அப்புசாமியின் தாலி பாக்யம்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,131 
 

அப்புசாமிக்குக் கை துறுதுறுத்தது – அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது மறியல், பொறியல் செய்ய அவ்வப்போது துடிக்குமே அதுபோல.

ஆனால் துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. காரணம் அவர் துடைக்க நினைத்து ஓர் இளம் அழகிய பெண்மணியின் கண்ணீரை அதுவும் சீதாப்பாட்டியின் எதிரில் நடக்கிற காரியமா? (அப்புசாமியின் கணக்குப்படி ‘இளம்’ என்பது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து அகவைக்குட்பட்ட பருவத்தினர்,)

வந்த பெண்மணியின் பெயர் மிஸ் துளசி. நிறமும் நல்ல சி(வப்பு). கட்டவுட்டான சரீரம். பெட்டியிலே வந்து இறங்கிய பெரிய சைஸ் பெங்களூர்த் தக்காளி போலக் கன்னம். கழுத்துக்குக் கீழே சாண்டில்ய அழகுகளின் சண்டப் பிரசண்டம். ஆனால் அழகியின் கண்களிலே நீர்! புகையிலை தடவிய கார்க் கண்ணாடியில் தயங்கித் தயங்கித் நீர் வழுக்குவது போல ஸ்லோ மோஷனில் நீர் வழியப் பார்த்தது.

ஓர் அழகிய பெண்மணி – அதுவும் திருமணமாகாத கட்டிளம் – அல்லது கட்டமுடியாத இளம், பெண்மணி கண் கலங்கலாமா?

சீதாப்பாட்டி மட்டுமே அழகிக்கு ஓரடி தூரத்தில் அமர்ந்திராவிட்டால் அப்புசாமி, அழகி துளசியின் கண்ணை மட்டுமல்ல, மூக்கைக் கூட அரண்மனைக் கிளி ராஜ்கிரண் பாணியில் அன்பாகத் துடைத்து விட்டிருப்பார்.

துளசியின் ‘பம்’மென்ற ஸமூசாக் கன்னங்களை, அப்புசாமியால் கவனிக்காமலிருக்க முடியவில்லை. ஸமூசாவின் மீது அபிஷேகிக்கப்பட்ட தக்காளி ஸாஸ் மாதிரி உதட்டுச் சாயம்.

சீதாப்பாட்டி, சிந்தனை முகத்தில் தேக்கியவாறு மிஸ் துளசியின் ரிப்போர்ட்டுக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“மேடம்ஜி, அபவாதம்! அபவாதம்! அபவாதம்!” மிஸ் துளசி விக்கினாள்.

சீதாப்பாட்டி துன்பத் துளசியை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

அப்புசாமி வாஷ் பேஸினருகே ஷேவ் எடுத்துக் கொள்பவர் போல் கடைக் காதால் மனைவிக்கும், ‘துளசிக்கும் நடக்கும் உரையாடலை உன்னிப்பாகக் கேட்டவாறிருந்தார்.

“மேடம், ‘என் தோழி எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டியதுகூட எனக்குப் பொருட்டில்லை. பொறாமையால் தாலியைத் திருடியதாகக் கூறுகிறாளே. அதைத்தான் பொறுக்க முடியவில்லை. எங்கள் சினேகம், இன்று நேற்றா? எத்தனை வருஷகாலமாக நாங்கள் ஆருயிர்த் தோழிகள்? எந்தப் பாவிகளின் கண் பட்டதோ? நானும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். தோழி மாதிரி ஒரு ஜட்ஜ் மனைவி என்ற அந்தஸ்து இல்லாமலிருக்கலாம். ஆனால் என் தாத்தா வக்கீலாயிருந்தபோது இவள் அப்பா அவரிடம் வக்கீல் குமாஸ்தாவாக இருந்து

அப்புறம் அவர் கருணையால் லா கிராஜுவேட் ஆகி ஜட்ஜ் பதவிக்கு வந்தார் என்பதையெல்லாம் மறந்துவிட்டாள். விக்! விக்! விக்!”

“யு லீவ் த என்ட்டயர் திங் டு மீ…காட் இஸ் கிரேட்! புரிகிறதா? உங்கள் உயிர்த் தோழிக்கு உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகம் நீங்கி, உங்கள் ·ப்ரண்ட்ஷிப் பழையபடி நீடிக்க என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன் இட் வில் டேக்ஸம் டைம்… உங்கள் மீது குற்றம் சாட்டி விட்டாளே என்பதற்காக அவளுடன் உறவைக் கத்தரித்துக் கொண்டுவிடாதீர்கள்!”

“ஐயோ அப்படி நினைத்தாலும் என்னால் முடியாது. அவள் என் உயிர். நான் அவள் உயிர்” கேவினாள். “நேற்றுக்கூட என் தலைவலிக்குத் தைலம் தடவி விட்டாள்-இத்தனை சண்டையிலும்.”

அப்புசாமி, “நீங்களும் உசிரு. அவளும் உசிருன்னா உடம்பு யாரு? ஹி ஹி!” என்றார்.

சீதாப்பாட்டி அப்புசாமி மீது ஒரு ஸ்கட் ஏவுகணை பார்வையை ஏவியதும் நைஸாக அடுத்த அறைக்கு நழுவினார்.

“சீதாஜி, நீங்கள்தான் எங்கள் நட்பு பழையபடி இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும்!” கைக்குட்டையால் அகல முகத்தைத் துடைத்துக் கொண்டே காரில் ஏறிப் புறப்பட்டாள்.

மிஸ் துளசியும், ஜட்ஜ் சம்சாரம் சுப்ரபா சுலைமானும் நெருங்ங்ங்ங்கிய சினேகிதிகள் என்பதை ஊரே அறியும். பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தில் சமீபத்தில் சேர்ந்த வி.ஐ.பி. சுப்ரபா சுலைமான்.

சீதாப்பாட்டியின் மதிப்புக்குரிய ஒரு சில உறுப்பினர்களில் சுப்ரபா சுலைமான் ஒருத்தி. சேர்ந்து கொஞ்ச நாளாயிருந்தாலும் கணிசமான ஒரு தொகையைக் கொடுத்து, பா.மு.கழக ஆடிட்டோரியத்துக்கு மயிலாப்பூரில் ஒரு கிரவுண்ட் வாங்கிப் போட உதவி செய்தவள்.

அதைவிட, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கும் அம்மையார் கழகத்தில் உறுப்பினராயிருப்பதில் சீதாப்பாட்டிக்குப் பெருமிதம். “இந்திய அரசின் மதச்சார்பின்மைக் கொள்கையை எங்கள் கழகம் கடைப் பிடிக்கிறதாக்கும், மதச்சார்பற்ற கொள்கையை பா.மு.க. அனுசரிக்றது என்பதற்கு எங்கள் உறுப்பினர் சுப்ரபா சுலைமான் ஒரு நடமாடும் உதாரணமாக்கும்” என்றெல்லாம் சீதாப்பாட்டி சொல்வாள்.

ஜட்ஜ் சுலைமான் ஓய்வு பெற்று ஒன்பது வருஷ மாயிற்று. ஆனாலும் ‘ஜட்ஜ் மனைவி’ என்ற பெயருக்கு ரிட்டயர்மெண்ட் கிடையாது.

மிஸ் துளசியும், சுப்ரபாவும் அண்ணாமலை படத்து ரஜினியும் சரத்பாபுவும் மாதிரி சின்ன வயதிலிருந்தே சினேகிதிகள்.

இரண்டு பேருமே ஜப்பானிய மல்யுத்த வீரர்கள் மாதிரி ‘கிண்’ என்று தோற்றம் தருபவர்கள். சுப்ரபா சுலைமான் ஐஸ்க்ரீம் ப்ரியை. ஸ்வீட்தான் இஷ்ட தெய்வம். பாதம் அல்வாவும், பிஸ்தா கேக்கும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளுவதில் ஆர்வமுடையவள். தோழிக்குச் சற்றும் சளைக்காமல் துளசியும் சாப்பாட்டில் கம்பெனி கொடுப்பாள். மாருதி ஆம்னியின் பின் ஸீட்டில் இரண்டு பேருமே உட்கார்ந்தாயிற்று என்றால் ஒரு பேப்பர்கூட அங்கே செருக முடியாது.

நகமும் சதையும் போல, கட்சிகளும் சின்னங்களும், வேட்பாளர்களும் சாதிகளும், பாபர் மசூதியும் அயோத்தியும் போல–

இரண்டு தோழிகளுக்கும் நெருக்கமோ நெருக்கம். அப்படி இருந்த நெருக்கத்தில் ‘படார்’ என்று ஒரு முறிவு.

வெளி உலகத்துக்கு இந்த முறிவு இன்னும் தெரியாது. சங்கதி தெரிந்திருந்தால் முழுப்பக்கச் செய்தியாகப் போட்டிருப்பார்கள்.

சுப்ரபா முஸ்லீம் கணவரை மணந்திருந்தாலும், தன் சாதி சம்பிரதாயப்படி தாலி அணிந்திருப்பார் கணவர் ஐந்து வேளை தொழுகை செய்வார். சுப்ரபா மேல் மருவத்தூர் கோவிலுக்குத் தவறாமல் போய் அடிகளாரின் ஆசி பெற்று வருவார். தாம்பத்தியம் வேறு, மத சுதந்திரம் வேறு என்ற பரந்த கொள்கை கொண்ட கலப்புத் திருமணம் அவர்களுடையது.

மிஸ் துளசிக்கு சைதாப்பேட்டையில் பெரிய வசதியான பங்களா இருந்தாலும் திருமணமாகாத நிலையில் அங்கே தனியாக இருக்க விரும்பவில்லை. சுப்ரபாவும் தோழி தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பினாள். தனது வசதியான பங்களாவின் மூன்றாம் மாடியைத் துளசிக்கென்று ஒதுக்கி விட்டாள்.

மிஸ் துளசி ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அல்லது அவள் திருமணம் ஏன் தள்ளித் தள்ளிப் போயிற்று என்பதெல்லாம் நமக்கு வேண்டாத விவகாரம். வயசும் நாற்பது தாண்டிவிட்டதால் திருமண ஆசை மிஸ் துளசியின் மனத்தில் மிஸ்ஸாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் கொஞ்ச நாளாகத் தோழிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படலாயிற்று.

திடீரெண்டு ஒருநாள் வெள்ளிக்கிழமை, பத்து மணி பத்து நிமிஷத்துக்கு சுப்ரபா பரபரப்பபுடன், “துளசி! துளசி! துளசி!” என்று குளித்து முடித்துக் கட்டின டவலுடன் அரைகுறைக் குளியலோடு அவசரமாகக் அவசரமாகக் கரையேறிய ஹிப்போ மாதிரி அவளிடம் மூச்சிரைக்க வந்தாள். “என் தாலியைப் பார்த்தியா?”

“தாலியா?”

“ஆமாம் தாலி, என் தாலியைக் கேட்கிறேன். உனக்குத்தான் தாலியே இல்லையே. உன் தாலியையா கேட்கிறேன். என் தாலியை!”

“என்ன சுப்பு, இவ்வளவு காரமாகப் பேசறே! உனக்கு என்ன ஆச்சு?”

“எனக்கு என்ன ஆகணும், சரி, சரி, தாலியை நீ விளையாட்டுக்கு ஒளிச்சு வெச்சிருந்தாலும் சரி, திருடி ஒளிச்சு வெச்சிருந்தாலும் சரி, என் கைக்கு அஞ்சு நிமிஷத்தில் வந்தாகணும்.”

“சுப்பு! வார்த்தையை நீ தெரிஞ்சுத்தான் பேசறியா? திருடி என்கிறே, தாலி என்கிறே! பைத்தியம் பிடிச்சிட்டுதா?”

“எனக்கேன் பிடிக்கிறது? உனக்குத்தான் பொறாமைப் பேய் பிடிச்சிருக்கு. நான் கட்டுக் கழுத்தியாத் தாலி தழையத் தழைய நடமாடறது உனக்கு எரிச்சல்! முட்டாள் தனமாகத் திருடியிருக்கே! வீட்டில் உன்னைத் தவிர யாரும் வரவில்லை. விவகாரம் பெரிசாகறதுக்கு முன்னே. தாலியைக் கொடுத்துவிடு. அவர் காதில் நான் போட விரும்பவில்லை. என்ன இருந்தாலும் நீ என் சினேகிதிதான். ஆனால் பிரண்ட்ஷிப் வேறு. தாலி விஷயம் வேறு. எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கப் போகுமுன் தாலியையும் கழற்றி வெச்சிட்டுப் போனேன் பார்… என் புத்தியைச் செருப்பாலடித்துக் கொள்ளணும்… ஆனால் ஒண்ணு, நீ என்றைக்கும் என் சினேகிதிதான். உன்னைத் திருத்தணும், உன் பொறாமையை நீ காட்டிக் கொண்ட விதம் சரியில்லைன்னு இப்படிக் கடிந்து பேசினேன்… புரிந்து கொள்… ஆனால் தாலி வந்தாகணும்… தாலி விவகாரம் தவிர மற்ற விஷயத்தில் நாம் பழையபடி பிரண்ட்ஸ்தான்! அதில் கொள்கை மாற்றம் இல்லை.”

“மிஸ்டர் ஜாக்கிசான்!” என்றாள் சீதாப்பாட்டி… அப்புசாமி முகத்தில் ஆங்காங்கே தென்பட்ட சில பல முடிகளை §ஷ்வ் செய்து கொள்ளும் போராட்டத்தில் இருந்தார்.

“உங்களைத்தான் கூப்பிடுகிறேன். மிஸ்டர் ஜாக்கிசான்” என்றாள் சீதாப்பாட்டி முகத்தில் குறும்புப் புன்னகையுடன்.

அப்புசாமி தன் காதுகளின் மீது உடனடியாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து நிறை வேற்றினார்.

“சீதேய், என்னையா ஜாக்கிசான் என்று கூப்பிட்டே?’

“உங்களையேதான். மிஸ் துளசிக்கு நம்மாலான உதவியைக் கட்டாயம் நாம் செய்ய வேண்டும்… வாட் டூ யு திங்க்?”

‘நம்ம’ என்று. வாழ்நாளில் முதல் தடவையாகத் தன்னையும் மதித்துக் கூட்டணியாக்கிக் கொண்ட சீதாப்பாட்டியை, வாழ்க, வாழ்க!’ எனறு ஏழெட்டு முழுப் பக்க விளம்பர அளவுக்குப் புகழ்ந்து தள்ளினார்.

“போதுமே” என்றாள் சீதாப்பாட்டி,

“லெஸ்ஸர் த வோர்ட்ஸ் ஷார்ப்பர் த ஸ்வார்ட்ஸ் உங்கள்கிட்டே பெரிய துப்பறியும் வேலை ஒப்படைக்கப் போகிறேன். இன்ஸ்பிரேஷனுக்கு வேணுமானால் ஜாக்கிசான் படம் இரண்டு தரம் பார்த்துவிட்டு வாருங்கள். ஐ வில் கிவ் யூ குட் அலவன்ஸ், கன்வேயன்ஸ் எவ்ரிதிங்… நாளைக்கே நீங்கள் ஜட்ஜ் வீட்டு சமையல் காரராக வேலையில் சேருகிறீர்கள்.”

“சீதேய்… அடியே பாவி! துப்பறியற வேலை ஜாக்கிசான் அது இதுன்னு சாக்கு வெச்சுட்டு, சமையல்காரனாக என்னை அங்கே தள்ளிவிடத் திட்டமா? உன் ஆயுசிலே ஒரு தடவையாவது எனக்கு ஆதரவாக ஏதாவது செய்திருக்கிறாயா? வாயைத் திறந்தாலே சதி. எந்தக் காரியத்தைச் செய்தாலும் எனக்குத் திதி. நீயா எனக்கு சதி. உன்னைச் செய்யணுமா நான் துதி?…”

“உங்க டி, ஆர். வசனம் போதும். சமையல்காரராக நீங்க அங்கே என்ட்டர் ஆவதே துப்பறியறதுக்குதான். அன்டர் ஸ்டாண்ட்!

“எனக்குச் சமைக்கவும் தெரியாது துப்பறியவும் தெரியது சீதே! என்ன ஏதோ வம்புலே மாட்டி ஜெயில்லே கியில்லே தள்ளப் போகிறே… ஜட்ஜ் சுலைமான் சாருக்கு என்ன டிபன் பிடிக்குமோ? எனக்கு ஒரு உப்புமா கூடச் சரியாப் பண்ணத் தெரியது. பக்ரீத் வேற பக்கத்திலே வருது! ஏதாவது ஸ்பெஷல் விருந்து பண்ணுன்னா என்னத்தைப் பண்ணுவேன்?”

“மிஸ்டர் ஜாக்கிசான்! குக் பண்ண ஒரு சமையல்காரர் அங்கிருக்கிறார். நீங்க அவருக்கு உதவியாளர் என்கிற சாக்கில் டிடெக்ட் பண்ணப் போகிறீர்கள்.”

“அங்கே மாட்டிக்கிட்டுச் சாகச் சொல்கிறாய்… அங்கே எவன் எவன் என்னென்னத்தை மாமூலாத் திருடுவானோ? சீதே! அதையெல்லாம் போய் நான் கண்டுபிடிக்கணுமா? நான் என்ன ரஜினியா, கமலா, விஜயகாந்தா, சரத்குமாரா? என்னையே வாணலியிலே போட்டுப் பிரியாணி பண்ணிடுவாங்க. உனக்கு என்னை அடிக்கணும்னு தோணினால் நீயே கரண்டியாலே நாலு போட்டுடு. பழகிய கரண்டி, பழகீய பெண்டாட்டி…”

“தைரியம் புருஷ லட்சணம்” என்றாள் சீதாப்பாட்டி தேறுதலாக.

மிஸஸ் சுப்ரபா, மிஸ் துளசி நட்பு எக்காரணத்தை முன்னிட்டும் முறியக் கூடாது. அது நம்ம கழகத்துக்கு ஒரு ஸ்டிரெங்க்த்…மிஸ் துளசியிடம்தான் ஆடிட்டோரிய பில்டிங்குக்குப் பெரிய அமெளண்ட் எதிர்பார்க்கிறேன்… அவள் மனசு உடைந்தால் ஆடிட்டோரிய ப்ராஜக்ட்டுலே பெரிய விரிசல் விட்ட மாதிரி. அவள் நினைத்தால் தன் சைதாப்பேட்டை பங்களாவையேகூட நம்ம கழகத்துக்கு எழுதி வைத்து விடலாம், ஒண்டிக்கட்டை. ப்ளீஸ் ஹெல்ப். நீங்க வாங்காத அடியா? படாத உதையா? சந்திக்காத ரெளடிகளா? இன்·பேக்ட் நீங்களே ஒரு பேட்டை ரெளடி மாதிரிதான். என்னுடைய பேனரினால் காலத்தை நல்லபடியாத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்…”

அப்புசாமி, திவாலான கட்சிக்குக் கட்டாயப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட வேட்பாளர் மாதிரி மனசில் புலம்பலுடன் புறப்பட்டார்.

அப்புசாமி மாமியாரின் பிடியில் சிக்கிக் கொண்ட ஆதி காலத்து மருமகள் மாதிரி மலங்க மலங்கக் கண்ணில் நீர் பெருகி ஓடச் சமையலறையில் சாம்பார் வெங்காயம் – ஏறக்குறைய ஒரு கூடை நிறைய – உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

“சீக்கிரம் சரசரன்னு ஆவுட்டும், பெரீவரே: ஒவ்வொரு வெங்காயமா என்னவோ தடவுறியே? செரியான சாவு கிராக்கியாக் கொணாந்து தள்ளியிருக்காங்க… சீக்கிரம் உரிச்சு முடிச்சிட்டு, மாவாட்டப்போ. இன்னைக்கி டிபன்லே வெங்காய வடை பண்ணலைன்னா நீதான் எதுனாவது ·பைவ் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் உன் செலவுலே நூறு வெங்காய வடை வாங்கி வரணும்… சள்ளென்று அப்புசாமி மேல் ஜட்ஜ் வீட்டுச் சமையல்காரர் பெரிய கருப்பு பெருங்காய நீர் ஒரு டம்ளரை வீசினார். “அடடே… உன் மேலே பட்டுடுச்சா… நான் அந்தப் பக்கம் கொட்டினேன் – பழைய பெருங்காயத் தண்ணியை…”

அப்புசாமியைத் துப்பறிவதற்காக அந்த வீட்டில் சமையல் எடுபிடி என்ற செட்டப்பில் சீதாப்பாட்டி துளசியுடன் அனுப்பி வைத்திருந்தாள்.

தனக்கு எந்த ஒரு தலைமையோ, எடுபிடியோ இல்லாமல் தன்னேரில்லாத தனி இலாகாவாக இயங்கவே சமையல்காரப் பெரியகருப்பு விரும்புவார். அவர் மீது ‘முந்திரிப் பருப்பு அமுக்ஸ்’ ஊழல் கேஸ் ஒன்று ஏற்கனவே பெண்டிங்கிலிருந்தது. மாசா மாசம் வாங்கும் ஐந்து கிலோ முந்திரிப் பருப்பில் பெரியம்மாவும், சின்னம்மாவும் மூன்று கிலோவுக்கு மேல் தினபதில்லை. இரண்டு கிலோ என்ன ஆகிறது…. தனது முந்திரிப் பருப்பு ஊழல் இந்தப் புதிய ஆசாமியால் வெளிப்பட்டு விடுமோ என்று பெரிய கருப்புவுக்குப் பெரிய கடுப்பு.

“யோவ்! அந்தப்பாலை இறக்கு?” என்று அப்புசாமிக்குக் கட்டளையிட்டார். ‘துணியைப் பிடித்துக் கொண்டு’ என்று சொல்ல வேண்டாமோ?

அப்புசாமி பழக்கமில்லாத காரணத்தால் லபக்கென்று பால் பாத்திரத்தை வெறும் கையாலேயே தொட்டுத் தூக்க, அடுத்த கணம் ‘எடுத்தது கண்டார், போட்டது கேட்டார்!’ என்று பாத்திரத்தை இருபது லிட்டர் கொதி பாலுடன் கீழே போட்டு ‘ஹையோ! ஹையோ! காலு! பாலு பாலு!” என்று ஒரு கோரமான நாட்டுப்புற பாலே நாட்டியம் ஆடி முடித்தார். நல்ல வேளை ஆஸ்பத்திரிக்கு விரைகிற அளவு சூடு படவில்லை.

‘ஜாக்கியாவது! சானாவது! துப்பறியும் வேலைக்குப் பெரீய்ய கும்பிடு!’ என்று அந்தக் கணமே சுப்ரபா சுலைமானிடமும், துளிசியிடமும் சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானார்.

வாசலின் சங்கீத மணியை யாரோ அழுத்தினார்கள். ‘கினி கினி கிங்… கினி… கின்கே கிங்கினி… கினி கினி கே… என்று சங்கீத மணி ஜனகன மெட்டை பியானோவில் வாசித்தது.

அப்புசாமி பெருங்காய மணம் கமழும் தேகத்துடன் அழுக்குச் சுருணையினால் சிந்திய பாலைத் துடைத்துக் கொண்டிருந்தவர் ஸ்பிரிங் மாதிரி விருட்டென்று சுருணையை வீசியெறிந்து விட்டு தேசீய சுரணையுடன் விறைப்பாக நின்று தேசீய கீதத்துக்கு மரியாதை செலுத்தினார்.

சமையல்கார பெரிய கருப்பு, “யோவ் முண்டம்! மணியில் ரெகார்டட் மியூசிக் அப்படித்தான்ய்யா விதம் விதமாக வரும். ஒவ்வொருத்தன் கதவு பெல்லை அழுத்தறப்பவும் ஓரொரு விதமான மெட்டுலே மணி அடிக்கும். அடுத்தாப்பலே எவனாவது அழுத்தினால் சின்ன சின்ன ஆசை கேட்கும். நீ சிறகடிச்சுகிட்டுப் பறக்க ஆரம்பிச்சிடுவியா? சரியான முக்காமுண்டமா இருக்கியே! போய் வெங்காயத்தை உரிச்சி முடிய்யா… பெரீய தேச பக்தரு மகாத்மா காந்தி! ஒரு பாலை இறக்க வக்கில்லை. நாலு வெங்காயம் உரிக்க நாதியில்லை…”

அப்புசாமி அவனது திட்டுக்களைப் பொருட்படுத்தாமல் வந்த ஆள் யார் என்பதைக் கவனித்தார். சீதாப்பாட்டி முன்பே சொல்லி அனுப்பியிருந்தாள்… “அலட்சியமா இருக்கறாப்பலே
இருக்கணும்… ஆனால் அட்டென்ட்டிவாக் கவனிக்கணும்… வாய் பாட்டுக்குப் பேசிக்கிட்டிருக்கணும்… ஆனால் அட்டென்ஷனெல்லாம் யார் யார் வர்ராங்க… என்ன மூவ்வெண்ட் என்கிறதை உங்க தேர்ட் ஐ ஸ்டடி பண்ணிகிட்டே இருக்கணும்… அன்டர்ஸ்டாண்ட்? பெஸ்ட் ஆ·ப் லக்… லுக் ஹியர் யு கோ…” அப்புசாமியின் முதுகை வாழ்க்கையில் முதன் முறையாகத் தட்டிக் கொடுத்து அனுப்பினாள்.

அப்புசாமி வேண்டா வெறுப்பாக வந்த ஆள் யாரென்பதை நோட்டம் விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *