கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 16,840 
 

காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும் தரையிலும் காய்ந்து ஒட்டிப்போன எச்சிலும் என சட்டென அவளைத் தரையிலிருந்து பிரித்துப் பார்ப்பவருக்கு அசூசையாக இருக்கும்.

“ஏய்ய்ய்ய்..சூச்சு”

காயத்ரிக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதன் சமிக்ஞை அது. 5 நிமிடம் விடாமல் அழைப்பாள். யாரையாவது. பெயரெல்லாம் அவளுக்கு முக்கியம் கிடையாது. அந்த நேரத்தில் யார் இருந்தாலும் குரலை அழுத்தி அழைப்பாள். அதிகபட்சம் 10 நிமிடம் அழைப்புத் தொடரும். 11ஆவது நிமிடம் தரை ஈரமாகியிருக்கும்.

“ஏய்ய்ய்ய்ய்ய்ய்”

அன்று அருகில் யாரும் இல்லை. மேகலா அக்காள் வெளியே சென்று விட்டாள். அம்மா அநேகமாகப் பின்கட்டில் இருப்பாள். அவள் வேலையில் மூழ்கிவிட்டாள். காÂத்ரியின் சமிக்ஞையெல்லாம் காதுக்கு எட்டாது. வேணு இருந்திருந்தால் ஓடி வந்து அவளைத் தூக்கி நிமிர்த்தி கழிவறைக்குத் தூக்கிச் சென்றிருப்பான். வேணு காயòரியின் இன்னொரு உடல். இப்பொழுது வேணு அங்கில்லை. வீட்டை விட்டு ஓடி ஒரு வாரம்தான் ஆகின்றது. காöòதிரிக்கு வேணு இருக்கும் ஞாபகம் ஒரு 2 நிமிடம்வரை தொடரலாம். பிறகு அவள் மூச்சு வாங்கும்.

வேணு அழுது புரண்ட காட்சியை அவள் அவன் இருக்கும் 2 மணிநேரம்வரை கவனிக்கவில்லை. தூக்கத்தில் குப்புர விழுந்தவள், அதன் பிறகு நிமிர முடியவில்லை. வேணுவின் உயிரும் குரலும் துடிக்கும் சத்தத்தைக் கேட்டப்படியே இருந்தாள். அது ஒரு 10 நிமிடத் துடிப்பு. அது வேணுவின் முனகல் என மட்டும் காöòரிக்குத் தெரிந்திருந்தது. அவளுக்கு மூச்சி முட்டியது. கைகளைத் தரையில் முடிந்தவரை ஓங்கி ஓங்கி அடித்தாள். கொடூரமாக முனகினாள். அதன் பிறகு முன் வாசல் கதவு திறக்கும் ஒலி. அவன் அதன் பிறகு வரவில்லை. அவன் போய் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவளால் தன் அருகில் இருந்த எச்சில் குவளையை மட்டும்தான் தள்ளிவிட முடிந்திருந்தது. அது அவளின் சமிக்ஞை. அவளால் அழ முடியவில்லை.

1

வேணு. பக்கத்து வீட்டுப் பையன். காöத்ரிக்கும் அவனுக்கும் ஒரே வயதுதான். காÂத்ரி பிறந்ததிலிருந்தே இப்படித்தான். முதுகெலும்பு கால் எனக் கைகளைத் தவிர வேறெதுவும் செயலற்ற நிலை. நாள் முழுக்கத் தரையைப் பிராண்டிக் கொண்டே இருப்பதுதான் அவளுக்குத் தெரிந்த விளையாட்டு. அம்மாவின் மீது வரும் கோபத்தைத் தரையைக் குத்தி வெளிப்படுத்துவாள். சாப்பாட்டுத் தட்டைத் தள்ளிவிடுவாள். அல்லது பக்கத்து வீட்டுக்குக் கேட்கும் அளவிற்கு ஊலையிடுவாள். அது அருகில் இருப்பவர்களுக்கு அழுகையைப் போல கேட்கும். தூரத்திலிருந்து கேட்டால் ஊலைவிடுவது போல இருக்கும். வேணு காலையில் எழுந்ததும் காயத்ரி வீட்டை எக்கிப் பார்க்க முடியும் அளவிற்கான சுவர் மீதேறி அவளைப் பார்த்துக்கொண்டிருப்பான். அங்கு வீடு மாற்றலாகி வந்த பிறகு அவனைப் பொறுத்தவரை காயத்ரி ஒரு விநோதமான பிறப்பு. அவளுடைய முனகல், உடல்வாகு, எச்சில் குவளை என அனைத்தையும் அவன் விநோதமாகவே பார்ப்பான்.

வேணுவின் காலை மாலை இரவு முழுக்க காயத்ரி நிரம்பியிருந்தாள். 3 கிலோ மீட்டர் அடர்த்தியான காடுகளுக்கு அப்பால் அங்கிருக்கும் ஒரு வரிசை வீட்டில் காயத்ரி குடும்பம், வேணு குடும்பம் மற்றும் ஒரு சீனக் குடும்பம் மட்டுமே இருந்தார்கள். அது புது வீடுகள் கட்டுவதற்காக அழிக்கப்பட்ட காட்டின் மீதப் பகுதிக்கு அப்பால் இருந்தது. ஆகையால், அங்கிருப்பவர்கள் பட்டணத்திற்குக்கூட 10 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். காயத்ரியின் அம்மாக்குத் தேவையான அனைத்தும் வேணுவின் அப்பாவே செய்து வந்தார். இரு வீடுகளுக்கும் தடையாக ஒரு சுவர் மட்டுமே.

“ப்பா நான் காயத்ரிக்குக்கூட வெளையாடலாமா?” வேணு கேட்ட முதல் கேள்வி அது. காயத்ரியின் உலகிற்குள் ஒரு தினசரி பார்வையாளனாக மட்டுமே இருந்த வேணு முதன் முதலாகச் சுவரைக் கடக்க வைத்தக் கேள்வி அது.

காலையில் எழுந்ததும் விளையாட யாருமற்ற வேணு காயத்ரியின் வீட்டுக்குள் போய் அவள் அருகில் அமர்ந்துகொண்டு அவளையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பான். அவள் எந்தவித சமிக்ஞையுமின்றி அவனுடைய பார்வையிலிருந்து விலகியிருக்க நினைப்பாள். ஆனால் அவளால் முடியாது. அம்மா வந்து அவளை வேறு பக்கம் திருப்பி படுக்க வைத்தால் மட்டுமே முடியும். வேணுவின் பார்வை அவளுக்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். அங்குலம் அங்குலமாக அவள் உடலுக்குள் நுழைந்தான் வேணு. அவளுக்கு அசூசை. உடல் அறுவறுப்பாக இருந்தது. அவளுடைய செயலற்ற கால்களையும் வாயிலிருந்து வடியும் எச்சிலையுமே அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அது விநோதம்.

கோபமுற்ற காயத்ரி தரையை ஓங்கி அடித்தாள். இன்னும் வேகமாக அடித்தாள். வேணு இரண்டடி தள்ளி அமர்ந்தான். வெளியே சென்றால் அவனுக்கு ஒன்றும் இல்லை. வெறும் காடு, அம்மா, தனிமை. காயத்ரியைப் பார்த்து மெல்ல சிரித்தான். அது முதல் சிரிப்பு. பதிலுக்கு அவனும் தரையை ஓங்கி அடித்தான். காயத்ரியும் வேணுவும் சேர்ந்து விளையாடிய முதல் விளையாட்டு அது. இருவரும் தரையை ஓங்கி அடித்துச் சிரித்துக் கொண்டார்கள். காயத்ரியின் சிரிப்பை வர்ணிக்க இயலாது. அது சட்டென சிரிப்பாகத் தெரிய வாய்ப்பில்லை. அது கேலி செய்வது போல இருக்கும். தலையை மேலே உயர்த்தி யாரும் பார்த்திராதபடி பத்திரமாகச் சிரிப்பாள்.

காயத்ரியின் பால்ய காலத்தின் தனிமையை உடைத்தது வேணுவாக மட்டுமே இருப்பான். வேணு அதன் பிறகு பள்ளி முடிந்த கணங்களிலெல்லாம் காயத்ரியுடந்தான் இருப்பான். நாள் முழுக்க அவளுக்கு அருகில் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பான். சில சமயங்களில் அப்படியே தூங்கிவிடுவான். காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

2

காயத்ரியின் அம்மா அன்று காலையிலேயே அவசரமாகப் பட்டணம் செல்ல வேண்டும். காயத்ரிக்குக் கிடைக்கும் மாதந்திர உதவி தொடர்பாக அவரை அலுவலுகத்தில் அழைத்திருந்தார்கள். ஆகையால், வேணுவே காயத்ரியை இரவுவரை பார்த்துக் கொள்ள வேண்டும். காயத்ரியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவனளிக்கப்பட்ட முதல் நாள் அது. ஒரு கடமை உணர்ச்சியுடன் காலையிலேயே வந்துவிட்டான்.

பேசவும் நகரவும் முடியாத காயத்ரியுடன் இத்தனை நாள் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த வேணுவிற்கு இது புதிதல்ல. அவள் இருப்பதால் அவனால் தனிமையை உணர முடிவதில்லை. அவனே கேள்விக் கேட்டு அவனே பதில் சொல்லிக் கொள்வான். அதில் அவனுக்குச் சலிப்பும் வந்ததில்லை. அவளால் பலவகையான சமிக்ஞையை வேணுவினால் கற்றுக்கொள்ள முடிந்தது. கோபத்திற்காக மட்டுமல்லாமல் சிரிக்கும்போது தரையை ஓங்கி அடிக்கும் பழக்கத்திற்கு ஆளானாள். தலையை மேலே தூக்கி சிரிக்காமல் நேரே அவனுடைய முகத்தைப் பார்த்துச் சிரிக்கப் பழகியிருந்தாள்.

“காயத்ரி.. உனக்கு ஒன்னு தெரியுமா.. எங்க அப்பா சரியில்லெ.. அவரு ரொம்பெ கெட்டவரு”

வேணுவினால் தன் உணர்வுகளைக் கொட்ட முடிந்த இடம் காயத்ரித்தான். தன் அப்பாவைப் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். வேணு வீட்டில் அவன், அம்மா, அப்பா மற்றும் ஒரு நாய். நாய் ஜோனியைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. வீட்டில் எப்பொழுதும் சண்டை.. வேணு அம்மாவுக்கு அவனுடைய அப்பாவின் நடத்தையின் மீது எப்பொழுதும் சந்தேகம். அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார்.

வேணுக்கு அவன் வீட்டில் மீதிருந்த ஈர்ப்பு முற்றிலுமாக குறைந்திருந்தது. காயத்ரியிடமே அவன் கவனம் முழுக்க. அன்று அவள் அம்மா வரும்வரை அவளுடன் இருந்ததில் அவனுக்குக் காயத்ரி மீதான அன்பும் ஈர்ப்பும் மேலும் அதிகமாயின. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்குள் ஓர் அங்கமானான். அவள் விடும் மூச்சுக் காற்று அவனை எப்பொழுதும் விழித்திருக்கச் செய்தது. அப்பாவின் மீதுள்ள வெறுப்பைத் தணிக்கும் சக்தி அவளுடைய இருப்புக்கு உள்ளதை அவன் மெல்ல உணர்ந்தான்.

வேணு காயத்ரியின் எச்சில் குவளையை எக்கிப் பார்த்தான். அதில் தனிமையும் ஏக்கங்களும் உச்சரிக்கப்படாத சொற்களும் மிதந்து கொண்டிருந்தன. அப்பொழுது அவள் அவனிடம் அதிகபட்சமாக எதிர்பார்த்தது நிறைந்துவிட்ட அந்த எச்சில் குவளையைச் சுத்தப்படுத்தி வைப்பதை மட்டும்தான். வேணு அதை அசூசையாகப் பார்க்காமல் சுத்தம் செய்து வைத்தான்.

இரவு அம்மா வருவதற்கு முன் இருவரும் உறங்கிப் போயிருந்தார்கள். வேணுவினால் அவ்விடத்தைவிட்டு நகர முடியவில்லை. காயத்ரியைப் பிரிய மனமில்லாமல் அங்கேயே படுத்துக் கொண்டான். எச்சில் குவளையின் வாடையும் தரையின் குளிர்ச்சியும் அவனுக்குப் பழகியிருந்தது. சட்டென தூக்கத்திலிருந்து விழித்தக் காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

3

வேணுவின் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். தன் உறவுக்காரப் பெண் ஒருத்தியுடன் சென்றுவிட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். வேணு பாதி செத்துவிட்டான். அதன் பிறகு காயத்ரி வீட்டிலேயே இருந்துவிட்டான். 17 வயது மட்டுமே. அவனுக்கு அங்கு கேட்பாரில்லை. காயத்ரி அம்மாவுடன் கொஞ்சம் சமளித்துக்கொண்டால் காயòரியுடன் மீதி நாட்களைக் கடத்திவிடலாம் என இருந்துவிட்டான். காயத்ரிக்கு வேண்டியதை அனைத்துமே அவýதான் செய்தான். அவளைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்கு அழைத்துச் செல்வது முதல் உணவு ஊட்டிவிடுவதுவரை வேணுத்தான் அனைத்துமே. கொஞ்சம் கொஞ்சமாக காயத்ரியின் அம்மா வெளி வேலைக்குப் போகத் தொடங்கினாள்.

வேணு வீட்டைவிட்டு காயத்ரியைவிட்டு எங்கும் நகர்ந்ததில்லை. அவளே உலகம். அவளுக்குக் கிடைக்கும் வெளிச்சம்தான் வேணுவிற்கும். முன்கதவைத் திறந்தாலோ அல்லது காயத்ரி வழக்கமாகப் படுத்திருக்கும் நேர் திசையிலுள்ள சன்னலைத் திறந்தாலோ உள்ளே வரும் வெளிச்சம்தான் வேணுவிற்கும். அவ்வளவுத்தான் அவர்களின் வெளி உலகம். அவளுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கிடப்பான். தொலைக்காட்சி இல்லாத அந்த வீட்டில் காயத்ரியின் முனகலும் வேணுவின் பேச்சும் மட்டுமே.

காயத்ரியைத் தவிர வேணுவினால் வேறு எதையும் சிந்திக்க முடிந்ததில்லை. தரையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அடுத்து அவளுக்கு என்ன தேவை எனச் செய்யத் தொடங்கிடுவான். காயத்ரியின் மூத்திரப் பையைக் கழுவதும் அவள் ஆடைகளைத் துவைப்பதும் அவளுக்கு உடை உடுத்துவதும் என அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். இல்லை, காயத்ரித்தான் அவனை ஆக்கிரமித்திருந்தாள். அவன் கண்களை நேரேதிரே பார்த்து கூண் வளைந்த அவளுடைய முதுகை மேலும் தாழ்த்தி புன்னகைப்பாள். வாய்நீர் ஒழுக சிரித்து கைத்தட்டுவாள்.

4

இன்று வேணு வீட்டைவிட்டு ஓடிப்போவான் என யாருக்குமே தெரியாது. அவனுக்கும்கூட. காயத்ரியின் முகத்தில் வெகுநேரம் வெயில் சூட்டைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அவளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை. வேணுவை அழைத்தாள். தரையை ஓங்கி அடித்தாள். பின்கட்டில் கதவோரம் சாய்ந்துகொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்த வேணுவிற்கு நினைவு திரும்ப கொஞ்ச நேரம் எடுத்தது.

“ஈஈஈஈஈஈஈ”எனக் கத்தினாள்.

முதன்முதலாக வேணுவிற்கு அது எரிச்சலாக இருந்தது. காயத்ரியின் குரல் அவனுக்குள் சேமித்துக் கிடந்த அதிருப்திகளைக் கிளறிவிட்டதைப் போன்று ஒலித்தது. அவள் முகத்தில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கள் சிலவற்றை அவள் விரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். ஈனமான ஒரு குரலை எழுப்பி அவனை அழைத்தாள். வேணுவிற்குச் சட்டென கோபம் தலைக்கேறியது.

“ஈஈஈஈஈஈஈ” எனப் பதிலுக்கு அதட்டலாகக் கத்திவிட்டு நடந்து வந்தான்.

வெளிச்சம் கண்களைக் கூசியது. அனைத்துச் சன்னல்களையும் முன்கதவையும் அடைத்துவிட்டு காயத்ரியின் பின்புறம் அமர்ந்தான். அவனால் பேச முடியவில்லை. அவளை எதிர்கொண்டு பார்க்கவும் முடியவில்லை. காயத்ரியைப் போலவே சமிக்ஞையால் கத்தினான். தரையை ஓங்கி ஓங்கி அடித்தான். வேணுவின் வாயிலிருந்து வாய்நீர் ஒழுகியது. சிரிப்பை உள்ளுக்குள் அடக்கி தலையை மேலே உயர்த்தி சன்னமாகச் சிரித்தான். தலையை ஓர் ஓரமாகச் சாய்த்து வெளிக்கதவைப் பார்த்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “எச்சில் குவளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *