கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்  
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 36,498 
 

சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம் சகலசுபிட்சங்களையும் பெற்றுத்திகழ்ந்தது. தனது காலத்திற்குப் பின்னும், தனது குடிமக்கள் மகிழச்சியாக வளமுடன் வாழவேண்டும் என்பது மன்னரின் விருப்பம்.

தனக்கு வயதாகிவிட்டதால் தனதுபுதல்வர்களில் ஒருவருக்கு முடிசூட்ட விரும்பினார். அவருக்கு மூன்று புதல்வர்கள். மூவரும் கலைகள்பல கற்றுத்தேர்ந்த வாலிபப்பருவத்தினர். கலைகளில் தேர்ச்சிமட்டும் போதுமா என்ன? நாடாளத்தேவையான தான்விரும்பும் ஒரு கூடுதல்தகுதியை அவர்தன் புதல்வர்களிடம் எதிர்பார்த்தார்.

அரசவை ஆஸ்தானப்புலவரின் ஆலோசனைப்படி ஒருதி;ட்டம் வகுத்தார். திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் காட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். அவ்வாறு செல்லும்முன்னால் தனதுபுதல்வர்களை அழைத்து, “வயதாகிவிட்டதால் எனக்கு ஆன்மிகநாட்டம் அதிகரித்து விட்டது! வனத்திற்குச்சென்று தவயோகிகளையும் மகான்களையும் தரிசிக்க விரும்புகின்றேன்! திரும்பிவர ஆறுமாத காலம் ஆகும்! அதுவரை நம்ராஜ்யத்தை பிரதானமந்திரி கவனித்துக் கொள்வார்! உங்கள் மூவருக்கும் நான் தனித்தனியே இரண்டு காணிநிலம் ஒதுக்கியுள்ளேன்! உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விளைநிலத்தில் ஒரு போகம் சாகுபடி செய்து பாருங்கள்! மீண்டும் சந்திப்போம்!”- என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.

மூவருக்கும் ஒதுக்கப்பட்ட நிலங்கள் அரண்மனையில் இருந்து வெகுதூரத்தில் அமைந்திருந்தன. மூத்தவன் வசந்தகுமாரன் தன் நிலத்தைச் சென்று பார்த்தான். பல்லக்கில்அமர்ந்து சேவகர்கள் தூக்கிக்கொண்டு போவதாக இருந்தால்கூட தினசரி நிலத்திற்குச் சென்றுவருவது கஷ்டமான விஷயம் என்பது புரிந்தது. இதில் விவசாயம் வேறா? யோசித்துப் பார்த்தான். என்னதான் அரசர் என்றாலும் சொந்தத் தந்தைதானே? சொல்லிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நிலத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்.

அடுத்தவன் நந்தகுமாரன். அவன் தனது ஏவல்ஆட்களிடம் “என்னால் அரண்மனையிலிருந்து தினசரி இங்கு வந்துசெல்ல முடியாது! நீங்கள் பயிரிட்டு வளர்த்து வாருங்கள்! நான் அவ்வப்போது வந்துபார்வையிட்டு செல்கிறேன்! ஞாபகம் இருக்கட்டும்! இது அரசரின் விருப்பம்! எந்தக் குற்றங்குறையும் இல்லாமல் எல்லாம் முறைப்படி நடக்கவேண்டும்”- என்று உத்தரவிட்டுச் சென்றான்.

மூன்றாமவன் சூரியகுமாரன். தனக்குஒதுக்கப்பட்ட நிலத்திலேயே ஒரு தற்காலிகக் குடிலமைத்து அதில்தங்கியபடி நிலத்தில் பாடுபட ஆரம்பித்தான். ஆறுமாதம் கழிந்தது. அரசர் வந்தார். பிரதானமந்திரியிரிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முதல்வேலையாக தனதுபுத்திரர்களை அழைத்துக் கேட்டார். “குமாரர்களே! நீண்ட நாள் கழித்துத் தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி! நான் கூறியபடி நீங்கள் விவசாயம் செய்கிறீர்களா?”- என வனத்திலிருந்து திரும்பும்வழியில் தனதுபுத்திரர்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து விவரங்களையும் விசாரித்து விரல்நுனியில் வைத்துக்கொண்டுதான் கேட்டார்.

“அரசே! நான் பயிர் செய்யவில்லை!” என வசந்தகுமாரன் கூறினான்.

“என்ன காரணம்?”

“அரண்மனையிலிருந்து அந்த நிலத்திற்குச் சென்றுவர மிகுந்த காலநேரமானது! காலம் பொன் போன்றதல்லவா? நான் அதை விரையம்செய்ய விரும்பவில்லை!”- என மிகுந்த சாதுர்யமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு சொன்னான் அவன்.

“காலம் பொன்போன்றது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்! ஆனால், அங்கு செல்லாமல் இங்கே இருந்து அந்தப்பொழுதை எவ்வாறு செலவழித்தாய் எனச் சொல்லமுடியுமா?” அரசரிடமிருந்து இப்படிஒரு எதிர்கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல தடுமாறினான்.

“நானே சொல்றேன்! நீ அந்தநேரத்தை வெற்றுப் பொழுதுபோக்கு அம்சங்களில் செலவழித்தாய்! இது தவறு! ஆக்கப்ப+ர்வமாக எதுவும் செய்யவில்லை!”- என்றார் மன்னர்.

இரண்டாவதுமகன் நந்தகுமாரன், “வேந்தே! தாங்கள் கூறியபடி நான் பயிர் செய்தேன்! விளைந்த நெல்லை ஐம்பதுமூட்டைகளில் கட்டி இங்கே கொண்டு வந்துள்ளேன்! தாங்கள் உத்தரவிட்டால் அவற்றை நம் களஞ்சியத்திற்குக் கொண்டு சென்றுவிடலாம்!” என்றான் பெருமிதமாய்.

“மிக்க நல்லது! அப்புறம் நீ?”- சூர்யகுமாரனை நோக்கி வினவினார் அரசர்.

“அரசே! எனதுநிலத்தில் விளைந்தநெல்லையும் நான் இங்கே கொண்டுவந்துள்ளேன்! ஆனால் அண்ணனைப்போன்று ஐம்பதுமூட்டைகள் அல்ல! வெறும் பத்துமூட்டைகள!;”- என்றான் சற்றுவருத்தம் தோய்ந்தகுரலில்.

மன்னர் பேசத் துவங்கினார். “எனக்குப் பின்னால் யாருக்கு முடிசூட்டுவது என்பதைத் தெரிந்து கொள்ளவே உங்களை விவசாயம் செய்யச் சொன்னேன்! இது ஒரு தேர்வு! தேர்வு என்று சொல்லாமல் வைக்கப்பட்ட தேர்வு! எனது சபை நடவடிக்கைகளைக் கூர்ந்துகவனிப்பவர்களாக இருந்திருப்பின் உங்களாலும் இதை ய+கித்திருக்க முடியும்! இந்தத்தேர்வில் வெற்றிபெற்ற இளையவன் சூர்யகுமாரனே இந்தத்தேசத்தின் அடுத்த ராஜாவாக முடிசூட்டிக் கொள்வான்” -என்றார்.

மன்னர் இதை அறிவித்ததும் சபையில் விஷயமறிந்த ஒன்றிரெண்டு மூத்தஅமைச்சர்கள் தவிர, மற்றவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு எழுந்தது.வசந்தகுமாரன் விடவில்லை. “அரசே! விவசாயம் என்பது ஒருவிவசாயி செய்யவேண்டிய வேலை! ஒரு ராஜகுமாரன் செய்யவேண்டிய வேலை அல்ல! நான் விவசாயம் செய்யாமல்விட்டது பெருங்குற்றமன்று! நானே மூத்தவாரிசு! எனக்கே முடிசூட்டப்பட வேண்டும!;”- என்றான் ஆக்ரோஷமாய்.

“உழவுத்தொழில் நமதுதேசத்தின் உயிர்த்தொழில்! அதை ஒரு ராஜகுமாரன் அறிந்து கொள்ளக்கூட விரும்பாமல் இருப்பது அவலம்! மேலும் இந்த ராஜவாழ்க்கை நிரந்தரம் என்பதுபோல் உள்ளது உன் பேச்சு! ராஜ்யங்கள் வீழ்வதும் அரசன் ஆண்டியாவதும் ஏதோ நடக்காத செயல் அல்ல! உனது தந்தையாகிய எனதுவாழ்விலேயே இது நடந்துள்ளது! சுமார் ஒன்றரை வருடகாலம் தலைமறைவு வாழ்க்கைவாழ்ந்து பிறகு புரட்சிப்படை கொண்டுதான் இழந்தஆட்சியை மீட்டேன்! நீ இந்த சரித்திரத்தை மறந்துவிடக்கூடாது! கடினஉழைப்பிற்கு உடல்ரீதியாகத் தயாராகஇல்லாமல் இருப்பதுகூட பெருங்குற்றமன்று! மனோரீதியாகக் கூட தயாராகஇல்லாமல் இருப்பதுதான் பெருங்குற்றம்! மூத்தவாரிசு என்பதால் மட்டும் முன்னுரிமை அளிக்க முடியாது!” என்றார் மன்னர் தீர்க்கமாக. வசந்தகுமாரன் தலைகவிழ்ந்து கொண்டான்.

“வேந்தே! நான் விளைவித்தது ஐம்பதுமூட்டைகள்! தம்பி விளைவித்ததோ வெறும் பத்துமூட்டைகள்! அதிகம்விளைவித்த என்னை விட்டுவிட்டு தம்பிக்கு முடிசூட்ட நினைப்பது ஏனோ?”- என நந்தகுமாரன் கேட்டான்.

“இந்தமுறை வானம் பொய்த்துவிட்டது! விவசாயிகள் யாருக்கும் விளைச்சல் இல்லை! உனக்கும் அப்படித்தான்! ஆனால் இளவரசர் மனம்நோக வேண்டாம் என்ற எண்ணத்தில் உனதுபணியாட்கள் உனக்குத் தவறான கணக்குத் தந்துவிட்டனர்! நீ அவ்வப்போது மட்டுமே சென்று பார்த்துவந்ததால், அங்குநிலவிய உண்மைநிலவரம் தெரியவில்லை! உன்னைச் சுற்றிஇருப்பவர்கள் ஒரு திரை மாதிரி! அதை ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் ஒருவேந்தனுக்கு அவசியம்! இல்லாவிட்டால் உண்மைகள் பொய்யாகிவிடும்! பொய் உண்மையாகி விடும்! இது ஆபத்தான போக்கு! இதனால் குழப்பங்கள் நிகழும்! நீ இன்னும் அந்தத்திறனில் மேம்படவில்லை! உனக்கு முடிசூட்ட இயலாது!”- என மறுத்தார் மன்னர். நந்தகுமாரனும் தலைக்கவிழ்ந்து கொண்டான்.

மன்னரே தொடர்ந்து பேசினார். “உங்கள் இருவருக்கும் இருந்த அதே தொலைவுதான் இளையவனுக்கும் இருந்தது! அவன் அதைப்பற்றி கவலைப்படவில்லை! தனதுநிலத்திலேயே குடில்அமைத்துத் தங்கிக்கொண்டான்! இளவரசரே நிலத்தில் இறங்கி பாடுபட்டதால் உடனிருந்த பணியாட்கள் கூடுதல் உற்சாகத்துடன் வேலைபார்த்தனர்! இயற்கை பொய்த்துப் போனதால் மகசூல் குறைந்துபோனது! ஆனால் அந்தஉழைப்பு உண்மையானது! அதன்மூலம் என்றைக்கும் பலனளிக்கும் அனுபவம் எனும் பொக்கிஷத்தைக் கற்றுக்கொண்டான்! உட்கார்ந்த இடத்திலேயே ஒரு விஷயத்தைப்பற்றிச் சிந்திப்பதைக்காட்டிலும் அதைக் களத்திலேயே சென்றுசந்திப்பது அரசகுணம்! அதற்கு உண்மை, நேர்மை, துணிவு, அயராதஉழைப்பு வேண்டும்! அது சூர்யகுமாரனிடத்தில் நிறையவே உள்ளது! அவனே இந்ததேசத்தின் மன்னராக முடிசூட்டிக் கொள்ளத் தகுதியானவன்!”- என அரசர் அறிவித்ததும் சபை கரகோஷத்தால் அதிர்ந்தது.

– சிறுவர்மணி இதழிலில் வெளிவந்த கதையாகும் (25.08.2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *