கார்த்தியின் ஈகை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 2,793 
 

அப்பொழுதெல்லாம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தோம். ஆனால் இப்பொழுது நண்பர்களும் இல்லை, தாத்தா பாட்டியும் இல்லை. உறவுகள் எல்லாம் தனித்தனியாக போய்விட்டன.

வானம் பகலை அகற்றிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக இருளை போர்த்திக்கொள்ளும் மாலை நேரம். உலர்ந்து வளைந்து போன பேரிச்சை காம்பு போல வானில் காட்சியளித்தது பிறை. அதைக் கண்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலத்துடன் அல்ஹம்துலில்லாஹ் என கூறிக் கொண்டனர்.

பிறை பார்த்து நோன்பு ஆரம்பித்து பிறை பார்த்து நோன்பை முடித்துக் கொள்ளுங்கள் என்பது நபிகளார் வாக்கு. மாதம் முழுவதும் மேற்கொண்ட நோன்பு முடிவுக்கு வந்தது நாளை பெருநாள் கொண்டாட போகிறோம் என்ற பூரிப்பு அனைவரின் முகத்திலும் தெரிந்தது. பிறை பார்த்தாச்சு நாளை ரம்ஜான் என்று மகிழ்ச்சியுடன் கூவிக்கொண்டே தெருத்தெருவாக சென்றனர் சிறுவர்கள். முகத்தில் எந்த சலனமும் இன்றி நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தான் ரஹீம்.

தன் சிறு வயது சம்பவங்கள் அவன் நினைவுக்கு வந்தன. பெருநாளன்று நண்பர்களுடன் சுற்றியது, தாத்தா பாட்டியுடன் குதூகலமாக கொண்டாடியது என பல சம்பவங்களை நினைத்துப் பார்த்தான்.

அப்பொழுதெல்லாம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தோம். ஆனால் இப்பொழுது நண்பர்களும் இல்லை, தாத்தா பாட்டியும் இல்லை. உறவுகள் எல்லாம் தனித்தனியாக போய்விட்டன.

பண்டிகை என்பது கொண்டாட்டம் இல்லாமல் மற்றொரு சாதாரண நாளாகவே போகிறதே ஏன்? வயதாகி போவதாலா? அல்லது மனம் பக்குவப்பட்டு போவதாலா? என தன் நிலை புரியாமல் தவித்தான் ரஹீம்.

இன்றைய காலகட்டத்தில் பலரின் நிலையும் இதானே! அதேசமயம், ஊருக்கு வெளியில் உள்ள சிறிய பாலத்தின் சுவர்மீது சோகத்துடன் யோசித்தவாறே உட்கார்ந்து கொண்டிருந்தார் கரீம்பாய். சைக்கிளில் டப்பா கட்டிக்கொண்டு தெருத்தெருவாக மீன் வியாபாரம் செய்பவர். தன் இரு மகள்களுக்கும் திருமணம் செய்து முடித்து விட்டார்.

இரண்டாவது மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அந்த வழியாக வண்டியில் சென்றுக்கொண்டிருந்த அரிசி வியாபாரி கார்த்தி கரீம்பாய் சோகமாய் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்கி வந்து என்ன கரிம்பாய்!

“விடிஞ்சா பெருநாள்! மக்கள் எல்லாம் கொண்டாட்டத்தில் இருக்காங்க. நீங்க இங்கே சோகமாக உட்கார்ந்து இருக்கீங்க! என்ன விஷயம் பாய்? ”

என கேட்டுக் கொண்டே கரீம்பாய் பக்கத்தில் உட்கார்ந்தார் கார்த்தி.

“உங்களுக்கு தெரியாத விஷயமா? என் இரண்டாவது மகளுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் கல்யாணம் ஆனது. கல்யாணத்தையே ரொம்ப கஷ்டப்பட்டு தான் நடத்தி முடிச்சேன். கொஞ்ச நாளா வருமானமும் சரியா இல்ல.

மணமக்களுக்கு முதல் ரம்ஜான். நாளை மதியம் புறப்பட்டு வருவாங்க. அவங்க ஏதும் எதிர்பாக்கல என்றாலும் அவங்களுக்கு நாம ஏதாவது செய்து ஆகனுமே.. மேலும் பெரிய பொண்ணும் மாப்பிள்ளையும் வராங்க. அவங்களையும் சும்மா விட முடியாதே.. அவங்களுக்கும் ஏதாவது செய்யணுமே.. காலையில் கிளம்பும் போதே என் மனைவி சொல்லி அனுப்பிச்சா. இப்போ அவ என்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பா..

அவகிட்ட என்னன்னு சொல்றது?”

தன் நிலையை வருத்தத்துடன் விளக்கினார் கரீம்பாய்.

“ஏன் பாய்? உங்க மதத்தில்தான் வசதி இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுப்பாங்களே.. ஜகாத் னு சொல்லுவாங்களே.. அப்படி யார்கிட்டயாவது வாங்கி இருக்கலாமே!”’ என்று கேட்டார் கார்த்தி.

“ஜகாத் என்பது உழைக்க வழியில்லாமல், வருமானத்தை ஈட்ட முடியாமல் இருப்பவங்களுக்கு கொடுப்பதுதான் முறை. நான் இதுவரை யாரிடமும் யாசகம் கேட்டது இல்ல” என்றார் கரீம் பாய்.

கஷ்ட காலத்திலும் யாரிடமும் கையை ஏந்தாத கரீம்பாயை மரியாதையுடன் பெருமையாக பார்த்தார் கார்த்தி.

“சரி பாய்! இப்ப கிளம்பி வீட்டுக்கு போங்க. உங்க மனைவி உங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பாங்க! ஆண்டவன் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வான்” என ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார் கார்த்தி.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார் கரீம்பாய். அவரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மனைவி.

“என்னங்க! பணம் ஏதாவது ஏற்பாடு ஆச்சா? ”என கேட்டார் மனைவி.

“இல்லம்மா. எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன். கிடைக்கல” என்றார் விரக்தியுடன்.

அதைக்கேட்டு சோகத்துடன் போய் உட்கார்ந்தார் அவரின் மனைவி. சோகத்துடன் இருந்த மனைவியின் முகத்தைப் பார்த்த கரீம்பாய்,

“கவலைப்படாதே. ஆண்டவன் பார்த்துக்குவான்’ என்று தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போய் படுத்தார். இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்தார். விடிந்தது. குளித்துமுடித்து தொழுகைக்கு தயாரானார்.

வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே கதவைத் திறந்தார்.அங்கே கார்த்தி நின்றுகொண்டிருந்தார். அவரை ஆச்சரியத்துடன் பார்த்த கரீம்பாய்,

“உள்ளே வாங்க, என்ன திடீர்னு..’’ என கேட்டார்.

வீட்டின் உள்ளே நுழைந்த கார்த்தி முப்பதாயிரம் பணத்தை கரீம்பாய் கையில் கொடுத்தார். திகைத்த கரீம்பாய்,

“இதை என்னால் திருப்பித் தர முடியுமா தெரியல. வேண்டாம்’’ என்றார்.

“உங்களால எப்போது தர முடியுமோ அப்ப கொடுங்க. ஒருவேளை திருப்பித் தர முடியலைனா எனக்கு சந்தோஷம்தான்’’ என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார் கார்த்தி.

அவர் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் கரீம் பாய். மசூதியில் பெருநாள் தக்பீர் ஒதும் சத்தம் கேட்டது.

“அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!’’

– 27 Apr 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *