செங்கை ஆழியான்

செங்கை_ஆழியான்
 

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்

இவருடைய ஆக்கங்கள்

தொடர் கதை

ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த ‘கிடுகு வேலி’ என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம்

இவர் எழுதிய ‘வாடைக் காற்று’ புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.

புதினங்கள் மற்றும் குறும் புதினங்கள்

  • நந்திக்கடல்
  • சித்திரா பௌர்ணமி
  • ஆச்சி பயணம் போகிறாள்
  • முற்றத்து ஒற்றைப் பனை
  • வாடைக்காற்று
  • காட்டாறு
  • இரவின் முடிவு
  • ஜன்ம பூமி
  • கந்தவேள் கோட்டம்
  • கடற்கோட்டை

சிறுவர் புதினங்கள்

வரலாற்று நூல்கள்

  • யாழ்ப்பாண அரச பரம்பரை
  • நல்லை நகர் நூல்
  • 24 மணிநேரம்
  • மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்

ஆய்வு நூல்கள்

  • ஈழத்துச் சிறுகதை வரலாறு

தொகுப்புக்கள்

  • மல்லிகைச் சிறுகதைகள் – 1
  • மல்லிகைச் சிறுகதைகள் – 2
  • சுதந்திரன் சிறுகதைகள்
  • மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
  • ஈழகேசரிச் சிறுகதைகள்
  • முனியப்பதாசன் கதைகள்
  • ஆயிரமாயிரம் ஆண்டுகள்

புவியியல்

  • அடிப்படைப் புவியியல் உலகம் இலங்கை
  • இலங்கைப் புவியியல்

பிற

  • நல்லை நகர் நூல்
  • ஈழத்தவர் வரலாறு

முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் – மாசி 2010

ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் 1950 தொட்டு 1960 வரை யிலான காலகட்டத்தை முற்போக்குக் காலமென வகுத்துக் கொள்ளலாம். எனது ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் அ. சண்முகதாஸ். ‘முற்போக்குக் காலம் 1950 – 1960 என அமைக்கும் காலப்பகுப்பு பொருத்தமோ வென ஆராய வேண்டியுள்ளது’ என ஐயம் எழுப்பியுள்ளார். நியாயமான ஐயப்பாடு. ஈழத்துப் படைப்பாளிகள் அனைவரும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காக தமது பேனாக்களை முன் னெடுக்க முன்வந்த காலம் இதுவாகும். ஈழத்தமிழ் சமூகத்தின் விடிவை நோக்கி, அதாவது சமூகப்பிரச்சினைகளான வறுமை, சாதிய அடக்குமுறை, சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவோ, இனவொடுக்கலுக்கு எதிராகவோ மக்களைச் சமூகப் புரட்சிக்கு ஒன்றிணைக்கின்ற பணியை இக்காலகட்டத்துப் படைப்பாளிகள் முன்னெடுத்துள்ளனர். இதனைத்தான் பேராசிரியர் கா. சிவத்தம்பி, ‘இந்நூற்றாண்டில் நின்று கொண்டு பின்னோக்கிப் பார்க்கும் போது, ஈழத்தமிழ் நவீன வளர்ச்சியில் முற்போக்கு வாதம் குறிப் பாக 1950 களின் பின்னர் முக்கியமான ஓரிடத்தைப் பெறுகின்றது என்பது பற்றி கருத்தொருமைப்பாடே உண்டு’ என்கிறார். படைப் பிலக்கியத்தில் முற்போக்குக் காலகட்டத்தை பத்தாண்டுகளுள் அடக்கிவிட முடியாது. ஆனால் ஆய்வு நோக்குக்காக அவ்வாறு வகுத்துக்கொள்வது அவசியமாகின்றது. முற்போக்குக் காலம் இன்றும் தொடர்ந்து இயங்கிவருகின்றதென்பது மறுக்க முடியாது. ஆனால் 1960 களில் ஈழத்தில் நவீன இலக்கியத்தில் தோன்றிய ஒரு புதிய மாற்றத்தை அல்லது மேலோங்கி நிற்கின்ற பண்பை அதாவது புத்தெழுச்சியைக் குறிப்பதற்கு முற்போக்குக் கால கட்டத்தை 1960 களுக்குள் அடக்கிவிடுவது அவசியமாகின்றது. 

இரு பேராசிரியர்களின் (கைலாசபதியும் சிவத்தம்பியும்) இலக்கியப்பிரவேசம் முன்னைய சமுதாய சீர்திருத்தக்கால படைப்பிலக்கியத்தை முற்போக்கு இலக்கியப்பாதைக்கு எடுத்துச் சென்றது. நவீன இலக்கியத்துக்கான இலக்கண எல்லைகள் அவர்களால் வகுக்கப்பட்டன. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், யதார்த்த இலக்கியம், மார்க்சிய யதார்த்த இலக்கியம் என்பன போன்ற செல்நெறி வரம்புகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதனால் முற்போக்குக் காலகட்டத்து எழுத்துக்கள் சுதந்திர இலங்கையின் படைப்புகளாக மாறின. காந்தியம், பெரியாரியம் என்ற கருத் தியல்புகளோடு, மார்க்சியம் முதன்மை பெற்று இலக்கியச் செல் நெறியில் பெரும் தாக்க விளைவுகளை ஏற்படுத்தின. இலவசக் கல்வி சகலருக்கும் கிடைத்ததால் அந்த வாய்ப்பினைத் தவற விட்டிருந்த அடிமட்ட மக்களிடையே விழிப்பும், தாம் சமூக மட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்டிருப்பதன் மெய்மையையும் உணர வைத்தது. சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போர்க் குரலாக அக் காலகட்டத்து எழுத்துக்கள் எழுந்தன. 

முற்போக்குக் காலகட்டத்தில் இலக்கியம் பற்றிய சிந்தனைப் போக்கு வரையறுக்கப்பட்ட இலக்கணத் தெளிவு கொண்டதாக விளங்கியதை மறுக்க முடியாது. முன்னோடிச் சிறுகதை ஆசிரியர் கள் காலத்தில் (1930 – 1949) புனைகதை எழுதியவர்கள் பலரும் ‘இலக்கியம் இலக்கியத்துக்காக’, ‘இலக்கியம் பொழுது போக்கிற் காக’ என்ற எண்ணக்கருக்களைக் கொண்டிருந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் அவர்களது எழுத்துக்களில் பொழுது போக்கு அம்சங்கள் மிகுதியாகவும், மனோரம்மியக்கற்பனைகள் கொண்ட தாகவும் விளங்கின. எனினும் அவர்கள் இலக்கியம் மக்களுக்காக என்பதிலும், இலக்கியம் தாம் வாழும் மண் சார்ந்த வாழ்வையும், பிரச்சினைகளையும் பிரதிபலிக்க வேண்டுமென்பதில் அக்கறை யில்லாதிருந்தார்கள் எனக் கூட்டு மொத்தமாக ஒதுக்கிவிட முடி யாது. முற்போக்குக் காலகட்டத்தில் எழுத்தாளர்களிடையே தெளி வான இலக்கிய நோக்கு இருந்தது. கைலாசபதி, சிவத்தம்பி, வித்தியானந்தன், பொன்னுத்துரை, கனகசெந்திநாதன் போன் றோர் அணிகளாகப் பிரிந்து நின்றாலும் புனைகதை இலக்கியம் பற்றிய பொது நோக்கில் அவ்வளவு தூரம் கருத்தியல் வேறுபாடு களைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகின்றது. 

1. இலக்கியம் மக்களுக்கானது மக்களின் விடிவிற்கும் விடுதலைக்குமானது. 

2. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் துயரங்களை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும். சுரண்டலையும் சமூக அடக்கு முறைகளையும் ஒழித்து, ஓர் உன்னதமான ஏற்றத் தாழ்வற்ற சமூகக் கட்டமைப்பை இலக்கியம் உருவாக்க வேண்டும். 

3. சாதியக்கொடுமை, வறுமை, இனவொடுக்கு முறை, வாழ்க்கை உரிமைகளை மறுப்பது, சீதனக்கொடுமை, பெண்ணடிமைத் தனம் முதலான சமூக அநீதிகளுக்கு எதிராக நவீன இலக்கிய வடிவங்கள் முற்போக்காக வீறு கொண்டுழைக்க வேண்டும்.

4. படைப்புக்கள் வெறும் கருத்து வளம் கொண்டனவாக இருக்காமல் கலை வளம் கொண்டனவாக அமைதல் வேண்டும். இலக்கியத்தில் கலையழகும் தேடலும் இருக்க வேண்டும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக நவீன இலக்கியங்கள் யதார்த்தப் பண்பு கொண்டனவாகவும், மண்வாசனையைப் பிரதி பலிப்பனவாகவும், தேசிய இலக்கியமாகவும், ஈழத்துத் தமிழ் இலக்கியமாகவும் அமைதல் வேண்டும். 

மேற்குறித்த பண்புகள் முற்போக்குக் காலகட்டத்து ஈழத்தின் அனைத்து அணிகளிலுமுள்ள எழுத்தாளர்களினாலும் தம் படைப்பு களில் பலத்தோடோ, பலவீனத்தோடோ முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு அவையே இக்காலகட்டத்து ஈழத்துப் புனைகதை இலக்கியத்தின் பொதுச்சுட்டிகளாகவும் மாறிவிட்டன. 

முற்போக்குக் காலகட்ட இலக்கியக் கருத்தியல்புகள் 

முற்போக்குக் காலகட்டத்து இலக்கியப் போக்கையும், படைப்பாளிகளையும் படைப்புக்களையும் எடுத்து நோக்கும் போது நான்கு இலக்கியக் கருத்தியல் நிலைகள் காணப்பட்டன. 

அவை: 

1. மரபு வாதம் : 1950 களில் ஈழத்து இலக்கிய கர்த்தாக் களிடையே இலக்கிய மரபு சம்பந்தமான வாதங்கள் எழுந் தன. ஈழத்துப் புனைகதைகள் யதார்த்தமாகவும் மண் வாசனையோடும் அமையத் தொடங்கியதால் மக்களின் பேச்சு வழக்கு இலக்கிய மரபை மீறி வரத் தொடங்கின. அதனைத் தமிழ்ப்பண்டிதர்கள், கற்ற மரபு வாதிகள் ஏற்கத் தயாராகவில்லை. மரபு மீறப்படலாகாது என்றனர். அதனை எதிர்த்து ஒரு சாரர் மரபு தெரிந்து மீறப்படலாம் என்றனர். இன்னொருசாரார் மரபை மீறலாம் என்றனர். பேச்சு வழக்கு இழிசனர் வழக்கு என்றும் இழிசினர் வழக்கு என்றும் விளக்கந் தந்து, சாகித்ய மண்டல கூழ் முட்டையெறியில் வந்து நின்றது.  

2. மார்க்சிய முற்போக்கு வாதம் : முற்போக்குக் காலகட்டத் தில் முதன்மை பெற்ற வலுவான ஒரு சக்தியாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விளங்கியது. இது முற்றாக மார்க்சியக் கோட்பாடுகளைத் தன் இலக்கியக் கருத்திய லாகக் கொண்டது. புனைகதைத்துறையையும் மார்க்சியக் கோட்பாடுகளின் பிரச்சாரத் தளமாகக் கொண்டன. ‘மார்க்சிய முற்போக்கு இலக்கியத்தின் முக்கிய இலக்கியக் கோஷமாக அமைந்தது ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் கோட்பாடே யாகும். ஈழத்தின் தமிழ் இலக்கியம் தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தின் பிரதியாக அமையாது, ஈழத்தின் மண் வாசனையைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது’ எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டார். இந்த அணியில் எஸ். பொன்னுத்துரை, செ.கணேசலிங்கம், என். கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக் ஜீவா, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், சோமகாந்தன், அ.ந. கந்தசாமி, அகஸ்தியர் முதலானோர் ஆரம்பத்தில் விளங்கினர். 

3. எதிர்க்கருத்து வாதம் : இலங்கையில் முற்போக்குவாதம் பேசியவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துவாதம் இலக் கியத்தில் இடம் பெற்றமைக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பிலிருந்து விலகியவர்களும், பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் தலைமைத்துவத்தை விரும்பாதவர்களும், தமிழ்த் தேசிய வாதத்தால் கவரப் பட்டவர்களும் காரணமாயினர். சிற்பி சரவணபவன், கனக செந்திநாதன், செம்பியன் செல்வன், எஸ். பொன்னுத்துரை, வ.அ. இராசரெத்தினம், மு. தளையசிங்கம் முதலானோர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கும் அவர்கள் தெரி வித்த மார்க்சியவாத முற்போக்கு இலக்கியக் கருத்துக் களுக்கும் எதிராக கண்டனம் தெரிவித்தனர். இவர்கள் மார்க்சியத்துக்கோ முற்போக்குக்கோ எதிரானவர்களல்லர். ஆனால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேராத எழுத்தாளர்களின் முற்போக்குப் படைப்புகள் அறவே நிராகரிக்கப்பட்டன. அப்படி ஒரு தேவை இருந்த தெனப் பின்னாளில் ஒரு பேராசிரியர் ஏற்றுக்கொண்டார். முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் தொடர்ந்து தொண்டனாக இருக்க விரும்பாத எஸ். பொன்னுத்துரை, நற்போக்கு இலக்கியம் என்றொரு கருத்தியல் நிலையை முன் வைத்தார். இவர்கள் இலக்கியத்தில் அழகியலை முன் வைத்தனர். இலக்கியத்தில் உள்ளடக்கத்தோடு கலையழகும் முதன்மை பெற வேண்டும் என்றனர். 

4. தமிழ்த்தேசிய வாதம் : 1956 ஆம் ஆண்டுத் தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களிடையே ஒரு பெரும் ஆவேசத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி இலக்கியத்திலும் எதிரொலித்தது. அவை தேசிய இலக்கியத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் இனவாதக் கதைகள் என மார்க்சிய விமர்சகர்கள் பாராது விட்டனர். பேரினவாதத்தைக் கண்டிக்கும் படைப்புகள் ஏளனப்படுத்தப்பட்டன. இன்று தமிழ்த் தேசிய வாதமாக வளர்ந்துவிட்டது. இலக்கியத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. 

மரபு வாதம் பேசியோரைத் தவிர ஏனைய மூன்று வாத அணியினரும் மக்களுக்கான இலக்கியமே படைத்தனர். அது ஈழத்தமிழிலக்கியமாகவே விளங்கியது. மானிட விடிவுக்காகவும் விடுதலைக்குமானதாகவே இருந்தது. இந்த மண்ணையும் மக்களை யும் தம் படைப்புக்களின் குவி மையமாகக் கொண்டனர். ஆனால் அவரவர் வரித்துக் கொண்ட கருத்து நிலைகளில் சமூக மேம்பாட்டை நோக்கினர். ஆரம்ப கால முற்போக்குப் படைப்புகளில் சாதியும் வறுமையும் சமூகமும் முதன்மைபெறும் உள்ளடக்கமாக இருந்தன. பின்னர் மொழியும் இனமும் முதன்மை பெறத் தொடங்கின. இன்று மண்ணும் மக்களும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுவிட்டன. சாதியத்தாலும் இனத்தாலும் அடக்கி யொடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்கான குரலாக இலக்கியம் அமைய வேண்டிதாகிவிட்டது. 

முற்போக்குக் காலகட்டத்தின் இலக்கியப் படைப்புக்களை முன்னெடுத்துச் சென்ற பத்திரிகைகளாக சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழகேசரி, ஈழநாடு, புதினம் ஆகியவையும், சஞ்சிகை களாக கலைச்செல்வி, மரகதம், விவேகி, இளம்பிறை, வசந்தம் என்பனவும் விளங்கின. அவற்றோடு சரஸ்வதி, சாந்தி, தாமரை முதலான தென்னிந்தியச் சஞ்சிகைளும் தக்க பணி ஆற்றியுள்ளன. இன்றைய முன்னோடி முற்போக்குப் படைப்பாளிகளை உரு வாக்கியதில் சுதந்திரனின் பங்கும் ஈழகேசரியின் பங்கும் அதிகம், இளம் முற்போக்குப் படைப்பாளிகளை உருவாக்கியதில் கலைச் செல்வியின் பணி அதிகம். 

முற்போக்குக் காலகட்டத்துப் படைப்பாளிகள் யார்?

ஈழத்தின் புனைகதை இலக்கியத்தில் ‘முன்னோடிப் படைப் பாளிகள்’ என 25 எழுத்தாளர்கள் என்னால் அடையாளம் காணப்பட்டனர். சுயா, சோ. சிவபாதசுந்தரம், ஆனந்தன், பாணன், சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், பவன், சி.வி.வேலுப்பிள்ளை, அ.செ.முருகானந்தன், சோ. தியாகராஜன், நவாலியூர் நடராஜன், வரதர், அ.ந. கந்தசாமி, கனக செந்திநாதன், சு.வே. நவாற்குழியூர் நடராஜன், இராஜ அரியரெத்தினம், கே. கணேஸ், கசின், சொக்கன், அழகு சுப்பிரமணியம், சு.இராஜ நாயகன், தாழையடி சபாரத்தினம், கு.பெரியதம்பி என்போரே ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகளாவர். அவர்களின் சிறுகதை கள் தொகுக்கப்பட்டு பூபாலசிங்கம் புத்தகசாலையினரால் ஒரு தொகுதியாக 2001 இல் வெளியிடப்பட்டது. இன்று முற்போக்குக் காலகட்டச் சிறுகதைகள் தொகுப்பாக வெளிவருகின்றது. 

இக்காலகட்டத்தில் வெளிவந்த சிறுகதைகள் இரண்டு தெளி வான செல்நெறிகளைக் கொண்டமைந்தன. மார்க்சியச் சித்தாந்தங் களின் சுவர்களுள் தமது சிந்தனைகளை அடக்கிக் கொண்ட படைப் பாளிகளாக எஸ். பொ., டானியல், டொமினிக் ஜீவா, ரகுநாதன், அ.ந. கந்தசாமி, பிரேம்ஜி, கணேஸ், அகஸ்தியர், நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கன் முதலானோர் அமைந்தனர். சித்தாந்தச் சிறைக்குள் தம்மை அடக்கிக் கொள்ளாது மனித குல மேன்மைக்காகவும் தமிழ்த்தேசிய நலனுக்காகவும் ஆக்கவிலக் கியத்தைப் பயன்படுத்துகின்ற சுதந்திர எழுத்தாளர்களாக வரதர், இராசநாயகன், பித்தன், அ.முத்துலிங்கம், சு.வே., சொக்கன், கனகசெந்திநாதன், குறமகள், பத்மா சோமகாந்தன், சோமகாந்தன், நந்தி, புதுமைலோலன், அன்புமணி, சிற்பி, தளையசிங்கம், பவானி, நாவேந்தன், உதயணன் என்றொரு பரந்த கூட்டம் அமைந்தது. இவர்களது சிந்தனைகளை எதுவும் எவரும் கட்டுப்படுத்தவில்லை. இதில் என்ன இலக்கியத் தவறென்றால் முற்போக்கு இலக்கியம் என்பது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த படைப் பாளிகள் ஆக்கியவை மட்டுந்தான் என்ற எண்ணம் இதுவரை இருக்கின்றது. அவ்வாறன்று. முற்போக்குக் கால கட்டத்துக்குள் படைப்பிலக்கியத்தில் தரமாக எழுதிய அனைத்துப் படைப்பாளி களையும் அது குறிக்கும். சாதியத்தையும் வர்க்கியத்தையும் பற்றிச் சிந்தித்தவர்கள் மட்டும் தாம் முற்போக்கான சிந்தனையாளர்கள் என்று அர்த்தமில்லை. மனித குல அடக்கு முறைகள், மனுக்குலத்தைப் பாதிக்கும் சமூகப்பிரச்சினைகள் என்பன பற்றிச்சிந்தித்து புனைகதை படைத்தவர்களும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் தாம். அதனால் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகளை வேலியிட்டு அடக்கிக் கொள்ளும் குறுகிய நோக்கு எனக்கில்லை. ஒரு கைவிரல்கள் எண்ணிக்கையில் பட்டியலிட்டு இவர்கள் தாம் முற்போக்காளர்கள் என்றால் மற்றைய வர்கள் என்ன பிற்போக்காளர்களா? இலக்கியத்துக்காகப் பேனை யைத் திறந்தவன் எவனும் பிற்போக்காளனாக இருக்க முடியாது. 

முற்போக்குக்காலப் படைப்பாளிகள்

முற்போக்குக் கால கட்டத்தின் குறிப்பிடத்தக்க படைப் பாளிகளில் பின்வருவோர் அடங்குவர்: வரதர், வ.அ.இராசரத்தினம், கனக செந்திநாதன், சொக்கன், எஸ். பொன்னுத்துரை, சு.வே., பித்தன், என்.கே.ரகுநாதன், புதுமைலோலன், கே. டானியல், செ.கணேசலிங்கம், சு.இராசநாயகன், டொமினிக் ஜீவா, வாழ்வு, தேவன்- யாழ்ப்பாணம், எஸ்.அகஸ்தியர், என். எஸ். எம். ரமையா, சோமகாந்தன், அன்புமணி, சிற்பி, குறமகள், அ.முத்துலிங்கம், அருள் செல்வநாயகம், மு.தளையசிங்கம், பத்மா சோமகாந்தன், பவானி ஆழ்வாப்பிள்ளை, நீர்வை பொன்னையன், உதயணன், நவம், பொ. தம்பிராசன், செந்தூரன், இ.நாகராஜன், நந்தி, கே.வி.நடராஜன், எஸ்.எஸ்.எம்.ஹனிபா, பிரேம்ஜி, சசி. பாரதி சபாரத்தினம், அ.ஸ.அப்துஸமது, சில்லையூர் செல்வராசன், எஸ்.எல்.சவுந்தர நாயகம், ஆரையம்பதி தங்கராசா, கச்சாயில் இரத்தினம் முதலான 42 எழுத்தாளர்கள் இனங் காணப்பட்டனர். இவர்களோடு த. ரஃபேல், ஆ.பொன்னுத்துரை, ஏ.வி.பி.கோமஸ், ம.த.லோறன்ஸ் முதலானோரும் அடங்குவர். 

‘முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள்’ என்ற இத் தொகுதியையும் பூபாலசிங்கம் புத்தகசாலையினரே வெளியிடு கின்றனர். முன்னோடிச் சிறுகதைகள் என்ற தொகுதியை வெளி யிட்டதன் மூலம் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் மறைக்கப்பட் டிருந்த பல முன்னோடிகளை இலக்கியவுலகு அறிய வைத்தனர். முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் என்ற இத்தொகுதி மூலம் இதுவரை இலக்கிய வரலாற்றில் நிலவிய மாயையை அகற்றுகின்ற பணியைச் செய்கின்றனர். இத்தொகுதியை வெளியிடும் பூ. ஸ்ரீதரசிங் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். 

கலாநிதி செங்கை ஆழியான் க.குணராசா
75/10A, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *