ப.ஆப்டீன்

 
ஆப்டீன்2

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 – 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர்.

1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வெளிவந்த நூல்கள்

Kongani

கொங்காணி
(சிறுகதைத் தொகுப்பு,
கொடகே வெளியீடு, 2014)

IravinRagam

இரவின் ராகங்கள்-
(சிறுகதைத் தொகுப்பு,
மல்லிகைப்பந்தல் வெளியீடு,
1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990)

NaamPayanitha

நாம் பயணித்த புகைவண்டி-
(சிறுகதைத் தொகுப்பு,
மல்லிகைப்பந்தல் 2003)

கருக்கொண்ட மேகங்கள் (நாவல்),
முதற் பதிப்பு: நவம்பர் 1999,
பேசும் பேனா வெளியீடு,
பேருவளை.


பரிசுகள், விருதுகள்

  • 1968 ஆம் ஆண்டு இலங்கை Y.M.M.A நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சாந்தமும் சகிப்பும் எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1975 ஆம் ஆண்டு பண்பாட்டு அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1980 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.
  • 1987 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது இரவின் ராகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசினைப் பெற்றது.
  • 1999 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது கருக்கொண்ட மேகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.
  • 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு இவருக்கு கலாபூஷண விருது வழங்கியது.

ப.ஆப்டீன் நமது நவ இல்கியத்தில் ஒரு சிறந்த மக்கள் எழுத்தாளர் – பேராசிரியர் டாக்டர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)

1960 மலையக இளைஞர் மத்தியில் தோன்றிய இலக்கிய விழிப்புணர்வில் ஓர் அம்சமாக ஆப்டீன் வளர்ந்தார். மேலும் பத்து வருட கால வளர்ச்சியும் முதிர்ச்சிக்குப் பின், 1970 அவருக்கு ஒரு மைல்கல் ஆண்டு. 1970-1980 அவரின் மிகவும் போற்றதக்க காலம். ஈழத்தின் உன்னத எழுத்தாளரும், நவீன இலக்கிய ஆய்வாளருமான கலாநிதி செங்கை ஆழியான் 1970-1980 தசாப்தத்தில் குறிப்பிடும் சிறுகதை ஆசிரியர் 24 பேர்களில் ஆப்டீனும் காணப்படுகிறார். அந்த வரிசையில் பிரபல எழுத்தாளர்களான தெணியான், சட்டதாதன், சுதராஜ், ச.முருகானந்தன், கோகிலா மகேந்திரன் புலோலியூர் சதாசிவம் அடங்குவர் என்பது குறிப்பிடதக்கது. ‘ஈழத்து சிறுகதை வரலாற்றில் ப. ஆப்டீன் குறிப்பிடவேண்டியவர்’ என்பது செங்கை ஆழியான் அவர்களின் கூற்று ஆகும்.

இந்தக் காலத்தில் 1968,1975,1980 ஆகிய ஆண்டுகளில் ஆப்டீன் அகில இலங்கை ரீதியில் சிறுகதைகளுக்குப் பரிசுகள் பெற்றார். 1975ல் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற சிறுகதை ஒரு கலாசார அமைச்சின் பரிசு பெற்றது. 1980ல் முஸ்லிம் சமய விவகார அமைச்சு ‘நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்’ என்ற கதைக்குப் பரிசு அளித்தது.

ஆப்டீன் அவர்களின் தமிழ் வசீகரமானது. எடுத்துக் கொண்ட கருவுக்கும், கருத்துக்கும், கதைக்கும் ஏற்ப பக்குவம் ஆனது அவரது இலக்கியப் பார்வை சமூகவியல் ஆட்சிக்கு உட்பட்டது. கதை வார்ப்பின் அணுகுமுறை மனிதாபிமானது. ஆகவேதான் அவரது படைப்புக்கள் மக்கள் இலக்கியம்’, ‘சமூக இலக்கியம்’ மனிதாபிமான இலக்கியம்’ என்ற ரீதியில் இனம் காணப்படுகிறது.

ஆப்டீனின் சிறந்த சிறுகதைகள் மல்லிகையில் வெளிவந்த பெருமை அவருக்கு உண்டு. மல்லிகைக்கும் உண்டு யோ.சுந்தரலட்சமியும், செ.யோகநாதனும் தொகுத்த ஈழத்துச் சிறுகதைகள் முதல் தொகுதியில் வெள்ளிப் பாதசரம்) ஆப்டீனின் ‘புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்’ என்ற சிறந்த சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது. யோகநாதன் ஆப்டீனின் மொழிநடையைக் ‘கூர்மையானது, வசீகரமானது, எளிமையானது. ‘என்பார்.

சிறுகதை எழுத்தாளர் ஆப்டீன் 1999ல் நாவலாசிரியரும் ஆனார். அவரது நாவல் ‘கருக்கொண்ட மேகங்கள்’ இலங்கை இலக்கியப் பேரவை பரிசு பெற்றது. அந்த நாவல் ஆப்டீனின் பன்முக அனுபவங்களையும், சமூகத் தொடர்புகளையும் கொண்டதாக உள்ளது. கிராமவாசிகளையும் விவசாயிகளையும் கொண்ட பல்லின மக்களின் வாழ்வுப் போராட்டங்களைச் சித்திரிக்கும் எழுத்தோவியமாக அமைந்தது. ஆப்டீனின் இலக்கிய வாழ்விலும் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கியது.

மலாய் மொழியைத் தனது தாய் மொழியாகக் கொண்ட ஆப்டீன் அவர்களின் தமிழ் பற்றும், புலமையும், இலக்கிய ஆக்கத் திறனும் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அணி செய்தது. அவரது ஆசிரியத் தொழிலின் பயிற்சியும், பழக்கமும், சகோதரவ நேசபாங்கும் அன்பான ஒரு எழுத்தாளர் நண்பரை எமக்குத் தந்தது.

நன்றி மறவாத நன்மைக்கும், அடக்கத்துக்கும் அவர் சிறந்த எடுத்துக் காட்டு. ஏற உதவிய ஏணியையும், கடக்க உதவிய தோணியையும் மறந்து துறக்கும் உலகிலே, ஆப்டீன் ஓர் அபூர்வ மனிதன். அவரது படிப்படியான உயர்ச்சியில் நாம் மகிழ்கிறோம். அவர் மேலும் மேலும் உயர்ந்து தமிழ்ப் பணி புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

– கொங்காணி (சிறுகதைத் தொகுப்பு, கொடகே வெளியீடு, 2014)


ஆப்டீனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பாடம் – சுதாராஜ்

கதைகளைக் கூறும்போது: சமூக, தனிமனித விமர்சனங்களையும் பொருத்தமான இடங்களில் வைக்கிறார். தனக்குத் தெரிந்ததும், தான் அனுபவம் அனுபவம் பெற்றதுமான ஆசிரியத்தொழில், மலையக மாந்தர். முஸ்லீம் சமூகம் பற்றிய கதைகளையே அவர் கூறினாலும், அவற்றில் மனித மேம்பாட்டை வலியுறுத்தும் பொதுமைப்பாடான கருத்துக்கள் நிறைய உள்ளன.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இவை போன்ற ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். அல்லது இப்படியானவர்களைச் சந்தித்திருக்கக்கூடும். அப்போது ஏனோதானோ என்று பெரிதாக மனதைத் தொடாமல் விட்டிருக்கலாம். ஆனால் ஆப்மனின் சிறுகதைகளை வாசித்த பின்னர் அவை நிச்சயம் மீள் சிந்தனைக்குட்படும். ஒரு நல்ல சிறுகதையின் பயனும் அதுதான்.

நண்பர் ஆப்பன் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத்துறையை அணி செய்ய வரும் இத்தொகுதியைப் படைத்தமைக்காக ஆப்டீன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தல் வெளியிடுகிறது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் இதுபோன்ற நல்ல பல சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

–  சுதாராஜ், நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003)


கருக்கொண்ட மேகங்கள் (நாவல்) திறப்புரை – நவம்பர் 1999

நாம் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அரசியல் மேடைகளில் பலமுறை மார் தட்டிப் பேசுவதை நான் செவியுற்றிருக்கிறேன். அப்பொழுதெல் லாம் உண்மையிலேயே அவர்களுடைய வார்த்தைகளில் சத்தியம் உண்டா என்று நான் என்னையே கேட்டுக் கொள்வதுண்டு. 

அவர்கள் அவ்வாறு பிரயோகித்த சொற்கள் எல்லாம் பாமரமக்களின் வாக்குகளைப் பறிப்பதற்காக அன்றி வேறில்லை என்பதை பிற்காலத்தில் உணர்ந்து கொண்டேன் என்றாலும், அவ்வார்த்தைகளில் பொதிந்துள்ள சத்தியத்தை தோண்டிப் பார்க்க வேண்டும் என்ற உறுத்தல் என்னுள் கனன்று கொண்டி ருந்தது. 

அதற்குரிய சந்தர்ப்பம் அனுராதபுர மாவட்டத்திலேயே ஓர் ஐந்து வருட காலம் பல முஸ்லிம் கிராமங்களில் ஆசிரியனாகப் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததன் மூலம் நிறைவேறியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். 

பலநூறு வருடங்களாக, பல தலைமுறைகளாக அனுராத புர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் முஸ்லிம் கிராமவாசிகள் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த நாட்டின் வயல் வரப்புகளுக்கே தியாகம் செய்தவர்களாக, நவீன வாழ்க்கை வசதிகளின் வாடை கூட அறியாதவர்களாக, இந் நாட்டின் பொருளாதாரத்திற்கும், இனங்களிடையே இணக்கப் பாட்டிற்கும் தம்மை அறியாமலேயே அரியபணியாற்றி வரு கிறார்கள் என்பதை இனம் காணக்கூட யாரும் இல்லையே என்ற ஏக்கம் என்னுள்ளே எழுந்தது. 

தமது பூர்வீகம் என்ன, தமது மூதாதையினர் இந்த நாட்டுக்கு ந் நாட்டின் நிர்வாகத்திற்கு ஆற்றிய தொண்டென்ன, என்றறி யாத அம்மக்கள் பல நூறு வருடங்களுக்கு முன் தமது பரம்பரை யைச் சேர்ந்தவர்கள் சிங்கள மன்னர் பலரிடம் பெற்ற மரியாதை கள் விருதுகள் பற்றி அடிக்கடி உரையாடுவதை செவியுற்றேன். எனவேதான் அனுராதபுர மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம் களின் வரலாற்றுப் பின்னணியையும், விவசாய உணர்வையும், சமூகப் பிரச்சினைகளையும் அவர்கள் உணர்ந்து, தாமும் இந்நாட் டின் வரலாற்றுப் பரிணாமத்தின் கிளை ஊற்றுக்களாக பெரும் பணியாற்றிய ஒரு சமூகம்தான் என்பதை அவர்கள் உணரவேண் டும். இதுபோன்று இந்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் கிரா மங்களுக்குள்ளே தம்மை ஒன்றிணைத்துக் கொண்ட மற்ற முஸ் லிம் மக்களுக்கும் இப்படியான ஒரு உந்துதல் ஒரு விழிப்புணர்ச் சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இந்நாட்டின் ஏனைய இனங்களோடு இணங்கி வாழ்ந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு சமூக விழிப்புணர்ச்சிக்கு எமது பங்களிப்பும் தவிர்க்க முடியாதது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர்ந்து பணியாற்ற வேண் டிய பக்குவம் அடைய வேண்டும் என்ற ஆழமான நோக்கு என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியது. 

அத்தோடு, அம்மக்கள் தாம் உண்டு தம்தொழில் உண்டு என்ற உணர்வோடு தொழிற்பட்டு வருவதால் தமது விவசாயத் தேவைகளையும் அன்றாட சமூக வாழ்க்கைப் பிரச்சினைகளை யும் தனித்தனியாக அல்லது ஒரு சிறு குழுவாக நின்று வென் றெடுக்கப் போராடி இறுதியில் விரக்தியுற்றவர்களாக காலங் கழிப்பதையும் கண்ணுற்றேன். கல்வி அதன் மூலம் பெற்ற விரிவான சிந்தனை இரண்டும் இணைந்தால் ஆங்காங்கே விசிறிக் கிடக்கும் சக்திகளை ஒன்று திரட்டி பலம் வாய்ந்த இயக்கமாக எவ்வாறு செயல்படுவது, அது எவ்வளவு இன்றியமையாதது என்பதை அக்கிராமங்கள் துல்லியமாக உணர்ந்துகொள்ள வேண் டும் என்ற நோக்கமும் என்னை இப்படியான ஒரு படைப்பை படைக்கத் தூண்டியது. பெரும்பாலும் நாவல்களில் கதாபாத் திரங்கள் கற்பனையானவையே. எனது இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களில் சில கற்பனையானவை அல்ல என்பதை சொல்லியே ஆகவேண்டும். அனுராதபுர மாவட்டத்தில் நான் ஆசிரியனாகப் பணியாற்றிய காலத்தில் தனது சமூகம் பற்றி தன் பரம்பரை விவசாயம் பற்றி அக்கறையுடன், விழிப்புடன் காத் திரமான வகையில் என்னோடு பழகிய சில நல்ல நண்பர்களை நான் எனது கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளேன். இந்நாவல் அந்த நண்பர்களின் கரங்களில் எட்டி அது அவர்களுக்கு தமது செயல்பாடுகளுக்கு உறுதுணையாக அமையுமென்றால் அவர் களைப் போலவே பெருமிதம் அடைவதில் எனக்கும் பங்குண்டு. இப்படி ஒன்றை படைப்பதற்கு அந்த நண்பர்களும் ஒரு தூண்டு கோலாக இருந்துள்ளனர் என்று கூறியே ஆகவேண்டும். அந்தத் தூண்டுதல் காரணமாக நான் முதலில் செய்தது இதைத்தான். 

அனுராதபுர மாவட்ட முஸ்லிம் கிராமங்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு ‘கேள்விக்கொத்தை’ தயாரித்து கிராமிய நண்பர்களுக்கு அனுப்பியதில் பல தகவல்கள்கிடைக்கப் பெற்றேன். 

இந்நாவலில் துணை பாத்திரமாக வரும் முக்கிரவெவ கிராமத்தைச் சேர்ந்த நண்பர் எம்.சி.ஏ.கரீம் மாஸ்டர் அவ்வப் போது பல வரலாற்றுத் தகவல்களைத் தந்துள்ளார். இவர் மூலம் நான் பல கிராமங்களுக்கு நேரடியாகவும் விஜயம் செய்துள்ளேன். 

மிக பிற்பட்ட காலத்தில் -1992ல் இந்நாவலில் வரும் கதாநாயகன் ஹலீம்தீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட தேசிய மீலாத்விழா, அனுராதபுர மலரை அனுப்பிவைத்தார். அதைப்பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இருக்கவில்லை. ஏனெனில் எனது ஆய்வையும்,நான் சேகரித்த தகவல்களையும் உறுதிப்படுத்துவது போல் இம்மலரில் ஜனாப் ஏ.பி.எம்.ஹுசைன், அவர்களின் ஆய்வுக் கட்டுரை பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. அவை எனக்கு இந்த நாவலை வளர்த்துச்செல்ல மிக துணை நின்றன. 

எனவே இவ்வாய்வுக் கட்டுரையின் ஆசிரியரான ஜனாப் ஏ.பி.எம்.ஹுசைன் அவர்களுக்கு எனது விசேடமான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன். 

அடுத்து இதுவரைக்கும் நாவல் துறையில் கைவைத்திராத என்னை எவ்வாறு ஒரு நாவல் எழுத வேண்டும். அது எப்படி அமைந்தால் இரசனையாகவும் யதார்த்தமாகவும் இருக்கும் என்றெல்லாம் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தந்து என்னை நெறிப்படுத்திய மானசீக ஆசானான டாக்டர் நந்தி அவர்களை பெரும் நன்றியுணர்வோடு அடிக்கடி நினைவு கூறு கின்றேன். இதன் பின்னரும் எனது இலக்கிய முயற்சிகளில் நல்லுபதேசங்கள் தருவாரா என்று காத்திருக்கின்றேன். 

மற்றும், இந்நாவலுக்கு சிறப்பான முன்னுரை வழங்கிய பிரபல நாவலாசிரியர் செங்கை ஆழியான் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன். 

நீண்ட காலமாக எனது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கு விப்பு அளித்துவரும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும், இந்நாவல் வெளியாக பல வழிகளிலும் உதவிய 

நண்பர்கள் அல்ஹாஜ் எம்.எம். பரீத், திக்குவல்லை கமால், ஏ.ஏ.எம்.ஜெர்ராஹ், ஆகியோருக்கும் இந்நாவலை நான் எழுதி முடித்ததும் கையெழுத்துப் பிரதியில் முதன் முதலில் ஆழமாகப் படித்து மிக முக்கியமான திருத்தங்களைச் செய்த நண்பர் எம். எஸ்.எம்.மஹ்தூம் ஆசிரியர் அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள். 

இந்நூல் ஸ்ரீலங்கா தேசிய நூலக சேவைகள் சபையின் புத்தக வெளியீட்டு உதவித் திட்டத்தின் கீழ் வெளிவருகிறது. 

தேசிய நூலக சேவைகள் சபையினருக்கும் சிறந்த முறை யில் பதிப்பித்த அச்சகத்தினருக்கும் ஆழ்ந்த நன்றி. 

மானிலம் நலமுற மகத்தான
இலக்கியம் படைப்போம். 

131/9, தெமட்டகொட வீதி 
கொழும்பு-9 
இலங்கை. 
ப.ஆப்டீன் 

நிறுப்புரை – செங்கை ஆழியான், க.குணராசா – ஜூலை 1999

நாடறிந்த சிறுகதை எழுத்தாளர் ஆப்டீனின் முதல் நாவல் ‘கருக்கொண்ட மேகங்கள்” ஈழத்து நாவலிலக்கியத் திற்குப் புதியதொரு வரவாகும். புதியதொரு வரவென்று கூறுவ தற்குக் காரணமுள்ளது. ஏனெனில் கருக்கொண்ட மேகங்கள் ஈழத்தில் இதுவரை வெளிவந்த நாவல்கள் போன்று கதாம்சம் கொண்டதன்று. கதையினூடாகத் தான் எடுத்துக் கொண்ட சமூகச் செய்தியைக் கூறுவது ஆப்டீனின் குறிக்கோளாகவில்லை. சமூகச் செய்தியைக் கூறுவதற்கு நிகழ்வுகளைத் துணைக் கொண்டிருப்ப தாகப்படுகின்றது. அதனால் இது ஒரு புதியதொரு வடிவமாக வும், வரவேற்கக்கூடிய முயற்சியாகவும் இருக்கின்றது. இன ஒருமைப்பாட்டினை வலியுறுத்துகின்ற நாவல் என்ற வகையில் காலத்தின் தேவை கருதிய பணியாகவும் கருக்கொண்ட மேகங் கள் விளங்குகின்றது. 

அனுராதபுரத்தில் பண்டைய மன்னர் காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்கள் மேலைத்தேயத்தவரின் வருகையுடன் தம் பூர்வீகக் கிராமங்களை விட்டு விலகி காடு களின் மத்தியில் ஒதுக்காகத் தம் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். அனுராதபுர அரசர் காலத்தில் அரச சபையில் முஸ்லிம்களுக்கிருந்த முக்கியத்துவம் காலகதியில் இழக்கப்படுகின்றது. தாம் குடியேறிய காட்டுக்கிராமத்தைக் கழனிகளாக்கிக் கொள்கின்றனர். இனவாத அரசியல் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் நிலவிய நல்லுற வைச் சீரழிக்கின்றது. ஒருவரையொருவர் பகைமையுடன் பார்த் துக் கொள்கின்ற நிலை உருவாகின்றது. 1975 இற்குப் பின் பிறந்த இரு சமூகத்துப்பிள்ளைகள், கல்வியறிவில், முன்னேறிவருவ தால், இந்த இரு இனங்களுக்குமிடையில் நிலவி வரும் பகை மையை இல்லாதொழிக்க முயல்கின்றன. காட்டுக்குளம் ஒன் றின் உரிமையிலிருந்த பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கின்றனர். இரு இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதில் வெற்றியும் காண்கின்றனர். 

கருக்கொண்ட மேகங்களின் உள்ளடக்கம் இதுதான். இதனை விபரிப்பதற்கு ஆசிரியர் பழைய தலைமுறையையும் புதிய தலைமுறையையும் சேர்ந்த முரண் பாத்திரங்களை நாவ லில் உலவ விட்டிருக்கின்றார். அவர்களூடாகப் பண்டைய பெருமையும் உரிமையும் பேசப்படுகின்றது. கிரிபண்டா சிங் களக் கிராமியத் தலைவருக்கும் அப்துல் மஜீத் என்ற முஸ்லிம் கிராமியத் தலைவருக்கும் அவர்தம் முன்னோருக்கும் இடையில் நிலவிய குரோதம், அமரதாஸ என்ற சிங்கள இளைஞனாலும் ஹலீம்தீன் என்ற முஸ்லிம் இளைஞனிலும் அவர்களுடன் அணிசேர்கின்ற புதிய தலைமுறையினராலும் தீர்த்து வைக்கப் படுவதை நாவலாசிரியர் திறம்பட விபரித்திருக்கிறார். கல்வி யறிவு தரும் புரிந்துணர்வினைத் தத்ரூபமாக இந்த நாவல் விளக்குகின்றது. 

இந்த நாவல் ஊடாக ஆப்டீன் சொல்ல வரும் செய்தி மிக மிக வலுவானதாக எனக்குப்படுகின்றது. ஒருவகையில் அனுராத புரத்தின் பகைப்புலத்தில் இலங்கை முழுவதற்குமான செய் தியைக் குறியீடாகக் கூறியிருக்கிறார் என நினைக்கின்றேன். சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான 

குரோதத்திற்குக் காட்டுக்குளம் காரணமாக அமைகின்றது. வேட்டைக்காட்டின் நடுவில் அமைந்திருந்தும் பாழடைந்த காட்டுக்குளமும் அதன் முன் விரிந்து கிடக்கும் வளமான மண் வயல் பிரதேசங்களும் அவற்றினை முதலிற் கண்ட முஸ்லிம் களுக்குச் சொந்தமானதென பழைய தலைமுறை முஸ்லிம் களும், தம் கிராமங்களுக்கு அருகில் இருப்பதால் அப்பிரதேசம் தமக்கே உரிமையானதெனச் சிங்களப் பழைய தலைமுறை யினரும் குரல் எழுப்பி எவரும் அப்பிரதேசத்தில் குடியேறி பயன் பெற முடியாத நிலை உருவாகின்றது. பல்லாண்டுகள் கழிந்த நிலையில் இரு சமூகத்தினையும் சேர்ந்த புதிய தலைமுறையினர் ஒன்று சேர்ந்து காட்டுக்குளமும் அது சார்ந்த பிரதேசங்களும் இரு சமூகத்தினருக்குச் சொந்தமானவை என அறிவிக்கின்றன. சமா தானம் ஏற்படுகின்றது.’ ‘அவ்வாறாயின்” நிலவளவீடு செய்து சரிவரப் பங்கீடு செய்து தெளிவான எல்லைக் கற்களை நிறுவிக் கொள்வோம்” எனக்கிராம சேவகர் கூறுகிறார். அதுவும் நடை முறைப்படுத்தப்படுகின்றது. ஆப்டீன் இதனூடாக என்ன சொல்ல விரும்புகிறார்? அற்புதம், ஆப்டீன். இன்று இலங்கைத் தீவில் கொளுந்துவிட்டெரியும் நெருப்பினை அணைப்பதற்கு முற்போக்கு எண்ணங்கொண்ட, புரிந்துணர்வு கொண்ட புதிய இளந்தலைமுறை ஒன்றிணைய வேண்டும். அண்ணன் தம்பியாக விருந்தாலும் வளவுக்கான எல்லைக்கல் சரிவர இடப்படல் வேண்டும். இச் சமூகச் செய்தி சரிவர இந்த நாவலில் பொதிந் துள்ளது. 

1948 இல் இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. பேரினவாதக்கருத்துக்கள் அரசியலில் 1956 களில் வெளிப்படையாகத் தலை தூக்கத் தொட ங்கின. இடது சாரிகளும் பாராளுமன்றக் கதிரைகளில் நாட்டங் கொள்ளத் தொடங்கியமை பேரினவாதக் கருத்துக்களுக்கு என்றுமில்லாத முக்கியத்துவம் கொடுத்தன. அரசியல் கதிரை யைக் கைப்பற்ற உதவும் ஆயுதமாக இனவாதம் மாறியது. இந்த அரசியற் பிரச்சினைகளை நாவலாக்கியவர்களில் செ.கணேச லிங்கன் (செவ்வானம்) செ.யோகநாதன் (நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே), செங்கை ஆழியான் (தீம்தரி கிட தித்தோம், மரணங்கள் மலிந்த பூமி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வரிசையில் கருக்கொண்ட மேகங்கள் மூலம் ஆப்டீன் நுழைகின்றார். சிங்கள தமிழர் உறவு நிலைகளைச் சித்திரிக்கும் நாவல்களாக அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது, சாந்தனின் ஒட்டுமா, செங்கைஆழியானின் ஒரு மையவட்டங்கள் என்பன விளங்குகின்றன. அவ்வகையில் ஆப்டீனின் கருக்கொண்ட மேகங்கள் இரு இனங்களுக்கான ஐக்கியத்தினை வலியுறுத்தும் நாவலாக வெளிவந்துள்ளது. 

சிங்கள, தமிழர் உறவுநிலையில் இதுவரை வெளிவந்த நாவல்கள் திருமண பந்தத்தின் மூலம் உறவு நிலைப் பிணைப் பினை வலியுறுத்தி, அத்துடன் ஒவ்வொரு சமூகத்தினதும் புரிந் துணர்வும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் கருக் கொண்ட மேகங்கள் நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வரும்போதும் அறிமுகமாகும் போதும் சிங்கள இளைஞனான அமரதாஸவுக்கும் முஸ்லிம் பெண்ணான ஜெஸ்மினுக்கும் இதேபோல முஸ்லிம் இளைஞனான ஹலீம்தீனுக்கும் சிங்களப் பெண்ணான பியசீலிக்குமிடையில் காதல் விவகாரம் தோன்றப் போகின்றதென்ற எண்ணம் எழுகின்றது. இந்த நாவலில் இச் சிக்கல் ஏற்பட்டிருக்கில் இதனை விடுவிப்பதில் நாவலின் பெரும்பகுதி சென்றிருக்கும். உறவு நிலைப் பிணைப்பின் மூலந்தான் இரு இனங்களுக்குமிடையிலான பிணைப்பினையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்திவிடலாமென்பது தவறு. அவரவர்கள் தத்தமது பண்பாட்டினையும் இனத்தூய்மையையும் ஒழுக்க நெறிகளையும் பேணிக்கொண்டு ஐக்கியமாக வாழமுடியும் என்பதை ஆப்டீனின் இந்த நாவல் நிரூபிக்கின்றது. 

கருக்கொண்ட மேகங்கள் எடுத்துக்கொண்ட தளமும் உள்ளடக்கமும் கலைப்பண்பினைக் கொண்டதாக இந்த நாவலை வடித்தெடுக்க உதவவில்லை எனக்கருதுகின்றேன். யதார்த்தப்பண்பின் அடியாக இந்த நாவல் தனது வளர்ச்சியை முன்னெடுத்ததால் ஆவணப்பாங்கான விபரணங்கள் மேலோ ங்கி நிற்கின்றன. இவ்வகையில் து.வைத்திலிங்கம் எழுதிய ‘ஒரு திட்டம் மூடப்படுகின்றது’ என்ற நாவலைக் குறிப்பிட வேண் டும். பூநகரிப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அபிவிருத் தித்திட்டம் எவ்வாறு உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் ஆகிய யோரின் சுயநலநோக்கால் மூடப்படுகின்றது என்பதை அற்புத மாக இந்த நாவல் சித்திரிக்கின்றது. அதில் ஆவணப்படுத்தும் பாங்கு மிக்கு நின்றதால் திறனாய்வாளரின் கவனத்தினை அது கவரத்தவறிவிட்டது. இலக்கியம் என்று வரும் போது அதி லொரு தேடலும் கலையழகும் இருக்க வேண்டுமென்பது திறனாய்வாளரது கருத்து. உண்மையும் அதுதான். து.வைத்தி லிங்கத்தின் ‘ஒரு திட்டம் மூடப்படுகின்றது’ என்ற நாவலிலும் ஆப்டீனின் ‘கருக்கொண்ட மேகங்கள்’ என்ற நாவலிலும் தேடல் இருக்கின்றது. சமூகத்திற்குக் கதாசிரியன் எதைச் சொல்ல விரும்புகின்றான் என்ற செய்தியும் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற சமூகம் எப்படியிருக்க வேண்டுமென்று ஆதங்கம் இருக்கின்றது. ஒரு நாவலின் வெற்றி கருத்து வளத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. கலை வளத்திலும் தங்கியிருக்கின்றது. 

ஆப்டீனின் இந்த நாவலில் அனுராதபுரத்து முஸ்லிம் மக்கள் கைக்கொள்ளும் பேச்சு மொழி கையாளப்பட்டிருக் கின்றது. அது நாவலிற்குச் சிறப்பினைக் கொடுக்கின்றது. மக்களின் பண்பாட்டுக் கூறுகளும், நடத்தைகளும், நடவடிக்கை களும் துல்லியமாக விபரிக்கப்படுகின்றன. ஆப்டீனின் நுண் ணிய அவதானிப்புத்திறனை நாவலெங்கும் காணலாம். 

கருக்கொண்ட மேகங்கள் ஈழத்து நாவலிலக்கியத்திற்குப் புதியதொரு வரவு என மீண்டும் வலியுறுத்துகின்றேன். 

செங்கை ஆழியான் க.குணராசா 
பதிவாளர்,
யாழ்.பல்கலைக்கழகம் 
யாழ்ப்பாணம்
25.7.1999 

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *