நிகந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 14,493 
 

காரணம் எல்லாம் தெரியவில்லை என்பதெல்லாம் தற்கொலைக்கான காரணத்தில் சேராது.

நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நிறைய இடங்களை யோசித்து இறுதியில்.. “குரங்கு அருவி”க்கு பின்னால் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்…”குருவி அருவி”க்கு வந்திருக்கிறேன்.

காடும் பச்சையும்… சாக விடுமா எனத் தெரியவில்லை. ஆனாலும்.. சாவதில் ஒரு நீண்ட நெடிய சம்பவ அனுபத்தை அடைவதில்.. தீவிரம் இருந்தது எனக்குள். என்னைத்தாண்டி நடப்பது தான் பிரபஞ்சம். பிரபஞ்சம் தாண்ட நடப்பது தான் தான். சாவின் விழியில் காட்சிகள் தாறுமாறாக ஆகும் போல. சாவின் விளிம்பில் கோட்பாடுகள் கோணல்மாணலாகத்தான் போல.

அருவியின் இரைச்சலில்… பூமியின் மௌனம் கசிவதாகப் பட்டது.

சாரல் என் உடல் முழுக்க பட்டும், படாமல் நனைந்திருந்தது. கனவுக்குள்ளிருந்து விழித்திரை கிழித்துக் கொண்டு வெளியே வந்தது போல ஒரு ஆசுவாசம். எதை நோக்கியோ ஒரு விடுதலையின்பாற்பட்டு… உடல் இலகுவானது போன்ற ஒரு பிரமிப்பு. மானுட நடமாட்டங்கள் குரங்கு அருவியோடு நின்று விடும். வானம் வேண்டுபவன் மேற்கொண்டு நடந்து குருவி அருவிக்கு செல்வான். மானுட சலசலப்புகள் கூட்டங்களுக்கானவை. ஆன்ம தவிப்புகள் தான் தனிமைக்கானவை. சற்று நேரத்தில் சாக இருக்கும் மனதுள் இருக்கும் நண்டுக்கெல்லாம் சிறுகு முளைத்து பட்டாம்பூச்சி ஆன கற்பனையை வாய் கொப்பளித்து துப்பினேன். நீரெல்லாம் வானவில்.

இன்னும் கொஞ்ச நேரம் என்று எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. காலமாக போகிறவனுக்கு காலத்தின் கணக்கெதற்கு…?

எங்கிருந்து குதிக்கலாம் என்று கணக்கிட்டேன். தூரங்கள் ஒரு போதும் மரணங்களை நிர்ணயிப்பதில்லை. தற்கொலைகள் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டவை. கவனத்தோடு கதை முடிய வேண்டும். திட்டமிட்டேன். மனதுக்குள் இனித்த சுவையில் கண்கள் சிரித்தன.

சிரித்த கண்களை கூர்மையாக்கி பார்த்தேன்.

யோனிக்குள்ளிருந்து வெளியேறும் பச்சிளம் குழந்தையைப் போல வழுக்கிக் கொண்டு பொதக்கென்று அருவிக்குள்ளிருந்து ஒரு பிண்டம் வழுக்கிக் கொண்டு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில்… நினைத்துப் பார்க்கையில் அந்த பிண்டம், புவியீர்ப்பின் நிறைவோடு நீரின் நுரையோடு….மஞ்சளும்……வெளுப்புமான வண்ணத்தில் வழுக்கிக் கொண்டே நீரை இசைத்து விழுந்தது. ஒரு குளிர்ந்த இசைத்தட்டில் கசியும் தொலைதூர சிணுங்கலைப் போல விழுந்த பிணம், பாறை சந்தில் ஒதுங்கியது. கண்கள் விரிய எழுந்து அருகே நடந்து சென்றேன். அருகே செல்ல செல்ல இன்னும் அதிகமாய் சத்தமிட்ட அருவி தலைக்கு மேல் அத்தனை உயரத்தில் பற்கள் காட்டி தன்னையே கொட்டியபடி இருந்தது.

நீரை விலக்கிய கண்களில் அந்த பிணம் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் என்று தெரிந்தது. ஆடையற்ற அவ்வுடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள். துவண்டு விழும் உடலில் பொத்தினாற் போன்ற மெல்லிய தோல்கள். பச்சை நரம்புகளில் பாசம் கலந்திருந்தது. கூந்தல் நிறைந்த கொத்து நீர் முகம் தாண்டி விலகி ஓடியது. கால் இணைக்கும் தடத்தில் நீர் குடித்து ஒதுங்கி இருந்தது சிறுகூந்தல். மார் வட்டங்களில்… நீர் வளையங்கள். அருகே அமர்ந்து ஆழமாய் பார்த்தேன்.

எங்கிருந்து விழுந்திருப்பாள். கழுத்தை தூக்கி வானம் பார்த்தேன். வானம் பொத்துக் கொண்டு வகைதொகை இல்லாமல் நேர்கோட்டு கணக்கில் நீர் கொட்டிய அருவி இப்போது சற்று பயமுறுத்தியது.

எதிரே இருந்த பாறையில் மனம் சில்லிட அமர்ந்தேன். கனம் வந்தமர்ந்திருந்தது எனக்குள்.

அந்த பிணம் ஒரு பெண்ணின் உடல். அது என்னையே பார்த்தது. பார்வைகளின் நிமித்தம் பரிமாறுவது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் யோசனையை இன்னும் கூராக்கினேன். கூழாங்கல் சகவாசம் என்னுள் முணுமுணுத்தது. அருவி இன்னும் வேகமாய் காலத்தைக் கொட்டிக் கொண்டிருந்தது. நேரம் கூட கூட அழுத்தம் கூடுவது இயற்கையின் நியதி. நான் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பிணத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி பார்த்துக் கொண்டிருப்பது மனதுக்கு நெகிழ்வு. எதுவோ விடுவிப்பது போல இருந்தது. எதையோ விட்டு விட்டது போலவும் இருந்தது.

வந்து வந்து ஓரம் குவிந்த நீர்….. அவள் கூந்தலை அசைத்து, பின் தனக்குள் எதையோ அசைத்து விட்டு மீண்டும் தன் வட்டத்துக்குள் கலந்து கொண்டிருந்தது. நீரின் வேகம் பக்கவாட்டில் நிறையும் போதெல்லாம் அவளின் கால்கள் நீரில் பிரிந்து பிரிந்து தனக்குள் இருக்கும் பூங்கொத்தை விரித்து விரித்து மூடியது. பறித்த கண்களில்… அவளின் தீரா பக்கங்கள் பார்த்துக் கொண்டே இருந்தன. கண்களின் வழியே அவளுள் புகுந்து விடும் கற்பனையை காண்பது அற்புதத்திலும் அற்புதம்.

நீண்ட நெடிய பார்வைக்கு அருகே அவள் சிறு புன்னகை செய்வதாக நம்பினேன். கட்டற்ற காட்டுக்குள் காற்றற்ற கனவுக்குள் நான்.

நின்று நிதானித்து வந்த யோசனையில் அவளைத் தூக்கி இழுத்து பாறையில் சேர்த்து அமர வைத்தேன்.

நீட்டி சாய்ந்து அவள் அமர்ந்திருந்த தோரணை…வான்கோவின் ஓவியத்தில் இருக்கும் அந்த மஞ்சள் நிற பெண்ணை நினைவூட்டியது. இன்னும் அவளை அழகாக தீட்ட நினைக்கையில் என் சட்டையை அவளுக்கு கீழாடையாக மாற்றி கட்டி விட்டேன். என் பனியனை அவளுக்கு மேலாடையாக்கினேன். பிரஞ்சுக்காரியைப் போல இருந்த அவள் பொன்னிற கூந்தல் சற்று உலரத் துவங்கியது. நீண்ட நெடிய உயர்ந்த அவளின் உருவம் பொருத்தமற்ற ஆடையிலும் புத்துணர்வு கொண்டது. தென்றலின் தீவிரம் அவளையும் சீக்கிரத்தில் உலர்த்தி விட்டிருந்தது. நீர் பட்டு வெளுத்திருந்த அந்த முகம் சற்று நேரத்தில் ரோஜா பூவின் வனத்தில் துளிர் விட்டிருந்தது. பேரழகி ஒருத்தியை அத்தனை அருகே தனித்து காண்பது வரத்தின் நுனியெல்லாம் தேன்துளி கசிவது போல.

பார்த்து முடியாத அவள் முகத்தை காற்றினில் வரைந்து கொண்டிருந்தது நான்காவது காலம். எதுவோ போதவில்லை என்று ஆழ்மனம் விசும்பியது. பரபரத்த யோசனையில் படக்கென்று கண்கள் பூத்தேன்.

எழுந்து காட்டுக்குள் ஓடி நிமிடத்தில் இலை கிரீடத்தோடு வந்தேன். அந்த முக்கோண நெற்றிக்கு அந்த கிரீடம் அட்டகாசமாய் பொருந்தியது. முதுகு பரப்பிய கூந்தலை கீழே திருஷ்டி கொண்டு முடிச்சிட்டு கட்டி விட்டேன். காற்றுக்கு பறந்தது போக.. மீதி கவிதைக்குள் பறந்தது.

அவள் கைகளில் வளர்ந்திருந்த நகம் என்னவோ போல துருத்திக் கொண்டிருக்க வலிக்காமல் கடித்து விட்டேன். வலித்தாலும் கடிக்க விட்டாள். அவள் எதிரே காடும் நானும் தனித்திருந்தது ஒற்றை காகத்துக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும். எங்களை சுற்றியே பறந்தது. அவள் கூந்தலின் காதோரம் வைக்க ஒரு மஞ்சள் சூரியகாந்தி பூவை பறித்து வந்தேன். போதாத மனதுக்குள் போதை ஏற்றும் ஓவியம் அவளை இன்னும் அழகாக்க வேண்டும்.

யோசித்தேன். யோசனைக்குள் காட்டுத்தேன்.

கீழே கிடந்த கல்லின் நுனியில் கிடைத்த துளி கறுப்பை விரல் நுனியில் சேகரித்து அவள் நெற்றியில் திலகமிட்டேன். பொட்டிட்ட பிறகு அந்த முகத்தில் வெளிச்சம் மெட்டிட்டது.

செய்வதறியாது அவள் அருகே அமர்ந்த போது பிரபஞ்சத்தின் கதவுகள் தானாக திறந்தன. பகலிலும் நட்சத்திரங்கள் தெரிந்தன. பைக்குள் வைத்திருந்த “கலீல் ஜிப்ரா”னின் கவிதை புத்தகத்தை எடுத்து அவளுக்கு காதல் வாசித்துக் காட்டினேன். “தஸ்தயேவ்ஸ்கி”யின் கதைகள் படித்துக் காட்டி தூரத்தில் பறக்கும் பறவை பற்றி கூறினேன். அருகே வந்து போன வானம் கண்கள் சிமிட்டாமல் எங்களை கண்டதை அவளும் ரசித்தாள்.

அருவிக்கும் கண்கள் உண்டு… துளிகளால் எங்களை துளைத்தன.

உற்று நோக்கியதில் அவள் கைகள் குளிரில் நடுங்குவதை காண முடிந்தது. மிக மிக சிறு நடுக்கம். எங்கோ வரும் பூகம்பத்தை இங்கே நடு நடுங்கிக் காட்டும் பட்டாம்பூச்சியை ஒத்திருந்த்து அந்த சிலிர்ப்பு. அவள் கைகளை மெல்ல எடுத்து தேய்த்து விட்டேன். உள்ளங்கை தேய்த்து அவள் கன்னங்களில் வெதுவெதுப்பாக்கினேன். கன்னம் மலர்ந்த நொடியில் சிறு சூடு பூமி படைத்தது. தோள் சாய்ந்திருந்த அவள், என் கழுத்தில் இன்னும் புது கவி வரியாய் நுழைத்துக் கொண்டாள். அப்படியே மஞ்சள் நின்றதொரு கொஞ்ச நேரத்தை அமர வைத்தோம். ஆகாய பூமி இடம் மாறும் கனவொன்றை காணலாம் போலதான் எங்கள் நெருக்கம்.

அலைபேசியில் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி….. எனக்கு சொல்லடி…… விஷயம் என்னடி…..” பாடல் இவ்வுலகை இசைத்துக் கொண்டிருந்தது. அதற்கு மேல் பொறுக்க இயலா காதல் எங்களுள் பொங்கியது. எழுந்து அவள் ஓடத் தொடங்கினாள். பிடிக்க கிடைத்த கூந்தல் தொட்டு நான் வீணை மீட்டி விரட்டினேன்.

“அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா…ஓ பைங்கிளி….” என்ற வரிக்கு முகம் மூடி சிரித்து மரம் ஒளிந்து எட்டிப் பார்த்தவளை எனைப் போல நீங்கள் அத்தனை அருகே பார்த்திருக்க வேண்டும். மஜ்னுவின் கண்களில் லைலாவைக் காண வேண்டும் என்பதன் அர்த்தம் புரிந்த நொடி கனம் அது. அருவிகளில் வண்ணத் துளிகள் சொட்டின. அந்த “குருவி அருவி” முழுக்க எங்கள் வாசம். அந்த இடமே காதலால் நிரம்பி வழிந்தது. சூரியகாந்தி பூக்களின் மத்தியில் 26 வருடங்ளுக்கு ஒருமுறை பூக்கும் ஒரே ஒரு “நிகந்தி” பூவும் பூத்திருந்தது.

நிகந்தி பூவை கைகள் நடுங்க பறித்து வந்து கண்கள் நடுங்க அவள் தலையில் சூடினேன். தகுமென தங்கமானது அவளைத் தாங்கியிருந்த பூம்பாறை. அவள் நாண வேகத்தில் சாம்பல் பூத்தாள்.

“நிகந்தி” என்றே அழைத்தேன். “நிஜமா நிஜமா” என்று முனுமுனுத்தது அவள் ஊதா நிற உதடு.

“பிடிச்சிருக்கா….?” காதுக்குள் கிசுகிசுத்தேன்.

“ரெம்ப பிடிச்சிருக்கு” என்று சத்தமிட்டு கத்தியவள் என் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள். வெட்கத்தை உருவம் செய்தால், அது அவளுருவம் தான் கொள்ளும். வீணையை கர்ப்பனித்தால் அவள் விரல்களைத்தான் கொய்யும். வெகு நேரம் பாடலோடும்… ஆடலோடும்… மரங்களோடும்… நிறங்களோடும்.. லயித்திருந்த நாங்கள் ஒரு கட்டத்தில் பேராசையோடு நெருங்கினோம். ஆடை கழற்றி நீரை பூசினோம். நீரையும் கழற்றி விட்டு.. காமம் பூசினோம். அருவியின் பேரிரைச்சலை விட எங்கள் தன்னிரைச்சல் அதிகமாய் அந்த காடு நிறைத்தது. சற்று முன் கட்டிய பச்சைக் கொடியை அவள் தாலி என்றே கும்பிட்டாள். அவள் உள்ளங்கால் தொட்டு உச்சி வரை முத்தங்களால் பிரித்தேன். காதலால் அணைத்தவள் காமத்தால் துளைத்தாள்.

வேர்த்த போது அருவியில் குளித்தோம். மீண்டும் பாறையோரம் சரிந்து அமர்கையில் வேர்வையில் நிறைந்தோம். நேரம் கூட நான் சாக வந்ததை மறந்து போனேன். அவள் செத்துப் போனதை மறந்து போனாள். ஏனோ வாழ வேண்டுமென்ற எண்ணம் பாறையில் பூத்திருந்தது. மனதுக்குள் மயக்கம் தெளிய எல்லாம் சரியென்றே துளிர் விட்டது. உள்ளே நகரும் சூரியனில் நிலவொன்று முளைத்திருக்கலாம்.

அலைபேசி மீண்டும் இசைந்தது. அருகினில் மரங்கள் எல்லாம் மிளிர்ந்தன. அருவிக்கு கண் சிவந்த நேரம் நீராலானது.

“அந்தி மாலை நேரம்……..ஆற்றங்கரையோரம்…… நிலா வந்ததே….என் நிலா வந்ததே……….”

அருவியின் வேகம் இன்னும் இன்னும் கூடி மகிழ்ந்தது. மாலையின் வாசத்தில் மேகம் கொஞ்சம் கலந்திருக்க நாங்கள் நாங்களானோம். தோள் சாய்ந்து அமர்ந்திருந்தோம். எங்கெல்லாமோ பறந்திருந்தோம்.

அவள் தூங்கி போனாள். எங்களைக் கண்டு துக்கமின்றி பறந்த கிளிக்கு பாதி கனவு மூக்கில் சிவந்திருந்தது.

அருகே அவளுக்களவாய் அற்புதமாய் ஒரு குழி தோண்டினேன்.

எனையே பார்த்துக் கொண்டு படுத்திருத்தவளை கையில் மிதக்கும் காற்றா நீ என்று குழந்தையை ஏந்துவது போல எடுத்து வந்து குழிக்குள் வைத்தேன். அப்போதும் என்னையே பார்த்தாள். அந்த கண்களில் ஒரு முறை காதல் கண் சிமிட்டியதை நான் நம்பினேன். நானும் அவளையே உற்று பார்த்தேன். பார்த்துக் கொண்டே நின்றேன். எனக்கு கேவி அழ வேண்டும் போல இருந்தது. மண்ணெல்லாம் பூவாக உதிர்ந்த போது அந்தக் குழி நிரம்பியது. குழி நிரம்ப மனம் வழிந்தது. கண்களில் நீர் வழிய குருவி அருவியை விட்டு அகன்றேன். அவள் என் விரலில் சற்று முன் அணிவித்திருந்த அவளின் மோதிரத்தில் அவள் கண்கள் பளிச்சிட்டன.

பின் அந்த காடு, முழுக்க “நிகந்தி” பூக்களால் நிறையத் தொடங்கியது…..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *