(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தமது பள்ளி மாணவரின் ஒழுக்கத்திலே மிகுந்த கருத்துடன் இருந்தார். மாணவர்கள், பள்ளிக்கு வெளியிலோ, பள்ளியிலோ இழிந்த மொழிகளைப் பேசுதல் கூடா தென்றும், பேசுபவர்கள் கடுமையாக ஒறுக்கப்பெறு வார்கள் என்றும் கண்டிப்பான கட்டளை பிறப்பித் திருந்தார். அத் தலைமையாசிரியர் மிகவும் கண்டிப்பானவர். தம் கட்டளையைக் கடைப்பிடித் தொழு காதவர்களை நன்றாக ஒறுப்பார். அல்லது பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவார். மாணவர்கள் அவ் வாசிரியருக்கு மிகவும் அஞ்சி நடந்துகொண்டனர்.
ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை. அன்று தலைமையாசிரியர் கடைத்தெருவுக்கு ஏதோ ஓர் அலுவலாகச் சென்று ஒரு கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு மாணவர்கள் அவ்வழியே போரிட்டுக்கொண்டு (சண்டை போட்டுக்கொண்டு) வந்தனர். அவர்கள் நன்மக்கள் முன்பு பேசத் தகாத மொழிகளைப் பேசி ஒருவரை யொருவர் வைதுகொண்டனர். ஆசிரியர் கடையில் அமர்ந்திருத்தலை அவர்கள் பார்க்கவில்லை.
மறுநாள் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். தலைமை ஆசிரியர் முதனாள் போரிட்டுக்கொண்ட மாணவர்கள் இருவரையும் தமது முன்பு அழைத்தார். அவர்களைப் பார்த்து, “நீங்களிருவரும் பள்ளிக் கூடத்தைவிட்டு நீங்குதல் வேண்டும்; அல்லது, ஒவ்வொருவரும் இருபத்துநான்கு பிரம்படிகள் வீதம் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். பிரம்படிகளில் பாதி கையிலும், பாதி முதுகிலும் கொடுக்கப்பெறும். உங்களுக்கு எது விருப்பம் கூறுங்கள்,” என்று கேட்டார்.
பள்ளியைவிட்டு நீங்கினால் தாய் தந்தையர்களுடைய சினத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சிய மாணவர்கள் பிரம்படியைப் பெற்றுக்கொண்டனர். அதுமுதல் அவர்கள் இழிந்த சொற்களைப் பேசுவதில்லை யென்னும் உறுதியுடன் இருந்து சிறந்த பெருமையை அடைந்தார்கள். ஆகையால், கீழ்மக்கள் பேசக்கூடிய மொழிகளை மேன்மக்கள் பேசுதல் கூடாது.
‘பழிப்பன பகரேல்’ (இ – ள்.) பழிப்பன – அறிவுடையவர்களாலே வெறுத் தொதுக்கப் படுவனவாகிய இழிசொற்களை, பகரேல் – பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955