ஏ(மா)ற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 6,799 
 

சத்யன்,அதிகம் படிக்காதவன்,இறை நம்பிக்கையுள்ள 33 வயது இளைஞன்,மனைவி இல்லத்தரசி, இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது பெண் வாரிசு.இது தான் இவனின் எளிய குடும்பம்.வாடகை வீட்டில் பல குடித்தனங்களுக்கு நடுவில் ஜாகை.

வேலை பிரபல ஓட்டலில் சர்வர். வருமானமும், செலவும் போட்டி போட்டு செலவே ஜெயிக்கும் மாத கடைசியில். வேலைப் போக மீதி நேரத்தில் அருகில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் கைங்கரியம் செய்வான்,ஸ்தல வரலாறுகளும், அதனுடைய விசேஷ வழிபாடுகளும் நன்கு அறிந்தவன்.

ஒரு நாள் வேலைக்கு கிளம்பிய போது,பசு மாடு எதிரே வர,நல்ல சகுனம் என நினைத்து ,சூரியனைப் பார்த்தான் மேலே கருடன் வலம் வர, சிவன் கோவிலுக்கு போனான், சன்யாசி ஒருவர் வந்து இவனுக்கு விபூதி அளிக்கின்றார், திடுக்கிட்டு எழுகிறான் தூக்கத்திலிருந்து.

மணி காலை 5.30 ஆகியிருந்தது.

கனவா, அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே! ம்! நல்ல கணவுதானே என சுறுசுறுப்பாய் கிளம்பினான்,

வெளிய வந்தபோது ,கனவில் வந்தது போல பசு வந்தது. ஆகா! சிவன் சித்தம்! என்று வணங்கி கடந்தான்.கோவில் வந்தான், வாசலிலே, கருட தரிசனமும் ஆயிற்று, ஏதோ நம்மை சுற்றி நடக்கிறது என்பதை உணரக்கூடிய அளவுக்கு சித்த சுத்தியிருந்தால் அறியலாம். அறிந்தான். உள்ளே இவன் வரவும், ஆரத்தி காண்பிக்கப் பட்டு விபூதி வழங்கினார் குருக்கள்.
என்ன சத்யா! இன்றைக்கு உன் முகம் தேஜசா இருக்கு,என்றார்.

அப்படியா? என்றான்.

ஆமாம்பா!.எனக்கு ஒரு ஒத்தாசை செய்யனும், ஜோலி இருக்கா? உனக்கு. என்றார் குருக்கள்.

வேலைக்குத்தான் போறேன்.என்றான்.

லீவு போடமுடியுமா? உன்னாலே!

எனக்கு இன்றைக்கு கொஞ்சம் நிறைய வேலை இருக்கு. சென்னையிலேர்ந்து மிகப்பெரிய தொழிலதிபரும்,சிவ பக்தருமான பசுபதீ ஐயா வர்ராங்க,அவங்கள இங்க சுத்து பத்துல உள்ள எல்லா சிவன் கோவிலையும் தரிசனம் பண்ணிவைக்கனும்,என் தம்பியை பூஜைக்கு அனுப்புறேன்,நீயும் கூடப்போயி ஸதல விசேஷம் இதெல்லாம் சொன்னா சந்தோஷப்படுவா! உனக்கு ஏதோ என்னால முடிஞ்சத கொடுக்கிறேன்.

சரி ஐயா! என்றான்,ஏதோ,இன்றைக்கு நமக்கும் சிவ தரிசனம் பன்னனும்னு இருக்கும் போல, என்று நினைத்தான்.

பசுபதீ ஐயா, விபூதியும்,ருத்ராட்சமுமாக பளீர் என இருந்தார், அவருக்கு ஏற்றார் போல மனைவி ,அவர்களுடன் காரில் ஏறினார்கள்.குருக்கள் தம்பியும்,சத்யனும்,

சத்யன் முன்சீட்டில் இருந்தான்,வழிகாட்டியாக, அவன் பணிபுரியும் ஓட்டல் வந்தது. வண்டியை நிறுத்தச் சொன்னான்.

இறங்கி போய் வந்தான்,

என்னாச்சு என்றார் பெரியவர்.

முதலாளிகிட்ட லீவு சொல்லிவிட்டு வந்தேன் ஐயா! என்றான்.

அனைத்து கோவிலுக்கும் அழைத்துச் சென்று நல்ல முறையில் தரிசனம் செய்து வரலாறை அழகாக பதிகத்தோடு கூறி அனைவரையும் கவர்ந்தான் சத்யன். இருவருக்கும் அவனை பிடித்தது. சத்யன் அதிகம் படிக்காவிட்டாலும், பொறுமை,பொறுப்பு, சிவபக்தி, நிறைய அம்சங்கள் இருந்த்தை கண்டு, அவன் குடும்ப சூழ்நிலை அனைத்தையும் அறிந்துகொண்ட பசுபதீ ஐயா ஒரு முடிவோடு ,அவனை தம்மோடு சென்னை வருகிறாயா? என்றார்,

வேலை நான் தருகிறேன்,வசிக்க வீடும் தருகிறேன்,பிள்ளை படிக்கவும் உதவுகிறேன்,என்றார்.

அவ்வளவு தூரம் அவரை அவன் கவர்ந்து இருந்தான்.

என் வீட்டிலே கலந்து பேசி சொல்வதாகச் சொன்னான்.

மறுநாளும் பல கோவிலுக்கு சென்றார்கள்,

ஐயா வீட்ல எல்லோரும் இங்கேயே இருக்க, படிக்க ஆசைப்படறாங்க,

நான் உங்க கூட வர்ரேங்க! என்றான். அவர் யார்,என்ன நிலைமை எதுவும் அறியாமல்…

சென்னை விடியல்,

புதிதாக இருந்த்து சத்யனுக்கு,

குடும்பத்தை. விட்டு வந்தது வருத்தம்தான், அதுவும் நல்ல வேலைக்காகத்தானே என மனம் ஆறுதலடைந்தது.

அவர் வீட்டிலே வேலைகார்ர்களே அதிகம் இருந்தனர்,நமக்கு என்ன வேலை தருவார்,

சர்வர் வேலை்கொடுப்பாரோ,

அதுக்குத்தான் யூனிபார்ம் போட்டு நிறைய பேர் இருக்காங்க, யோசித்தான்,ஒன்றும் பிடிபடவில்லை.

ஒன்று மட்டும் புரிந்தது. இவர் சாதரண ஆள் இல்லை,பல பிசினஸ்கள் மூலம் பல கோடி சொத்துகள்,பல தொழிலாளர்கள்,இவரின் கீழ் வேலை பார்ப்பது, ஆனால் இவற்றை ஆண்டு அனுபவிக்க ஒரு வாரிசு கூட இல்லை என அறிந்தான்.

மறுநாள்,அழைத்தார், சாப்பிட்டியா? ஏதும் குறை ஒன்றும் இல்லையே? இங்க தங்கறதுல,எனக் கேட்டார், இல்லைங்க,ஐயா! நல்லா இருக்கேன்,.

உனக்கு என்ன வேலைத் தெரியுமா தரப்போறேன்?

உனக்கும் எனக்கும் பிடித்த வேலை, அதை உன்னிடம் விட்டா ஒழுங்கா பார்த்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை வந்தது,அதனால் உன்னையை கூப்பிட்டு்,அதை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என பூடகமாகச் சொன்னார். ஐயா!

என்னோட பணிகள் சுமையினாலே இந்த ஆன்மீக வேலைகள்ல என்னால கவனம் செலுத்த முடியல, உங்க ஊரில் நாம போன கோவில்,மற்ற பிற கோவிலிருந்து கேட்டு வரும் நன்கொடைகள் ஆலய திருப்பணிகள்,அன்னதானம் அனைத்தையும் நீ தான் கவனிக்கனும்,இதுதான் உன் வேலை என்றார்,ஆகா! என் பாக்கியம் என்று சந்தோஷமாக ஒப்புக்கொண்டான்.

இவனுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டது, ஆன்மீக விஷயமாக யார் ஐயாவை பார்க்க வந்தாலும், சத்யனை பார்த்து பத்திரிக்கை கொடுத்தால்,அதை அவனும் உறுதி செய்து என்ன வேலை பாக்கியுள்ளது என கேட்டறிந்து ஐயாவிடம் பேசி நன்கொடை கொடுக்க ஏற்பாடகியிருந்த்து.

மேட்டிலிருக்கும் காய்ந்த வயலின் நீர் தேவைக்கு பள்ளமான நீர் உள்ள இடத்திலிருந்து நீர் இறைக்கும் ஏற்றம் (ஏத்தம்) போல செயல்பட்டான்.

திருப்பணி வேலையைப் பார்வையிடச் செல்வான், கும்பாபிஷேகம் என்றால் ஐயா கூட செல்வான்,இப்படி அவர் கூடவே செல்வதால் ஐயாவின் ஆன்மீக வாரிசாகவே பார்த்தார்கள்.

அவன் மூலமாக நடந்த பண பரிமாற்றங்கள் அவனுக்கு சிறு அகந்தையை கொடுக்க ஆரம்பித்தது.

அன்று கூட ஒரு கும்பாபிஷேகம் சென்றார்கள் இருவரும், நல்ல முறையில் கால பூஜைகள் நடைபெற்றுகொண்டிருந்த்து.

ஒரு சன்யாசி இவனை நோக்கி தாமாக முன் வந்து விபூதி அளிக்க,இவனோ அதனை சட்டை செய்யாமல் தட்டி விட்டு ஐயா கூட வேகமாக காரிலேறி சென்றான்.

இவன் ஊரிலிருந்து கோவில் குருக்கள் வந்து இருந்தார், அப்பொழுது இவன் அவரை உடன் அழைக்காமல் நேரம் கடக்கவே அவர் பசுபதீ ஐயாவுக்கு போன் செய்து தான் வந்திருப்பதாக கூறினார், உடன் அவரும் வந்து உள்ளே அழைத்துச் சென்று விசாரித்தார், ஊரில் அனைத்து திருப்பணிகளும் நல்லமுறையில் நடை பெறுவதாகவும்,

தமது கோவிலுக்கு மகா மண்டபம் தாங்கள் கட்டி தருவதாக முன்னே சொன்னதை கோரிக்கையாய் வைத்தார், ஓ செஞ்சிடலாமேனு கூறி நீங்க சத்யனை பார்த்து பேசிட்டுப்போங்க! அவன் ஊர் கோவில் தானே தராளமா வாங்கிட்டுப் போங்க என்றார், பெருந்தன்மையாக.

சத்யா! எப்படி இருக்கே! நல்லா இருக்கியா! ரொம்ப சந்தோஷம்பா, உன்னை இப்படி பார்க்றத்துக்கு.குருக்கள்.

வாங்க! ஊர்ல என்ன விசேஷம்? என விசாரித்தான்.

நம்ம கோவில்ல ஒரு மகா மண்டபம் நீண்ட நாள் கோரிக்கையா இருக்கு,அதான் ஐயாவைப் பார்த்தேன்,உன்கிட்ட பேசி வாங்கி கட்டிமுடிச்சிடுங்க என்றார்.

அப்படியா? எப்போ பார்த்திங்க, என்கிட்ட சொல்லலையே!

ம், நான் அடுத்த மாதம் ஊருக்கு வருவேன் அப்ப பார்க்கலாம்னு இழுத்தான்.

அவன் செய்தது செயற்கையாகத் தெரிந்த்து. ஏன் இப்படி செய்றான்னு தெரியாம, சத்யா,உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணோமோ, அவருக்கே இப்படி பன்னலாமா? (இவர் கோவிலை மனதில் கொண்டு சொன்னார்)

இவனோ, சொல்லி காட்டுறிங்களா?

உங்க தயவாலதான் நான் இங்க,அப்படின்னு, என தப்பாகவே பேசினான்.

இல்லபா,இல்லை, நீ ரொம்ப தப்பா பேசற,நான் கிளம்பறேன்,எனக்கூறி கிளம்பி விட்டார் குருக்கள்.

பசுபதீ ஐயா,வீட்டிற்கு வந்தா், சற்று சிடுசிடுவென இருந்தார்,ஆடிட்டரிடம், பேசினார்,அவர் பேசியதிலிருந்து ஒரு யூனீட்டில் பெரும் நட்டம் என்பது புரிந்தது. அதனால் இவன் கிட்டவே போகவில்லை.

மறுநாள், அவராகவே இவனை கூப்பிட்டு உங்க கோவில் குருக்கள் வந்தாரே அவருக்கு என்ன செஞ்சிங்க சத்யா! என்றார்,

இல்லை, அது , வந்து ,

நான் வந்து பார்த்துவிட்டு செய்யறேன்னு சொன்னேன்.

அதான்! எனக்கு அந்த கோவில்தான்டா, எல்லாம் கொடுத்தது.

நீ அந்த கோவிலுக்கு செய்ய மறுத்ததாலதான் இன்றைக்கு எனக்கு இவ்ளோ பெரிய நஷ்டம். என கடிந்து கொண்டார்,உடனே பணம் எடுத்துகிட்டு போய் அந்த வேலையை முடிச்சிட்டு வா, என கட்டளையிட்டார்.

இதோ போறேன்,போறேன்,என பிதற்றிவாறு தூக்கத்திலிருந்து விழித்தான் சத்யா!

பொழுது விடிந்து இருந்தது.

நாம செய்ய நினைக்கும் திருப்பணி ஆழ் மனதில் இருந்து, நம்மால் செய்ய முடியலையே என வருத்தம் எப்போதும் உண்டு , அதனால்தான் இவ்வாறு கனவில் வந்ததாக எண்ணினான்.

ஏற்றத்தில் வரக்கூடாதது அகந்தை.

வந்த அகந்தையினால் மனதில் ஒரு மாற்றம், அகந்தை கனவிலும் வர வேண்டாம் என வேண்டி ஓட்டலுக்கு கிளம்பினான்.சத்யன்.

வீதியில் எதிரே பசுமாடு ஒன்று வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *