தாய்ப் பாசம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 9,342 
 

வாசுதேவன் ஒரு பொறியாளர். அலுவலகம் கிளம்பி வாசலில் நின்று ராதிகாவை அழைத்தான்..

நான் போயிட்டு வருகிறேன்., மாலை கொஞ்சம் லேட்டாகும் எனக்காக காத்து இருக்க வேண்டாம்,அப்பா அம்மாவைச் சாப்பிட வைத்திடு,என்றுக் கூறி விட்டுச் சென்றான்.

அப்பா, அம்மா மீது அளவு கடந்த அக்கறை மற்றும் பாசம், மனைவியே பொறாமைப் படும் அளவுக்கு.

சரிங்க நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க, என்று வழியனுப்பினாள்.

ராதிகா இல்லத்தரசி அவளுக்கு அம்மா மட்டும் தனது சொந்த ஊரான சீர்காழியில் வசிக்கிறார். மணமாகி சென்னை வந்து ஆறுவருடமாகிறது.

நான்கு வயது மகன் ஆகாஷ் மற்றும் வாசுதேவின் அம்மா மற்றும் ஓய்வுப்பெற்ற வங்கி அதிகாரியான அப்பா என அளவான கூட்டுக் குடும்பம்.

உள்ளே வந்தவள், ஆகாஷிடம் சென்று சிற்றூண்டி ஊட்டிவிட முயல, அவன் மறுத்து அடம் பிடித்து அவளைக் கையில் கடித்தான், முடியை பிடித்து இழுத்து விட்டு சிரித்தான். கையில் அவனின் பற்கள் பதிந்த வலியை விட அவனின் நிலைக் கண்ட வலியால் வருத்தமுற்றாள்.

இதைக் கண்ட வாசுவின் அம்மா, ராதிகா! பிரசவக் காலத்துலே நீ என்ன மருந்தை சீர்காழியிலே சாப்பிட்டியோ அதான் இப்படிக் குறையோட பிறந்திருக்கான், ஏன் கஷ்டப் படற, பேசாம இவனை ஒரு சிறப்பு பள்ளியுடன் கூடிய காப்பகத்தில் சேர்த்திடலாம் அவர்கள் நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லி முடிக்குமுன்னே,

ஏன்? உங்களை வேண்டுமானால் காப்பகத்தில் சேர்க்கச் சொல்லவா? என்று பதிலுக்கு கேட்டதுதான் தாமதம், காதில் விழுந்தவுடன், அத்தை ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மாமாவிடம் நிச்சயம் சொல்வாள்.

நாமும் வார்த்தையாலும் வலியினாலும் அவசரப்பட்டுட்டோமே, என சங்கடப்பட்டாள் மருமகளாய்!

இவர்கள் மட்டும் தங்கள் மகனோடு இருக்கனுமாம், நான் மட்டும் என் பிள்ளையை காப்பகத்தில் சேர்க்கனுமா? என வாதிட்டது மனத்தினுள் தாய்மனம்.

நேற்று சிறப்பு மருத்துவரிடம் காண்பிக்கச் சென்ற போது, ஆட்டிசம் என்பது நேயல்ல கற்றல் குறைபாடுதான்.

ஆட்டிசத்துக்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. ஆனால் அதை நீங்கள் மனது முழுவதுமாக ஏற்றுக்கொண்டு குழந்தையுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் உங்களை நெருங்கி வருவார்கள். பிறகு பயிற்சியின் மூலமாக இவர்கள் குணமாகி பின்னாளில் சாதனைகள் கூட படைத்திடமுடியும்.

நீங்களும் சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள், என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறியதை நினைத்துப் பார்த்தாள்.

காப்பகத்தில் விடச் சொல்லி அத்தை சொன்னதை ஏற்க முடியாததால் தான் இப்படி பேசும்படி ஆனது என வருந்தினாள்.

அத்தை, மாமா! சாப்பிட வாங்க! எனக் கூப்பிட்டாள்.

கதவைத் திறந்து அத்தை வேண்டாம்மா! இன்றைக்கு கார்த்திகை, அதனாலே இரண்டு பேரும் விரதம்! எனச் சொல்லி தாழிட்டாள்.

நல்லா இருந்த குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒத்தை வார்த்தை சொல்லி கெடுத்துட்டோமே, என வருந்தி, அத்தை! மாமா! என்னை மன்னித்து விடுங்கள், என்னைப் புரிந்துக் கொள்ளுங்கள், என கெஞ்ச,

மாமா கதவைத் திறந்து வருத்தம் ஒன்றும் இல்லையம்மா, நீ மற்ற வேலைகளைக் கவனி, வாசு வரட்டும் நல்ல முடிவாய் எடுப்போம்! எனக் கூறி வெளியேச் சென்றார்.

அழுத கண்களுடன் மகனுக்கு வேண்டியதை செய்து, மணல் குவித்து அருகில் அமர்ந்து அதில் அவன் கையை மூழ்கச்செய்து பிடித்துக் கொண்டும், அவனுக்கான படங்கள் வரைந்த அட்டையை காண்பித்து அவனுக்கு புரியச் செய்து அன்றைய பொழுது ஒரு வித பயத்துடனும், பதட்டத்துடனே கழிய இரவு வீட்டுக்கு வந்தான் வாசுதேவன்

வாசு, இங்கே வாப்பா! எங்களுக்கும் வயசாகிட்டு, எங்களால் உங்களுக்கு வேலைப் பளுதானே தவிர ஒரு உதவியும் கிடையாது. இதுக்கு மேலே தனியா காப்பகத்தில் போய் தனித்து இருப்பது எங்களுக்கும் சிரமம். உனக்கும் பெற்றோரை தவிக்க தனியே விட்டு்ட்டான் எனக் கெட்ட பெயர்தான். ஆதனால நாங்க ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கோம்!

எனக்கு வங்கி பென்ஷன் குறைவில்லாம வருகிறது. அதனாலே நீ தனியா சாகை போயிடு! என நிறுத்தினார்.

என்னப்பா சொல்றீங்க? ராதிகா ஏதாவது சொன்னாளா? ஏன் இந்த மாதிரி திடீர்னு ? என குழம்பினான்.

முழுசா கேளுடா! நம்ம ஆகாஷ் பூரணமாக குணமாகனும்,அதுக்கு நீங்கள் இருவரும் அவன் பக்கத்தி லே இருந்து அவனை நல்லபடியா பல்ப தேய்ப்பது, குளியல்,சாப்பாடி தூக்கம் என எல்லா அன்றாட பழக்க வழக்கங்களையும் சொல்லித் தந்துப் பார்த்துக்கனும், நாங்களும் உன் கூடவே இருந்தா எங்களுக்கும் சேர்த்து ராதிகாவிற்கு அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
அதனால் நீ கூட உன் வேலையை இரண்டு வருடத்திற்கு விட்டுவிடு. பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். நம்மிடம் இருப்பதே போதுமானது.

எல்லா இடத்திற்கும் அவனை அழைத்துப்போய் அன்பாய் அவன் கூட நேரம் செலவழித்து அவனை பூரண நலமாக்கிட வேண்டும். நமக்கு குழந்தையின் வாழ்க்கைதான் முக்கியம் என்றார் முடிவாக.

ராதிகா உன் மேலே எந்த வருத்தத்திலும் இந்த முடிவை நாங்கள் எடுக்க வில்லை. என்றார் அத்தை.

பிள்ளையின் தேவையை தாயைத் தவிர யார் அறிவார்?

ஒரு தாயின் கவலை மட்டும் இல்லை இது. தாயான உன் கவலையை உணர்ந்த அத்தைக்கும் கவலை உன் மீதுதான். ஒரு தாயின் கவலை இன்னொரு தாயிக்கே புரியும். என்றார் மாமா.

தாயின் பாசத்தை எடை போட யாரால் முடியும்!

Print Friendly, PDF & Email

1 thought on “தாய்ப் பாசம்

  1. உண்மை மட்டுமே சிந்திக்கும் ..நோயிக்கு அன்பே இன்னுமொரு விலையில்லா மருந்து …சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *