நயம் பட உரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 1,880 
 
 

கிருஷ்ணன்குட்டிக்குத் தலை வலித்தது. உடம்பு பிழிந்த துணியாய் துவண்டு கிடந்தது. கடந்த பதினைந்து நாட்களாக மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்காகவும், விழாவுக்கான பொறுப்பு களுக்காகவும் அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. மற்றவர்கள் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டாலும், தலைமைப் பொறுப்பு மட்டும் எப்பொழுதுமே கிருஷ்ணன்குட்டியின் தலையில் தான் விழும். அதுதான் ‘ஏற்பாட்டுக் கமிட்டி’யின் அன்புக் கட்டளை. விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், கிருஷ்ணன்குட்டி ஏற்றுக் கொண்டானேயொழிய இலக்கியம் என்றாலே மனம் கசந்து வழிந்தது. மாநாடு என்றாலே பற்றிக் கொண்டு வருகிறது. முந்தைய சில ஆண்டுகளின் அனுபவத்தால், இந்த மாநாட்டில் கட்டுரை படைக்க முடியாது என பிடிவாதமாய் மறுத்து விட்டான். எத்தனையோபேர் வற்புறுத்தியும் கிருஷ்ணன்குட்டி இந்த விஷயத்தில் மட்டும் மூர்க்கமாய் மறுத்துவிட்டான்.

பின் என்ன? போயும் போயும் சிங்கப்பூருக்கு வரும் விருந்தாளிகளிடமா சந்தனக்காப்பு? கட்டுரையாளர்கள் எல்லோருமே வந்து விட்டார்கள் என்ற சேதி அறிந்தும், கிருஷ்ணன்குட்டி அலட்டிக் கொள்ளவில்லை. அதிலும் ஜெயதேவ் சிங்கை வந்திருக்கிறார் என்றவுடனேயே பலரும் காணச் சென்றிருந்தனர்.

ஜெயதேவ் முற்போக்கு எழுத்தாளன். கேரளத்தில் பலரின் கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளான சினிமாக் கதாசிரியன்.

நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்குப் போனவன் என்றாலும் ஜெயதேவின் சினிமா அண்மையில் விருது பெற்றிருந்தது. ஜெயதேவின் ‘சினிமா ஸ்பெஷல்’ படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் தூங்கி வழிந்து கொட்டாவியோடுதான் வெளியே போவார்கள். விஷயம் வேறொன்றுமில்லை. இருட்டும், மௌனமும், ஊமைப் பார்வைகளும், திடீரெனக் கதாநாயகியின் தற்கொலையுமாய் படம் முடியும்போது மிகப்பெரிய மேதைகளுக்கல்லாது, யாருக்குமே எதுவுமே புரியாது.

‘நான் சினிமா எடுப்பது பாமரர்களுக்காக அல்ல. அறிவுஜீவிகள் என்னைப்புரிந்து கெண்டால் போதும்’ என்று பெருமையாய் பேட்டி கொடுக்கும் ஜெயதேவ்தான் இவ் வாண்டு மாநாட்டின் முக்கிய ஆய்வாளன். நாடாகாசிரி யர்கள், நாவலாசிரியர்கள், நாட்டியம், இசையில் புதிய முத்திரைப்பதித்தவர்கள், சினிமாவின் சாதனையாளர்கள் என, பல துறைகளிலிருந்தும் மிக முக்கியமானவர்களே இந்த மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டதால், நிகழ்ச்சி சோடை போகாது என கிருஷ்ணன்குட்டி நம்பினான்.

முதல் நாளே மாநாட்டரங்கம் நிரம்பிவழிந்தது. வழக்கமான தொடக்கம், வழக்கமான நிகழ்ச்சிநிரல் என முதல் நாள் முடிந்தது.

மறு நாள் காலையில்தான், கிருஷ்ணன் குட்டிக்கு மற்ற ஆய்வாளர்களிடம் கதைக்கவே முடிந்தது. எதிர்பார்த்த தகவல்தான்.

எத்தனை ஆண்டுகளாக இலக்கியப் பூசல்களையும் காழ்ப்புணர்வையும் வேதனையோடு தரிசித்தவன். இவர்கள் லட்சணம் இவனுக்கு நன்றாகவே தெரியும். இந்த முறையும் சிரிப்புத்தான் வந்தது.

கதகளியில் சாதனை புரிந்த அப்பு வாரியர், நவீன நாடகாசிரியர் பேபிகுட்டன், மோகினியாட்டத்தின் பாருக் குட்டி, ஏகாங்க எழுத்தாளர் தங்கச்சன் என ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி வாசித்த குற்றச்சாட்டுக்குப் பிறகு, ஜெயதேவ் உண்மையிலேயே ‘சுவாரஸ்யமான கேரக்டரே’ என்று நினைக்கும் போதே, புன்முறுவல்தான் வந்தது. பிறகுதான் கிருஷ்ணன்குட்டி கவனித்தான். நிகழ்ச்சிக்கு வந்த கட்டுரை யாளர்கள் யாருடனும் ஜெயதேவ் பேசவேயில்லை. வலியச் சென்று பேசவும் யாரும் அணுகவுமில்லை. வாயில் ‘சூயிங்கமை’ அதக்கியவாறு, அழைத்து வந்த ஒரு பெண்ணோடு அமர்ந்து நிகழ்ச்சியைக் கவனித்தான். அந்தப் பெண் அவனேடு ‘சேர்ந்து வாழும் பெண்’ என்றனர் சிலர். இல்லை, இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே சேர்ந்து கொண்ட அவனுடைய ‘சகா’ என்றனர் வேறு சிலர். வேடிக்கை என்ன வென்றால் மதியம் உணவின்போது கூட, ஒரு மூலையில் அமர்ந்து தன் தோழியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தானே யொழிய, தன் உலகிலிருது அவன் விடுபடவே இல்லை .

அப்படியும் கிருஷ்ணன்குட்டிக்கு ஜெயதேவிடம் பேசத்தோன்றவில்லை. தோது படவும் இல்லை. ஆயிரம் பொறுப்புக்களில் அமிழ்ந்து போயிருந்தான். மூன்றாம் நாள் மாநாட்டில் ஜெயதேவின் பங்களிப்பு! –

-எதிர்பார்த்தாற் போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு சிலரே என்ன வெட்டி முறிக்கப் போகிறான் என்றுதான் பார்ப்போமே என வெளிப்படையாகவே முணு முணுத்தனர். ஆனால், கணீரென்ற குரலில் தொடங்கிய உரையை லய, பாவ, தாளத்தோடு விஷயஞானபூர்வமாய், மிக அற்புதமாய் முடித்து வைத்தவன் ஜெயதேவ் மட்டுமே!

கரகோஷம் அரங்கில் அதிர்ந்தது. பலரும் ஆர்வத்தோடு, ஜெயதேவிடம் சென்று பேசுவதைக் காணமுடிந்தது. பிறகட்டுரையாளர்களை அப்பொழுதும் ஜெயதேவ் மதிக்க வில்லை . |

தன்னை தேடிவந்து பேசுபவர்களிடம் மட்டுமே பேசினான். தன்னோடு வந்த மற்ற கட்டுரையாளர்கள் யாருக்குமே இல்லாத ரசிகர் கூட்டம் தனக்கு மட்டுமே இருக்கிறது எனும் அகந்தையை அப்பட்டமாய் தன் செயல்களில் காட்டினான். மதிய உணவுக்காக அனைவரும் எழுந்தபோது ஜெயதேவ் கிருஷ்ணன்குட்டியை தேடிவந்தது ஆச்சர்யமாக இருந்தது. கிருஷ்ணன்குட்டி வியப்பைக் காட்டாமலே கைகூப்பியபோது, பதில் மரியாதை கூட தெரியாதவனாய், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.

“நான் எதிர்பார்க்கவேயில்லை! இவ்வளவு ஆர்வ முள்ளவர்கள் சிங்கப்பூரிலிருப்பார்கள் என்று. பணபலம், படைபலம் எல்லாமே இருந்தும் திறமையான படைப்பாளி களை ஏன் உருவாக்க முடியவில்லை? ஆண்டுக்கு ஒருமுறை யாவது எங்களைப் போன்றோரை வரவழைத்து இங்கு பட்டறைகள், பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாமே? இத்தனைக்கும் செல்வம் கொழிக்கும் ஊராயிற்றே சிங்கப்பூர்” என்று ஜெயதேவ் அடுக்கிக் கொண்டே போக, கிருஷ்ணன் குட்டிக்கு ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் வழக்கமான எரிச்சலும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன.

பேசி முடிக்கட்டும் எனப் பொறுமையாகக் காத்திருந்தான். “ஊரில் உங்கள் தொழில் என்ன?” என்று மிகப் பொறுமையாகக் கேட்டான் கிருஷ்ணன்குட்டி.

“நான் டைரக்டர், நான் நவீனன், நான் புதுமைப் படைப்பாளன், சினிமா உலகில் இன்றைய எதிர்பார்ப்பே நான் தான் ‘ என ஜெயதேவ் ‘நான்’, ‘நான்’ என அழுத்தம் காடுத்த ஆணவத்தில் கிரிஷ்ணன்குட்டியின் பொறுமை பறி போயிற்று. |

” நீங்கள்……. நீங்கள் மட்டுமே நவீனன், மேதை என்றாலும் கூட, அதை நீங்கள் சொல்லக்கூடாது. மற்றவர்கள் தான் கூறவேண்டும். என்றாலும் போகட்டும், ஜெயதேவ்!

ஊரில் உங்கள் தொழிலே படைப்பு தான். ஆனால் இங்கு சிங்கப்பூரில் இலக்கியம், ‘பகுதி நேரத் தொழில் ‘தானே யொழிய, எங்களுக்கெல்லாம் வேறுவேலை இருக்கிறது. அப்படியும் பிழைப்புக்கு வேறு உத்தியோகம் பார்த்துக் கொண்டு, இலக்கிய தாகத்துக்கு மட்டுமே, நாங்கள் இந்த யாகத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால்தான், எங்கள் உத்தியோக பெருமிதத்தால் தான், உங்களைப் போன்றோரை இங்கு வரவழைக்கவே முடிந்தது. இருந்தாலும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அக்கரை மண்ணைவிட அரிய படைப்பாளர்கள் இங்கும் இருக்கிறார்கள். ‘அன்புக்கப்பால்’ எனும் வானொலி நாடகத்தை மட்டுமே கேட்டு, அதை அப்படியே மனதில் பதித்து, நாடகம் எழுதக் கற்றுக்கொண்ட நாடகாசிரியரை, இன்று விருது பெற்ற நாடகாசிரியராக உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும். ‘தேடி’ என்ற படைப்பின் மூலம் சிங்கை இலக்கியத்துக்கே புதிய பார்வையும், நவீன சிந்தனையும் கொடுத்த எழுத்தாளரை உங்களுக்கு அடையாளம் காட்டமுடியும்.” என்று கிருஷ்ணன்குட்டி பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த கட்டத்தில், “அடடா, இங்கேயா இருக்கிறீர்கள்? சாப்பிட வரவில்லையா?” என்று சக ஏற்பாட்டாளர் தேடி வர, அப்போதைக்கு இருவரும் பிரிந்தனர்.

மதிய உணவுக்குப் பின்னர், ஏனோ அந்த எண்ணம் உதித்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர், வீட்டிற்குச் சென்று, தன்னுடைய படைப்புக்களைக் கொண்டு வந்தான்

மதிய உணவுக்கு அடுத்த நிகழ்ச்சியில், முதல் படைப்பாளராக கிருஷ்ணன்குட்டியின் ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது. கலந்துரையாடலில் ‘சிங்கை நாடகவியலின் பார்வைகள்’ பகுதியில், ‘நிலைப்புச் சித்திரம்’ தலைப்பில் தன்னுடைய நான்கு மொழி நாடகத்தின் ஒரு காட்சியை ‘நகர்வுகளும், தள உறவாடல் இயல்புகளும்’ எனும் பகுதியை கிருஷ்ணன்குட்டி நடித்தும் காட்டினான். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருக்க, ஜெயதேவ் புன்னகையோடு கிருஷ்ணன்குட்டியை நெருங்கி வந்தான். அன்புடன் கைகளை பற்றிக் கொண்டான்.

“நீங்கள் எழுத்தாளர் என்று தெரியும். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய் என நான்கு மொழிகளிலும் உங்கள் ஆற்றலைக் கண்டேன். ஆனால், இன்னும் நவீன இலக்கியம் பற்றிய பார்வை ஏன் விசாலமடையவில்லை? இவ்வளவு திறமை இருந்தும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை விட்டு, வெளியே வரவே ஏன் மறுக்கிறீர்கள்? கதாசிரியர்கள் யாருமே நவீனப்படைப்புக்களை அதிகம் தெரிந்து கொள்வ தில்லையா? அல்லது தெரிந்தும், அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா?” என்று ஜெயதேவ் கேட்டபோது சிரிக்கத் தோன்றியது கிருஷ்ணன் குட்டிக்கு. ‘சமூகக்கதாசிரியர்கள் என்றாலே ‘சும்மா” எனும் இவன் மனநோயைத் தீர்ப்ப தெப்படி? தன்னைச் சுற்றிய நிகழ்வுகளையே தெரிந்து கொள்ளாதவன் சமுதாயத்தைச் சீர்திருத்துவதா? யதார்த்த இலக்கியமே தெரியாதவன் ‘சமூகப் பிரக்ஞை ‘யை அலசுவதா? தி.ஜானகிராமனையும், எம்.டி.வாசுதேவன் நாயரையும், சிங்கப்பூரின் மலாய்மொழி நாடகாசிரியர் நதிபுத்ராவையும் பெருமையோடு விளக்கிவிட்டு, ராமானுஜம் அவர்களின் ‘வெறியாட்டம்’ நாடகத்தின் ‘நேர்க் கோட்டுக்குள் அடங்கிய முக்கோணக் கட்டமைப்பில்’ தான் வியந்த பகுதியையும், காவாலம் பணிக்கரின் ‘மத்தவிலாச பிரகசனம்’ நாடகத்தில், அரைவட்டக் கட்டமைப்பின் விசித்திரத்தையும், ஜி.சங்கரப்பிள்ளையின் ‘மூதேவித் தெய்யம்’ நாடகத்தில் கயிறு என்ற கைப்பொருள் மூலம் மட்டுமே சடங்குக் கலையை குறியீட்டு உத்தியில் அறிமுகப் படுத்திய அழகியலில் மனம் பறி கொடுத்ததையும் பேச பேச ஜெயதேவ் ஸ்தம்பித்துப் போனான். கிருஷ்ணன்குட்டி தொடர்ந்தான்.

“ஜெயதேவ்! சமூகக் கதை எழுதவும் கனிந்து குழைந்த மனது வேண்டும். பின்நவீனத்துவத்தில் அதிமுக்கியமான, ‘theory of modern shortstories’க்கான சிறப்பு வகுப்பில் தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் நான்.

அதனாலேயே எனக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். எந்த ‘பம்மாத்து’ மாயையிலும் நான் இன்றும் என்னை இழந்ததில்லை. எனக்கென்று ஒரு வாசகர் வட்டம் சிங்கப்பூரிலுண்டு. அவர்களுக்காகவும் கூட நான் எழுதுகிறேன் தான். என்றாலும் சுய காழ்ப்புணர்வுக்கு இலக்கியத்தை அடகு வைப்பவன் இலக்கியவாதியல்ல. சொந்த மண்ணின் விழுமியங்களை, அதன் கலாச்சார உன்னதங்களோடு எழுதவும் கூட சமகாலப் பிரக்ஞையும், சமுதாய வாழ்வைப் பற்றிய அக்கறையும், பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகும் பார்வையும் வேண்டும். அது என்னிடம் பூரணமாக இருப்பதாக நான் நம்புகிறேன். யாருக்குமே புரியாததை பார்வையாளர்களிடையே ஊடகமாக நடத்திவிட்டு ‘நான் தான் அறிவு ஜீவி’, ‘இது புரியாதவர்கள் எல்லாம் அடி முட்டாள்கள்’ என்று ‘கமெண்ட்’ அடிக்கும் அறிவு ஜீவித்தனம் எனக்கு வேண்டாம். இப்போதும் சொல்கிறேன் நான் ஒரு சமூகக் கதாசிரியன் என்பதில் எனக்கு பெருமிதமே தவிர குறையில்லை .’

கிருஷ்ணன்குட்டி பேசி முடித்தும், ஜெயதேவ் பேச வில்லை. ‘பிறகு சந்திப்போம்’ என்று மட்டுமே கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.

ஏனோ திடீரென்று ஜெயதேவைப் பற்றி, மோகினி யாட்ட ஆசிரியை பாருக்குட்டியின் ஆதங்கம் இப்போது நினைவுக்கு வந்தது. ஆரம்பக்காலத்தில் பாருக்குட்டியிடம் மாணவனாகப் பயிற்சி பெற்ற ஜெயதேவ், இன்று சினிமாவில் புகழ்பெற்றபிறகு, பாருக்குட்டி, தங்கச்சன் போன்றோரை கலைநிகழ்ச்சிகளில் சந்தித்தால், கால் மேல் கால் போட்டுக் கொண்டு, சிகரெட் புகையை ஊதிக்காட்டுவான் என்றும், அவர்களைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்வதில்லை என்பதோடு ‘குரு நமஸ்காரம், பெரியோரை மதித்தல்’ போன்ற செய்கைகள் எல்லாமே கேலிக்கூத்து என்று பரிகாசம் செய்பவன் என்பதெல்லாம் ஞாபகம் வர, கிருஷ்ணன்குட்டிக்கு ஜெயதேவின் மனம் ஓரளவுக்கு புரிந்தது போலிருந்தது. |

அடுத்த நாள், மாநாட்டின் இறுதி நாள். அனைத்துப் படைப்பாளிகளின் பட்டறைகள் மட்டுமல்ல, மற்ற எல்லா நிகழ்ச்சிகளையுமே கிருஷ்ணன்குட்டி கவனித்தான்.ஜெயதேவ் நடத்திய பட்டறையில் பாதி பேருக்கு நெல்முனையளவுக்குக் கூட புரியவில்லை. ஆனால் கிருஷ்ணன்குட்டி மூச்சுவிடவும் மறந்துபோய், ரசித்து லயித்தான். எப்பேர்ப்பட்ட அற்புதமான கலைஞன் ஜெயதேவ்! திமிரும், அகந்தையும் மட்டுமே கவசமா யில்லாமல், அடக்கம் மட்டும் இவனுக்கிருந்தால் அழுக்குப் போகக் குளிப்பாட்டிய அப்பழுக்கற்ற மனிதனாய் இவனை மதிக்க முடியும். ஒரு முறை ‘திட்டினான்’ என்பதற்காக எதிராளியே அதை மறந்தால்கூட, மறக்கத் தெரியாமல் பகைமை உணர்வோடு பாம்பாய் சீறுவதும், சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதாலேயே, ‘தான் ஒரு அறிவு ஜீவி’, என ஆணவத்தோடு நடமாடுவதுமான பண்புகள் மட்டும் இவனை விட்டு விலகினால், நிச்சயம் ஜெயதேவ் திறமையாளனே. ஏனோ மாநாடு முடிந்து, கட்டுரை யாளர்கள் திரும்பிப் போகும் நாளன்று, ஜெயதேவ் கிருஷ்ணன்குட்டிக்கு கைகூப்பியபோது, கிருஷ்ணன்குட்டி நட்போடு அக்கரங்களைப் பற்றிக்கொண்டான்.

“பெங்களூர் வந்தால் அவசியம் நீங்கள் என் இல்லம் வரவேண்டும், கிருஷ்ணன்குட்டி,’ என்று ஜெயதேவ் விடுத்த அழைப்பில் மென்மை இருந்தது; கனிவு இருந்தது.

ஏனோ கிருஷ்ணன்குட்டிக்கு ஜெயதேவை பிடித்துப் போயிற்று.

– தமிழ் முரசு மீள்பிரசுரம்: திண்ணை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *