப் பார்க்கத் தோன்றவில்லை ரமாவுக்கு.

அதுதான் அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. `நன்றிகொன்றவள்’ என்று வசைபாடுகிறாள்.

அந்த புவனா சித்தி — நாவிலேயே தேளின் கொடுக்கை வைத்துக்கொண்டிருந்தவள் — இன்று சாகக் கிடக்கிறாளாம்.

`செத்துத் தொலையட்டுமே! இந்த மாதிரி ஒருத்தி போய்ச்சேர்ந்தா, ஒலகத்துக்கு என்ன நஷ்டம்?’ என்றுதான் எண்ணத் தோன்றியது ரமாவால். கூடவே, பாட்டி உயிருடன் இல்லாத நிலையில், தனியாக என்ன பாடுபடுகிறாள் அந்த ராட்சசி எனபதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஒரு குரூரமான எண்ணமும் அவளுக்கு உதித்தது.

“நாளைக்கு கே.எல் போகணும்மா. அங்கே எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் இருக்காங்க!” என்ற மகளைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் தாய்.

`சித்தியைப் பார்க்கப் போகிறேன்,’ என்று உண்மையை ஒத்துக்கொண்டால், மதிப்பு குறைந்து விடுமோ!

அப்படி என்ன வன்மம்?

`இந்த பரிதாபகரமான ஜீவன்மேலா இத்தனை காலமும் வன்மம் வைத்துக்கொண்டிருந்தேன்!’ அதிர்ச்சியாக இருந்தது ரமாவுக்கு.

இதுவா சித்தி?

மூன்று வயதுக் குழந்தை படுத்திருந்ததுபோல் இருந்தது. முழு நீள அங்கி அந்த சொற்ப உடலையும் மறைத்திருந்தது. ஒட்டிய கன்னம். நீளமான முடி கழுத்தளவே கோணல்மாணலாக வெட்டப்பட்டிருந்தது. இடுப்புக்குக்கீழ் மட்டும் சற்றுப் பருமன். டயபர் கட்டியிருக்க வேண்டும்.

`உலகமே என் காலடியில்!’ என்று இறுமாப்பாக இருந்தவள் தனது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட இன்னொருவர் கையை எதிர்பார்க்கும் அவல நிலை!

`எனக்கு யார் நிகர்!’ என்று எல்லாரையும் அலட்சியமாகப் பார்த்த கண்களில் இப்போது எந்தவித ஒளியோ, சலனமோ காணப்படவில்லை.

“புவனா அம்மாவால பேசத்தான் முடியாது. ஆனா, நாம்ப சொல்றது எல்லாம் விளங்குது,” என்று தெரிவித்தாள் தாதி. “பெரிய வேலையிலே இருந்தவங்களாமே!”

ரமாவின் நினைவு எங்கோ தாவியது.

ஒரு நாள் பாட்டி தன் கையாலேயே சோற்றை எடுத்து சித்தியின் தட்டில் போட, `அசிங்கம்! கரண்டியால போடாட்டி நான் சாப்பிட மாட்டேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!’ என்று ஆங்காரமாகக் கத்தியவள், தட்டை பாட்டியின்மேல் வீசினாள்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமா விறைத்துப்போனாள். `வெளியிலே வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்குமா?’ என்று சொல்லியபடியே அன்பையும், கவனத்தையும் செலுத்தி, குனிந்து நிமிர்ந்தால் வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடி பாட்டி சமைத்திருந்ததை அவள் அறிவாள்.

சோறு பாட்டியின் கைலியில் படிந்தது. ஆனால், பாட்டி அதைப் பொருட்படுத்தவில்லை. “நாள் பூராவும் ஒழைச்சுட்டு வந்திருக்கேடி, கண்ணு. ஒன் கோபத்தை சோத்தின்மேலே காட்டாதே!” என்று தரையில் கிடந்ததைக் கையால் திரட்டியபடி அழுதது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

இன்றோ, திரவப்பொருட்கள்தாம் சித்திக்கு ஆகாரமாம். அதுவும், கைப்பிள்ளைக்கு ஊட்டுவதுபோல, சொட்டுச் சொட்டாக, ஒரு சிறு ஸ்பூனால்.

`தெய்வம் நின்று கொல்லும்!’ என்று இதைத்தான் சொல்லிவைத்தார்களோ?

`நல்லவேளை, நானும் நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாகவில்லை!’ தன்னை விரட்டிய அம்மாவின்மேல் நன்றிகூட எழுந்தது.

சித்தி ஆக்கிரமித்ததுபோக, கட்டிலில் நிறைய இடம் இருந்தது. அவள்மேல் இடிக்காத குறையாக அதன்மேல் உட்கார்ந்துகொண்டாள் ரமா.

எதனாலேயோ உந்தப்பட்டவள்போல, சித்தி வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து, அண்மைக்காலம்வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்ததை எல்லாம் தன்பாட்டில் சொல்லிக்கொண்டே போனாள். ஒவ்வொரு வார்த்தையாலும் அவளுடைய மனத்தடியில் படிந்திருந்த கசப்பு, அதனால் எழுந்திருந்த வன்மம், விலகியதுபோல் ஒரு நிம்மதி.

அசைவே இல்லாது, படுக்கையே கதியென்று இருந்தவளின் கண்களில் நீர் நிரம்பியது. ஏதோ சொல்ல முயன்றாள். கரடுமுரடான ஓசைதான் வெளியே வந்தது.

அவளுடைய நிலையைப் பொறுக்காது, “ஒங்களுக்கு நல்லா ஆயிடும், சித்தி!” என்று அவசரமாகச் சொன்ன ரமா, கைகளைச் சிறகென விரித்து சித்தியின் தோளில் போட்டு, தன் தலையை அவள் மார்பில் பதிய வைத்துக்கொண்டாள் — மிக மிக லேசாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *