ஓடமும் ஓர் நாள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 12,148 
 

“என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா… வீட்டுலதான் இருக்கியா?..” குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா. செருப்பை வாசலில் கழட்டி விட்டுவிட்டு, வியர்த்திருந்த முகத்தை சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தார்.

“அடடே.. வாங்கக்கா, ரெண்டு வாரமா ஆளையே காணலியே!! ஊருல இல்லியா?” என்றவாறே ஃபேனைப்போட்டுவிட்டு ,”உக்காருங்கக்கா” என்றேன். அப்படியே மகன் பக்கம் திரும்பி,” மக்ளே,.. ஓடிப்போயி முக்குக்கடையில அத்தைக்கு போஞ்சி வாங்கிட்டு வந்துரேன்” என்றேன். ” அப்படியே, போயிலை வெச்சு ஒரு வெத்திலையும் வாங்கிட்டு வந்துரு மக்கா” என்றபடியே சோபாவில் அமர்ந்துகொண்டார்.

செல்லம்மக்கா என்ற செல்லம்மா எங்களுக்கு உறவில்லை.. ஆனால், உறவு மாதிரி. இந்த ஊருக்கு வந்தபுதிதில் எங்கள் பக்கத்துவீட்டில்தான் இருந்தார். வந்த கொஞ்ச நாளிலேயே தாயும் பிள்ளையுமாய் பழகிவிட்டோம். நாலுமாசத்துக்கப்புறம் மகனுக்கும் கல்யாணமாகி, வேலையும் மாற்றலானபோது, பக்கத்து ஊரில் இருந்தால் வேலைக்கு போய்வர சௌகரியமாக இருக்குமென்று, வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஆனாலும் பழகிய பழக்கத்தை மறக்காமல் அவ்வப்போது இந்தப்பக்கம் வந்து, எல்லார் வீட்டிலும் நலம்விசாரித்து செல்வார். அப்படியே, முதல்தடவை வந்தபோது கிடைத்த ஆர்டருக்கேற்ப, அப்பளம், வடகம், கூழ்வற்றல் போன்றவற்றை செய்து எடுத்து வந்து கொடுப்பார். கடைகளில் கிடைப்பதைவிட சகாயமாகவும், சுத்தமாகவும் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் அவர்கிட்டேயே வாங்குவது வழக்கம். ‘செல்லம்மக்கா’ என்றால் தெருவில் உள்ளவர்கள் அவ்வளவு மரியாதை, பாசம் வைத்திருந்தார்கள்.

” பழனிக்கு மக வீட்டுக்கு போயிருந்தேன்.. போனவாரமே வந்துருப்பேன், மக விடவே மாட்டேனுட்டா.. ஒரு மாசமாவது இருந்துட்டுத்தான் போகணும்ன்னு சொன்னா. ஒனக்கு தெரியாதா?.. நம்ம ஊரையும் ஆளுகளையும் விட்டுட்டு என்னால அவ்வளவு நாளு இருக்கமுடியாதுன்னுட்டு கிளம்பிட்டேன்.. சரி.. இதுல அம்பது அப்பளமும், ரெண்டுகிலோ கூழ்வத்தலும் இருக்கு, எடுத்து வெய்யி”

“ஆமா,.. இந்த உளுந்தங்கஞ்சிக்க மக தீயை வெச்சுக்கிட்டாளாமே.. நேத்துத்தான் எனக்கு தெரியும் பாத்துக்கோ.. அசல்ல கொடுத்தா அபாயம்ன்னு அக்காவீட்டுக்கே மருமகளா அனுப்பினானே..அப்படியுமா இந்தக்கதி!!” என்றவாறே வெத்திலையை வாயில் அடக்கிக்கொண்டார். செல்லம்மக்கா வாயில் வெத்திலையுடன் ஊர்வம்புகளையும் சேர்த்து மெல்ல ஆரம்பித்தார். உளுந்தங்கஞ்சி என்பது அவர் இட்ட பட்டப்பெயர். தெரிந்த மனிதர்களை, பட்டப்பேர் சொல்லி அழைக்கும் வாஞ்சைகலந்த நக்கல் அவருடையது.

” அது தலையெழுத்து.. மொதல்ல கட்டிக்கொடுத்து அஞ்சாவது மாசமே, அவன் ஆக்ஸிடெண்டில் போய்ச்சேர்ந்துட்டான். என்வீட்டுக்குன்னு பொறந்தவளை, அடுத்த வீட்டுக்கு அனுப்பினியே.. இப்பவாவது என்வீட்டுக்கு அனுப்புன்னு அக்காக்காரி மூக்கைச்சிந்தினதை பொறுக்காமத்தான், அவ மகனுக்கு கட்டி வெச்சார். அந்தப்பையன் என்னடான்னா, அதை அடிக்கடி குத்திக்காட்டி பேசியிருக்கான். பொறுக்க முடியாம அது போய் சேர்ந்துடுச்சு. விட்டுப்போன சொத்தும், சொந்தமும் திரும்ப கிடைச்சுடும்ன்னு மனக்கோட்டை கட்டிக்கிட்டிருந்த மாமியா, இப்போ உள்ளதும் போச்சேன்னு உக்காந்துக்கிட்டிருக்கா.. அது கெடக்குது, நீங்க இருந்து ஒருவாய் கஞ்சி குடிச்சிட்டுத்தான் போகணும்”.

சாப்பிட்டுவிட்டு, மேலும் கொஞ்ச நேரம் அக்கம்பக்கத்து விஷயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, என் வீட்டிலிருந்து கிளம்பினார். மருமகளைப்பற்றி மகாபெருமை அவருக்கு. தேடிப்பிடித்தாலும் இப்படி ஒரு குணவதி கிடைக்கமாட்டாள் என்றே வாய்க்குவாய் சொல்லிக்கொண்டிருந்தார். ‘கல்யாணமாகி மூணு வருஷமாச்சு.. வீட்டுல ஒரு தொட்டில் ஆடறதை பாத்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதைத்தவிர வேற என்ன குறை எனக்கு?.. என் மருமக ..என் ராசாத்தி, என்னை தங்கம் மாதிரி தாங்குறா. அவளுக்காகத்தான் கோயில் கோயிலா போயிட்டிருக்கேன்’ கிளம்பும் முன் சொன்னது ரொம்ப நேரம் என் தலைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடுத்த வாரமே அவரை கோயிலில்வைத்து சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ‘ இன்னைக்கு பிரதோஷமுல்லா.. அதான் ஒரு எட்டு,.. கோயிலுக்கு வந்தேன், கடவுள் எப்போதான் கண்ணை திறக்கப்போறாரோ?.. ஹூம்.. நேரமாச்சு வாரேன்” என்று விரைந்து சென்றுவிட்டார். பாவம்.. முகமெல்லாம் வாடியிருந்தது.

அதற்கப்புறம் வேலைச்சுமைகள் அழுத்த, அவரைப்பற்றி மறந்தேபோனேன். பரீட்சைகளெல்லாம் முடிந்து விடுமுறைக்கு வந்திருந்த சொந்த பந்தங்கள், குழந்தைகள், எல்லோருக்கும் செல்லம்மக்கா செய்த அயிட்டங்கள் ரொம்ப பிடித்துப்போய்விட, பார்சல் கட்டும் வேலை சேர்ந்து கொண்டது. அக்காவும் வந்து ரொம்ப நாள் ஆனபடியால், நேரடியாக நானேபோய் வாங்கி வந்துவிடுவதென்று கிளம்பினேன். எப்பவோ ஒருமுறை வந்தது.. ‘ நீ எதுக்கு வெறுதா அலையுத.. நாந்தான் அப்பளம் கொண்டுட்டு வர சாக்குல உங்களையெல்லாம் பாக்க வந்துட்டுத்தானே இருக்கேன்’ என்று தடுத்துவிடுவார்.

தேடிப்பிடித்து விலாசம் கண்டுபிடித்து, வீட்டை சென்றடையும் போது ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது வீட்டுக்குள். ஒரு பெண்ணின் ஆங்காரமான கத்தலும் இன்னொரு பெண்ணின் கதறலும் கேட்டுக்கொண்டிருந்தது. வாசலில் ஒரு பத்துப்பதினைந்து பேர் கூடி நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தயக்கத்துடன் மெல்ல ஒரு பெண்ணின் தோளைத்தொட்டு, ‘ எக்கா.. இங்க என்ன கலாட்டா?’ என்று கேட்டேன்.

” அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க.. தங்கமும் வேண்டாம், வெள்ளியும் வேண்டாம் .. தங்கமான மருமக கிடைச்சாப்போறும்ன்னு தேடிக்கொண்டாந்தாங்க செல்லம்மக்கா. ஆனா,.. அவங்களுக்கு ஒரு தகரத்துக்குண்டான மரியாதையைக்கூட கொடுக்கிறதில்லை அந்தப்பொண்ணு. வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி கூட ஒழுங்கா ஊத்தறதில்ல. பாவம், அந்தக்கா.. வெளியில எதையும் காட்டிக்காம, ‘என்னையப்போல மகராணி உண்டுமா’ன்னு பொய்யா பெருமை பேசிக்கிட்டு,.. பசியை மறைக்க ‘இன்னிக்கு விரதம்’ன்னு சொல்லிக்கிட்டு திரியுது. இப்படியும் உண்டுமா!!!” என்று நொடித்துக்கொண்டாள்.

ஒரு நொடி உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது.இங்க கிடந்து கஷ்டப்படுறதுக்கு மக கிட்ட போய் இருக்கலாமே.. மனதில் தோன்றியதை வாய்விட்டே அரற்றிவிட்டேன். ” அது இதுக்கு மேல.. மக வீட்டுல தங்கிட்டுவரப்போறேன்னு போனாங்க. அங்க என்ன ஆச்சோ.. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. ரெண்டுபேரும் அவங்களை இப்படி பந்து மாதிரி உருட்டிவிடுறதை நினைச்சா பாவமா இருக்கு. மகன் எதையுமே கண்டுக்கிறதில்லை.. அவங்க சம்பாத்தியத்தையும் ஏதாவது சாக்குச்சொல்லி அம்பது நூறுண்ணு வாங்கிர்றான். ‘நா எங்கியாவது தனியா இருந்து பொழைச்சிக்கிறண்டா’ன்னு அழறாங்க. அவங்க வெளிய போயிட்டா தொரைக்கு கவுரவம் கொறைஞ்சிடுமாம்.. தாயை தவிக்க விட்டுட்டான்னு ஒலகம் பேசுமாம். அதனால போகக்கூடாதுன்னு தடுக்கிறான். ரெண்டு நாளா அவங்க வீட்டுக்குள்ள இதே போராட்டம்தான் நடக்குது.. நமக்கெதுக்கு அடுத்த வீட்டு பராதி. ஆமா!! நீங்க அந்தக்காவுக்கு தெரிஞ்சவங்களா?..”

நான் பதிலேதும் சொல்லாமல் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன். மருமகளின்முன், எண்சாண் உடம்பை ஒரு சாணாக குறுக்கிக்கொண்டு பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார் செல்லம்மக்கா. முகத்தை மூடிக்கொண்டிருந்தாலும் ,அவரது முதுகு குலுங்குவதிலிருந்தே.. அழுவது புரிந்தது. கம்பீரமாய் வலம்வரும் அவரெங்கே… கெஞ்சிக்கொண்டிருக்கும் இவரெங்கே… அவரை அந்த நிலையில் பார்க்கும்போது திரண்ட கண்ணீர் பார்வையை மறைக்க,.. ஒரு முடிவுடன் அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *