கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 13,608 
 

விநாயகர் சதுர்த்தி விழா.. வசந்தம் நகரில் இளைஞர் குழு சுறு சுறுப்பாக செயல் பட்டு கொண்டிருந்தது. ஏரியா முழுக்கும் வசூல் வேட்டை நடத்தியவர்கள் இனியவன் வீடு வந்ததும் தயங்கி நின்றார்கள். இனியவன் தீவிர நாத்திகவாதி.. கோயில் குளம் என்று வந்தால் விரட்டாத குறையாக பேசி அனுப்புவார். அவர் மனைவி அப்படி இல்லை, ஆன்மிக ஈடுபாடு அதிகம். அதனால் இனியவன் இல்லாத நேரமாக டொனேஷன் கேட்டு போவார்கள். அவர் இல்லை என்று நினைத்துதான் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்கள்,

இனியவன் தான் திறந்தார். “வாங்க ஸார்… வாங்க…என்ன விஷயம் எல்லாரும் கும்பலா வந்திருக்கிங்க..?”

“ ஸார் விநாயகர் சதுர்த்தி வருதில்ல அதான்.. வந்தோம்…” தயங்கினார்கள்.

“ அதுக்கு நான் என்ன பண்ணனும்..?”

“ வருஷா வருஷம் விழா நடத்துகிறோம்… நம்ம ஏரியா ஒவ்வொரு வீட்லயும் ஆயிரம் ரூபா போடறோம்.. நீங்களும் மறுக்காம தரனும்..!”

“ அது சரி .. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் கரெக்டா பதில் சொல்லிட்டீங்கன்னா.. இரண்டாயிரம் ரூபாயே தர்றேன்.. இது எத்தனையாவது பிறந்த நாள்…? சொல்லிட்டு வாங்கிட்டு போங்க…”

வந்தவர்கள் நெளிந்தார்கள்..இனியவன் மனைவி நளினி அவர்களிடம் கண்களாலேயே ஸாரி சொன்னாள். “ சரிங்க ஸார் நீங்க கொடுக்காட்டியும் பரவாயில்ல.. இப்படி நக்கல் பண்ணி மத்தவங்க மனசை புண்படுத்தாதிங்க…” கிளம்பினார்கள்.

வெளியில் போனவர்கள் , “ ஏம்ப்பா இதுக்குதான் இந்த ஆள் வீட்டுக்கு போக வேண்டாம்னு முன்னேயே சொன்னேன்… இவரு இப்படி பேசிகிட்டிருக்கிறதாலதான் அந்தம்மா வயித்துல புழு பூச்சி இல்லாம ஊரான் குழந்தையை எல்லாம் ஏக்கமா பார்த்துகிட்டிருக்கு… “

நளினியின் காதில் லேசாக விழுந்தது.. கண் கலங்கியது, “ என்னங்க உங்களுக்கு புடிக்கலைன்னா விட்டுடங்க.. எதுக்கு வர்றவங்க கிட்ட எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தை எல்லாம் காட்டறிங்க…”

“ ஆமா பாரு நானா போய் அவங்ககிட்ட என் பிரசங்கத்தை வச்சிகிட்டேன்.. எங்கிட்ட கேட்டா இப்படிதான் சொல்வேன்.. நீ வேணா போய் கொடுத்துக்கோ நான் என்ன உன்ன தடுக்கறேனா…?

“ நீங்க இப்படி பேசறதாலதான் நமக்கு குழந்தையே இல்ல…”

“ நான் பேசறதுக்கு நீ எப்படி பொறுப்பாவே…? நீ நல்லாத்தானே பக்தியா இருக்கே.. உன் மேல ஏன் கருணை வரலை..?

“ போங்க.. எவ்வளவோ சம்பாதிக்கிறோம் நாலு பேரோடு நீங்களும் கொடுத்துட்டு போக வேண்டியதுதானே.. பேர்லதான் இனிமை.. பேசறதெல்லாம் கசப்பா…”

“ நளினி… உண்மையை சொன்னா யாருக்கும் கசப்பாதான் தெரியும்.. நாலு பேரோடு நானும் ஒண்ணா கொடுத்துட்டு போகிறேன்… ஆனா நான் சொல்ற விஷயத்துக்கு அந்த நாலு பேரும் முன்ன வருவாங்களா..? இங்க பக்கத்துல இருக்கிற ஸ்கூலை பாரு வெளிச்சம் கூட இல்லாம குழந்தைங்க அவஸ்தை படுது… லைட்டே இல்ல.. அதுல ஃபேன் வேற எங்க இருக்கும்.. பக்கத்துலயே கழிவு நீர் கால்வாய் .. பகல்லயும் கொசுத்தொல்லை அதிகமா இருக்கும். இந்த ஸ்கூலுக்கு வெள்ளை அடிச்சி, ட்யூப் லைட், ஃபேன் போட இருபதாயிரம் வேணும்.. யாராவது கேட்டா தருவாங்களா… “

“ ம். அது கவர்மெண்ட் ஸ்கூலுதானே.. நாம ஏன் போடனும்..?”

“ அரசாங்கம் வசதி பண்ணமுடியலைன்னா… வருமானம் வராத எடத்துல செலவு பண்ணலை ..நாம ஏன் அரசியல் வாதியை நம்பனும்..? அதுல படிக்கிறது வசதி கொறஞ்ச பசங்கதான்.. நாமளே ஓண்ணாயிருந்து இந்த மாதிரி நல்ல விஷயங்களை பண்ணா என்ன..?”

“ என்ன வேணா பண்ணுங்க.. கடவுளை மட்டும் பழிக்காதிங்க.. “

காலையில் நான்கு மணிக்கே ஸ்பீக்கரில் பாட்டு ஒலித்தது தெருவெங்கும் மாவிலை தோரணங்கள்.. வெளியில் வந்த நளினி தெருக் கோடியில் பெரிய சிலை வைத்து கோலகலாமாயிருந்த விழாவை கண் குளிர பார்த்தவள், ‘ பகவானே அவர் எது சொன்னாலும் எனக்காக மன்னிச்சிடுப்பா.. அவர் மனசை நீதான் மாத்தனும்..” கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

“ நளினி அந்த பக்கமே பார்த்துகிட்டிருக்கியே… கொஞ்சம் திரும்பி அந்த ஸ்கூலை பாரேன்.. “

திரும்பியவள் ஆச்சரியப்பட்டு போனாள், ஸ்கூல் முழுதும் பளிச்சென வெள்ளை அடித்து ட்யுப் லைட் அங்கங்கே பிரகாசித்து கொண்டிருந்தது. மெரூன் கலரில் ஃபேன் கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் தொங்கி கொண்டிருந்தது ஜன்னல் வழியாக தெரிந்தது.

“ நீ எனக்கு தெரியாம கோவிலுக்கு பண்றே.. நானும் உனக்கு சொல்லாம இந்த விஷயத்தை பண்ணிட்டேன் நம்ம காசுல.. என்ன செலவு கொஞ்சம் ஜாஸ்திதான்.. இருந்தாலும் நமக்கு குழந்தை பொறந்திருந்தா அத படிக்க வைக்க வருஷத்துக்கு லட்ச கணக்கா செலவு பண்ணியிருப்போம்ல… மத்த குழந்தைகளுக்காக இருபதினாயிரம் தர்மமா பண்ணதில ஒண்ணும் தப்பில்ல…”

“ அய்யா .. உங்களுக்கு பெரிய மனசுங்க… நீங்க நல்லாயிருக்கனும்..! என் புள்ளைங்க நாலும் அங்கதான் படிக்குது…” தெருவில் காய் விற்று கொண்டு போகும் குப்பம்மா கை கூப்பி சொல்லிவிட்டு போனாள்.

நளினி, தன் கணவனையே பார்த்து கொண்டிருந்தாள்.. “ ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்…” வீட்டில் முகப்பில் அவர் ஒட்டி வைத்திருந்த வாசகத்தை கண்களால் காட்டினார். அதன் அர்த்தம் இப்போது புரிந்தவளாய் அவளும் மெல்ல தலையசைத்தாள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *