கண்ணம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 6,004 
 

யாழ்ப்பாணக் குடாநாட்டில், வலிகாமம் வடக்கில், பாக்கு நீரணையைத் தழுவி உள்ள கடலோரக் கிராமம் மயிலிட்டி. ஒரு நெய்தல் நிலக் கிராமம் அக் கிராமம் தமிழ் நாட்டில் உள்ள கோடியக்கரையில் இருந்து தெற்கே 22 மைல் தூரத்தில், பாக்கு நீரணையின் இலங்கைக் கரை ஓரத்தில் அமைந்த கிராமம் என்பதால் அடிக்கடி அவ்வூர் மக்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று வருவதுண்டு. ஒருகாலத்தில் இலங்கையின் பிரசித்தமான மீன்பிடி துறைமுகங்களில், இரண்டாம் துறைமுகமாய் திகழ்ந்த இடம் மயிலிட்டித் துறைமுகம்.

மாவீரர்கள் பலர் பிறந்த ஊர் என்பது அதன் தனிச் சிறப்பு. மயிலிட்டிக்கும் தமிழ் நாட்டுத் தலை நகர் சென்னையில் உள்ள மயலாபூருக்கும் ஒருகாலத்தில் தொடர்பிருந்ததாக வரலாறு சொல்கிறது. அங்கிருத்து மயிலிட்டி கிராமம் பகுதிக்கு; வந்த; நரசிங்கத்தேவன் என்ற சோழ அரச அதிகாரிக்குப் பாதுகாப்பாக இருந்த ஈட்டிப் படையின் இலட்சணை மயில். ஆகவே அதில் இருந்து மயிலும் ஈட்டியும் இணைந்து மயிலிட்டி என்ற பெயர் கிராமத்துக்கு மருவி இருக்கலாம். வீரமாணிக்கதேவன். ஆரியநாட்டுத் தேவன் பெயர் கொண்ட சோழ அரசின் தளபதிகள் இதன் அருகே சில பகுதிகளை ஆட்சி செய்ததாக வரலாறு சொல்கிறது. இதில் இருந்து இவ்வூர் மக்களின் இரத்தத்தில் வீரம் செறிந்துள்ளது என்பது தெரிகிறது அந்த வீரம் கலந்த மண்ணில் பிறந்தவள் கண்ணம்மா . அவளின் உயரம் ஐந்தடி பத்து அங்குலம். சற்று நிறம் குறைந்தவள். தன் தற் பாதுகாப்புக்குக் கரத்தை, குத்துச் சண்டை சிலம்படி ஆகிய வீர விளையாட்டுகளை கற்றவள். அழகில் குறை இருந்தாலும் குணத்தில் சிறந்தவள். சற்று முற்போக்கு குணம் உள்ளவள். சீதனம் கேட்பதை எதிர்ப்பவள். தன ஊரில் பெணகளை மதியாது அவர்களின் உரிமைகளை, சமூகத்தில் இருந்து வரும் காலத்தோடுமாறாத மூடநம்பிக்கைகள் மூலம் பல உயர் வர்கத்து ஊர்வாசிகள் பறிப்பதை எதிர்த்து சில பெண்களோடு சேர்ந்து போர் கோடி உயர்த்தியவள் கண்ணமா . அவளோடு ஒரு பெண் இயக்கமும் . பொதுவுடைமை கட்சியாளர்களும் சேர்ந்து கொண்டனர்

தன்னை பல முறை, பெண் பார்க்க வந்து சீதனம் கேட்டு.பெற்றோருக்கு நன்கொடை கிடைக்காததால் பதில் சொல்லாது சென்ற குடும்பங்களை நினைத்து அவள் மனதில் சமூகத்தின் செயலில் மேல் வெறுப்பு ஏற்பட்டது .

நேற்று அவளை பெண்ணைப் பார்க்க மாவிட்டபுரத்தில் இருந்து வந்த குடும்பம் ஆறாவது குடும்பம். அக் குடும்பம் அவளிடம் குறுக்கு விசாரணை செய்து முடிவு சொல்வதாக சென்றவர்கள் மூன்று நாட்கள் ஆகியும் பதில் அவர்கள் சொல்லவில்லை.

“அம்மா இரு நாட்களக்குப முன் என்னைப் பெண்பார்க்க வந்து சென்ற குடும்பம் இரு நாட்களில் முடிவு சொல்வதாக சொல்லி சென்றவரக்களிடம் இருந்து ஏதும் பதில் வந்ததா . ஓய்வு பெற்ற போஸ்மாஸ்டர் நடராஜர் குடும்பத்தின் மூத்த மகள் கண்ணம்மா கேட்டாள். நடராஜருக்கு மூன்று பிள்ளைகள் . மூத்தவன் செல்வன். இரண்டாவது கண்ணம்மா. கடைக் குட்டி கயல்விழி

“மகள் அவர்கள் பதில் சொல்லாதது சீதனப் பிரச்சனை தான் . வந்த மாப்பிள்ளையாயின் தாய் எங்களிடம் இருந்து பிடுங்க முடிந்ததைச் சீதனமாகப் பிடுங்கப் பார்க்கிறாள். மாப்பிள்ளையின் தகப்பன் ஒன்றும் பேசவில்லை. அவர் மனுசிக்குபயம் போலத் தெரியுது “நடராஜரின் மனைவி சிவகாமி சொன்னாள்

“அவர்களுக்கு என்ன சீதனம் வேண்டுமாம். அம்மா “?

“அவர்களுக்கு இந்த வீடு, நான் போட்டிருக்கிற வைரத் தோடு, இருபது பவுனுக்கு நகை அதோடு நன்கொடை ஐம்பதாயிரம் சீதனமாக வேண்டுமாம் . மாப்பிள்ளை அரசில் நல்ல பென்சன் கிடைக்கும் பதவியில் இருக்கிறாராம். இன்னும் இரண்டு வருஷத்தில் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமாம் “கண்ணம்மாவின் தாய் சிவகாமி சொன்னாள்.

“அப்பா அவர்களுக்கு என்ன பதில் சொன்னார் அம்மா ”?

“உன் அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியும் தானே. அவர் ஓன்றுமே பேசாமல் என்னைப் பார்த்தார். எல்லா முடிவும் நான் எடுக்க வேண்டும் ”

“எதுக்கு அம்மா அவர்களுக்கு நன்கொடை வேண்டுமாம் ?. இன்ன வியாபாரமா”?

“தங்கள் மகளுக்குச் சீதனமாக கொடுக்கவாம். இருந்த காசு முழுவதையும் மகனக்குப் படிக்கச் செலவு செய்து போட்டினமாம் ”.

“இதேன்ன திருமணம் பண்ட மாற்று வியாபாரமா? நீ ஏன் அம்மா அவர்கள் என்னைப் பார்க்க வரும் போது நீ ஏன் உன் வைரத் தோட்டைப் போட்டுக் கொண்டு இருந்தனி? மாப்பிள்ளையின் தாய் அதைக் கண்டதும் கேட்டிருக்கிறா”.

“மகள், யாருக்குத் தெரியுமடி அந்த மனுசியின் பேராசைக் குணம் . எதோ நல்ல சாதி சனம், ஜாதகமும் பொருத்தம் . மாப்பிள்ளையும் அரசில் நல்ல உத்தியோகம் என்பதால் உன்னைப் பார்க்க அவர்களை வரச் சொல்லி தரகர் தம்பித்துரையருக்கு சொன்னோம். ஆனால் நடந்தது வேறு”

“அம்மா என்னை பெண் பார்க்கா பல தடவை ஆக்கள் வந்து போயிருக்கினம் எல்லோரும் மகனுக்குச் சீதனமாக ,வீடு, நகை நட்டு நன்கொடை . வேண்டும் என்று பேரம் பேசி போயிருக்கினம். இந்த சீதனம் கேட்கும் முறை முற்றிலும் இல்லாமல் போகச் சட்டம் வரவேண்டும் அம்மா” கண்ணம்மா தன் கருத்தைத் தாயுக்கு சொன்னாள்.

“மகள் நீ இப்படிப் பேசுவதால் நீ ஆண் மூச்சுக்காரி எண்டு வந்த போன குடும்பம் தரகருக்கு சொல்லி இருக்கு . அதோடு நீ உன் தற்பாதுகாப்புக்குகாக பழகிய கரத்தை, குத்துச் சண்டை உனக்குத் தெரியும் என்று தரகர் உன்னைப் பற்றி அவர்களுக்குப் புகழ்ந்து பேசினது உனக்கு எதிராகப் போயிருக்கு” .

“அம்மா விசித்திரமான சமூக போக்கு. பெண் அடக்க ஒடுக்கமாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருக்க வேண்டும்.வடிவாக மூக்கு முழியுமாக இருக்க வேண்டும், மாப்பிள்ளையை விட அதிகம் படித்து இருக்கக் கூடாது. பெண்ணின் உடலில் குறை இருக்கக் கூடாது. மாமியாருக்கு அடங்கி நடக்க வேண்டும். திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் போக வேண்டும் . இப்படி ஏராளம் நிபந்தனைகள். இப்ப காலம் மாறி போச்சு அம்மா. உதெல்லாம் முந்தி ஒரு இருந்து. உத்துக்குத்தான் சொத்து வெளியிலை போகாமல் இருக்க சொந்தத்துக்குள்ளை மச்சானையும் மச்சாளையும் திருமணம் செய்து வைக்கும் முறை இருந்தது. “

“மகள் எனக்கும் உன் அப்பாவுக்கும் தெரியும் உன் முற்போக்கு குணம். உண்டை வீர விளையாட்டுகள் பற்றி ஊருக்குத் தெரியும் . எங்களிடம் இருக்கும் சொத்தை உனக்கும் உன் தங்கச்சிக்கும் சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உன் அண்ணன் செல்வன் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து மாவீரனாகி விட்டான். அவன் இருந்திருந்தால் உனக்கும் அவனுக்கும் மாற்றுத் திருணத்துக்குப் பேரம் பேசி இருக்கலாம்”.

அம்மா விசர் என்ன கதை பேசுகிறாய்? அண்ணரின் தமிழ் இனப் பற்று பற்றி புரியாமல் பேசாதே. அவரின் வீரச் செயல் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்துக்குப் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறது. எனக்குத் தெரிந்த சீதனக் கொள்கையால் பாதிக்கப் பட்ட இரு சினேகிதிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து செயல் படுகிறோம்.”

“என்ன எதோ புது சாய் பேசுகிறாய்?. நீயும் உன் தங்கச்சியும் திருமணம் செய்த எங்கள் குடும்பத்துக்கு வாரிசுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி பிற்போக்குத்தனமாகப் பேசாதே”.

“அம்மா எனக்குத் திருமணம் அவசியம் இல்லை . அறைக்கு என் தங்கச்சி இருக்கிறாள். அவளுக்கு உங்கள் சொத்தெல்லாம் கொடுத்து நல்ல மாப்பிள்ளையாய் பார்த்து திருமணம் செய்து வையுங்கள். அவள் உங்களுக்குப் பேரனோ பேத்தியோ பெற்றுத் தரட்டும். என்னை விட்டு விடுங்கள்”

“எடியே இதென்ன புது சாய் பேசுகிறாய்? உதை உன் அப்பா கேட்டால் பிறகு எனக்குப் பிரச்சனை”:

கண்ணம்மா தாயுக்குப் பதில் சொல்லாமல் ன் அறைக்குள் போய் விட்டாள்.

***

நாட்கள் உருண்டோடின. நடராஜர் குடும்பம் தங்கள் மகள் கண்ணம்மா விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்வாள் என எதிர்பார்க்கவில்லை . கண்ணம்மா எழுதி வைத்துச் சென்ற கடிதத்தை நடராஜர் எடுத்து வாசித்தார் .

என் அம்மா, அப்பா, தங்கச்சிக்கு கண்ணம்மா எழுதுவது

இனி நீங்கள் என்னைத் தேட வேண்டாம். எனக்கு கலியாணம் பேசி கஷ்டப் படவேண்டாம் . நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழ் இன விடுதலைக்குக்காக சேர்ந்து விட்டேன். என் அண்ணார் சென்ற வழியில் சென்று விட்டேன் உங்கள் இருவரினதும் ஆசையை என் தங்கச்சி பூர்த்தி செய்வாள்

இப்படிக்கு

உங்கள் மகள்

கண்ணம்மா

நடராஜர் கடிதத்தை வாசித்து முடிந்ததும் வீட்டின் முன் கதவு தட்டும சத்தம் கேட்டது. வந்தவர் தரகர் தம்பித்துரையர் .

“என்ன ஐயா நான் கேள்விப்பட்டது உண்மையே

உங்கள் மகள் கண்ணம்மா இயக்கத்தில் சேர்ந்து விட்டாளாம் . ஊர் பேசுகிறது ”

“துரை நீர் கேள்விப் பட்டது உண்மை. அது அவள் எடுத்த முடிவு” என்றார் நடராஜர்.

“கண்ணம்மாவின் நல்ல முடிவு ஐயா. இன்னொரு செய்தியை உங்களுக்கு சொல்ல வந்தனான்”

“என்ன செய்தி எண்டு சொல்லுமேன் துரை”

“வைரத்தோட்டை சீதனமாக் கேட்ட மாவிட்டபுரம் குடும்பத்திலிருந்த அரசில் வேலை செய்த மாப்பிள்ளை லஞ்சம் வாங்கியதுக்கு ஊழல் கட்டுப்பாட்டு இலாக்காவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் . குறைந்தது அவருக்கு மூன்று வருஷம் சிறை கிடைக்கும் என்று ஊரிலை பேசிக் கொள்ளினம்” துரை சொன்னார்

நடராஜர் மனைவியைப் பார்த்துச் சிரித்தார்

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *