குளிர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 3,164 
 

“ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம்.

அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள்.

“என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது.”

“இல்லை, அப்பா, எனக்குக் கூலி கொடுக்கும் மேஸ்திரி, தனியே பேசவேண்டும் என்றார். நான் செய்த வேலைக்காக இஞ்சினீர் ஐயர் இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துத் தரச்சொன்னாராம்.”

“உனக்கு மட்டுமா? வேறு பெண்களுக்கும் உண்டா?”

“மற்றவர்களுக்கு இல்லையாம். நான்தான் ஓர் ஆண் பிள்ளை அளவு வேலை செய்கிறேனாம்.”

“ஆமாம், ஆண் பிள்ளையாகத்தான் பிறந்திருக்க வேண்டும். தப்பிப் பெண் பிள்ளையாகப் பிறந்துவிட்டாய். பெண்ணாகப் பிறந்ததனால்தான் உன்னுடைய அம்மா போனாலும் எனக்குச் சோற்றுக் கவலை இல்லாமல் செய்கிறாய். பகலிலும் உழைக்கிறாய். இரவிலும் இங்கே வேலை செய்கிறாய்!”

“ஆண்டவன் எப்படி நினைக்கிறானோ, அப்படித்தானே அப்பா எல்லாம் நடக்கும்?”

மாணிக்கம் எங்கேயோ பராக்குப் பார்க்க ஆரம்பித்தான். அவன் வாழும் சின்னஞ்சிறு குடிசையைச் சுற்றித் தென்னமரங்கள். அவற்றின்மேல் பார்வையைச் செலுத்திக் கொண்டு நின்றான். இருட்டில் என்ன தெரியும்?

அவன் பார்த்தது என்னவோ வெளியில்தான். உண்மையில் அவன் பார்வை காலத்தைக் கடந்து பார்த்தது. வருங்காலத்தைப் பார்த்தது. தன் எதிர் காலத்தையும், அழகுவின் எதிர்காலத்தையும் ஒருங்கே பார்த்தது.

அவனுடைய மனைவி இந்தப் பெண்ணையும் இரண்டு இளைய ஆண் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்த வழிக்குப் போய்விட்டாள். குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு மாணிக்கத்துக்கு வந்தது. அவன் தந்தைக்குத் தந்தையாய், தாய்க்குத் தாயாகக் காப்பாற்றினான். அப்போது அழகுவுக்குப் பத்துப் பிராயம்; அவள் தம்பிகளுக்கு ஐந்தும் மூன்றும்.

அந்த வயசிலேயே அவள் சுறுசுறுப்பாக இருந்தாள். தம்பிகளுக்கு நீராட்டிச்சோறு போட்டுப் படுக்கவைப்பாள். தன் தகப்பன் சமையல் செய்யும்பொழுது கூட இருந்து உதவி புரிவாள். பகல் வேளையில் சிற்றாளாகக் கட்டிடம் கட்டும் இடங்களில் வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பாள்.

பேர் அழகு; ஆனால் அதற்கும் அவள் தோற்றத்துக்கும் தொடர்பேயில்லை. காக்கை போன்ற கறுப்பு. உடம்பு ஆணின் முறுக்கேறியது. முகத்தில் ஒரு முரட்டுத் தோற்றம். வேலையிலும் அப்படித்தான். குரலிலும் குழைவு இராது.

வேலை செய்யும் இடங்களில் அவளுக்கு என்ன பெயர் தெரியுமோ? காக்காய்! அவளுடைய தம்பிகளுக்கு அவள் அக்கா. மாணிக்கத்துக்கு அவள் அழகு. மற்ற எல்லோருக்குமே அவள் காக்காய்தான். பத்துவயசுப் பெண்ணாக இருந்தபோது அந்தப் பேரைக் கேட்டுப் பொறுத்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாமா? பின்பும் அவள் அந்தப் பெயரைக் கேட்டு, “ஏன்” என்று குரல் கொடுத்தாள். அவர்கள் அழைப்பதற்கு ஏதேனும் பொருள் இருப்பதாகவே எண்ணவில்லை.

கொத்தனார் யாவரும் அவளைப் பரிகாசம் செய்வார்கள். “நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும்; ஒரு நிமிஷம் முந்தியே பிறந்து விட்டாய்” என்று சொல்வார்கள். “அப்படிப் பிறந்திருந்தால் நானும் இரண்டு ரூபாய் கூலி வாங்குவேன்” என்று உடனே அவள் விடை கூறுவாள்.

“உன் குரலால் காக்காய் என்று பெயர் வந்ததா? உன் அழகால் வந்ததா? என்று கேட்பார்கள்.

“இரண்டாலுந்தான்” என்று சொல்லி அவர்கள் மேலே பேச வகையில்லாமல் செய்துவிடுவாள்.

அவளுக்கு வயசு ஆகி வந்தது. மங்கைப் பருவம் அடைந்தாள். ஆனால் என்ன? பழைய காக்காய்தான். பழைய சிற்றாள் தான்.

அவள் வேலையில் மட்டும் எந்திரந்தான். மூன்றாள் வேலையை அவள் செய்து விடுவாள். நாணமோ, கோழைத்தனமோ அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் பளிச்சுப் பளிச்சென்று விடை கூறி விடுவாள். அதனால் வாய்த் துடுக்குக்காரி என்று அவளிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுப்பதை நிறுத்தலானார்கள்.

அவளுடைய அப்பனுக்கு அவள் வாய்த்துடுக்குப் பொறுப்பதில்லை. “இந்த வாயைக் கொண்டு நீ எப்படிப் பிழைக்கப் போகிறாய்?” என்று அவன் கூறி வருத்தப்படுவான். “நான் பிழைக்காமல் செத்துப் போய்விட மாட்டேன், அப்பா. வாய் இல்லாவிட்டால் உலகம் நம்மை மண்ணுண்ணிப் பூச்சியாக எண்ணி ஏறி மிதித்துவிடும்” என்பாள். “நீ காளி அவதாரம்; உன்னோடு பேச்சுக் கொடுக்கக்கூடாது” என்று சொல்லி மாணிக்கம் பேச்சை நிறுத்திவிடுவான்.

‘இவள் குடியும் குடித்தனமுமாக இருந்து அடங்கி ஒடுங்கி வாழ வேண்டுமே! வாய்த்துடுக்கும் முரட்டுத்தனமும் இருந்தால் நாலு நாளைக்குப் பெயர் சொல்ல முடியாதே!’

இதுதான் மாணிக்கத்தின் கவலை. இருளிடையே தென்ன மரத்தின்மேல் விழுந்த பார்வை இருட்டைத்தான் பார்த்தது. பகலிலும் அவன் சிந்தனையில் ஆழ்ந்து பார்க்கும்போது இருட்டைத்தான் பார்த்தான். ஒளியின் ஒரு சிறு கீறல்கூட அவனுக்கு புலனாகவில்லை.

அவள் பெண்ணாகப் பிறக்காமல் இருந்தால் – அது இனி நடக்கிற செயல் அன்று; நடந்து போனதை மாற்ற நாம் யார்?

***

அன்று கூலிவேலை செய்யும் பெண்களும், ஆண்களும் கொத்து வேலைக்காரர்களும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். “அந்தப்பெண், எவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருந்தாள்! மான்குட்டி போல அல்லவா நடந்தாள்?” என்றான் ஒருவன். “அந்த மானை வேடன் வலை போட்டுப் பிடித்துக்கொண்டு போய்விட்டான்” என்று சொல்லிச் சிரித்தான் மற்றொருவன். “பூ அழகாக இருந்தால் பறிக்கக் கை நீளுவது இயற்கைதான்” என்றார் ஒரு கொத்தனார். அப்போது அவர் தம்மிடம் செங்கல்லை நீட்டிக்கொண்டிருந்த பெண்ணைக் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தார்.

“தூ!” என்று காரி உமிழ்ந்தான் பெரியசாமி. அவனும் அங்கே கொத்துவேலை செய்துகொண்டிருந்தான்.

“இருந்தாலும் அந்தப் பயல் பொல்லாதவன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு போய்விட்டானே!” என்றான் மற்றொரு கொத்தன்.

“பின்னே நீயும் வா என்று உன்னையும் கூட்டிக் கொண்டுப் போகச் சொல்கிறாயோ?” என்றான் வேறு ஒருவன்.

“என்ன மோசமான பேச்சு?” என்று மறுபடியும் காறித் துப்பினான் பெரியசாமி.

அங்கே கொத்துவேலை செய்துகொண்டிருந்த பெருமாள் என்பவன், சிற்றாள் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். இந்தச் செய்தியே அவர்கள் பேச்சில் அடிபட்டது.

வேலை நடந்துகொண்டிருந்தது. நடுநடுவே அந்தச் சுவையான செய்தியும் சிரிப்பை உண்டாக்கியது. “இந்த அபாயம் காக்காய்க்கு வரவே வராது” என்று குப்பன் கூறியவுடனே எல்லோரும் கொல் என்று சிரித்தார்கள்.

“இருட்டும் திருட்டும் கோழைகள் சொத்து. எனக்கு அந்த அவமானம் ஏன் வருகிறது? எந்தப் பயல் என்னை ஏறெடுத்துப் பார்ப்பான்?” என்று பட்டாசு வெடிபோல வந்தது அழகுவின் பேச்சு.

“ஆ! உன் அழகை உலகமே பார்த்துக் கண் பூத்துப் போகாதா?” என்றான் ஒருவன்.

“ஏன், நான் சினிமாக்காரியா?”

பெரியசாமி இப்போது பேசினான். “அழகு! அந்தச் சோம்பேறிகளுடன் என்ன பேச்சு? கொண்டா சாந்தை இங்கே.” அவன் ஒருவன் தான் அவளை அழகு என்று கூப்பிடுகிறவன்.

கட்டிடம் பெரியது. ஆதலால் மாதக் கணக்கில் வேலை நடந்தது. எத்தனையோ புதிய வேலைக்காரர்கள் வந்தார்கள். அவர்களிடையே தெரிந்தும் தெரியாமலும், முறையாயும் முறையில்லாமலும் உறவுகள் நெளிந்தன. அழகுமட்டும் எப்போதும்போல் வேலை செய்தாள். அவள் வேலையை எஞ்சினீயர் பாராட்டினார்.

கட்டிடம் முடிகிற சமயம். அப்போது அதற்கு உடையவர் வேலை செய்கிறவர்களுக்குப் பரிசு தர எண்ணினார். பெரியசாமி அவரைத் தனியே பார்த்துத் தனக்கு இன்ன பரிசு வேண்டும் என்று தெரிவித்தான். உடனே அவர் மாணிக்கத்தைக் கண்டு, அந்தப் பரிசு அவனுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

என்ன பரிசு? அழகுதான். மாணிக்கம் அந்தக் கட்டிடக்காரருடைய காரியாலயத்தில் வேலைக்காரன்.

செய்தியைக் கேட்டு மாணிக்கம் அயர்ந்து போனான். உண்மை யென்று நம்ப முடியவில்லை. அழகுவுக்கும் ஒரு கணவனா?

பெரியசாமி அழகுவை மணம் செய்ய விரும்புவது கட்டிடக்காரருக்கு வியப்பாக இருந்தது. “இவளை ஏன் அப்பா கேட்கிறாய்?” என்று கேட்டார். “எனக்கு நல்ல மனைவி வேண்டும்” என்று அவன் சுருக்கமாக விடை கூறினான்.

திருமணம் ஆயிற்று; மாணிக்கம் ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்; அதில் துயரமும் கலந்திருக்கலாம்.

அழகு ஒரு வாரமாகக் குடித்தனம் செய்தாள். மாணிக்கம் போய்ப் பார்த்து வந்தான். அந்த ஒரு வாரமும் பெரியசாமி வேலைக்குப் போகவில்லை; அழகுவும் போக வில்லை.

ஒரு வாரம் ஆயிற்று. அழகுவும் அவள் கணவனும் மாணிக்கத்தை வந்து பார்த்தார்கள். “மாமா, என்னுடைய ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றான் பெரியசாமி.

“என்ன அப்பா வேண்டும்?”

“நீங்களும் குழந்தைகளும் என்னுடனே வந்து இருக்க வேண்டும்.”

மாணிக்கம் யோசித்தான்.

“நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்களுக்கு மூத்த பிள்ளை.”

மாணிக்கம் தென்ன மரத்தைப் பார்த்தான். குடிசைக்குள் இருந்தாள் அழகு. “நீயும் சொல்லேன்” என்று குரல் கொடுத்தான் பெரியசாமி.

“அப்பா, இங்கே வா” என்றாள் அழகு.

அவன் உள்ளே போனான். “ஆமாம்; அவர் சொல்கிறபடி எங்களுடன் வந்துவிடு. இனிமேல் சமைத்துச் சாப்பிட வேண்டாம்” என்றாள் அவள். பேச்சில் புதிய குழைவு ஒன்று கலந்திருந்தது.

“நீ அவனுக்குப் பிரியமாக இருந்து வாழ்வது முதல் காரியம். அடக்க ஒடுக்கமாக நீ வாழ்ந்தால் அதுவே போதும்.”

அவள் தலையைக்கவிழ்த்துக்கொண்டாள். சட்டென்று பேச்சு வரவில்லை. கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

“ஏன் அம்மா அழுகிறாய்? என்று தழுதழுத்த குரலோடு கேட்டான்.

“இப்போதுதான், அப்பா, நான் பெண் என்பதை உணர்ந்தேன். நான் வேலைக்குக்கூடப் போகப் போவதில்லை. அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.”

அதற்குள் வாசலிலிருந்து பெரியசாமி, “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். மாணிக்கம் வெளியே வந்தான்; “அப்படியானால்…..”

“நீங்கள் எங்களோடு இருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும்.”

மாணிக்கம் தென்னமரத்தைப் பார்த்தான். தென்னங் குலைகள் பச்சைப் பசேலென்று காட்சி அளித்தன. தென்ன மட்டை சலசலத்தது.

தென்ன மட்டைகளினூடே தெரிந்த வானம் நீலநிறம் காட்டிக் குளிர்ச்சியை ஊட்டியது. உலகமே குளிர்ச்சி மயமாக ஆகிவிட்டதோ!

– குமரியின் மூக்குத்தி (சிறு கதைகள்), அமுதம், முதற்பதிப்பு-டிசம்பர், 1957, நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *