கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 31,439 
 

ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து “இதுதான் என் அடுத்த படம். இதற்கு நீங்கள்தான் வசனம்” என்று சொன்னார்.

சிரஞ்சீவி பற்றி அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். அவர் இதற்கு முன் தயாரித்த இரண்டு படங்களுமே ஓரளவுக்கு வசூல் கொடுத்தவை. இப்போது இந்தப் படத்துக்கு அவர்தான் இயக்கம். அவரே ஹீரோ, அவரே தயாரிப்பாளர்!

அந்த டி.வி.டி-யைப் பார்த்த அவன் தன் வாழ்நாளின் உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்தான். காரணம், ‘U Turn’ என்ற அந்தப் படத்தின் கதை அப்படி.

ஜெனிஃபர் லோபஸ் நடித்த அந்தப் படத்தை நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு அதன் விபரீதம் இதற்குள் புரிந்திருக்கும். பார்த்திருக்காவிட்டால் இப்போது அதன் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஒரு ஆளிடம் வாங்கிய மிகப் பெரிய கடனைத் திருப்பித் தருவதற்காக ஒரு பெரும் தொகையை எடுத்துக்கொண்டு போகிறான் பாபி என்ற இளைஞன். இடையில், ஓர் ஊரில் அவனுடைய கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் அவன் நுழைந்த கடையில் நடந்த கொள்ளை முயற்சியில், அவனுடைய பணம் அத்தனையும் பறிபோகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட தவணையில் வட்டி கட்டாததால், அந்த ஈட்டிக்காரன் பாபியின் இரண்டு விரல்களைத் துண்டித்திருக்கிறான். இப்போது சொன்னபடி கொடுக்காவிட்டால் எந்த உறுப்பைத் துண்டிப்பானோ?

அதே ஊரில் வாழும் ஒரு தம்பதி ஜெனிஃபரும் அவளுடைய 54 வயதுக் கணவன் ஜாக்கும். ஜெனிஃபரைக் கொன்றுவிட்டால் பெரும் பணம் கொடுத்து பாபியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதாகச் சொல்கிறான் ஜாக். ஆனால், ஜெனிஃபர் கூறும் கதையோ படுபயங்கரமாக இருக்கிறது. ‘தான் ஜாக்குக்கு மனைவி மட்டும் அல்ல… அவனுடைய மகளும்தான். தன்னைச் சிறு வயதில் இருந்தே பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக்கொண்டு இருக்கும் ஜாக், என் அம்மாவைக் கொன்றுவிட்டு என்னை மனைவியாக வைத்துக்கொண்டு இருக்கிறான்’ என்கிறாள். ”நீ ஜாக்கைக் கொன்றுவிட்டால் உனக்குப் பெரும் தொகை தருகிறேன்” என்று பாபியிடம் சொல்கிறாள் ஜெனி.

கடைசியில் என்ன நடக்கிறது என்பது இப்போது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கதைக்குத் தேவை இல்லை. டி.வி.டி-யைப் பார்த்த ராயன் அடித்துப் பிடித்துக்கொண்டு சிரஞ்சீவியைப் பார்க்க ஓடினான். ஏற்கெனவே இலக்கிய உலகில் அவனுடைய பெயர் கன்னாபின்னா என்று கெட்டுக்கிடந்தது. எப்போதும் பாரிலேயே விழுந்துகிடப்பான்… ஸ்த்ரீலோலன் அப்படி இப்படி என்று அவனைப்பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலவிக்கொண்டு இருந்தன. இதெல்லாம் போதாது என்று கச்சிராயனே ‘இன்செஸ்ட்’டை மையமாகவைத்து ஓரிரண்டு கதைகளை எழுதி இருக்கிறான். போதாதா?

ஆனால், சிரஞ்சீவி பேச்சில் வல்லவர். “கதையை நாம் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றபடி மாற்றிவிடுவோம். கவலையைவிடுங்கள். அப்பாவுக்குப் பதில் மாமா” என்றார்.

“அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? மாமா என்றால் ஜெனி முறைப்பெண் ஆகிவிட மாட்டாளா?”

“சரி, வளர்ப்புத் தந்தை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, கதையின் முடிவில் அந்த வில்லனைக் கொன்றுவிடுவோம். பிறகென்ன?”

கச்சிராயன் யோசனையில் ஆழ்ந்தபோது அவன் கையில் ஒரு பணக்கட்டை வைத்தார் சிரஞ்சீவி. “இது அட்வான்ஸ்தான். 10,000 ரூபா. வசனத்தை முடிச்சிட்டா இன்னொரு 40 குடுத்துர்றேன். இது ரொம்ப சின்ன அமௌன்ட். ஆனா, படம் நிச்சயம் பிச்சுக்கிட்டு ஓடும். அப்போ உங்களைச் செமத்தியா கவனிச்சுர்றேன்.”

அவனுடைய இலக்கிய சகாக்கள் எல்லாம் லகரங்களில் வாங்கிக்கொண்டு இருக்கும்போது,இது என்ன பிசாத்து ஐம்பதாயிரம் என்று யோசித்தான் ராயன். ஆனால், அவன் ஒரு சினிமா பைத்தியம். தவிர, எடுத்த எடுப்பிலேயே பணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தால் இண்டஸ்ட்ரியில் ‘அந்த ஆள் ஒரு வில்லங்கம்’ என்ற பெயர் வந்துவிடும் அல்லவா?

முதலில் கே.கே. நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆபீஸ் போடப்பட்டது. மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் டிஸ்கஷன். அதற்குள்ளாகவே ஓர் உதவி (இயக்குநர்) மதியச் சாப்பாடு வாங்கக் கிளம்பி இருப்பார்.

சிரஞ்சீவியைச் சுற்றி ஆறு உதவிகள் இருந்தனர். இவர்களிடையே சீனியா ரிட்டி உண்டு. ஆக, சீனியராக இருந்தவர் பெயர் நாதன். 65 வயதுக்கு மேல் இருக்கும். பார்க்க அந்தக் காலத்து ‘என்னத்தே கண்ணையா’வைப் போல் இருப்பார். 45 ஆண்டுகளாக உதவி இயக்குநர். ஆரம்ப கட்டத்தில் கச்சிராயனுக்கு இது ஒரு புதிராகவே இருந்தது. பிறகு, போகப் போகக் காரணம் விளங்கிவிட்டது. சிவாஜி மற்றும் அவர்படங் களுக்கு வசனம் எழுதிய தூயவன் போன்றவர்களிடம் எல்லாம் வேலை செய்திருக்கிறார் நாதன். இதில் என்ன விசேஷம் என்றால், தூயவனும் கச்சிராயனின் சொந்த ஊரான நாகூரைச் சேர்ந்தவர்.

நாகூரில் இருந்து பிரபலமானவர்கள் யார்? நாகூர் ஹனிபா தவிர, தூயவன். இவர்களுக்குப் பிறகு நாம்தான் என்ற ஓர் எண்ணம் லேசாகத் தலைதூக்கியது ராயனுக்கு. ஆனால், நாதனைப் பார்க்கும்போது எல்லாம் கொஞ்சம் கலவரமாகும். ஓர் ஆள் 45 ஆண்டுகளாக உதவி இயக்குநராகவே காலம் கழிப்பது என்றால், இது என்ன சினிமா உலகம்?

அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள சபாரி ஹோட்டல் வரை போயிருந்தார் உதவி. அங்கேதான் ஃபிஷ் பிரியாணி நன்றாக இருக்கும். மறுநாள் ஆழ்வார்பேட்டை சாம்கோ உணவகத்தில் இருந்து பிரெய்ன் பிரியாணி வரும். இதே போல் கோடம்பாக்கம், வடபழனி வட்டாரங்களில் உள்ள பல மெஸ்களில் இருந்தும் தருவிக்கப்படும்.

”இதெல்லாம் பரவால்ல சார். முன்னாடி இருந்த டைரக்டர் சபாரில ஃபிஷ் பிரியாணி வாங்கச் சொல்லுவான்; சாம்கோவுல காடை ஃப்ரை; அப்புறம் அங்கேர்ந்து செனடாப்ரோடு தாபா எக்ஸ்பிரஸ்ல ஷாமி கபாப். இப்படி ஒருவேளை சாப்பிடறதுக்கே நாலு கடைக்கு அலையணும். என் சொத்தையே காலி பண்ணிட்டான்” என்று மூக்கால் அழுவார் சிரஞ்சீவி. அந்தப் பழைய இயக்குநர் கொடுத்த டார்ச்சரின் காரணமாகத்தான்இவரே இயக்குவது என்று முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.

இது தவிர, சினிமா துறையில் இருப்பதால் கிடைக்கும் இன்னொரு அனுகூலம், அங்கே கிடைக்கும் அதி பயங்கரமான கிசுகிசுச் செய்திகள். சிரஞ்சீவியின் உதவிகளுள் ஒருவனான கிரி சொன்ன கிசுகிசுவைக் கேட்டு, மூளையே கிறுகிறுத்துப் போனது அவனுக்கு.

இப்போது கிரிக்கு 35 வயது இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவன் சென்னைக்கு வந்த புதிது. சினிமா சான்ஸ் தேடி அலைந்த நண்பர்கள், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள், வேலை தேடிக்கொண்டு இருந்தவர்கள் என்று சிலர் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள்.

ஒரு நாள் இரவு, அவன் அறையில் தங்கியிருந்த ஒருவன் மிகுந்த பதற்றமாக வந்தான். இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் அல்லக்கை அவன். அந்த நடிகரும் அவரது அல்லக்கைகள் சிலரும் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு பீச்சில் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். வரும் வழியில் ஏதோ தோன்ற… கார் நேராக ஓர் அநாதை ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டது. அந்த ஆசிரமத்துக்குப் படியளக்கும் தர்மகர்த்தாக்களில் நடிகரும் ஒருவர். அங்கிருந்த பார்வைஅற்ற ஒரு பெண்ணை காரில் தூக்கிப் போட்டு ஃபார்ம் ஹவுஸ் சென்றுஇருக்கிறார்கள். நாலு பேர். இறுதியாக இவனை அழைத்தார்களாம். இவன் போகும்போது அவளுக்கு மூச்சுப் பேச்சே இல்லை. இவன் பயந்து போய் வெளியே வந்துவிட்டான். இவனைத் தவிர மற்ற எல்லோரும் வி.ஐ.பி. நபர்களின் பிள்ளைகள்.

”ஒருவேளை ஏதாவது பிரச்னை என்றால் நாங்க பணம் தர்றோம். நீ ஸ்டேஷன் போறியா?” என்று கேட்டுஇருக்கிறார்கள். அவன் மிரண்டு போய் இரண்டு நாட்கள் தலைமறை வாக இருந்தான். நல்லவேளை அந்தப் பெண் பிழைத்துக் கொண்டதால் பிரச்னை இல்லாமல் போயிற்று.

”இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். இப்போது அந்த ரூம்மேட்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள்; என்ன செய்கி றார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆசிரமம் இன்னும் இருக்கிறது. அந்த நடிகர் இப்போது ரொம்பப் பிரபலம்” என்று சொல்லி முடித்தான் கிரி.

இதுபோல் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மாதிரி எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

மதிய உணவுக்குப் பிறகு 3 மணிக்கு ஆரம்பித்தால் டிஸ்கஷன் இடைவேளை மாலை 7 மணிக்கு. அதற்குப் பிறகு டிஸ்கஷன் சரக்கோடு துவங்கும். ராயனுக்கும் சிரஞ்சீவிக்கும் ஆர்.சி.கோல்டு. மற்ற உதவிகளுக்கு ஓல்டு மாங்க், எம்.சி.பிராந்தி, எம்.ஜி.எம்.வோட்கா என்று அவரவர் பிரியப்படி வந்துவிடும். ஆனால், உதவிகள் யாரும் ஒரேயடியாகக் குடித்துவிட்டு மட்டையாகிவிட மாட்டார்கள். அந்தச் சலுகை இயக்குநருக்கும் ரைட்டருக்கும் மட்டும்தான்.

எல்லாம் ராணுவ ஒழுங்கோடும் கட்டுக்கோப்புடனும் நடக்கும். இந்த உதவி இயக்குநர்கள் என்ற பிரிவு மட்டும் இல்லாவிட்டால் சினிமா துறையே ஸ்தம்பித்துவிடும். எல்லோரும் சாப்பிட்ட இலைகளை எடுக்க வேண்டும். டீ கிளாஸை எடுக்க வேண்டும். ஆஷ்ட்ரேயைச் சுத்தப்படுத்த வேண்டும். இன்னும் இப்படிநூற்றுக் கணக்கான வேலைகள். எல்லாம் எதற்காக? ஒரு காலத்தில் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர் களைப் போல் ஆக வேண்டும்என்ற கனவுதான்.

சரக்கோடு ஆரம்பிக்கும் இரண் டாவது செஷன் டிஸ்கஷன்தான் இன்னும் சூடாக இருக்கும். சமயங் களில் இரவு 3 மணி வரைக்கும் கூட நீளும். அதிலும் இந்த கிரிக்கும் நாதனுக்கும் ஆகவே ஆகாது. கிரி ஒன்று சொன்னால் நாதன் அதற்கு நேர் எதிராக ஒன்று சொல்வார். சமயங்களில் இரண்டு பேரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொள்வார்களோ என்றுகூடப் பயமாக இருக்கும். இது தவிர, கதை பற்றி இயக்குநர் ஏதாவது சொன்னால் அதற்கும் கட்டையைப் போடுவார் நாதன். கட்டை என்றால் சாதாரண கட்டை அல்ல. பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது குறுக்கே கட்டையைப் போட்டால் எப்படி இருக்கும், அந்த மாதிரி கட்டை.

இயக்குநர் சூடாகி ஏதாவது பதில் சொன்னால், “இவ்வளவும் ஏன் செய்றேன்? படம் ஓட வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு போராடுறேன். டைரக்டருக்கு ஜால்ரா போடணும்னா சொல்லுங்க. நீங்க எது சொன்னா லும் சரி சரின்னு தலை ஆட்டுறேன். எப்படி இருக்கணும் சொல்லுங்க?” என்று இயக்குநரையே மடக்குவார்.

ம்ஹ§ம்… இவ்வளவு தட்டையாகச் சொல்ல மாட்டார். உள்ளமும் உயிரும் கரைந்து உருகுவது போன்ற தொனியுடன் சொல்லுவார். அது நடிப்போ பாவனையோ இல்லை. நிஜம். ஒன்று மட்டும் சொல்கிறேன். சினிமா மீது அவர்களுக்கு இருந்த காதலைப் போல் இந்த உலகத்தில் யாருக்கும் எதன் மீதும் அவ்வளவு காதல் இருக்காது.

அதிலும் நாதன் இந்தப் படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். வில்லன் ஜாக் தன் மனைவியை அதாவது, மகளைக் கற்பழிக்கும்போதும், கொல்ல முயற்சி செய்யும்போதும் நாதன் ஜாக்காகவே மாறி விடுவார். அப்போது கிரிதான் ஜெனியாக நடிப்பான்.
”நாதனின் இந்த இன்வால்வ்மென்ட்தான் இவரை இன்னமும் சகித்துக்கொண்டு இருப்பதன் காரணம்” என்பார் சிரஞ்சீவி.

மேலும், நாதனால் வேறொரு உபயோகமும் இருந்தது. படத்தின் ஒரு கட்டத்தில் விழும் சிக்கலை அவிழ்க்க முடியாமல் உதவி இயக்குநர்கள் எல்லோரும் ஒரு முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் போது, சட்டென்று ஒரு வழியை உருவாக்குவார் நாதன்.

கதையில் ஒரு முக்கியமான கட்டம், ஜெனியை ஜாக் ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிடுவது, ”வில்லன் ஹீரோயினை மலையில் இருந்து தள்ளி விடுவதை ‘மந்திரிகுமாரி’யில் வில்லன் கள்ளபார்ட் நடராஜன் ஏற்கெனவே செய்திருக்கிறார்; அது வேண்டாம்” என்று கட்டை போட்டார் நாதன். அவர் சொல்லித்தான் அந்த விஷயமே மற்றவர்களுக்குத் தெரிந்தது என்றாலும், அந்த ஆட்சேபனை ஏற்கப்பட்டது.

இந்தப் படம் முழுக்கவுமே ஹாலிவுட் படத்தின் ரீ-மேக். அது போதாது என்று பல்வேறு ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைச் சுடுவதற்கென்றே இரண்டு உதவி இயக்குநர்களைக் கொண்ட தனி டிபார்ட்மென்ட் ஒன்று இயங்கியது. இருந்தாலும் ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மற்றொன்றில் வரக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்கள். அப்படி யானால் ஜெனியை வேறு எப்படிக் கொல்வது?

இதற்கு மட்டுமே டிஸ்கஷன் இரண்டு வார காலத்துக்கு ஓடியது. பல்வேறுவிதமான கொலைகள். ராயனுக்கு கொலைக் கனவாக வந்து கொண்டு இருந்தது. கடைசியில் நாதன்தான் வழி சொன்னார். வில்லன் ஹீரோயினை மலை உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது. சிலருக்கு உயரம் ஒப்புக்கொள்ளாது. அது ஒருமாதிரி ஃபோபியா. அதனால் கீழே விழுந்து செத்துப்போகிறாள் ஹீரோயின்.

ஆர்வம் தாங்க முடியாமல் “ஃபோபியான்னா?” என்று வாயைத் திறந்து கேட்டுவிட்டான் கிரி.
குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ”பயம்” என்றார் நாதன். “ஆனால் அந்த ஃபோபியாவுக்கு ஏதோ ஒரு பெயர் இருக்கிறது. அந்தக் காலத்தில் ‘பிரக்ஞை’யில் படித்திருக்கிறேன். மறந்துவிட்டது.”

“அக்ரோஃபோபியா” என்று சிக்ஸர் அடித்தான் கச்சிராயன். கூடியிருந்த அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால், ராயனுக்கு மட்டும் நாதனைப்பற்றி ஆச்சர்யம். ‘அடப்பாவி. பிரக்ஞைஎல்லாம் படித்திருக்கிறாரே இந்த மனுஷன்!’ என்று. 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்துகொண்டு இருந்த ஒரு தீவிரமான இலக்கியப் பத்திரிகை அது.

அன்றைய தினம் எல்லோருக்குமே ஆர்.சி. கோல்டு தருவிக்கப்பட்டது. இதற்கிடையில் வில்ல னுக்கும் ஹீரோயினுக்குமான உறவு தந்தை-மகள் என்று இருக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனமாகவே இருந்து வந்தான் கச்சிராயன். வளர்ப்புத் தந்தையாக இருந்தாலும் அது வேண்டாம் என்றே விவாதித்தான். சித்தப்பா என்று வைக்கலாம் என்பது நாதனின் கட்சி. இப்படியே அப்பா, சித்தப்பா, மாமா என்று அந்த உறவு மாறி மாறிச் சென்றது.

வளர்ப்புத் தந்தை என்று வைக்கலாம் என்பது சிரஞ்சீவியின் வாதம். ”ஒரு பெண் தன் கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று தன் கள்ளக் காதலனை வைத்துத் தீர்த்துக்கட்டவில்லையா? சொசைட்டில என்னென்னமோ நடக்குது. சினிமாவில் காண்பிக்கக் கூடாதா?” என்றார் அவர். இப்போது என்றால், ‘ஒரு பெண் தன் கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட சொந்த மகனையே துண்டுதுண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைக்கவில்லையா?’ என்று கேட்டிருப்பார்.

படத்தின் டயலாக் போர்ஷன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் என்ன உறவு என்று முடிவு செய்யப்படவில்லை. ‘சரி, அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு, நடிகர்களைத் தேடும் படலத்தை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. எவ்வளவு முயன்றும் வில்லன் நடிகருக்குத் தோதான ஆள் கிடைக்கவில்லை. நடிகர் கிடைத்தால் சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை.

கடைசியில் கச்சிராயனே அந்த வில்லன் ரோலைச் செய்வது என்று முடிவாயிற்று. கச்சி ராயனின் வயதும் 54 என்பதால் அதுவும் பொருத்தமாகவே அமைந்தது. திடீரென்று இப்படி நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் அவனுக்கு சந்தோஷமே என்றாலும், இந்த உறவுப் பிரச்னைதான் பெரிய தலைவலியாக இருந்தது.

ஹீரோயின் ஒரு புது நடிகை. நடிகைக்கு வேண்டிய முதல் தகுதி கவர்ச்சியும் அழகும். அது அந்தப் பெண்ணிடம் இருந்தது. ஆனால், மற்ற நடிகைகளிடம் இல்லாத ஒரு புது விஷயமும் அவளிடம் இருந்தது. அவள் மும்பையின் காலா கோடா மார்கில் (கறுப்புக் குதிரைச் சதுக்கம்) நடக்கும் பரீட்சார்த்த நாடகக் குழுக்களில் நடித்துக்கொண்டு இருந்த புத்திஜீவி ரகம்.

‘யு டர்ன்’ என்பதால் சம்மதித்துவிட்டாள். புத்திஜீவி என்பதால் சிகரெட், தண்ணி எல்லாம் உண்டு. சிரஞ்சீவி கோஷ்டியோடு சேர்ந்தே தண்ணி அடித்தாள். இரவு 3 மணி ஆகிவிட்டால் அங்கேயே தூங்கிவிட்டு காலையில்தான் போவாள். சுருக்கமாகச் சொன்னால், ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் பழகினாள்.

நாதன், கச்சிராயன் இருவர் காட்டிலும் மழை. சினிமா டிஸ்கஷனுக்கு ஊடாகவே அந்த மும்பைப் பெண்ணுடன் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (நாடகம்), கீஸ்லோவ்ஸ்கி (சினிமா), ட்சைக்கோவ்ஸ்கி (இசை) போன்ற பல ‘இஸ்கி’களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதித்தார்கள். அந்த விவாதங்களில் மற்றவர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பதை சொல்லத் தேவை இல்லை.

இவ்வாறாக, சுமார் ஆறு மாத காலம் ஓடியது கச்சிராயனின் சினிமா பிரவேசம். படப்பிடிப்புக்கு லொகேஷன்கூடப் பார்த்துவிட்டார்கள். படத் துக்குப் பெயர் வைத்தாகிவிட்டது. ஹீரோ சிரஞ்சீவிக்கும் புதிய நாமகரணம் ஆனது. தெலுங்கில் ஒரு சிரஞ்சீவி சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அதே பெயரில் எப்படி இன்னொரு சிரஞ்சீவி இருக்க முடியும்?

ஒரு கட்டத்தில் மதிய உணவு கே.கே.நகரில் ஒரு சாதாரண மெஸ்ஸில் இருந்து வர ஆரம்பித்தது. தொட்டுக்கொள்ள அவித்த முட்டைகூட இல்லை என்றதும் கச்சிராயன் புரிந்துகொண்டான். கம்பெனியில் பல மாற்றங்கள் தெரிந்தன.

முன்பெல்லாம் ராயனை பிக்கப் பண்ண கார் வரும்.பிறகு, ஓர் உதவி இயக்குநர் அவருடைய அரதப் பழசான ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு வந்து ராயனை அழைத்துப் போனார். பிறகு, அந்த பைக் வருவதும் நின்றுபோனது. கச்சிராயனும் பழையபடி தன்னுடைய இலக்கிய உலகத் துக்குத் திரும்பி வந்து சக இலக்கியவாதிகளுடன் ஹோதாவை ஆரம்பித்தான்.

இதெல்லாம் முடிந்து ஆறு மாதங்கள் இருக்கும். ஒருநாள் எதேச்சையாக கிரியைப்பார்த் தான் கச்சிராயன். ராயனை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வந்த கிரி, ”விஷயம் தெரியுமா சார்?” என்று ஆரம்பித்தான்.

“என்ன?”

“அந்த பாம்பே பொண்ணு இல்ல… நம்ம ஹீரோயின். அதுகிட்ட வேலையைக் காமிச்சுட்டாங்க நம்ம ஆளுங்க. டைரக்டரோ இல்ல அந்த நாதனோதான்… வேற யாரும் செஞ்சிருக்க முடியாது. (வயிற்றைக் கைகளால் சுட்டிக்காட்டி) நாலு மாசம்… உயிருக்கே ரொம்பப் பிரச்னையாப் போய்டுச்சு. டைரக்டர்தான் பேர் கெட்டுரக் கூடாதுன்னு ரொம்ப அலைஞ்சுக் கிட்டு இருந்தாரு… தேவையா இது?”

விஷயத்தைக் கேட்டதும் கச்சிராயனுக்குத் துணுக்கென்றது. அவளிடம் படித்துப் படித்துச் சொன்னோமே, ஐபில் மாத்திரையைப் போட்டுக் கொள்ளச் சொல்லி? போதையில் மறந்துவிட்டாள் போல… அடடா!

– செப்டம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *