கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 24,541 
 

ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் மிக பிரம்மாண்டமானதாயிருந்தது.

அந்த நகரத்தின் அடையாளமே அந்தக் கட்டிடம் தான்.அதன் பெயர் வியா.
அந்த நகரத்திற்கு அன்றாடம் வருகிறவர்களில் பெருமளவினர் அந்த வியா
என்னும் வியாபாரஸ்தலத்துக்கு வருகை புரிவதற்குத்தான் வருகின்றனர் என்பது திண்ணம்.அதன் உரிமையாளன் பேர் வினோதன்.அவன் தன் வினோதமானபலசெய்கைகளுக்காகஉலகப்புகழ்அடைந்திருந்தான்.என்றாலும் கூடஅவன் குறித்து உலாவிய கதைகளைத் தாண்டிலும் வியா-வின் புகழ் நாளுக்கு நாள் கூடியபடி இருந்ததே ஒழிய குறையவில்லை.

அதன் முதற்தளத்தில் இந்த உலகத்தில் புழக்கத்தில் இருக்கிற அத்தனை
பொருட்களும் இருந்தன.இரண்டாவது தளத்தில் உடல் உறுப்புக்கள் அனைத்தும் விற்கப்பட்டன.செயற்கை மனிதர்களும் பாதி மனிதர்கள் எனப்படுகிற விலங்கும் மனிதனும் கலந்த அல்லாது இயந்திரமும் மனிதனும் கலந்த கலப்பினங்கள் அங்கே கிடைத்தன.இரண்டொரு வருடங்களாக முன்பில்லா சரக்காக கடவுளும் மனிதனும்கலந்த புதிய ரகம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டது.அதன் மூன்றாவது தளம் ஆவிகளுக்கான அனைத்தும் கிட்டக் கூடிய தலமாக இருந்தது.அடுத்த மேற்தளத்தில் அருங்காட்சியகம் இருந்தது.இன்னும் அந்த வியா என்னும் வியாபாரத் தலம் மொத்தத்தையும் சுற்றி வரவே சில ஆண்டுகாலம் ஆகும் என்பதால் இது இப்போதைக்குப் போதுமானதாகிறது.

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.மாலை மணி ஒன்பதரை ஆனது,.
இரவு என்ற ஒன்று பல வருடங்களுக்கு முன்னரே வழக்கொழிந்து விட்டபடியால் எப்போதும் சூரியன் சூழ் உலகமாக இருந்தது.அன்றைக்கு வரவேண்டிய மழை தவிர்க்க முடியாத காரணத்தால் அன்று விடுப்பெடுத்துக் கொண்டதை சிலமணி நேரங்களுக்கு முன்னரே நல்லரசுத் தொலைக்காட்சியில் கட்டாயச் செய்திகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு விட்டபடியால் அனைவருமே மழையற்ற வெயிலுக்குத் தயாராகவே இருந்தனர்.சாலைகளில் கூட்டம் சற்றே குறைந்தாற் போல் இருந்தது.

வினோதன் வியாவின் முதல் தளத்தில் தனது தனியறையில் அமர்ந்து
கொண்டு ஒவ்வொரு நொடியும் வியா’வின் வர்த்தகத்தின் மூலம் வசூலாகும் பணங்களின் எண்ணிக்கை மற்றும் லாபத்தின் எண்ணிக்கை மாறுகிறதிரையை அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டிருந்தான்.அவனுக்கு வாழ்க்கை சலிப்பாக இருந்தது.தன் வாழ்க்கையில் தனக்குப்பிடித்தமான தன் முதல் திருமணத்தின் காணொளியை எடுத்துத் நினைவுத்திரை கணினியில் ஓடவிட்டான்.அவனது முதல் மனைவி அத்யா என்பவளை பார்க்கையில் அவனுக்கு ஆத்திரமாக வந்தது.ஹ்ம்ம்..பெண்ணா இவள்..?பேய்.”அவள் அவனோடு சரியாக ஏழரை தினங்கள் தான் வாழ்ந்தாள்.அதற்குள் அவளை வெறும் நூற்றி நாற்பது முறைதான்……

அவள் வினோதனின் வினோதங்களைவெளியில் பட்டவர்த்தனமாக சொன்ன முதல்ஆள்.அவளைக் கொன்றுவிடத் தான் வினோதன் முயன்றான்.ஆனால் அதற்குள் அவள் தப்பி ஓடிஅரசாங்கத்தின் ஒரு உயர் அதிகாரியை பார்வைத்திருமணம் செய்துகொண்டுவிட்டாள்.வினோதன்
வழக்கமாகவே அரசாங்கத்தை பகைத்துக் கொள்வது இல்லை.அவன் தொழிலுக்காக மட்டும் அல்ல.அரசாங்கம் என்பது கருணையற்ற தேவதை.அதனைப் பகைத்துக் கொள்ளவே கூடாது.

ஒருவன்அரசாங்கத்தைப் பழகிக் கொள்ளாமல் இருக்கும் வரை அவன் வாழ்வில் வெளிச்சம் இல்லை.மாறாக அதனைப் பழகிய பின் அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ளாத வரை அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவன் படித்த வியாபார மதகுரு எழுதியே தந்திருந்த பாடக்குறிப்பை அட்சரம் பிசகாமல் பின்பற்றுகிறான்.

அதனால் வினோதன் அவளை வெளிப்படையாக எதுவும் செய்யவியலாமற் போனான்.இருந்தாலும் அவனால் அவளை மறக்க இயலவில்லை.அவள் தனக்குத் துரோகமிழைத்ததைமறப்பதற்காக வினோதன் வரிசையாக பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டான்.ஒருகட்டத்தில் அவனுக்கு பத்தாயிரம் மனைவிகள் இருப்பதாக திருமண உச்சவரம்புக் கழகத்தில்
இருந்து ஓலை வந்த அன்றைக்குத் தான் அவனுக்கே புரிந்தது.

பாதி மனைவியரை அவன் ஒருமுறை பார்த்ததோடு சரி.அவர்கள் அனைவருமே அவரவர் ஊர்களில் வினோதனின் மனைவி என்ற அந்தஸ்தில் ஆடம்பரமாக வளையவந்தனர்.சிலர் அவனைத் தேடி அவனது ஊருக்கு வருவதும் அவன் எதிர்பாராத கணமொன்றில் வியாவில் அவன் எதிர்ப்படுகையில்

“என்னைத் தெரிகிறதா..?” எனக் கேட்டுவிட்டு எள்ளலான சிரிப்பும் துள்ளலான நடையுமாக அவனைக் கடந்து சென்றுவிடுவதும் நடந்தது.
வினோதன் அதன் பிறகு ஒரு தினம் அவனது முன்பிறவி வினோதனின் பிம்பத்தை வரவழைத்தான்.அதன் யோசனை அவனுக்கு திருப்திகரமாக இல்லை.அது சொன்னதை அவன் செயல்படுத்த முடியாது தவித்தான்.அந்த பிம்பம் அவனிடம் அதுவரை அவன் திருமணம் செய்திருந்த அனைவரையும்ஒரே மாளிகைக்குள் அடைத்து வைத்து விடுமாறு அறிவுறுத்தியது.

வினோதன் தனது முன்பிறவி பிம்பத்தை விரட்டி அடித்தான்.அது நிறமற்ற கண்ணீர்த் துளிகளைக் கையிலேந்தி வினோதனின் மீது எறிந்து சபித்தது.”என்னைத் தெரிகிறதா,?”என உன் எந்த மனைவி கேட்டாலும் நீ மரணமடைவாய். இது சத்தியம்”என்று சொல்லி அகன்றது.
வினோதன் மீண்டும் பெருங்குழப்பத்துக்கு ஆளானான்.அவனுடைய சாபத்தை உடனே என்ன செய்தாவது தப்பிக்க வேண்டுமென்று விரும்பினான்.

எல்லா மதகுருக்களையும் சந்தித்தவனுக்கு எந்த விதமான தீர்வும் கிட்டாததால் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து
அதில் தன் இரண்டு முடிவுகளை அறிவித்தான்.

1.வினோதன் தன் எல்லா மனைவியரையும் ஒற்றை வார்த்தை மூலமாக ஒரே நேரத்தில் விவாகரத்து செய்துவிட்டான்.இனி அவன் சுதந்திரப்பறவை.

2.வினோதன் தன் புதிய மதமொன்றை துவக்கி அதன் கடவுளாக தன்னையே அறிவித்துக்கொண்டான்.அவன் மதத்தில் இணைகிற எல்லோரும் அவனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதன் பின் அவன் மீது பதிவான அத்தனை ஆயிரம் வழக்குகளுக்கும்
ஈடாக தன் முன்னாள் மனைவியர்கள் அனைவருக்கும் பணங்களையும் நகைகளையும் சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்தான்.அனைவருமே திருப்தியுடன் அவனை விலகி சென்றாலும் கூட ஒரே ஒருத்தி.அவள் பெயர் தீயா.அவள் மட்டும் வழக்கும் தொடரவில்லை அவனுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்ற தகவலேதும் கிடைக்கவில்லை.

வினோதன் மெல்ல தீயாவை மறந்தான்.அவனுடைய ஞாபகங்களில்
இப்போது பெண்கள் இல்லவே இல்லை.ஒரு சாபத்தின் வார்த்தைகளுக்காகத் தன் வாழ்க்கையின் ஆதாரநிலத்தை கிட்டத்தட்டப் புரட்டி போட்டிருந்தான்.அவனது காதல் ஆண்களின் மீது மையங்கொண்டது.ஆரம்பத்தில் தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று அறிவித்துக் கொள்வதில் ஏற்பட்ட பரபரப்பையும் அதன் மூலமாக அவன் விலக்கி இருந்த அத்தனை ஆயிரம் மனைவியர்க்கும்சொல்லாமற் போய்ச்சேர்ந்த செய்தி ஒன்றாக அவனது புதிய மனமாற்றம் இருந்ததை அவன் ரசித்தான்.

அப்போது அவனுக்கு உண்மையில் ஆண்களுடன் உறவுகொள்வதில் எந்த மயக்கமும் இல்லவே இல்லை.ஆனால் தொடர்ச்சியாக ஓரினச்சேர்க்கை பற்றிய கதைகளைப் படித்தும் படங்களைப் பார்த்தும் அவன்மெல்ல மெல்ல நடிக்க வந்த நாடகத்தின் பாத்திரமாகவே மாறிப்போனான்.இன்றைக்கு வினோதன் ,மனதளவில்முழுவதுமாக ஓரினச் சேர்க்கையாளனாகவே தன்னை எந்தவித வித்யாசமும் இல்லாமல் உணர்ந்தான்.

கடைசியாக ஒரு தலைக்காதலின் வாதையில் அவன் வதங்கினான்.வினோதனின் சமீபத்திய காதலன் வெகு தூரத்தில் இருந்த ஒரு நகரத்தின் புகழ்பெற்ற மருத்துவமனையில் ஆண்செவிலியாகப்பணியாற்றிக் கொண்டிருந்தான்.அவன் பெயரையும் புகைப்படத்தையும் பத்திரிக்கை ஒன்றில் பார்த்ததில் இருந்துஅவன் மேல் தீராக் காதலும் சேரா நோய்மையும் கொண்டான்.அந்த செவிலியின் பெயர் சகா.

வினோதனின் சமீபத்திய கனவொன்றில் அவனது முன்பிறவி பிம்பம்
வந்து அழுகையும் சிரிப்பும் கலந்த குரலில் பிதற்றியது.”தப்பியோடுகிறாயா வினோதா..?இன்னமும் தீயா என்னும் ஒருத்தியிடம் நீ கடனாளியாக இருப்பதை மறந்துவிடாதே..அவள் உன் முன் வந்து “என்னைத் தெரிகிறதா..?;” எனக் கேட்டால்,ஹ…நீ உன் மண்டை வெடித்து இறந்தே போவாயடா…அவளைக் கண்டுபிடித்து அவளைக் கணக்குத் தீர்த்து அவளிடம் இருந்து பத்தாயிரமாவது ஆட்சேபமின்மைக் கடிதத்தை வாங்கிய பிற்பாடு தான் நான் உனக்களித்த சாபத்தின் கடைசி நிழல் உன் விதானத்தில் இருந்து நீங்கும் என்பதை எண்ணிப்பார்.அதுவரை மரணம்,,மன ரணமாக கொன்றுகொன்று உன்னைப் பழிதீர்க்கும்.ஜாக்ரதை”என்றது.

அவ்வளவுதான்.வினோதன் வெறிகொண்டான்.தன் அத்தனை பணியாட்களையும் எல்லா திசைகளுக்கும் துரத்தினான்.தீயா என்ற ஒருத்தியாவது,அவளது ப்ரேதமாவது,எரித்த சாம்பலாவது,புதைத்த பிடிமண்ணாவது,கரைத்த நதிநீராவது,கொன்ற குருதியாவது,கொண்டு வருபவனுக்கு பெருஞ்செல்வமும்,கொணராதவனுக்குக் கொலைவஞ்சமும்
தன் அன்புப்பரிசாக இருக்கும் என அறிவித்தான்.அவன் செல்வந்தன்.அவர்களுக்கு அவன் பிய்த்துதறும் சொற்பக் கனிகூட செல்வப்புதையல் என்பதால் அவர்களும் வெகுண்டு திரிந்தார்கள்.
ஆனாலும் வினோதனுக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது.எனினும் அவன் தன் சமீபத்திய காதலனிடம் இருந்து அதுவரைக்கும் இணக்கமான ஒரு வார்த்தை கூட வாராதிருந்த நிலை மாறி சகா என்பவன் வினோதனைச் சந்திப்பதற்காக அன்றிலிருந்து ஏழாம் நாள் வருவதாக கடிதம் அனுப்பி இருந்தான்.

அதனைப் படித்ததும் வினோதனுக்கு தீயா மீதிருந்த கனல் குறைந்து தணிந்தான்.அவன் மனம் அப்போது காதலால் ததும்பியது.தன்னையே ஒரு அன்புப் பரிசாக்கித் தன் காதலனின் காலடியில் சமர்ப்பிப்பதை பலவிதமான நிகழ்வுகளாய்க் கற்பனித்து நாணினான்.

அன்றில் இருந்து ஏழாம் நாள்..அன்றைக்குக் காலையில் இருந்தே தன் மாளிகையை அலங்கரித்து வைத்திருந்தான் வினோதன்,சகா வந்தவுடன் அவனை உபசரிக்கிறதற்கான பழரசங்களில் இருந்து கனிவகைகள் இன்னபிற உணவுகள் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தான்.எல்லாம் தயார் என்னுகையில் அவனது பிரத்யேக எண்ணுக்கொரு அழைப்பு வந்தது.அதனை இணைப்பதற்கான ரகசிய எண்ணை அவன் மனதிற்குள் உச்சரித்ததும் அவனது மனதுக்குள் எதிர்முனையில் இருந்த அவனது நம்பிக்கைக்குரிய தளகாரியன் பேசினான்.

“வினோதன்…உங்களுக்கொரு நற்செய்தி…”என்றான்
பரபரத்த வினோதன்..:”சொல்லடா…என்ன கிடைத்து விட்டாளா தீயா..?சீக்கிரம் சொல்.இல்லாவிட்டால் உன்னை நீயே கொலை செய்துகொள்”என்றான்

“வினோதன்…தீயா இப்போது இருக்கிற முகவரி எனக்குக் கிடைத்துவிட்டது.ஆனால் வீடு பூட்டியிருக்கிறது.கடந்த சில மணி நேரங்களாய்க் காத்திருக்கிறேன்.இன்னமும் வரவில்லை.”என்றான்.

“நல்ல காரியம் செய்தாயடா…உனக்கு எண்ணிலடங்கா செல்வந்தங்களைத் தருகிறேன்.அங்கேயே இரு.காரியத்தை வெற்றிகரமாக முடி.தோற்றால் அங்கேயே மடி.கொஞ்ச நேரத்துக்கு என்னை தொந்தரவு செய்யாதே..”என்றான்.

“அப்படியே செய்கிறேன்.வினோதன்..ஆனால்,மேலதிகமாக..”என்று எதிர்முனையன் பாதி பேசிக்கொண்டிருக்கையிலேயே

“வைடா..காட்டெருமையே……தூரத்தில் என் கண்ணாளனின் வாகனம் வந்துவிட்டது…இனி ஒரு எழுத்தைப் பேசினாலும்
உன் முக்கிய உறுப்பை நிரந்தரமாக நீக்கி விடுவேன்.”என்று இரைந்து விட்டு துண்டித்தான்.

வாகனத்தில் இருந்து இறங்கிய சகாவை வினோதனின் இரண்டு பணியாளர்கள் ஆதுரமாய் அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைய,எதிர்கொண்ட வினோதன்

“தங்கள் வரவு நல்வரவாகுக காதல்வேந்தே..”என்றான்.
சற்றே நாணம் கலந்த புன்னகையை வெளிப்படுத்திய சகா..”உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி..”என்றான்.

அது வினோதனுக்குள் சீரற்ற காமத்தைக் கிளறியது.அவன் உலகத்தின் எல்லா மொழிகளும் செயல்படாத ஒரு இடத்தில் தான் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தான்.உடனே காதலின் பாடல் ஒன்றை தான் படைத்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொண்டான்.என்ன செய்து தன்னை வெல்வது என்றறியாது திகைத்தான்

சகா இவனது ஊசலாட்டங்கள் அனைத்தையும் ரசித்ததாய்த் தோன்றியது.
,மாறுபட்ட ஒரு அனுபவத்தில் சகாவும் திளைப்பதை உணரமுடிந்தது.சில நொடிகளில் இருவரும் தம்மைத் தனித்தனியே உணர்ந்தனர்.
ஆசையோடு வினோதன் நீட்டிய பழரசத்தை வாங்கிக்கொண்ட சகாவின் கைகளைப் பிடித்து தன் ப்ரத்யேக படுக்கையறைக்கு அழைத்து சென்றான் வினோதன்.அந்தப் படுக்கையறை முழுவதுமே கண்ணாடியாலான சுவர்களை கொண்டிருந்தது.அறைமுழுவதும் உறைபனி நிலைக்குளிர் இருந்தது.அறைமுழுவதுமாக வியாபித்திருந்த படுக்கையில் துள்ளிக்குதித்த வினோதன்.

“வா..சகா…இங்கே உட்கார்…”என்றான்.

மெலிதான கூச்சத்துடன் அமர்ந்த சகாவைப் பார்த்துக்கொண்டே

“இது பூர்வ ஜென்ம உறவு என்று நான் நம்புகிறேன்.உன்னைப் போல யாரையும் நான் சந்தித்திருக்கவில்லை.உனக்கு என்ன தோன்றுகிறது..?எனைப் போல யாரையாவது சந்தித்திருக்கிறாயா,..?’என்றான் காதலும் காமமும் குழைந்த குரலில்.

“உன்னையே சந்தித்திருக்கிறேனே நான்..”என்ற சகாவை வியப்புடன் பார்த்து
எங்கே…?எப்போது என்றான் வினோதன்.

அவன் முகத்தையே உற்று நோக்கிய சகா தன் மெல்லிய குரலில்” “நான் ஆணாக மாறியவள்.என் பூர்வாசிரமப் பெயர் தீயா…என்னைத் தெரிகிறதா..?’”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *