உள்ளே என்ன இருக்கு?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 4,094 
 
 

ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

“அது என்னங்க?” என்று விசாரித்தான்.

“அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!” என்றார் கடைக்காரர்.

“அப்படின்னா என்னங்க… அது எதுக்கு உபயோகம்?”

“இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!”

“அப்படியா சொல்றீங்க…?”

“ஆமாங்க!”

“அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!”

வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
“சீக்கிரம் இங்கே வா!” என்று மனைவியை அழைத்தான்.

அவள் வந்தாள். கவனித்தாள்.

“என்னங்க இது?”

“இது ஒரு புதுமையான பாத்திரம்!”

“அப்படியா?”

“ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!”

“எதுக்கு இது?” என்று தெரியாதது போல கேட்டாள்.

“இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!”

கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.

மனைவி கேட்டாள்:

“உள்ளே என்ன இருக்கு?”

அவன் சொன்னான்:

“அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!”

“அப்படியா? என்ன அது… சொல்லுங்களேன்.”

“ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!”

மனைவி மயங்கி விழுந்தாள்.

நண்பர்களே!

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

ஆன்மிகம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்குத்தான், தேவை இல்லாத குழப்பங்கள் எல்லாம் வந்து சேர்கின்றன.

“விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?” என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: “விஞ்ஞானம் இருக்கிறதே…. புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!”

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் – விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் – மெய்ஞ்ஞானம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *