மாறிப்போன திட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 17,773 
 

வெளியே வந்த ஸ்டீபனுக்கு வெளி உலக வெளிச்சம் கண்களை கூச செய்தது. ஒரு நிமிடம் நிதானித்தவன், அடுத்து எங்கே செல்லலாம் என்று யோசித்தான். அம்மாவை பார்க்க போகலாம் என்று நினைத்தவன், வேண்டாம், ஒரு பாட்டு அழுது தீர்ப்பாள், கடைசியில் மூக்கை சிந்தியவாறு, எதோ ஒரு ஊரில் பெண் பார்த்து உள்ளேன், கல்யாணம் செய்துவிட்டால் நல்ல பையனாகி விடுவாய் என்று அறிவுரை கூற ஆரம்பித்து விடுவாள். வீட்டுக்கு போகும் யோசனையை விட்டவன் ஹென்ரியை போய் பார்ப்போம் என்று முடிவு செய்தான்.

சீட்டி அடித்தவாறு வெளியே வந்த ஹென்ரி இவனை கண்டவுடன், ஸ்டீபன் வா வா.. உன்னைத்தான் நினைச்சுகிட்டே இருந்தேன், எப்படா வருவேன்னு, வந்துட்டே சொல்லியவாறு அவனை அணைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே இருக்கும்போது எவனும் கண்டுக்காதீங்க, வெளியே வந்தவுடன் உன்னைத்தான் எதிர்பார்த்தேன், அப்படீன்னு கதை விடுவீங்க. ஒரு நிமிடம் அவன் முகத்தை கூர்ந்து பார்த்த ஹென்ரி, நல்லா யோசிச்சு சொல்லு, நானும்,மனோகரனும் உன்னை இரண்டு தரம் பார்க்க வந்தோமே, அப்ப நீதான், சும்மா சும்மா என்னை பாக்க வராதீங்க, போலீஸ் கண்கானிக்க ஆரம்பிச்சுடும் அப்படீன்னு சொல்லி எங்களை வர விடாம பண்ணிட்டே.

சரி விடு, மனோகரன் எங்கே? கேட்டவனுக்கு அவன் சாமிநாதன் டீம் கூட சுத்த ஆரம்பிச்சுட்டான். சலிப்புடன் சொன்னவனிடம், அதை அப்புறம் பார்த்துக்கலாம்,இப்ப அவனை எங்க போய் பார்க்கலாம்? ஹென்ரி கோபித்து கொண்டான், பாத்தியா, உன் கூட நான் இருக்கேன், ஆனா அவனை தேடறே? குற்றம் சுமத்துவதுபோல் சொன்னவனுக்கு, மனோகரன் கிட்ட கொஞ்சம் பேசணும், அதான் அவன் எங்கே? அப்படீன்னு கேட்கறேன்.

அந்த மார்க்கெட் சந்து இவர்களுக்கு வசதியாக இருந்தது, கடைகளும், ஆட்களும் நெருக்கமாக இருப்பதால், இவர்களின் சங்கேத பேச்சு, யாருக்கும் சந்தேகம் வராமல் பேசிக்கொண்டே நடந்தனர். சொன்ன ஐடியா என்ன ஆச்சு? செஞ்சுகிட்டே இருக்கேன், சரி எப்ப மறுபடி பாப்பே?.மனோகரன் மெல்ல சொன்னான், பெரிய பட்சி ஒண்ணு வருது, பேசாம அதை முடிச்சுட்டா, ஒதுங்கிடலாம், இந்த வேலையே வேண்டாமுன்னு. அப்படீன்னு பேசிகிட்டாங்க.சரி விளக்கமா சாயங்காலமா வந்து சொல்லு, “நம்ம இடம்தான்”. வேண்டாம், நான் இப்ப சாமிநாதன் ஆளுங்க கூட இருக்கேன், அவங்களுக்கு டவுட் வந்தா அப்புறம் நம்ம திட்டம் கோவிந்தா தான்.இராத்திரி பத்து மணிக்கு மேல வர்றேன்.

மனோகரன் அந்த இருளில் விளக்கிக்கொண்டிருந்தான். ஸ்டீபனும், ஹென்ரியும் உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருந்தனர்.வர்ற நாலாம் தேதி ஒரு பார்ட்டி கேரளாவுல இருந்து சென்னை போகுது, கார்லதான் கோயமுத்தூர் பை-பாஸ் ரோட்டு வழியா வருது. “ஒண்ணுல இருந்து இரண்டு” பெரிய நோட்டோட வருது. இதை சாமிநாதன் ஆளுங்க முயற்சி பண்ண போறாங்க, முடிஞ்சா நாமளும் முயற்சி பண்ணுலாம். என்ன சொல்றீங்க? கேட்டுவிட்டு இருவரின் முகத்தையும் பார்த்தான்.

ஹென்ரி ஸ்டீபனின் முகத்தை பார்க்க ஸ்டீபனின் முகம் யோசனையில் இறுகிக்கிடந்தது. பத்து நிமிடங்கள் கழிந்த பின் ஓ.கே, பார்ட்டி எப்ப கிளம்புது, சாமி டீம் என்ன பிளான் வச்சிருக்குது அப்படீன்னு நீ அவங்களோடவே இருந்துட்டு, எனக்கு தகவல் கொடு. நானும் ஹென்ரியும் மத்த வேலைகளை பாக்கறோம்.

ஹென்ரி எங்கிருந்தோ கொண்டு வந்த யமஹா இரு சக்கர வாகனத்தில் கேரளாவிலிருந்து கோயமுத்தூர் வழி செல்லும் பை-பாஸ் ரோடை நான்கைந்து முறை இருவரும் வலம் வந்தனர். எந்த இடத்தில், வரும் வண்டியை மறித்து பணத்தை பறிக்க முடியும் என்று திட்டமிட்டனர். தப்பிப்பதற்கும் வாகான இடமாக வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான் ஸ்டீபன்.அதற்கு முன் சாமிநாதன் டீம் எந்த இடத்தில், அவர்களை மடக்க திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால்தான், அந்த திட்டத்தில் நாம் உள்ளே நுழைந்து அதற்கு முன் நம் வேலையை முடிக்க முடியும். ஸ்டீபன் மனோகரனின் சமிக்ஞைக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

ஸ்டீபனின் செல் மெல்ல கிண் கிணித்தது, காதில் வைத்தவன், ம்..ம்..என்று சொன்னவன் “கன்பார்ம்தானே” சரி வை போனை, ஜாக்கிரதை.ஹென்ரி அவங்க பை-பாஸ் முடிஞ்சு நீலம்பூர் தாண்டி சரியா அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி வண்டிய தடுக்க போறாங்களாம். நாம் கொஞ்ச முந்திக்கணும், அதே நேரத்துல அவங்க நம்மளை விரட்டி பிடிக்க முடியாதபடியும் இருக்கணும், போலீஸ் ஸ்டேசன் பக்கமாகவும் இருக்க கூடாது? என்ன செய்யலாம்? யோசனையுடன் தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டான்.

திடீரென்று கூவியவன் “கரெக்ட்” நாம திருச்சி ரோடு தாண்டி உள்ளே வரும்போதே மறிச்சுடலாம், அப்பத்தான் நாம் திருச்சி ரோடு வழியாவோ, இல்லை திரும்பி கோயமுத்தூர் மெயின் ரோடு வழியாகவோ தப்பிச்சு போக வசதியாய் இருக்கும். என்ன சொல்றே? குட் ஐடியா, ஆமோதித்தான் ஹென்ரி.

ஸ்டீபனும்,ஹென்ரியும்,காத்திருந்தார்கள் நிறைய கார்களும்,லாரிகளும், சென்று கொண்டிருந்தன. நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. சூரியன் உச்சிக்கு வந்திருந்தான். அந்த வெயிலில் எந்த மரங்களும் இல்லாமல் அந்த இட்த்தில் நின்று கொண்டிருப்பதால் உடல் முழுக்க எரிந்தது.ஸ்டீபன் பட படக்கும் இதயத்துடன் காத்திருந்தான். அவர்கள் கொண்டு வந்த இரு சக்கர வாகனம் சற்று தள்ளி மறைவாக நிறுத்தி வைத்திருந்தனர்.

தூரத்தில் மனோகர் சொன்ன அடையாளத்துடன் ஒரு “எஸ்டீம்” கார் வருவது தெரிந்த்து. ஸ்டீபன் பரபரப்பானான்.இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து தயார்படுத்திக்கொண்டான்.கார் அருகில வர, மனோகர் சொன்ன நம்பர் தெரிந்தது, ஹென்ரியை உசுப்பினான். ஹென்ரி தாமதிக்கவேயில்லை, சடாரென வண்டி வந்த பாதை குறுக்காக போய் நின்றான். வண்டி இதை எதிர் பார்க்கவே இல்லை,வேகமாக பிரேக் அழுத்தும் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.கிரீச்சிட்டு நின்ற வண்டியை நோக்கி வேகமாக சென்ற ஸ்டீபன் டிரைவரை நோக்கி “வண்டியை விட்டு இறங்கு” இல்லை தோட்டா உன் தலையை துளைச்சுட்டு போயிடும்” அவனின் குரலுக்கு டிரைவர் மரண பயத்தை முகத்தில் காண்பித்து வண்டியை விட்டு இறங்கினான். அதற்குள் அவனருகில் உட்கார்ந்திருந்த ஒருவனை ஹென்றி தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கீழே இறக்கி இருந்தான்.

சட்டென வண்டியில் டிரைவர் சீட்டில் ஏறிய ஸ்டீபன் “குயிக் உடனே டூ வீலரை எடு ! கீழே நின்று கொண்டிருந்தவர்களை நகர விடாமல் வண்டியில் உட்கார்ந்தவாரு துப்பாக்கியை காட்டி சொன்னான். ஹென்றி ஓடிப்போய் வண்டியை எடுத்து அந்த இடத்தை விட்டு வேகமாக முறுக்கினான். ஸ்டீபனும் சட்டென கதவை சாத்தி, வண்டியை எடுத்தவன் வேகமாக பறந்தான்.

சாதித்து விட்டோம்! ஒரு கோடியா?இரண்டு கோடியா? தெரியாது? இருந்தாலும் வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று நினைக்கவேயில்லை. ஸ்டீரியங்கை பிடித்திருந்த கை விரல்கள் தாளம் போட்டுக்கொண்டிருந்தது. வாயில் சீட்டி அடித்தபடி வண்டியை திருச்சி செல்லும் ரோட்டில் சென்றவன் சைடு கண்ணாடியில் ஹென்ரியின் வண்டி தெரிகிறதா என்று குனிந்து பார்த்துக்கொண்டு வந்தான்.

திடீரென்று யாரோ முனங்கும் சத்தம் கேட்டது. வெளியே சுற்றி பார்த்தான், சத்தம் வண்டிக்குள்ளிருந்தது வந்த்து போலிருந்தது. திகைப்புடன் வண்டியை மெல்லஓரம் கட்டி வண்டிக்குள் உற்றுப்பார்க்க ஆரம்பத்தில் மங்களாக தெரிந்தது, பின் கொஞ்சம் தெளிவாக தெரிய ஆரம்பித்த்து.ஸ்டீபனுக்கு உயிரே போனது போல

இருந்தது. வண்டிக்குள் ஒரு மனித உருவம் இரத்த திட்டுக்களுடன் கிடப்பது தெரிந்தது.சப்த நாடியும், ஒடுங்கி விட்ட்து, ஸ்டீபனுக்கு ! யார் அது? இப்பொழுது என்ன செய்வது? தவித்துப்போய் நின்றான். அவன் வண்டியை ஒட்டி சாரி சாரியாய் கார்களும், பஸ்களும் சென்று கொண்டிருந்தன. இப்பொழுது உள்ளே சென்று அந்த ஆளை வெளியே எடுத்தும் வர முடியாது.முதலில் ஆளா, பிணமா என்று புரியவில்லை. பிணமாக இருக்காது, முனங்கல் சத்தம் கேட்டது. வெளியே திகைத்து நின்று கொண்டிருந்தான்.

அவனை யாரோ உலுக்கியதும் திடுக்கிட்டு பார்க்க, ஹென்ரி நின்று கொண்டிருந்தான். ஏன் இங்கே நின்னுட்டே? அவன் எதுவும் பேசாமல் கொஞ்சம் உள்ளே பாரு என்று சொன்னான். உள்ளே பார்த்த ஹென்றியும் அதிர்ந்து போய் நின்றான்.

உடனே விழித்த ஸ்டீபன் நீ பின்னாடி வா, வண்டியை யாரும் இல்லாத இடமா பார்த்து நிறுத்தி உள்ளே யாருன்னு பார்த்துடலாம். சொன்னவன் வேகமாக சென்று வண்டியை எடுத்தான்.வண்டியை கொஞ்ச தூரம் ஓட்டி சென்றவன்,சற்று ஒதுக்குபுறமாக தென்பட்ட இடத்தில், போக்குவரத்து, அதிகமில்லாத நேரத்தில் உள்ளே சென்று குப்புற விழுந்து கிடந்த உருவத்தை புரட்டி பார்த்தவன் அதிர்ந்து போனான். மனோகரன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

ஐயோ என்று முகத்தில அறைந்து கொண்டு அழுதான் ஸ்டீபன். அதற்குள் வண்டி அருகில் வந்திருந்த ஹென்றியும் இவன் அழுகையை கேட்டு அதிர்ந்து உள்ளே வந்து மனோகரனை பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தான்.

சுதாரித்துக்கொண்ட ஸ்டீபன் ஹென்றி நீ உடனே என் பின்னாடி வா, நாம் இப்ப கவர்ன்மெண்ட் ஆஸ்பிடல் போறோம், இவனை கண்டிப்பா பிழைக்க வைக்கணும், குயிக்,குயிக், சொல்லியவாறு வண்டியை வேகமாக எடுத்தான்.

மருத்துவமனையில் அவனை சேர்த்து விட்டு கண்ணீருடன் அவன் பாவம் என்னையே சுத்தி வந்திட்டு இருந்தவன். சின்ன வயசுல இருந்து என் கூடவே இருந்தான், நான் தான் அவனை போன முறை உங்கூட வரும்போது இனிமே அடிக்கடி என்னை பாக்க வராதீங்க, அப்படீன்னு சொல்லிட்டு, அவங்கிட்ட சாமிநாதன் கூட போய் ஒட்டிகிட்டு அவன் பிளானை அப்ப அப்ப எங்கிட்ட சொல்லுன்னு அனுப்பி வச்சுட்டு இப்ப அநியாயமா அவன் உயிருக்கு உலை வச்சுட்டனே. சொல்லிவிட்டு முகத்தை மூடி அழுதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *