கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 11,554 
 

பஸ் நின்றதும் கண்களைச் சுருக்கிப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘ஜீவானந்த நகர்’ என்று படித்ததும், அவசர அவசரமாக இறங்கினேன். பஸ் கண்டக்டர் வேறு, ‘‘வீட்டிலே சொல்லிட்டு வந்திட்டாயா? முன்னாடி இறங்கறதுக்கு என்ன? பேஜாரு!’’ என்று முத்தாய்ப்பு வைத்து வாழ்த்தினான்.

என் பிழைப்பையே படமெடுத்துத் தந்து விட்டேனோ? வீட்டிலே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். என்னவென்று? இந்த ஓர் இடமும் நேரவில்லையென்றால் இனி ஜாதகமே கையில் எடுக்க மாட்டேன் என்று!

முன்னாடி இறங்குவதற்கு என்ன என்றானே அந்த பஸ்காரன். நான் எவ்வளவோ இறங்கித்தான் வந்து விட்டேன். நடுத்தர வர்க்கத்து பிராம்மண குடும்பஸ்தன் கதி பரிதாபம்தான்! கிடைத்த சம்பளத்தில் மூன்று பெண்களையும் படிக்க வைத்து, வேலைக்கு அலைந்து, தேடித்தந்து, பிறகு வரன் தேடித் திரிந்து, எத்துணை கால உழைப்பையும் ஊதியத்தையும் சேர்த்து, கண்ணின் இமைக்குள் வைத்து வளர்த்த செல்வங்களைப் பிறரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் க்ஷேமமாக இருப்பார்களா என்று ஜோசியம் பார்க்கும் அளவுக்கு இறங்கி விட்டேனே? சம்பந்திகள் இட்ட கட்டளைகளுக்குப் பெருமாள் மாடு மாதிரித் தலை ஆட்டிக்கொண்டு, மாப்பிள்ளை ஆட்டும் கோலுக்கு நர்த்தனமாடிக் கொண்டு, பெண்களின் கண் பிசைதலுக்குப் பயந்து கொண்டு…

சரி, இந்தக் கடைக்குட்டி சரயுவுக்காவது கல்யாணம் செய்யாமல், அவளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேனே? அதற்கும் மனம் துணியவில்லை. கடமையில் தவறி விடுவதாக ஓர் உறுத்தல் உள்ளத்தை அரிக்கிறது. இதோ கிளம்பி விட்டேன்.

செவ்வாய் தோஷ ஜாதகங்கள் கிடைப்பது கடினம். மிக மிக நன்றாகப் பொருந்தியிருக்கிறதாம். எங்கள் ஜோசியர் சொல்லிவிட்டார். அவர்கள் ஜோசியரும் ஆமோதிக்க வேண்டுமே? பிறகல்லவா பேசலாம். எனக்கும் என் மனைவிக்கும் யார் ஜாதகம் பார்த்தார்கள்? பையன் நல்ல குடும்பம், பிழைத்துக் கொள்வான், ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பார்த்தார் என் மாமனார். என் அப்பாவைக் கேட்டார். பெண் அடக்கம், வீட்டு வேலைகளை நிர்வகிப்பாள், பார்க்கப் பரவாயில்லை என்று என் அப்பாவும் ஒப்புக் கொண்டார். அவ்வளவுதான். எங்கள் முப்பது வருட தாம்பத்தியத்தில் ஒரு நாள் கூட பெரிய உரசல் ஏதுமில்லை.

இந்தக் காலத்தில் பையனும் பெண்ணும் தாமாகவே பார்த்து, விரும்பி மணம் முடிக்கின்றனர். என்னைப் போல் எத்தனை பேர் அப்படியுமில்லாமல், இப்படியுமில்லாமல் ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு அலைகிறோம்!

என் சிந்தனைகள் எனக்குத் துணை இருந்தன போலும்! வேகமாக நடந்து வந்து விட்டேன். சிவப்புக் கட்டடம். வீட்டிற்கு வெளியே கார்ப்பரேஷன் வைத்த செடி கூண்டில் வளர முயன்று கொண்டிருந்தது. அடையாளம் சரியாக இருக்கவே, நேரே போனேன். சந்தேகத்திற்கு இடமில்லாமல், பளபளவென்று பிற்பகல் வெயிலில் மின்னிய இரண்டு பித்தளைத் தகடுகளில், ஒன்றில் ‘கே.நடேசன்’ என்றும் மற்றதில் ‘டாக்டர் என்.முரளி’ என்றும் செதுக்கியிருப்பதைக் கண்டு, வெளிக்கதவைத் திறக்கலானேன். நன்றாகத் திறக்க முடியாமல் அங்கே நின்ற காரின் பின்புறம் மோதியது கதவு. மெள்ள வளைந்து உள்ளே நுழைந்து, கதவைப் பழையபடி மூடிய பிறகுதான் உள்ளே அடி எடுத்து வைக்க முடிந்தது.

நந்தியை விலகச் சொல்லி அன்று நந்தன் பாடி விட்டான். இன்று எனக்கே அவ்வளவு திறமை? அந்த அம்பாஸிடர் காரைக் கட்டித் தழுவி முன்புறம் வந்தேன். ஒரு தினுசாகப் படிக்கட்டைப் பிடித்து ஏறி, வீட்டின் கதவிலிருந்த ‘விளிமணியை’ அழுத்தினேன்.

‘‘யாரது?’’ என்ற கேள்வியைப் பின்தொடர்ந்து ஒரு பெண்மணி கதவை மெதுவாகத் திறந்தாள். கார் மீது பின்புறமாக விழாமல் சமாளித்து ‘‘நான் மகாதேவன். மயிலாப்பூர் சாலைத் தெருவிலிருந்து…’’ என்று நான் கூறி முடிப்பதற்குள் அந்த அம்மாள் கதவை நன்றாகத் திறந்து ‘‘வாருங்கள்’’ என்று அழைத்தாள். ‘‘உங்கள் ஃபோன் வந்தது. இவர் வீட்டில்தான் இருக்கிறார்’’ என்று கூறிவிட்டு, மாடிக்கு இன்டர்காமில் தகவல் சொன்னாள். என்னை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு உள்ளே போய் விட்டாள்.

டாக்டர் முரளியின் தகப்பனார் இறங்கி வந்தார். புதிய மாதிரி ஃப்ரேம் போட்ட கண்ணாடி, துல்லிய பாலியெஸ்டர் வேட்டி, அரைக்கை பட்டுச் சட்டை, பார்க்க கம்பீரமாக இருந்தார் நடேசன். நான் என் உடைகளை ஒரு தரம் கண்ணோட்டம் விட்டேன். மடிப்புக் கலைந்து, பஸ்சில் நசுங்கி என்னைப் போலவே ஜீவனும் இல்லாமல் ஆனந்தமும் இல்லாமல் காணப்பட்டது.

கைகூப்பி வரவேற்றார் நடேசன். நான் எழுந்து பவ்யமாக மறு வணக்கம் செலுத்தினேன். ‘‘உட்காருங்க’’ என்று என் இருக்கையைக் காட்டிவிட்டு அவர் தானும் அமர்ந்தார். பீங்கான் கோப்பைகளில் மணக்கும் காபியுடன் வீட்டு அம்மாள் வந்து, எங்கள் இருவரிடமும் நீட்டிவிட்டுத் தானும் ஒரு கோப்பையை எடுத்தவாறு எதிரே ஓர் இருக்கையில் அமர்ந்தாள்.

‘‘நாங்க இன்னமும் ஜாதகம் பார்க்கலை. உங்களுக்குச் சரியாக இருகிறதாக்கு?’’ என்று கேட்டார் நடேசன்.

‘வேண்டாம்’ என்று மறுப்பதற்கு ஓர் அஸ்திரமாக ஜாதகத்தை வைத்திருக்கிறார்களா, உண்மையிலேயே பார்க்கவில்லையா? ஒன்றும் புரியவில்லை.

நானும் சாவதானமாக, ‘‘என் ஜோசியர்படி நல்ல பொருத்தம். அங்கேயும் பார்த்துச் சொல்லிட்டா. மேற்கொண்டு வேலைகளைக் கவனிக்கலாம். சத்திரம் கிடைக்க ஒரு தபசே இருக்கணும்’’ என்றேன்.

தாங்கள் தயாராக இல்லையென்றால், என்னை இன்று வரச் சொல்லுவானேன்? தொலைபேசியிலேயே தகவல் தரக் கூடாது? அவர்கள் பிள்ளை வீட்டுக்காரர்கள்! என் பெண் செவ்வாய் தோஷ ஜாதகம்! நான் மவுனமாகத் தலை கவிழ்ந்தேன். அவர்கள் என்ன பதில் சொல்வார்களோ என்று என் செவி மட்டும் கூர்மையாகக் காத்தது.

‘‘பையன் பெண்ணைப் பார்க்கட்டுமே?’’ என்றார் நடேசன்.

‘‘இந்தக் காலத்தில் பெண்கள் வயது வந்தவர்கள். பார்த்த பிறகு ஜாதகம் சரியில்லை என்று விடுவது உசிதமில்லை அல்லவா? உங்கள் ஜோசியர் பச்சைக் கொடி காட்டட்டும், நாம் பிறகு பேசுவோம்’’ என்று கூறிவிட்டு நான் எழுந்திருக்கலானேன்.

‘‘காபி சாப்பிடுங்கோ, ஆறிப் போயிடும்’’ என்றாள் பையனின் தாய்.

‘‘பையனைப் பற்றி நீங்கள் ஒன்றுமே கேட்கவில்லையே. அவன் மணிபாலில் படித்துப் பட்டம் பெற்றான். வெளிநாட்டுப் பரீட்சைகளும் எழுதியிருக்கிறான்’’ என்று நடேசன் துவங்கினார்.

மரியாதை கருதி காபியை அருந்தியவாறே சிந்திக்க ஆரம்பித்தேன். இதைத் தவிர வேறே செவ்வாய் தோஷ ஜாதகம் ஏதாவது கைவசமுண்டா என்று நான் எண்ணமிட்ட வண்ணம் இருந்தபடியால், அவர்கள் பேசியதில் பாதிக்குமேல் என் மனதில் பதியவில்லை.

‘‘இதெல்லாம் அவன் வாங்கின பரிசுகள்’’ என்று ஸ்ரீமதி நடேசன் சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடி பீரோவைக் காட்டினாள். இரண்டு பதக்கங்கள், இரண்டு கோப்பைகள், ஏதோ இருப்பதைக் கண்டேன்.

‘‘பையன் சில கொள்கைகள் வைத்திருக்கிறான். நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே, சொல்லி விடுகிறேன். நம்ப சம்பிரதாயப்படி பெண் பார்க்கும் படலம் அவனுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது பொது இடத்தில் பார்க்கலாம் என்கிறான். பெண்ணோடு சில வார்த்தைகள் பேச வேண்டுமாம்…’’ அவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள்.

நான் இடைமறித்து, ‘‘பிராப்தமிருந்தால் பார்ப்போம், எனக்கு ஒரு கார்டு போட்டு விடுங்கள்’’ என்று கூறிவிட்டுக் காபி கோப்பையைக் கீழே வைத்தேன்.

தம்பதிகள் எழுந்து வழியனுப்ப வெளியே வந்தனர்.

மறுபடியும் முதற்படியில் ஒரு சர்க்கஸ். காரின் முகப்பின் மீது ஒரு கை வைத்தவாறு வெளிக்கதவை எட்டி விட்டேன்.

‘‘இன்னும் காருக்கு ஷெட் கட்டலையாக்கும்’’ என்று என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘‘இந்தக் காலத்தில் கண் மறைவாக காரைப் பூட்டி வைத்து விட்டுத் தூங்கினால் அவ்வளவுதான்!’’ என்றார் நடேசன்.

என் கண் முன், வீட்டின் பக்கவாட்டில் காலியாகக் கிடந்த பத்தடி நிலம் பரவி நின்றது.

கேட்டை மூடிவிட்டுத் தெருவில் நின்று ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வீடு நோக்கிக் கிளம்பினேன்.

ஊரைவிட்டு எங்கேயோ தொலை தூரத்தில் வீட்டைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

அவர்கள் சொந்தக் காரில் பவனி வருவார்கள். என்னைப் போன்றவர்களோ?

இனி இப்படி எட்டாத இடத்தில் வரன் இருந்தால் நான் அந்த ஜாதகத்தைத் தொடக் கூடப் போவதில்லை! இப்படி ஓர் உறுதி எடுத்த பிறகு எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது, வேகமாக நடந்து பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். பஸ்ஸும் வந்தது. ஏறி அமர்ந்து வீடு வந்து சேர்ந்தேன்.

என் மனைவி ஆவலோடு எதிரே வந்தாள்.

உதட்டைப் பிதுக்கி விட்டு என் சாய்வு நாற்காலியில் பொத்தென்று விழுந்தேன்.

‘‘என்ன ஆச்சு?’’

‘‘ஒன்றுமே ஆகலை. அழகான வீடு கட்டியிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே ஒருத்தரோடு ஒருத்தர் டெலிஃபோனில் பேசிக் கொள்கிறார்கள். நல்ல காபி தருகிறார்கள். இதுதான் இன்று கிடைத்த ஞானம்’’ என்று எரிச்சலுடன் பதிலளித்தேன்.

அவள் இங்கிதமாக அப்பால் போய்விட்டாள்.

மெல்ல மின் விசிறி இயங்கியது, நான் கண்ணை மூடி ஆகவாசப் படுத்திக்கொண்டேன். ஏமாற்றத்தின் கைப்பு ஓரளவு அடங்கியது.

நான் யாருடனும் எதைப் பற்றியும் பேசவில்லை. என் பெண் சரயு கூட என்னிடம் ஏதும் கேட்கவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து அலுத்து வந்த அவள், கை, கால், முகம் கழுவி, என் எதிரே அமர்ந்தாள். ரிகார்டரில் இதமான சங்கீதம் போட்டாள். வயலின் இசை மிருதுவாக என் நரம்புகளை வருடிக் கொடுத்தது. கண்களை மூடியபடி படுத்திருந்த நான், மெல்லத் திருட்டுத்தனமாக ஒரு கண் இமையை விலக்கி அவள் முகத்தை நோட்டம் விட்டேன். சஞ்சலமின்றி இளம் புன்னகை ஒன்று முகத்தில் தவழ, அவள் சங்கீதத்தை ரசித்தாள். கால்களை நீட்டிக் கிழவி போல நீவி விட்டுக் கொண்டாள்.

‘‘ஏன் அம்மா, கால் வலிக்கிறதா?’’ என்று கரிசனத்தோடு கேட்டு அவள் தாய் அவளுக்குப் பலகாரம், காபியைத் தந்தாள்.

‘‘நாலு ஆபரேஷன், இரண்டு எமர்ஜென்ஸி கேஸ் அட்மிஷன், தவிர வழக்கமான நடை. மூணு நர்ஸ் லீவு’’ என்றாள் சரயு சுருக்கமாக.

‘‘பேசாமல் உன் பெரிய அக்கா மாதிரி பாங்க் வேலைக்குப் போயிருக்கலாம். இல்லையோ, சின்னவ மாதிரி டீச்சராகியிருக்கலாம்… ஓய்வே இல்லாத வேலையைத் தேர்ந்தெடுத்திட்டே’’ என்றாள் தாய்.

‘‘சரி அம்மா, எல்லாரும் பாங்கிலேயே உட்கார்ந்திட்டும், பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டுமிருந்தா, யார் நோயாளிகளைப் பார்த்துக்குவா? நீதானே சொன்னே… அப்பா ஆஸ்பத்திரியிலே இருந்தப்ப அந்த நர்ஸ் ஒவ்வொருத்தியும் உனக்குப் பெண் மாதிரி இருந்தான்னு?’’ பெண், தாயின் வாயை மடக்கி அனுப்பிவிட்டாள்.

எனக்கும் என் குழந்தையின் அலுப்பைப் பார்த்துக் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவளேதான் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்தாள். வாய்ப்புக் கிடைத்தால் டாக்டராகக் கூடப் போக ஆசைப்பட்டாள். பெண் வேலைக்குப் போக வேண்டும்’’ என்று இரண்டு, மூன்று நபர்கள் கேட்ட பிறகுதான் பெரியவளை வேலைக்கு அனுப்பினேன். பிறகு இருவருக்கும் தொழில் கல்வியே கற்றுக் கொடுத்தேன்.

நான் உறங்கி விட்டேன் போலும். உணவருந்த அழைத்த பின் எழுந்தேன். சாப்பாடு முடிந்ததும் யாருடனும் பேசாமல் படுக்கைக்கே விரைந்தேன். சற்றைக்கெல்லாம் என் நெற்றி மீது இதமாக ஒரு கை வருடியது.

என் மகள் என் நாடியைப் பார்த்தாள். அடுத்தபடி இரத்த அழுத்தம் பார்ப்பாள். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

‘‘என்ன அப்பா, என்ன நடந்தது? ஏன் இப்படிப் படபடப்பு வந்து விட்டது?’’ என்று அவள் பரிவுடன் விசாரித்தாள்.

‘‘ஒன்றுமில்லை அம்மா.’’

‘‘சோர்ந்து போவதிலே பயன் என்ன அப்பா? அநாவசியமாகக் கவலைப் படறீங்க நீங்க.’’

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டுமென்று நான் பாடுபடுவது அநாவசியமான கவலையா?

மறுநாள் காலை எழுந்ததுமே சோர்வு தொடர்ந்தது. அதனால் பல்துலக்கி, காபி அருந்தி விட்டு மீண்டும் படுத்து உறங்கி விட்டேன். சரயு வேலைக்குப் போய் விட்டாள் போலும்.

எதிர் வீட்டில் எனக்காக போன் வந்திருப்பதாக என்னை எழுப்பவே, அதிசயப்பட்டபடியே அங்கு சென்றேன். நடேசன்தான் பேசினார். ‘‘இந்த நம்பரில் என்னைக் கூப்பிடலாம்னு எப்படித் தெரிந்தது?’’ என்று முதலில் வியப்புடன் கேட்டேன்.

‘‘அங்கே இருப்பது என்னுடைய பள்ளித் தோழன்னு நேற்று திடீர்னு தெரிஞ்சது. இப்பப் பேச வசதியாச்சு’’ என்று நடேசன் சகஜமாகப் பேசினார்.

‘‘அப்படியா? சொல்லுங்க’’ என்றேன்.

‘‘உங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா இன்னிக்கு மாலை காந்திஜி சிலைக்கருகே உங்கள் பெண்ணை அழைச்சிண்டு வரமுடியுமா? என் மனைவியும் நானும் பையனைக் கூட்டிக் கொண்டு வருகிறோம்’’ என்றார்.

‘‘ஜாதகம் பார்த்தாச்சா?’’ என்று நான் எச்சரிக்கையுடன் கேட்டேன்.

‘‘ஆச்சு, நீங்க எங்க வீட்டுக்கு வந்து விட்டுப் போன பிறகு, உடனே கார் எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்தேன். அங்கேதான் என் நண்பனை, அதாவது உங்க எதிர் வீட்டுக்காரனைப் பார்க்க நேர்ந்தது’’ என்று அவர் விவரித்தார்.

‘‘சரி, நான் வீட்டுக்குப் போய்க் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன். என் பெண் வேலைக்குப் போயாச்சு.’’

நான் டெலிஃபோனை வைத்துவிட்டு அந்த வீட்டு மனிதர்களிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினேன்.

‘‘என்ன சொன்னான், நடேசன்?’’ என்று அவர் கேட்ட பிறகு விவரமெல்லாம் கூறினேன்.

‘‘நான் சொன்னேன் அவனுக்கு – சரயு மாதிரிப் பெண் கிடைப்பது கஷ்டம் என்று.’’

‘‘பிராப்தம் எப்படியோ?’’ என்று வழ வழவென்று பதில் தந்து விட்டு என் வீடு திரும்பினேன். என் மனைவியுடன் பேசி முடித்து, பெண்ணைப் போய்ப் பார்த்துச் சொல்லிவிட்டு வந்தேன்.

வீட்டிலேயே கொஞ்சம் தித்திப்பு, காரம் பட்சணங்கள் செய்து முடித்தாள் என் மனைவி.

மாலை நாங்கள் மூவரும் கடற்கரைக்குச் சென்றோம். காந்திஜி சிலையருகில் படிக்கட்டுகளில் அவர்கள் மகன் முரளி, மகள் ரத்தினா சகிதம் காத்திருந்தனர். நான் பரஸ்பரம் எல்லோரையும் அறிமுகப்படுத்தினேன். பிறகு மௌனமாக எல்லோரும் மணற்பரப்பை அடைந்தோம்.

‘‘எல்லாரும் உட்காரலாமே?’’ என்று நடேசன் தொடங்கினார்.

முதலில் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. என் மனைவி பட்சணங்களை எடுத்துக் காகிதத் தட்டுகளில் பரிமாறி உபசரிக்கத் தொடங்கியதும் எல்லோருக்கும் பேசத் தோன்றியது.

டாக்டர் முரளி, சரயுவைப் பார்த்து நேரடியாகப் பேசினான். ‘‘எந்தக் காலேஜிலே படிச்சீங்க?’’ என்று கேட்டான்.

‘‘க்வீன் மேரீஸ்தான். நீங்க?’’ என்று அவளும் சகஜமாகப் பேசினாள்.

நடேசன், சரயுவைப் பாடச் சொன்னார். அவள் தேவாரம் ஒன்றைப் பாடினாள். பேச்சு களை கட்டி விட்டது.

‘‘என்ன நகை போடப் போறீங்க?’’ என்று முரளியின் தாயார் ஆரம்பித்தாள்.

என் மனைவி சொன்னாள்.

‘‘பதினைந்து பவுன்தானா? எங்கப் பொண்ணுக்கு இருபது போட்டோம். தவிர மாப்பிள்ளைக்கு மைனர் செயின், மோதிரம் இதெல்லாம் பழக்கம்தானே?’’ என்றாள் அந்த அம்மாள்.

‘‘மற்ற இரண்டு பெண்ணுக்கும் பத்து பவுன்தான் போட முடிந்தது. இவள் சம்பாத்தியத்தைச் சேர்த்துத்தான் ஐந்து மேலே போட முடிகிறது’’ என்று விளக்கினேன் நான்.

‘‘நாங்க வரதட்சிணை வாங்க மாட்டோம்.’’

‘‘உங்களுக்கு வேளச்சேரியிலே ஒரு வீடு இருக்கிறதாமே?’’ என்று ஆரம்பித்தாள் முரளியின் தாயார்.

டாக்டர் என்னைச் சட்டென்று உன்னினான்.

நான் அவர்களுக்கு உடனே பதில் சொல்லவில்லை. என் மகளைப் பார்த்து, ‘‘சரயு, நீ என்ன சொல்றே? தனியாகச் சொல்றதானால் உன் அம்மாவை அந்தண்டை அழைச்சிண்டு போய்ச் சொல்லு…’’ என்றேன். முடிவை அவள் கையில் விடலாம் என்ற நோக்கம் எனக்கு. அவள் மட்டும் மனப்பூர்வமாக அந்தப் பையனை விரும்பினால், நான் என் வீட்டை விட்டுத் தரத் தயாராக இருந்தேன்.

‘‘டாக்டருக்கு என்ன பிளட் குரூப் கேளுங்க, அப்பா’’ என்றாள் அவள், சம்பந்தமில்லாமல்.

‘‘ஏன் கேட்கிறே?’’ என்றேன், ஆச்சரியத்துடன்.

‘‘எனக்கு RH ஃபாக்டர் இருக்குதே? நீங்க ஜாதகப் பொருத்தத்தையே பார்க்கிறீங்க. அதிலேயே ஒருத்தர் சொன்ன மாதிரி ஒருத்தர் சொல்லலைன்னு பேசிக்கிறீங்க. வைத்தியத்திலே அப்படி இல்லை, அப்பா. சில ரத்தம்தான் சேரும். அந்த வித்தியாசத்திலே எத்தனை தாம்பத்தியம் திண்டாடிப் போறது அப்பா! டாக்டரைக் கேளுங்க. எங்க க்ளினிக்கிலே பல கேசு…’’ என்றாள் சரயு நிதானமாக.

‘‘என்ன இப்படிப் பேசறா உங்க பெண்? நினைச்சுப் பார்த்தால் அசிங்கமாக இல்லை?’’ என்று வெகுண்டு எழுந்தான் டாக்டர் முரளி.

‘‘இந்தக் காலத்துப் பெண்களுக்கு வெட்கமே இல்லை’’ என்றாள் அவனுடைய தாய்.

‘‘புத்திசாலியாகத்தானே பேசினா, அண்ணா… உன் பிளட் குரூப் சொல்லேன்’’ என்று இடைமறித்தாள் அவர்கள் பெண் ரத்தினா.

‘‘ரத்னா!’’ என்று கோபமாகப் பெண்ணை அடக்கினார் நடேசன். அவள் பயந்துப் பின்பக்கமாக நகர்ந்து விட்டாள்.

‘‘என்ன அம்மா சரயு, இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால், நானே மாமியிடம் ரகசியமாக விசாரித்திருப்பேனே? பார், அவர் உன்னைத் தப்பா எடை போடறா?’’ என்று என் மனைவி, மிக்க துக்கத்துடன் தன் மகளிடம் கெஞ்சினாள்.

நடேசன் மேல் துண்டை எடுத்து உருவிப் போட்டுக்கொண்டார். ‘‘சார், நீங்களும் நானும் பேசுவோம். எனக்குப் பளிச்சென்று பேசத்தான் தெரியும். என் பையன் ஓரளவு நன்றாகக் கால் ஊன்றி விட்டான். நாங்க இருக்கிற வேளச்சேரி வட்டாரத்திலே ஒரு நல்ல மருத்துவமனை தேவைப்படுகிறது. எனக்கு இன்னுமொரு பெண் கல்யாணத்துக்கு இருக்கிறாள். அதனால் அந்த வசதியை அவனுக்குச் செய்து கொடுக்க முடியவில்லை. உங்க வீட்டை உங்க பெண் மீது எழுதி வைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் பெண்தானே வாழப் போகிறாள்…? செவ்வாய் தோஷ ஜாதகம்… நர்ஸ் வேலை பார்த்த பெண்…’’ என்று கூறி நிறுத்தினார்.

‘‘ஏன், நர்ஸ் வேலைக்கு என்ன? புனிதமான தொழிலை அவளே தேர்ந்தெடுத்தா’’ என்றேன் பெருமையாக.

‘‘புனிதம்தான். இலட்சியவாதத்துக்குச் சரிதான். ஆனால் எத்தனை பேர் அழுக்கையெல்லாம் அப்புறப்படுத்தியிருப்பாள்! அதை நினைச்சா ரொம்ப பேர் யோசிப்பாளே?’’ என்றாள் திருமதி நடேசன்.

நான் என் மகளைப் பார்த்தேன். அவள் கண்களில் தீ மூள்வது புரிந்தது. ‘‘டாக்டர் தொழில் மட்டும்?’’ என்று அவள் அந்த அம்மாளைப் பார்த்துக் கேட்டு விட்டாள்.

எனக்குக் கள் வார்த்தது போல ஆகிவிட்டது. அவரைப் போலவே நானும் என் மேல் துண்டை மடித்து நின்றேன். ‘‘நல்ல இதமான சூழ்நிலையிலே இருக்கிறோம். இப்படியே பிரிவோம் சார். எனக்கு வேளச்சேரியிலே ஒரு சிறிய வீடு இருக்கிறது. நாங்க இரண்டு பேரும் வயதான காலத்தில் இருக்க ஒரு நிழல். அதில் இப்பொழுது இருந்தால் செலவுக்குப் பணம் குறையும். வட்டி கட்ட வேண்டும். நான் சாதாரண நடுத்தர வர்க்கத்து மனிதன் சார். நிறைய வாடகைக்கு அதை யாருக்கோ கொடுத்து விட்டு, நான் சொற்பக் குடிக் கூலியில், அற்ப வசதியுடன் ஒண்டுக் குடித்தனம் நடத்துகிறேன் சார்.’’

‘‘நமக்கு ஒத்து வராது சார். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். உங்கள் வீட்டு வாசலில் கார் நிறுத்தியிருந்த விதம் ஒன்றே என்னை விரட்டியிருக்க வேண்டும். வீட்டைத் தேடி வருபவர்களைத் தாராளமாக வரவேற்காமல், ஒரு பெரிய நந்தியைக் குறுக்கே நிறுத்தினதில் புரிகிறது, உங்களுக்கு அடுத்தவர்கள் மனநிலை பற்றிக் கவலை கிடையாது என்று. சொத்து மீது அபார ஆசை. போதும் சார் உங்களுக்கு எவ்வளவு பணம் இருந்தால் எனக்கு என்ன சார்? மனம் விசாலமில்லாத வீட்டில் என் பெண்ணுக்குப் புழுக்கமாகி விடும்.”

‘‘செவ்வா…’’

‘‘செவ்வாய் தோஷம் கிடக்கட்டும் சார், என் பெண்ணுக்கு நல்ல இன்பமான, நிறைவான வாழ்க்கை வேண்டும்.’’

‘‘அதுதான் முக்கியம். நானும் என் உடம்பிலே யுகயுகமாக ஊறிவிட்ட பழக்கத்தில் அவளுக்கு மண வாழ்க்கையில் ஒரு பாதுகாப்புத் தேடியது உண்மைதான். பாதுகாப்பு என்ன பெரிய பாதுகாப்பு! நீங்க ஒரு நல்ல யோசனை சொன்னீங்க. வீட்டை அவள் பேரிலே எழுதி வச்சிடறேன். தாங்க்ஸ் சார். என் புத்தியைத் தெளிவு படுத்திட்டீங்க. அவள் தன் தொழில் செய்து கொண்டு பிறர் கஷ்டத்தை நீக்கிக் கொண்டு வாழட்டும்.’’ நான் படபடப்பாய் பேசிவிட்டேன். என் மூச்சு வாங்கியது. முகம் சிவந்தது.

வைத்தியனின் நுண்ணறிவுடன் முரளி சட்டென்று என் நாடியைப் பார்த்தான்.

சரயு அதற்குள் என்னைத் தழுவியபடி அமரவைத்து, ‘‘எதுக்கு, அப்பா நீங்க உணர்ச்சி வசப்படறீங்க? நீங்க இனி செய்யப் போறதையெல்லாம் இப்ப விஸ்தரிக்கணுமா? ‘சரிப்படலை’ன்னா போச்சு’’ என்று அன்புடன் கடிந்தாள்.

என் மனைவி தன் தலைப்பால் என் முகத்தை விசிறினாள்.

‘‘வாடா முரளி, அவர் கையை விடு’’ என்று கட்டளையிட்டார் தந்தை.

அவன் என் கையைப் பார்த்து விட்டு ‘‘ஹார்ட்?’’ என்று முடிக்காமல் சரயுவைக் கேட்டான்.

‘‘ஆமாம்’’ என்று என் மகள் கண் இமைத்தாள்.

அவன் வேகமாக நடந்து செல்லும் தன் பெற்றோரைப் பின்பற்றவும் முடியாமல், எங்களை அப்படியே விட்டு விடவும் துணியாமல் தவித்தான்.

‘‘நீங்க போங்க. எனக்குப் பழக்கம்தான். பார்த்துக் கொள்கிறேன்’’ என்றாள் சரயு.

அவன் கை கூப்பிவிட்டு விடை பெற்றான். இப்பொழுது அவன் முகத்தில் ஒரு கனிவு இருந்தது. நான் ஆசுவாசமடையும் வரை அவன் என் அருகில் இருந்தான். பிறகு ‘‘மிஸ் சரயு, என் பிளட் குரூப் கூட…’’ என்று ஆரம்பித்தவனை சரயு கை அமர்த்தி நிறுத்தி விட்டாள்.

‘‘இனித் தேவையில்லை, நான் இனி கன்னியாகவே இருப்பதாகத் தீர்மானித்து விட்டேன். என தகப்பனாருக்கு ஒரு மகன் இல்லை. அப்படி ஒருவன் இருந்திருந்தால், அவன் என் அப்பா, அம்மாவைக் கவனிப்பான். அவன் கடமை தவறினாலும், ஊரார் அவனைச் சொல்லிச் செய்ய வைப்பார்கள். இன்றைக்கு இவ்வளவு விஸ்தாரமாகப் பேசிய பிறகுதான் எனக்கு எல்லாம் தெள்ளெனப் புரிந்தது. நான் இனி என் பெற்றோருக்கு ஒரு பிள்ளை’’ என்றாள் சரயு தீர்மானமாக.

‘‘எனக்கும் இன்றைக்குப் பல விஷயம் புரிந்தது. நீங்க சொல்வது போல ரத்த க்ரூப் கவனிக்க வேண்டியதுதான்.’’

நடேசன் தூர நின்று மகனுக்காகக் காத்திருப்பது தெரிந்தது. ரத்தினா ஓடோடி வந்தாள். ‘‘அண்ணா, அப்பா கோவமாக இருக்கிறார். வா சீக்கிரம்’’ என்றாள்.

டாக்டர் முரளி கிளம்பிவிட்டான். அவன் திரும்பிப் பாராமல் தன் தங்கையுடன் நடந்தான். தன் பெற்றோர் இருக்குமிடம் அடைந்தவுடன் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்கள் அண்ணன், தங்கை இருவரும். கையை உயரத் தூக்கி அஞ்சலி செய்தனர்.

நானும் கையைத் தூக்கி ஆமோதித்தேன். ‘‘வெட்கமில்லைன்னு உன்னைச் சொன்னார்களே, அந்தப் பையனுக்குத்தான் வெட்கமில்லை. அப்பாவோடும் சேருகிறான். நம்மகிட்டேயும் குழைகிறான்’’. நான் நறநறவென்று பல்லைக் கடித்தேன்.

‘‘போதும் அப்பா. அவர்களோ போய்விட்டார்கள். இன்னும் என்ன கோபமும் தாபமும்?’’ என்றாள் சரயு.

‘‘படிப்பும் பண்பும் அவர்கள் உடம்பிலே ஊறவேயில்லையே? டாக்டர் பையன் தன் தொழிலின் புனிதம் புரியாமல் வியாபாரமாக நினைக்கிறானே?’’ என்று என் மனைவி அங்கலாய்த்தாள்.

‘‘ஊறிப் போனதையெல்லாம் ஒரே நாளிலே நீக்கிவிட முடியாது அம்மா. பசங்களைப் படிக்க வைக்கணும். வேலைக்கு அனுப்பணும், கல்யாணம் செய்து வைக்கணும் – இப்படி ஒரு நியதி, ரயில் வண்டித் தொடர் மாதிரி. ஒரே மாதிரி ஜாதகம், பெண் பார்ப்பது, லௌகீகம் பேசுவது. எல்லாம் கண்மூடித்தனமாக நடக்கிறது. இப்படி எத்தனை பேர் அம்மா, இந்த அப்பா மாதிரி உப்பு காகிதமாக உரசி எடுப்பா சொல்லு’’ என்று மொழிந்து விட்டு என் மகள் பெரிய நகைச்சுவை கண்டவள் போல கலகலவென்று சிரித்தாள்.

இந்த மாதிரி ஊறிப்போன வியாதிகளுக்கு என்னைப் போல ஓர் இதயக்கோளாறு என்ன செய்து விட முடியும்? என் பெண்ணும், அந்த டாக்டரும், ரத்தினாவும் கை தூக்கிக் காட்டிக் கொண்டபோது இந்த இளைஞர் உலகம்தான் வழி காட்டப் போகிறது என்று எனக்குத் தோன்றியது.

***

அநுத்தமா

‘பாசாங்குத்தனமே இல்லாத, பொய்மை என்பதே அறியாத ஜீவனாக வாழ்ந்த அபூர்வ மனுஷி. அவரது எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் எந்த பேதமும் இல்லை. ஆதர்ஷம் என்று எதை நம்பினாரோ அதன்படி வாழ்ந்தவர்’ என்று இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் வாஸந்தி.

1922, ஏப்ரல் 16ம் தேதி பிறந்த இவருடைய இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை எளிமையாக எழுத்துகளில் பதிவு செய்தவர். 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். மெட்ரிகுலேஷன் படித்தவர். இந்தி, தெலுங்கு, பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். குழந்தைகளுக்கான படைப்பிலக்கியத்திலும் இவருடைய பங்களிப்பு கணிசமானது. மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 2010, டிசம்பர் 3ம் தேதி காலமானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *