வருவாள், காதல் தேவதை…

2
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 11,705 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

அத்தியாயம்-11 

திருமணம் செய்யுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவீர்கள். கெட்ட மனைவி கிடைத்தால் தத்துவஞானி ஆவீர்கள். -சாக்ரடீஸ்.

“எல்லாரும் நல்லவங்க தாம்ப்பா.” 

“அப்புறம் என்ன பிரச்சனை? எதுக்கு அழற?” “திடீர்னு வேலைக்குப் போன்னு சொன்னா?” “யார் சொன்னாங்க?” 

“வேற யார் எம் புருஷன்தான்” 

“இதுல கோச்சுக்கிட்டு வரதுக்கோ, அழறதுக்கோ என்ன இருக்கு?” 

”என்னடி பேசற நீ? திடீர்னு போன்னாவேலைக்கு போய்ட முடியுமா? முதலாவதாக வேலைக்கெல்லாம் போக எனக்கு பிடிக்கல. பழக்கமும் இல்ல. இங்க நா வீட்லதானே இருந்தேன்! அது தெரிஞ்சுதான கட்டிக்கிட்டார்! இப்பொ போ போன்னா போய்ட முடியுமா? நா முடியாதுன்னேன். அவர் குத்தல் குத்தலா பேசினார். பொண்டாட்டிக்கு சோறு போட முடியாத புருஷன் என்ன ஆம்பளை?” 

“ஷட் அப் சத்யா.. முட்டாள் தனமா உளறாதே” சரண்யா எரிச்சலோடு அவள் பேச்சைக் குறுக்கிட்டு தடுத்தாள். 

“நீ பேசறதெல்லாம் அபத்தமா இருக்கு சத்யா. பெண்டாட்டியை வேலைக்கு அனுப்புற ஆம்பளை கையாலாகாதவன்னு யார் சொன்னா உனக்கு? எந்த நூற்றாண்டுல இருக்க நீ? உன் சிந்தனைகளும் பேச்சும் குப்பையார்க்கு சத்யா. நல்லா யோசிச்சு பார். வேலைக்குப் போற பெண்தான் வேணும்னா உம் புருஷன் எதுக்கு உன்னைக் கட்டிக்கணும்? ஊர்ல வேலைக்குப் போற பெண்ணுக்கா பஞ்சம்? வேலைக்குப் போக உனக்கு சோம்பேறித் தனம்ங்கறதால ஆம்பளைய குத்தம் சொல்லாதே. உன் நேரம் பயனுள்ளதா கழியணுமங்கறதுக்காக உன்னை வேலைக்குப் போன்னு சொல்லியிருப்பாரே தவிர நிச்சயம் காசுக்காக சொல்லியிருக்க மாட்டார்னுதான் எனக்கு தோணுது.” 

“அப்டியே இருக்கட்டும். ஆனா எனக்குப் பிடிக்காதப்பொ என்னை எப்டி வற்புறுத்தலாம். வற்புறுத்தறது கூட ஒருவித கொடுமைதானே!” 

“வாயக்கழுவு சத்யா, உன்னைச் சொல்லி குத்தமில்ல. நீ இங்க இருந்த விதம் அப்டி, வீட்டு வேலை செய்யறதும் மிச்ச நேரம் பூரா ஒண்ணு விடாம நல்லார்க்கோ நல்லால்லயோ அத்தனை டி.வி. சீரியலையும், சினிமாக்களையும் பார்க்கறதும்தான் உனக்கு வாழ்க்கையார்ந்துது. இதைத்தான் சுதந்திரம் சுகம்னு நீ நினைச்சுட்ருக்க. வெளில என்ன நடக்குதுன்னு தெரியாது. நாலு பேரோட பேச பழக பயம், கூச்சம். மொத்தத்துல வீட்டுப் பறவையா வளர்ந்துட்ட அதான் வெளில போறதை சுமையா நினைக்கற. அது தப்பு சத்யா. உன்னை நீ மாத்திக்கணும். டி.வி. சீரியல்ல உன்னைத் தொலைச்சுக்காதே. அதெல்லாமே மிகைப்படுத்தப் பட்டவை! யதார்த்தமில்லாதவை. வாழ்க்கைங்கறது வேற இதுல யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை நாம பேசறதில்ல. பேசவும் முடியாது. நம்ம தலையெழுத்தை நாமதான் நிர்ணயிச்சுக்கணும். இப்டி கோச்சுக்கிட்டு வந்திருக்கயே. என்ன உத்தேசத்துல வந்திருக்க? இங்கயே இருந்துடலாம்னா? இல்ல உம் புருஷன், பின்னாலயே ஓடிவந்து கெஞ்சி கூட்டிக்கிட்டு போவார்ங்கற நம்பிக்கைலயா? சரிதாம் போடின்னு அவர் விட்டுட்டா என்ன செய்வ? இங்கயே இருந்துடுவயா? முடியுமா உன்னால?” 

சரண்யா பேசப்பேச முகம் வெளிறியது சத்யாவுக்கு. அப்பா அவள் பேச்சை ஆமோதிப்பது போல் மௌனமாய் அமர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கோபத்தோடு அக்கா புறப்பட்டு வந்திருக்கிறாள் என்பது புரிந்தது சரண்யாவுக்கு. அக்காவை இரக்கத்தோடு பார்த்தாள். 

தண்ணிக்குள்ள இறங்கற வரைதான் குளிரும் சத்யா. சடக்குன்னு இறங்கிப் பாரு. எதைப் பார்த்து பயந்தயோ அதுவே பின்னால சுகமாய்டும். சரி சொல்லு. வேலை தேடிக்கோன்னு உம்புருஷன் சொல்றாரா இல்ல அவரே வேலை தேடித் தந்து போன்னு சொல்றாரா?” 

”அவர் பிரண்டு ஒருத்தர் ஏதோ கம்பெனி வெச்சிருக்காராம். அதுல ரிஸப்ஷன் பார்த்துக்கணுமாம்.” 

”என்ன சத்யா நீ.. வேலை தேடி தெருத்தெருவா அலைன்னு சொல்லாம தானே வாங்கிக் கொடுத்து போன்னு சொல்ற புருஷனைப் போய் குத்தம் சொல்றயே. வீட்ல வெட்டியா உட்கார்ந்து டி.வி. பார்க்காதேன்னு சொன்னா நீ கேப்பயா? அப்டி சொன்னா நீ வருத்தப்படுவன்னுதான் வேலை வாங்கிக் கொடுத்து போன்னு சொல்றார். வெளிய போனா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுப்பன்னு நினைக்கறார். இதல என்ன தப்பிருக்கு? கிளம்பு சத்யா நானும் உன்கூட வரேன் வா. அவசரப்பட்டு இங்க வந்துட்டேன்னு சொல்லி அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவர் சொல்ற வேலைக்குப் போய்ப்பாரு. நாலு நாள் செஞ்சாதானே அது கஷ்டமா ஈஸியான்னு தெரியும்! கஷ்டம் கஷ்டம்னு நினைச்சா எல்லாமே கஷ்டமாதான் தெரியும்.” 

“எனக்கு பயம்மார்க்கு. ஏண்டி வந்தன்னு கேட்டா?” 

“இப்ப பயந்து என்ன பிரயோஜனம்? இங்க வரதுக்கு முந்தியே ஒரு முறைக்கு நாலு முறை போறது சரியான்னு யோசிச்சிருக்கணும். ஒண்ணு உன் புருஷன் மனசை நீ மாத்தி உன் வழிக்கு கொண்டு வந்திருக்கணும், இல்ல அவர் சொல்றதுல தப்பில்லன்னு புரிஞ்சுக்கிட்டு அவர் வழிக்கு நீ போயிருந்திருக்கணும். ரெண்டையும் விட்டுட்டு வெடுக்குனு கிளம்பி வந்துட்டு திரும்பிப் போனா என்ன மரியாதை ருக்கும்? மூஞ்சியைக் காட்டத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா. வா நாந்தான் கூட வரேனே. மாமாகிட்ட நா பக்குவமா பேசி விட்டுட்டு வரேன்.”

சரண்யா அவளை சாப்பிட வைத்து பின்னர் அழைத்துக் கொண்டு கிளம்பினாள். ஒரு மரியாதைக்கு அப்பாவும் உடன் சென்றார். 

இவர்கள் பயந்த அளவுக்கு அங்கே யாரும் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. எதுவுமே நடக்காதது போல் சர்வ சாதாரணமாகவே வரவேற்றார்கள். 

“உன் படிப்பெல்லாம் எப்டியிருக்கு சரண்யா?” 

சாதாரணமாகவே பேசினார் மாமா. சத்யாவின் மாமியார் சுடச்சுட காபியும் ஒரு தட்டில் மிளகு வடைகளும் கொண்டு வந்து வைத்தாள். 

”ஆஞ்சநேயர்க்கு சாத்தினது, சாப்டுங்க.” 

சற்று நேர சம்பிரதாயப் பேச்சுக்குப் பிறகு அக்காவின் சார்பில் சரண்யா அவள் மாமியாரிடமும் புருஷனிடமும் தானே மன்னிப்பு கேட்டாள். 

“அக்காவோட நாங்க ராத்திரி முழுக்க பேசியிருக்கோம். வேலைக்குபோகப் பிடிக்காம இல்ல அவளுக்கு. மாட்டேன்னு சொன்னதுக்கு காரணம் பயம். பழக்கமில்லாமை! பயப்பட இதுல எதுவுமில்லன்னு அவகிட்ட சொல்லியிருக்கோம். உங்க விருப்பப்படி அவ வேலைக்குப்போகத் தயாரா இருக்கா. சட்டுனு வீட்டை விட்டு அவ கிளம்பிப் போனதை தப்பா எடுத்துக்காம பெருந்தன்மையா எங்களை வாங்கன்னு கூப்ட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அவளோட வட்டம் ரொம்ப சின்னதாகவே இதுவரை இருந்துடுத்து. அதனால தான் பயந்துட்டா. இனிமே பயப்பட மாட்டா. கேட்டுப் பாருங்களேன் அவகிட்டயே.” 

சரண்யா சொல்ல, அவன் சத்யாவை அப்படியா என்பது போல் புன்னகையோடு பார்த்தான். குற்ற உணர்ச்சியும் குறுகுறுப்புமாக சத்யா தலகுனிந்தாள். 

“எங்கிட்டயும் தப்பிருக்கு சரண்யா. போ போன்னு அவளை சொல்றதை விட்டுட்டு, வேலைக்குப் போக அவளை முதல்ல மனசால தயார் பண்ணியிருக்கணும். அப்புறம் போகச் சொல்லியிருக்கணும். போகட்டும். இனிமே நா அவளை வற்புறுத்தப் போறதில்ல. பெண்ங்கறவ பொருளாதார ரீதியா சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கறவன் நான். அதுக்கு அர்த்தம் அவ சம்பளத்துல லக்சுரியா வாழலாம்னு நினைச்சு இல்ல. அவ அப்படித்தான் என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டா. இஷ்டமில்லாதவளை ஏன் வற்புறுத்தினன்னு அம்மா கூட என்னைத் திட்டினாங்க. இப்ப சொல்றேன். வேலைக்குப் போறதும் போகாததும் அவ இஷ்டம். போனா அவளுக்கு ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் ஏற்படும்ங்கறதை அவ எப்பொ புரிஞ்சுக்கறாளோ அப்பொ போகட்டும். மத்தபடி அவளை வெச்சு காப்பாத்தற அளவுக்கு எனக்கு வலிமையும் வசதியும் இருக்கு.” 

சரண்யா அக்காவைப் பார்த்தாள். இவ்வளவு நல்ல மனிதர்களைப் புரிந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசிவிட்டு வந்து விட்டாயே என்ற ஆதங்கம் அதில் தெரிந்தது. 

”மாமா சொன்னதைக் கேட்ட இல்ல சத்யா? நீ வெளிலதான் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு இல்ல. சாமர்த்தியமும் தைரியமும் இருந்தா வீட்டுக்குள்ளயே இருந்து கூட கை நிறைய சம்பாதிக்கலாம். உனக்கு என்ன தெரியுமோ அதை நேர்மையான முறைல காசாக்கு. பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டன்னா உனக்கே இன்ட்ரஸ்ட் வந்துடும். உம்மேல உனக்கே மரியாதை ஏற்படும்”. 

சற்று நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பின போது மனசு அப்பாடா என்று நிம்மதியடைந்திருந்தது. அப்பா சரண்யாவை பெருமை பொங்கப் பார்த்தார். தங்கையா தாயா இது என்று யோசித்தார். இந்த வயதில் அவள் நிதானமும் தெளிவும் அவரை வியக்க வைத்தது. நல்லதொரு வாழ்க்கை இதற்கு அமைய வேண்டுமே என்ற பிரார்த்தனை உள்ளே ஓடியது.கூடவே சம்பத் ஏன் வீட்டுக்கு வரவில்லை என்ற கேள்வியும் எழும்பியது. ஆகாஷ் வந்து விட்டுப் போன மறுநாள் சம்பத்தோடு பேசியதுதான் ஆகாஷுக்கும் சரண்யா மீது விருப்பம் இருப்பதைத் தெரிவித்த பிறகு சரி நான் பார்த்துக்கறேன் மிச்சத்தை என்று போனை வைத்தவர்தான். அதன்பிறகு இன்று வரை வரவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை. 

”அப்பா அங்க பாரேன்..” திடீரென்று சரண்யா அழைத்ததும் சிந்தனை கலைந்து அவள் காட்டிய திசையில் பார்த்தவர் முகம் மலர்ந்தது. 

“அட… சம்பத்..! இவரைப் பத்திதான் நினைச்சுட்ருந்தேன். நினைச்சதும் எதிர்க்க காட்சி கொடுக்கறார்!” 

கோபாலன் வியப்போடு நடையை எட்டிப் போட்டு ஆடியோ கடை ஒன்றினுள் நுழைந்து கொண்டிருந்த சம்பத்தை நிறுத்தினார். திரும்பிய சம்பத்தின் முகத்தில் கோபாலனைப் பார்த்ததும் ஒருவித தர்மசங்கடம் பரவியது. 

“என்ன கோபாலா இந்த பக்கம்?” 

“நீ எங்க இந்த பக்கம்?” 

“கேஸட் கடைக்கு வெல்லம் வாங்கவா வருவேன். கேஸட் வாங்கத்தான்”. 

”அதுசரி வீட்டுப் பக்கம் வரவேல்லயே. ஊருக்கு எங்கயாவது போய்ட்டயான்ன?” 

“அதெல்லாம் இல்ல. கொஞ்சம் பிஸி அதான் வர முடியல.” 

”அப்புறம் ஆகாஷ் என்ன சொல்றான்? ஏதாவது பேசினயா பையன்கிட்ட?” 

”நா வீட்டுக்கு வந்து எல்லா விவரமும் சொல்றேனே கோபாலா”. 

“எப்பொ வர..?” 

“ரெண்டு நாள்ல வரேனே..?” 

“சௌக்கியமா மாமா?” சரண்யாகிட்ட வந்து கேட்டாள்.

“வெரிஃபைன் சரண்யா! ஆமா அப்பாவும் பொண்ணுமா எங்க கிளம்பிட்டீங்க?” 

”சத்யா வீட்டுக்கு போய்ட்டு வரோம்.” 

“சத்யா எப்டியிருக்கா? எல்லாரும் நல்லபடியா இருக்காங்களா அவகிட்ட?” 

“ஒரு பிரச்சனையுமில்ல மாமா. ரொம்ப நல்ல மனுஷங்க!”

“வெரிகுட்.அப்பொ நா வரட்டுமாம்மா. ரெண்டு நாள்ல வீட்டுக்கு வரேன்.” 

சம்பத் கேஸட்டுகளோடு தன் காரில் ஏறிச்செல்ல, அவர் போகும்வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த கோபாலன், ஏதோ யோசனையோடு மௌனமாய் நடந்தார். 

“என்னப்பா?”

”ம்… ஒண்ணுல்லயே.” 

“ஸைலன்ட்டா வர!! சம்பத் மாமா என்ன சொன்னார்? ஏன் வீட்டுக்கு வரலையாம்?” 

“தெரியல.. டைம் இல்லன்னார். ஆனா எனக்கென்னமோ வேற ஏதோ இருக்கும்னு தோணுது” 

“ஏன் அப்படி சொல்ற?” 

”நல்ல விஷயம்னா சட்டுனு சொல்லி சந்தோஷப்படத் தோணுமா இல்ல ரெண்டு நாள் கழிச்சு வந்து சொல்லத் தோணுமா?” 

“மாமா என்ன சொன்னார்?” 

“ஆகாஷ்கிட்ட பேசினயான்னு கேட்டேன். ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்து விவரமா சொல்றேனேன்னு சொன்னார். அப்பொ ஏதோ பிரச்சனைன்னுதானே தெரியுது? ஆனா நிச்சயம் ஆகாஷால இருக்காது. மாமிதான் ஏதாவது பிரச்சனை பண்றாங்களோ என்னமோ.” 

“இருந்துட்டு போகட்டுமேப்பா. அதைப்பத்தி நீ எதுக்கு மண்டைய உடைச்சுக்கற ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கப்பா. எது நடக்கணுமோ அது நன்றாகவே நடக்கும். யாராலயும் தடுத்து நிறுத்திட முடியாது. அதனால் மனசைப் போட்டு குழப்பிக்காதே. அனாவசியமா கவலையும் படாதே. எது வந்தாலும் ஏத்துக்க பழகிப்போம்.” 

“நீ சுலபமா சொல்லிடற சரண்யா. என் ஸ்தானத்துல இருந்து பார்த்தாதான் என் கவலை உனக்கு புரியும்.” 

“அப்பொ சரி கவலைப்படு, நீ கவலைப்பட்டதும் எல்லாம் நல்லபடி முடிஞ்சிடும்னு நீ நம்பினா தாராளமா கவலைப்பட்டுக்கோ. யார் வேண்டாம்னா”. 

“கிண்டல் பண்ற பாத்தயா? ஆகாஷுக்காக காத்துட்ருப்பேன்னு நீ சொல்ற. ஒருவேளை அவங்க ஆகாஷுக்கு வேற ஒரு பொண்ணை கட்டி வெச்சுட்டாங்கன்னு வெச்சுக்கோ. அதுக்கப்புறமும் அவனுக்காக நீ காத்திருக்க முடியுமா? நல்லாதான் இருக்குமா? அப்டி ஒரு சூழ்நிலை ஏற்பட்டா அவனை மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையை சகஜமா ஏத்துக்கத் தயார்னு நீ ஒரு வார்த்தை சொல்லு. கவலைப்படறதை நா விட்டுடறேன்.’ 

அப்பா சொல்ல சரண்யா மெளனம் சாதித்தாள். சட்டென்று அவளால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்யப் போகிறேன்? அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். கேள்விக்கு பதில் வரவில்லை. உள்ளம் மெளனம் சாதித்தது. 

இரண்டு நாளில் வருகிறேன் என்று சொன்ன சம்பத் மாமா வரவேயில்லை. நிச்சயம் ஏதோ ஒரு தர்மசங்கடத்தால் அவர் கட்டுண்டிருக்க வேண்டும் என்பது புரிந்தது. இல்லாவிட்டால் இப்படி வராமல் இருக்க மாட்டார். ஒருவேளை மாமிக்கு இதில் இஷ்டமில்லையா? அவளை மீறி அவரால் இங்கு வர இயலவில்லையா? எதுவாயிருந்தால் என்ன? பட்டென்று சொல்லிவிட வேண்டியது தானே? எதற்கு இப்படி ஒரு சஸ்பென்ஸ்? என் வீட்டுக்கு நீ மருமகளாக முடியாது என்று சொல்லிவிட்டால் மாமா மீது அன்பும் மரியாதையும் குறைந்து விடுமா என்ன? 

“அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மற்றொரு வாழ்க்கைக்கு நீ தயாராக வேண்டும்”. 

அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. அடி வயிறு சிலீரென்றது. இடுப்புக்கு கீழே பலமற்று போவது போல் தோன்ற கண்களை இறுக மூடிக் கொண்டாள். மற்றொரு வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்பாவின் கவலைக்கு அர்த்தம் புரிந்தது. 

அத்தியாயம்-12 

காதல் ஒர் நெரும்பு, ஆயினும் குளுமையானது. காதல் ஒரு நோய்தான், எனினும் சாகடிக்காது. காதல் ருருடானது. ஆயினும் வர்ணமயமானது. காதல் எல்லாமுமாகும்; எனினும் காதலில் ஒன்றுமேயில்லை.-தாமன் மிடில்டன் 

சார் உங்களுக்கு ஒரு கால் வருது. கனெக்ட்க் பண்ணவா?”ஆபரேட்டர் கேட்க ஆகாஷ் எரிச்சலடைந்தான். ”நா மீட்டிங்ல இருக்கேன். இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்”. 

”ஓ கே சார்”. 

இரண்டு மணி நேரம் கடந்து மீட்டிங் முடிந்து சோர்வோடு தன் அறைக்கு வந்து அமர்ந்தான். தலை வலித்தது. டேபிள் மீது அவசர கோப்புகள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. இன்டர்காம் எடுத்து சூடாக காபிக்கு சொல்லிவிட்டு ஒரு கோப்பை எடுத்து பிரித்தான். 

போன் மறுபடியும் அடித்தது. 

“சார் மறுபடியும் ஒரு கால் வருது.” 

“நோ ஆபரேட்டர் ப்ளீஸ். ஐ ஆம் வெரி பிஸி. யாரார்ந்தாலும் நா இல்லன்னு சொல்லிடுங்க. வீட்லேர்ந்து ஏதாவது முக்கியமா பண்ணினாங்கன்னா மட்டும் குடுங்க போதும். பட் யாரும் பண்ண மாட்டாங்க. ஜஸ்ட் சொல்லி வெச்சேன்”. 

”ஓ கே சார்.” 

ஆகாஷ் ரிஸிவரை வைத்தான். காபி வந்தது. டேபிள் மீதிருந்த அத்தனை கோப்பையும் படித்து கையெழுத்திட்டு அனுப்பி விட்டு சோம்பல் முறித்த போது மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது. வீட்டுக்குப் போய் படுத்தால் போதும் என்று உடம்பு கெஞ்சியது. டேபிள் மீதிருந்த கார் சாவியும் ப்ரீப்கேஸும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். மீட்டிங் நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று தற்காலிகமாக அணைத்து வைத்திருந்த செல்போனை ஆன் பண்ணி இடுப்பில் செருகிக் கொண்டு காருக்கு வந்து ஏறியமர்ந்தான் பத்தடி தொலைவு கூட கார் வந்திருக்காது. செல்போன் சிணுங்கியது. 

“ஹலோ” 

“எங்கிட்ட கூட பேச நேரமில்லாத அளவுக்கு அப்டி என்ன பிஸி.” 

மறுமுனையில் சுஜிதாவின் குரலில் கோபம் தெரிந்தது. ”ஓஹோ. நீதான் அப்பொ போன் பண்ணினயா என்ன விஷயம் சொல்லு?” 

“போசாதிங்க எங்கிட்ட.” 

“அதுசரி போன் பண்ணினது நீ! பண்ணிட்டு பேசாதிங்கன்னா என்ன அர்த்தம்?” 

“சிரிக்காதிங்க ஆகாஷ். நா ரொம்ப ரொம்ப கோவத்துல இருக்கேன். நீங்க என்னை ரெண்டு முறை இன்ஸல்ட் பண்ணிட்டீங்க! இதுக்கான தண்டனை நிச்சயம் உங்களுக்கு உண்டு”. 

“லுக் சுஜி! நீதான் பண்ணினன்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்? நா ரொம்ப ரொம்ப பிஸியார்ந்தேம்மா.” 

“நா என்ன வெட்டியாவா இருக்கேன். நானும் உங்களைவிட நாலு மடங்கு பிஸியாதான் இருக்கேன். தெரியுமா? என் வேலையெல்லாம் விட்டுட்டு உங்களோட பேசணும்னு நினைச்சேன் பாருங்க. என்னை செருப்பாலதான் அடிச்சுக்கணும்.” 

“ஓகே.. ஓகே..போதுமே கோபம்! எதுக்கு போன் பண்ணினன்னு சொல்லு.” 

“இனிமே சொல்லி என்ன பிரயோசஜனம்?” 

“என்ன விஷயம்னாவது சொல்லேன்”. 

“என் பிரண்டோட நிச்சயதார்த்தம் ரொம்ப கிராண்டா ஸ்ரீலேகால வெச்சு நடக்குது. உங்களை பத்தி அவகிட்ட சொல்லியிருந்தேன். கண்டிப்பா உங்களையும் கூட்டிட்டு வரணும்னு சொல்லியிருந்தா. ரெண்டு நாளா உங்க ஆபீஸ்க்கு எப்பொ போன் பண்ணினாலும் இல்லஇல்லன்ற பதில்தான். நிஜமாவே இல்லையா இல்ல அப்படி சொல்லச் சொன்னிங்களா? செல்லை வேற கட் பண்ணி வெச்சிருக்கிங்க. என்னாச்சு ஆகாஷ். என் ஞாபகம் கூட மழுங்கிப் போற அளவுக்கு அப்டி என்ன வேலை?” 

“இயர் எண்டிங் ஆச்சே! ஆபீஸ்ல பயங்கர வேலை. ஏகப்பட்ட டென்ஷன். ரெண்டு நாளா வீட்டுக்கு கூட போகல தெரியுமோ..? இப்பதான் போயிட்ருக்கேன்.” 

“நீங்க என்ன சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன். உலகமே தலைகீழா புரண்டாலும் என்னை மறக்கறதோ என்கிட்டப் பேசக்கூட நேரமில்லாத மாதிரி பாவ்லா பண்றதையோ நா ரசிக்க மாட்டேன். என்ன டென்ஷன் இருந்தாலும் அதைக் குறைக்கற சக்தி வேறெதுக்கு இருக்கோ இல்லையோ காதலுக்கு மட்டும்தான் உண்டு.”

ஆகாஷ் சிரித்தான்.

“நா சொல்றது சிரிப்பாவா இருக்கு?” 

”நீ சொல்றது ரொம்ப சரி. அதனாலதான் சிரிச்சேன். இப்பொ உன்னோட பேச ஆரம்பிச்சதும் ரிலாக்ஸ்டா ஆய்ட்டேன்.”

“பட் நா டென்ஷனாய்ட்டேன். உங்களை பழிக்கு பழி வாங்கறேனா இல்லையா பாருங்க.” 

“எதுக்கு?” 

“என்னை அலட்சியப்படுத்தினதுக்குதான்! என்னைத் தேடி நீங்க லோ லோன்னு அலையணும். என் குரலைக் கேட்க தவியாத் தவிக்கணும். குறைஞ்சது ஒரு பத்து நாளாவது உங்களை அழ வெக்கல எம்பேர் சுஜிதா இல்ல”. 

“தேங்க்யூ.நானே உன் பேரை மாத்திக்க சொல்லணும்னு நினைச்சேன். என்ன பேர் இது. சுஜிதா! அசிங்கமார்க்கு பாப்பம்மா முனியம்மா அருக்காணின்னு எவ்ளோ அழகழகான பேர் எல்லாம் இருக்கு!” 

“உங்களை கவனிச்சுக்கறேன்!” 

சுஜிதா பட்டென்று போனை வைக்க ஆகாஷ் சிரித்தபடி செல்லை கீழே வைத்தான். 

சொன்னபடியே செய்தாள் அவள். புது வருஷத்தன்று அவன் எவ்வளவு முயற்சி செய்தும் அவளோடு பேச முடியவில்லை. அவளது ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தும் அவளைப் பார்க்கவும் முடியவில்லை. இவ்வளவு வைராக்கியமும் பிடிவாதமும் அவளுக்குள் இருந்தது அவனுக்கு என்னமோ போல் இருந்தது. இந்த குணம் நல்லதல்லவே என்ற நினைப்பை அவனால் தவிர்க்க முடியவில்லை. காதல் என்பது வாழ்க்கையில் மிக அழகிய வர்ணம் என்பதில் அவனுக்கு மறுப்பில்லை. ஆயினும் அந்த வர்ணம் மட்டுமே வாழ்க்கை என்பதை அவன் நம்பவில்லை. அதைவிட முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாதவர்களின் நாட்கள் காதலிலேயே கழிந்து ஒன்றுமில்லாமல் போகும். காலத்தை அப்படி காதலில் மூழ்கடிக்க அவன் விரும்பவில்லை. இரண்டு நாள் அவளோடு பேச முயற்சித்து தோல்வி கண்ட பின் மூன்றாவது நாள் முயற்சியை விட்டு விட்டு வேறு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். பிடிவாதம் குறைந்து அவளே மீண்டும் அழைக்கட்டும் என நினைத்தான். பத்து நாள் கரைந்தும் அவளிடமிருந்து எவ்வித அழைப்பும் இல்லை என்றானதும் அவனுக்கும் வைராக்கியம் கூடியது.

“இரவு பன்னிரெண்டு மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பி புத்தாண்டு வாழ்த்து சொன்னாள் சரண்யா”. 

”ஆயிரமாவது ஆண்டு ஆரம்பம்னு உலகமே கொண்டாடிண்ருக்கு. நீ மட்டும் இப்டி தூங்கறயே. பைத்தியம் மாதிரி நாடி.வி.யோட பேசிண்டுருக்கேன் தனியா உக்காந்து.” 

“பன்னண்டு மணிக்கு எழுப்பி இப்டி அர்ச்சனை பண்ணணுமா?” 

“பகலா ராத்திரியான்னு தெரியல. வெளில ஒரே கோலாகலமா இருக்கு. எழுந்து வாயேம்ப்பா. ஒரு சின்ன வாக் போய் எல்லாத்தையும் ரசிச்சு பார்த்துட்டு வருவோம். 

“வேணாந்தாயி.. கோலாகலம்ங்கற பேர்ல சிலபேர் பொறுக்கித்தனமும் பண்ணுவா எதுக்கு வம்பைத் தேடி போகணும்.” 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வாப்பா. ஊரே முழிச்சுண்டுருக்கு. எவ்ளோ வெடி சத்தம் பார். காதைப் பிளக்கறது. எழுந்து வா.” 

சரண்யா எழுந்து கொடியில் தொங்கிய சல்வாரின் துப்பட்டாவை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டு பூட்டு சாவியை எடுத்தாள். ஷர்ட்டை மாட்டிக் கொண்டு வேட்டியோடு புறப்பட்டார் அப்பா. 

அந்த தெருவின் எல்லா வீடுகளிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. எல்லாருமே சந்தோஷமாக இருந்தார்கள். தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து டென் தெளசன்ட் வாலாவை கொளுத்தத் தயாரானார்கள். சுருட்டி வைத்திருந்த பட்டாசை, பாய் விரிப்பது போல ஒருவன் உருட்டி விரித்துக் கொண்டு செல்ல, சரண்யா அப்பாவோடு ஒரு ஓரமாய் நின்று, அது வெடிப்பதைப் பார்க்கத் தயாரானாள். திரியில் தீ வைப்பதற்கு முன்பு அவர்கள் உற்சாகமாக கானா பாட்டு பாடிக் கொண்டு குதித்து குதித்து ஆட அந்த உற்சாகம் அத்தனை பேருக்கும் தொற்றிக் கொண்டது. வீடுகளிலிருந்து இன்னும் பலர் கூட வந்து ஆட்டத்தில் கலந்து கொண்டார்கள். 

“ஜாலியா இல்லப்பா? எனக்கு கூட ஆடணும் போல இருக்கு. சரண்யா அப்பாவிடம் திசுகிசுத்தாள்.” 

”சரிதான். இந்த ஆசை வேற இருக்கா?” 

”இன்னும் யாராவது பொண்ணுங்க ரெடின்னு வந்தா நாங்களும் ஆடுவோம். என்ன சொல்லு ஆம்பளையா பொறந்தா இதெல்லாம்தான் சௌகர்யம்.” 

ஆதங்கத்தோடு சொன்னாள் அவள். 

இளைஞன் ஒருவன் திரியைப் பற்ற வைக்க அடுத்த அரை மணிநேரத்திற்கு விடாது வெடித்தது. கடைசி பட்டாசு வெடித்து முடித்த போது ஒரே புகை மயம். இளைஞர்கள் கோரசாக உச்சஸ்தாயியில் ஹேப்பி நியூ இயர் என்று கத்தினார்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற வித்தியாசமோ தயக்கமோ இன்றி கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்து சொல்லிக் கொண்டார்கள் அனைவரும். மிக மிக சந்தோஷமான ஆரம்பம். ரேஷன் அரிசி, கேஸ் விலை உயர்வு, டீசல் பிரச்சனை. கார்கில் போர், விலைவாசி உயர்வு, நிதிநிலை நெருக்கடி, விமானக் கடத்தல் எல்லாவற்றையும் மறந்து மக்கள் சந்தோஷமாயிருந்தார்கள். இந்த சந்தோஷம் நிலைத்து நின்று விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கிருத யுகத்தில் அதர்மம் என்பதே இல்லாதிருந்ததாமே. 

மனிதர்கள் அவ்வளவு பேருமே உத்தமர்களாயிருந் தார்களாமே. அதே போல் மீண்டும் உலகம் மாறி விட்டால் எப்படியிருக்கும்! லஞ்சமில்லாத அரசாங்க அலுவலகங்கள், ஊழலற்ற அரசாங்கம், விரைவாய் நகரும் கோப்புகள், ஜாதிகளற்ற சமுதாயம், மதவெறியற்ற மனிதர்கள், சுரண்டலற்ற ந்ேமையான அரசியல்வாதிகள், ரூபாய்க்கு ஐந்து படி அரிசி, ஐந்து ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கம், கொலை, கொள்ளைகளற்ற உலகம்…! எவ்வளவு அற்புதமாயிருக்கும் இப்படியிருந்தால்! சரண்யா பெருமூச்சு விட்டாள். 

”என்னம்மா பெருமூச்சு விடற?” அப்பா கேட்க சரண்யா தான் நினைத்ததைச் சொன்னாள். 

“நீ நினைக்கறதெல்லாம் நடக்கும்.” 

“நிஜம்மாவாப்பா? எப்டி?” 

“டிசம்பர்க்கு அப்பறம் மறுபடியும் ஜனவரிதானே? பங்குனிக்கப்புறம் சித்திரை தானே? அதே மாதிரிதான். கலியுகம் முடிஞ்சதும் மறுபடியும் கிருதயுகம்தான். தர்மம் மட்டுமே நிறைந்திருக்கும் யுகம்! என்ன…அதுவரை இந்த அதர்ம சகதிலதான் வாழ்ந்தாகணும். வேற வழியே இல்ல. தர்மம் குறைஞ்சுக்கிட்டே வரும். மனுஷத்தன்மை கேள்விக்குறியாகும். பண வெறியும் பதவி வெறியும் பிடிச்ச அரசியல்வாதிங்க கைல ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். ஓட்டுப் போடவும் வரி கட்டவும் மட்டும்தான் நமக்கு உரிமை உண்டு. கேள்வி கேட்க இல்ல!” 

“தொட்டதுக்கெல்லாம் வரி கட்டறோம். அப்பறம் பட்ஜெட்ல எப்டிப்பா துண்டு விழுது!” 

அப்பா சிரித்தார்.

“வரிப்பணங்கறது மழை உருவாகறா மாதிரிம்மா. கடல் நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்து மறுபடியும் பூமிக்கே மழையா மாறி பொழியும். அதே மாதிரிதான் வரியும். மக்கள்கிட்டேர்ந்து வசூலிக்கப்பட்டு மறுபடியும் பல விதங்களில் மக்களுக்கே உபயோகமா திரும்பி வரணும். அதான் நியாயம். ஆனா எங்க வருது? அது சுரண்டல்காரங்க கஜானாக்கு இல்ல போகுது! மொத்தத்துல மனுஷனுக்கு ஒரே ஒரு எய்ட்ஸ்தான். ஆனா நாட்டுக்கு? லஞ்சம், ஊழல், சுரண்டல், தீவிரவாதம், மதவெறி, பணவீக்கம், பதவி வெறின்னு நிறைய எய்ட்ஸ். இத்தனை நோய்லேர்ந்து இந்த நாட்டை காப்பாத்த ஒரு காந்தியும் நேருவும் போறாது! ஒவ்வொரு மனுஷனுமே அஹிம்சைங்கற ஆயுதத்தோட சத்யாக்கிரகம் பண்ணத் தயாராகணும். ஆனா எங்கே…? எல்லாரும் வேடிக்கை தானே பாத்துட்ருக்கோம்!” 

அப்பாவின் குரலில் உண்மையான கவலையும் வருத்தமும் தெரிந்தது. 

”ஏம்பா சம்பத் மாமா முழிச்சுட்ருப்பாரா?” திடீரென்று பேச்சை மாற்றி கேட்டாள் சரண்யா. 

“ஏன் கேக்கற?” 

“ஒரு போன் பண்ணி எல்லார்க்கும் புது வருஷ வாழ்த்து சொல்லுவோமா?” 

“ஒருவேளை தூங்கிட்ருந்தா?”

”எழுப்புவோம்ப்பா! என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு! ஆனா முழிச்சுட்ருப்பாங்கன்னுதான் தோணுது.” 

“சரி பண்ணு. நம்பர் தெரியுமா?’ 

“இதுவரை பண்ணினதில்லன்னாலும் நம்பர் மட்டும் மறக்கல.” 

“அதெப்டி மறக்கும். ஆகாஷ் வீட்டு நம்பராச்சே!” 

சரண்யா புது வருஷத்தை முன்னிட்டு நள்ளிரவிலும் திறந்திருந்த பி.சி.ஓ. ஒன்றில் நுழைந்தாள். ஆகாஷ் வீட்டு எண்களை வரிசையாய் அழுத்தினாள். 

எதிர்முனையில் ரிங் போன போது மனசக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. அடிவயிற்றில் ஜிவ்வென்று ஏதோ பரவியது.

நாலைந்து ரிங் போன பிறகுதான் போன்எடுக்கப்பட்டது.

“ஹலோ” எதிர்முனையில் மாமியின் அதட்டலான குரல் கேட்க சரண்யாவின் சப்த நாடியும் ஒரு விநாடி ஒடுங்கியது. 

“யாரது…?” 

‘சரண்யா சட்டென்று போனை அப்பாவிடம் கொடுத்தாள். ரிஸிவரை மூடிக் கொண்டு அவரிடம் சொன்னாள். 

”அப்பா,மாமி! நீயே பேசு. மாமாக்கு வாழ்த்து சொல்ல பண்ணினதா சொல்லு. மாமா லைன்ல வந்ததும் எங்கிட்ட கொடு.” 

அப்பா போனை வாங்கினார்.

“ஹலோ…நா… நான்தான் கோபாலன்.” 

”ஒண்ணுல்ல புதுவருஷ வாழ்த்து சொல்லலாம்னு. சம்பத் இல்லையா?” 

”என்ன விஷயம் இந்த நேரத்துல?”

“எல்லாரும் தூங்கிட்ருக்கா.” 

“பரவால்ல. நா காலேல பண்ணிக்கறேன் எழுப்ப வேண்டாம்.”

“விடியற்காலேல நாங்க வெளில போறோம். உங்க சார்பா நானே வாழ்த்து சொல்லிடறேன். நீங்க சிரமப்பட வேண்டாம்.” 

எதிர் முனையில் ரிஸீவர் நிர்த்தாட்சண்யமாய் வைக்கப்பட கோபாலன் முகம் சுருங்க பெண்ணைப் பரிதாபமாய் பார்த்தார். 

அத்தியாயம்-13 

அழகிற்காக உண்டாகும் காதல், அழகிய பூ விரைவில் வாடிப்போகும். பணத்திற்காக உண்டாகும் காதல் ஒரு கண்ணாடி டம்ளர்- எந்த நிமிடமும் உடையும். அன்பிற்காக உண்டாகும் காதல் அஜந்தா ஒவியம் என்றும் வர்ணமிழக்காது. -அரு. ராமனாதன். 

ஃபேஷன் டிஸைன் பற்றிய மேல்நாட்டுப் புத்தகம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜிதா.

அறைக்கதவை யாரோ தட்டினார்கள். புத்தகத்தை வைத்து விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அறைத் தோழி நிஷா இரண்டு கைகளிலும் நாலைந்து பார்சல்களோடு நின்றிருந்தாள். ‘

“எங்க போய்ட்டு வர?” 

“ஷாப்பிங்தான்.” 

“என்ன வாங்கின?” 

“நா எங்க வாங்கினேன். எல்லாம் என் பாய் பிரண்டு வாங்கித் தந்தான்”.

நிஷா கட்டிலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாகப் பிரித்தாள். இரண்டு செட் சுரிதார்கள். அதற்கு ஜோடியாக விலை உயர்ந்த ஹீல்ஸ் செருப்புகள். இம்போர்ட்டட் மேக்கப் கிட் ஒன்று. யார்ட்லி சென்ட் பாட்டில், கற்கள் பதித்த விலை உயர்ந்த நவநாகரீக பொட்டு அட்டைகள், லெதர் பேக், கூலிங் கிளாஸ் என்று ஏகப்பட்ட சாமான்கள். 

“என்னடி அலிபாபா குகைக்குள்ள போய்ட்டு வந்தயா? வித விதமா எடுத்து போட்டுக்கிட்டேர்க்க!” 

“மொத்த செலவு இருபதாயிரம்.” 

”ஒட்ட சரச்சுட்டயா உன் ஆள் தலைய?” 

“இதுக்குதான் பாய் பிரண்டு வெச்சுட்ருக்கேன். என்னதான் நம்ம கைலேர்ந்து லட்சக்கணக்குல செலவழிச்சாலும், ஓசில வர சந்தோஷத்துக்கு ஈடாகுமா சொல்லு.” 

”எல்லாம் சரி இவனையே கல்யாணம் பண்ணிப்ப இல்ல.”

“யார் கண்டா?” 

”என்னடி இவ்ளோ கூலா சொல்ற?” 

“பண்ணிக்கலாம். பண்ணிக்காம போகலாம். அதைப்பத்தி ப்பொ என்ன? இப்போதைக்கு அவன் மூலம் கிடைக்கறதை அனுபவிக்கறதா இருக்கேன் அவ்ளோதான். என் கதையை விடு. உன் ஆளைப் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேன்ற! ஆள் எப்டி? நல்லார்ப்பாரா? நல்ல வசதியா?. சும்மா பாய் பிரண்ட் மட்டும்தானா? இல்ல அதுக்கும் மேலயா?” 

”உன்னைமாறின்னு நினைச்சயா?” 

“காவியக்காதலா? அதை விடு. லேசுல உனக்கு யாரையும் பிடிக்காதே! எல்லார்கிட்டயும் ஒரு குறை சொல்லுவ! இவனை மட்டும் எப்டி பிடிச்சுது? உன் பின்னால சுத்திட்ருந்தானே ஒரு பாப்புலர் பாப் சிங்கர். அவனை விடவா இவன் ஸ்மார்ட்டா இருப்பான்? இல்ல பிரபலமான ஆளா?” 

”நீ எப்டி நோண்டிக் கேட்டாலும் ஒரு தகவலும் உனக்கு சொல்றதால்ல.”

“சொல்லாட்டா போயேன்? நீங்க சொல்லாட்டி நாங்க கண்டுபிடிச்சுக்க மாட்டோமாக்கும். அவனோட வெளியில சுத்தாமயா இருக்கப் போற? சி.ஐ.டி. வேலை பண்ணி உனக்கே அவனைப் பத்தி புதுப்புது தகவல் சொல்றேனா இல்லையா பார்.” 

“தாராளமா! முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோ.” 

சுஜிதா புன்சிரிப்போடு எழுந்து சென்று டி.வி.யை ஆன் பண்ணினாள். 

“விளையாட்டு போல் பத்து நாளாகி விட்டது ஆகாஷோடு பிணங்கிக் கொண்டு. சுத்தமாய் அவனிடமிருந்து எந்த பேச்சும் இல்லை. அவள் நினைத்ததற்கு நேர்மாறாயிருந்தது. அவன் செயல். அவளுக்காக தவமாய் தவமிருப்பான், பரிதவிப்பான், சினிமா காதலன் போல இடைவிடாது முயற்சிப்பான். நள்ளிரவில் சுவரேறி குதித்து வந்து அவளை சந்தித்து வம்பு செய்வான் என்றெல்லாம் நினைத்தவள் சுத்தமாய் ஏமாந்து போனாள். முதல் இரண்டு நாள் அவனிடமிருந்து ஏழெட்டு முறை போன் வந்தது. தான் இல்லை என்ற தகவலைச் சொல்லி அவனோடு பேசுவதை வேண்டுமென்றே தவிர்த்தாள் அவள். போனில் பேசவில்லை என்றதும் நேரிலேயே வந்து அவளை மடக்குவான் என்று நினைத்தவளுக்கு மறுநாள் ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஆகாஷ் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. போனும் வரவில்லை. ஆளும் வரவில்லை. இரண்டு மூன்று நாள் வீராப்பாக இருந்தவளுக்கு அதன் பிறகு மெல்ல மெல்ல வீராப்பு குறைந்து அந்த இடத்தில் ஆதங்கமும் வெறுமையும் படர்ந்தது. இன்றோடு பத்து நாளாகிறது. இவளை விட வைராக்கியமாய் இருக்கிறான் அவன். இப்படியே போனால் அவளை மறந்தே போனாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதற்கு மேல் அவனிடம் பேசாமல் இருக்க முடியாது என்று தோன்றிய அதே நேரம் நாமாகப் போய் முதலில் எப்படி பேசுவது என்ற தயக்கமும் ஏற்பட்டது. பார்த்தாயா நீ தோற்றுவிட்டாய் நான் ஜெயித்து விட்டேன் என்பது போல் அவன் இளக்காரமாய்ப் பார்த்தால்…? பார்ப்போம் இன்னும் நாலு நாள் பார்ப்போம். அவன் மனசில் மட்டும் ஆசை இருக்காதா என்ன? அவன் காதல் உண்மையானால் அவனே இந்த மௌனத்தை உடைப்பான்.”

பேசலாம் என்று ஒரு பக்கம் தோன்றிய சிறிய சபலத்தை உள்ளுக்குள் இருந்த ஈகோ என்னும் பைசாசம் அடக்கி விட்டது.

“மேலும் நாலு நாட்கள் சாதாரணமாகவே கடந்தது. போகி, பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகையாய் வந்து சென்றது. கல்லூரி விடுமுறை, ஊருக்குச் செல்லவும் பிடிக்கவில்லை. ஆகாஷோடும் பேச இயலவில்லை என்ற நிலையில் என்னடா வாழ்க்கை இது என்ற அலுப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. அதற்குமேல் பொறுக்க முடியாதவள் திருவள்ளுவர் தினத்தன்று அவனோடு பேசி விடுவது என்று முடிவு செய்தாள். தன் வைராக்கியத்தை தானே உடைப்பது என்பது ஒரு மாதிரி இருந்தாலும் வேறு வழியில்லை.” 

தலைப்பொங்கல் என்பதால் சத்யாவும் அவள் புருஷனும் வந்திருந்தார்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புதுத் துணியும் பொங்கல் சீரும் செய்தார் கோபாலன். மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்தார்.

சத்யாவும் சரண்யாவும் முற்றத்தில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து கும்பிட்டார்கள்.

“வேலைக்கு போயிட்ருக்கயா சத்யா.. வேலை பழகிடுச்சா?” 

சாப்பிடும்போது அக்காவிடம் கேட்டார் அப்பா. மாப்பிள்ளை சிரித்தான்.

“என்ன சிரிக்கிறிங்க?” 

“புருஷனால வந்த தொந்தரவு புள்ளையால போய்டுச்சு. அப்டித்தானே?” மனைவியைப் பார்த்து சிரித்தான். 

“என்ன சொல்றிங்க?” 

”உங்கக்கா ஒண்ணும் சொல்லலையா?” 

”ஒண்ணும் சொல்லலையே என்ன விஷயம்?” 

“இப்ப பாருங்க இன்னும் ரெண்டு நிமிஷத்துல சொல்லாமயே தெரிஞ்சுடும்” அவன் விஷமமாய்ச் சிரித்தபடி சாப்பிட்டான். ரெண்டு வாய் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட அக்கா மூன்றாவது வாய்க்கு குமட்டிக் கொண்டு வர எழுந்து ஓடினாள். 

“இதானா விஷயம்?” சரண்யா சிரிப்போடு மாமாவைப் பார்த்து விட்டு அவள் பின்னால் ஓடினாள். 

”இந்த நேரத்துல எங்கேர்ந்து வேலைக்கு அனுப்ப?” மாப்பிள்ளை மாமாவிடம் சொல்ல அவர் சந்தோஷம் பரவிய முகத்தோடு ஆமோதித்தார். 

”கங்கிராட்ஸ்!” சரண்யா திரும்பி வந்து சத்யா புருஷனின் கையைப் பிடித்து குலுக்கினாள்.

”இந்த சந்தோஷத்தைக் கொண்டாடணுமே! என்ன செய்யலாம்?” 

“சினிமாக்கு போலாமா?” 

“கரெக்ட் சிக்ஸ்த் சென்ஸ்ன்னு ஒரு பஸ்ட் கிளாஸ் மூவி வந்திருக்கு போலாமா?” 

“இங்கிலீஷ் படமா ஒரு எழவும் எனக்கு புரியாது. எத்தனை தமிழ்ப்படம் ரிலிசாயிருக்கு. அதுல ஏதாவது போலாம்” சத்யா பின் பக்கமிருந்து சொல்லிக் கொண்டே வந்தாள்.

”நல்ல தமிழ்ப்படத்துக்கெல்லாம் இன்னிக்கு டிக்கெட் கிடையாது சத்யா. டப்பா படத்துக்கு போறதை விட பேசாம வீட்லயே இருந்து டி.வி.ல படம் பார்க்கலாம்.”

“அவ சொல்றதும் சரிதான். இங்கிலீஷ் படம்தான் பாரேன். பார்க்காமயே புரியாது புரியாதுன்னா எப்டி?” 

”என்னமோ செய்ங்க்..” சத்யா அரை மனதோடு சம்மதம் சொன்னாள். 

அப்பா வரவில்லை என்று சொல்லிவிட்டதால் மூன்று பேரும் மட்டும் கிளம்பினார்கள். 

‘பொங்கல் டைம் என்றதால் எல்லா தியேட்டரிலுமே கும்பலாக இருந்தது. தமிழ் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் ஏதோ படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆங்கிலப் படத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சத்யாவின் புருஷன் இருவரையும் நிற்க வைத்துவிட்டு எங்கோ சென்றான். பிளாக்கில் டிக்கெட் கிடைக்கிறதா என்று பார்த்தான்.

”ஹலோ… எக்ஸ்கியூஸ்மி..” பின்னால் குரல் கேட்க சரண்யா திரும்பினாள்.

”மூணு டிக்கெட் இருக்கு வேணுமா?” நவநாகரீக உடையணிந்திருந்த இளம் பெண் ஒருத்தி கேட்க சரண்யா சட்டென்று அதை வாங்கிக் கொண்டாள். “சத்யா நீ போய் மாமாவைக் கூட்டிட்டு வந்துடு” அக்காவிடம் சொல்லியபடி ஹேண்ட்பேக் திறந்து டிக்கெட்டுக்கு பணம் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்து நன்றி சொன்னாள். பணத்தை வாங்கிக் கொண்டு அலட்சியமாய் நடந்து சென்ற அந்த பெண் வேறு யாருமில்லை. சுஜிதாவேதான். தோழிகளோடு சினிமாவுக்கு வந்தவள் சற்று தூரத்தில் தன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்த்ததும் வியப்படைந்தாள். அவனும் அந்த படத்திற்கு வருவான் என்று அவள் நினைக்கவில்லை. அதே நேரம் பதினைந்து நாளாக தன்னை சுத்தமாக மறந்தது மில்லாமல் தன்னை விட்டு விட்டு அவன் பாட்டுக்கு சினிமா பார்க்க வந்திருப்பது அவள் மனதை உறுத்தியது. ஒருவேளை அவள் வந்திருப்பது தெரிந்துதான் அவனும் வந்திருக்கிறானோ என்ற சந்தேகமும் எழும்பியது. தான் அவனைப் பார்க்காதது போல் அவன் பார்வையில் படுமாறு, அவன் பார்க்க வேண்டுமே என்ற படபடப்போடு ஒரு இடத்தில் நின்றாள். பத்து நிமிடத்திற்குப் பிறகும் யாரும் அருகில் வராமல் போக மெல்ல திரும்பினவள் எரிச்சலடைந்தாள். அவளைக் கடந்து அவன் நடந்து கொண்டிருந்தான். ஏற்கனவே ரிஸர்வ் செய்துவிட்டு வந்திருப்பான் போலும். சுஜிதா பல்லைக் கடித்தபடி வேகமாய் நடந்து சென்று அவனுக்கு முன்னால் சென்று நின்று முறைத்துப் பார்த்தாள்

”ஹலோ… சௌக்கியமா?” அவன் புன்சிரிப்போடு கேட்டான். 

”நா வரது தெரிஞ்சுதானே வந்திங்க?” 

“யார் சொன்னா அப்டி? எனக்கு ஜோசியமெல்லாம் தெரியாது தாயே.நா சாதாரணமாதான் படம் பார்க்க வந்தேன். எனி ஹவ் உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்.” 

“எனக்கு சந்தோஷமில்ல. என்னைப் பார்க்காம எங்கிட்ட பேசாம நீங்க ஜாலியாதானே இருக்கீங்க?” 

”சரி விடு. ரெண்டு பேரும் பழம் விட்ருவோம். ஒண்ணா உக்காந்து படம் பார்ப்போம் என்ன சொல்ற?”

”நோ…! வரல.நீங்க தனியாவே என்ஜாய் பண்ணுங்க. நா போறேன்.”

“ஏய்..சுஜி…நில்லு…” 

அவன் கூப்பிடுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் விறுவிறுவென்று நடந்தாள். டிக்கெட் கிடைக்காமல் நாலா பக்கமும் பார்த்தபடி நின்றிருந்த சத்யா, சரண்யாவை நெருங்கி டிக்கெட்டை விற்று விட்டு, அவன் பக்கம் கூடப் பார்க்காமல் சென்று மறைந்தாள்.

டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் மூவரும் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.

‘படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு மூன்று முறை எழுந்து சென்று வாந்தி எடுத்துவிட்டு வந்துவிட்டாள் சத்யா. உட்காரவும் முடியவில்லை. படமும் புரியவில்லை, என்ற நிலையில் சிரமமாகி விட்டது அவளுக்கு.

“ஏங்க என்னால முடியல. போயிரலாமா?” 

“பாதி படத்துல எப்டி?” 

”குமட்டிட்டே இருக்கே.எல்லாரும் திரும்பித் திரும்பி பார்க்கறாங்க பாருங்க.” 

“என்னக்கா?” 

“என்னால முடியல. போய்டலாமா? 

“படம் நல்லார்க்கே. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்க முடியாதா? புளிப்பு மிட்டாய் வேணா வாங்கிட்டு வரச் சொல்லவா?” 

“வேணாம்.தலையெல்லாம் கனக்குது.”

“ஒண்ணு செய் சரண்யா. நீ இருந்து படத்தை பார்த்துட்டு வா. நா இவளைக் கூட்டிட்டு போறேன்.” 

“என்ன பேசறிங்க. அவ தனியா வருவாளா?” 

“எனக்கொண்ணும் பயமில்ல சத்யா நீ கிளம்பு.”

“அப்பா திட்டுவார் தனியா விட்டுட்டு வந்துட்டயான்னு.”

“மாட்டார். நீங்க கிளம்புங்க.” சரண்யா இருவரையும் அனுப்பி விட்டு படத்தில் கவனம் செலுத்தினாள். இருட்டில் இருவரும் நடக்க நிறைய பேர் உச்சுக் கொட்டி அதிருப்தியைத் தெரிவித்தார்கள். வரிசைக் கோடியில் ஆகாஷைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டு சத்யா ஒரு வினாடி தயங்கி நின்றாள்.

“ஆகாஷ் தானே. சம்பத் மாமாபிள்ளை?” கேட்டு விட்டாள். 

“ஆமா…” 

”நா சத்யா. கோபாலன் பொண்ணு.”

“ஓ…கல்யாணத்துல பார்த்தது. சௌக்யமா?” ஆகாஷ் எழுந்து மரியாதை நிமித்தம் அவள் கணவனின் கை பற்றி குலுக்கினான். 

“படம் பார்க்கலையா? போறிங்க?” 

“இல்ல கொஞ்சம் உடம்பு முடியல. ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ஆகாஷ்?” 

“என்ன?” 

”சரண்யாவை தனியா விட்டுட்டு போறோம். முடிஞ்சா அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு போறிங்களா போகும்போது?” 

”டிராப் பண்ணிட்டே போறேன். கவலைப்படாம கிளம்புங்க.” 

ஆகாஷ் அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தான். இருட்டில் சரண்யாவைத் தேடினான். காலியாயிருந்த இரண்டு சீட்டுக்கு அடுத்து அமர்ந்திருந்தவளைப் பார்த்துவிட்டு அவள் அருகில் சென்றான்.

அருகில் யாரோ அமர்வதைப் பார்த்ததும் யாரென்று திரும்பியவளுக்கு ஆகாஷைப் பார்த்ததும் வியப்பில் மூச்சே அடைத்து விடும் போலிருந்தது.

“நீங்களா…?” 

”ஏன்.. இது நா பார்க்கக் கூடாத படமா?”

“அதில்ல.. என்னை எப்டி…?” 

“சத்யாவைப் பார்த்தேன். உன்னை பத்திரமா வீட்ல சேர்க்கணும்னு உத்தரவு.” 

உடம்பெல்லாம் புளகாங்கிதத்தில் என்னமோ செய்தது. இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை அவள் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் கிடைத்திருக்கும் இன்பத்தில் மனம் திக்குமுக்காடியது. இந்த மணித்துளிகள் நகராமல் அப்படியே நிலைத்து விடாதா என்றிருந்தது.

அத்தியாயம்-14 

நல்ல மனிதனுடைய வாழ்க்கையில் சிறந்த பகுதி எதுவென்றால் அவ்வப்போது அவன் அன்புடன் சிறுசிறு செயல்களைச் செய்வதுதான். அவை அற்பமானவையாயிருந்தாலும், அவற்றால் பலனடைகிறவர்களின் நெஞ்சில் நிலைத்து விடுகிறது. -வேர்ட்ஸ் வொர்த் 

இடைவேளையின்போது அவளை வெளியில் அழைத்துச் சென்று கோக் வாங்கிக் கொடுத்தான். அவன் வாங்கித் தந்து, குடிப்பது பெருமையாக இருந்தது. தான் அவனுடைய பாதுகாப்பில் இருக்கிறோம். தன்னை பத்திரமாக வீட்டில் விட்டுச் செல்லும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பது அதைவிட பெருமையாக இருந்தது. 

இடைவேளைக்குப் பிறகு படத்தில் ஆழ்ந்து போனார்கள். படத்தின் பிரம்மிக்கத்தக்க திரைக்கதையும், புருஸ் வில்லிஸின் பக்குவப்பட்ட நடிப்பும், ஆழமான காட்சிகளும் புருவத்தை உயர்த்தின. இதை இயக்கிய இளைஞன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற உணர்வு பெருமையளித்தது. படம் முடிந்து வரும்போது மனசு கனத்திருந்தது.

“எப்டியிருந்துது படம்?” கார்க்கதவைத் திறந்தபடி கேட்டான் ஆகாஷ். 

“எக்ஸலண்ட் என்ன சொல்றதுன்னு தெரியல. பிரம்மிப்பார்க்கு.” 

அவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து முன்பக்க கதவை அவளுக்காக திறந்து விட்டு ஏறச் சொன்னான். ஒருவித கர்வம் துளிர்க்க ஏறி அவனருகில் அமர்ந்தாள். 

“பஸ்ட்கிளாஸா ஒரு காபி சாப்ட்டுட்டு போலாமா சரண்யா.” 

“தாராளமா” 

அவன் டிரைவ் இன்னில் காரை நுழைத்து நிறுத்தி காப்பிக்கு சொன்னான். 

“அப்புறம் ஏன் வீட்டுப் பக்கமே வரல?” 

“வரக்கூடாதுன்னெல்லாம் இல்ல. டைம் கிடைக்கல.” 

“அதெல்லாம் இல்ல. பயம்தானே?” 

“எனக்கென்ன பயம்?” 

“ஆலு சப்பாத்தியை நினைச்சு! அதுவே ஜென்மத்துக்கும் போதும்னு ஆய்டுத்து இல்ல?” 

“ம்… அப்படியும் வெச்சுக்கலாம்” அவன் சிரிக்க அவள் பொய்யாய் கோபித்துக் கொண்டாள். 

அவள் மனசைக் கஷ்டப்படுத்த வேண்டாமே என்று மற்றவர்கள் தப்பாக எடுத்துக் கொண்ட விஷயத்தை அவளிடம் சொல்லவில்லை அவன்.

“அட்லீஸ்ட் புது வருஷத்தன்னிக்காவது வந்து வாழ்த்து சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.” 

“வரணும்தான் நினைச்சேன். ஆனா ஒரே வேலை. சாரி தப்பா எடுத்துக்க வேண்டாம் என்ன?” 

“இல்ல..இல்ல. ஆனா நீங்க மறந்தாலும் நாங்க மறக்கல. உங்களுக்கு விஷ் பண்ணினோம்.” 

“அப்டியா..எப்பொ..?” 

“ராத்திரி பன்னண்டு மணிக்கு. நியூ இயர் பொறந்ததுமே..” 

“யார்ட்ட பேசின?” 

”நா பேசல.. அப்பாதான் பேசினார். உங்கம்மாதான் எடுத்தாங்க போனை. நீங்கள்ளாம் தூங்கறதா சொன்னாங்க. சரி புத்தாண்டு வாழ்த்துக்களை எல்லார்க்கும் சொல்லிடுங்கன்னு அவங்ககிட்டயே சொல்லி வெச்சுட்டோம்.” 

“ஓ…!” 

”அம்மா சொல்லலையா?” 

“ம்? அப்பாட்ட சொல்லியிருப்பா. எங்கிட்ட சொல்ல மறந்துட்டாளோ என்னமோ? பரவால்ல அதைப் பத்தி என்ன? இப்ப சொல்லேன். நீ எனக்கு சொல்லு. நா உனக்கு சொல்றேன்.” 

“ஹேப்பி நியூ இயர்?” 

“விஷ் யூ எ வெரி வெரி ஹாப்பி அண்ட் புராஸ்பரஸ் நியூ இயர்” அவன் அவள் கைப்பற்றி குலுக்கியவாறு சொல்ல, தனக்குள் ஒருவித சிலிர்ப்பு காலோடு தலை பரவுவதை உணர்ந்தாள் அவள்.

”போலாமா?” அவன் பில் பணத்தை வைத்துவிட்டு காரைக் கிளப்பினான். 

அவளை தெருமுனையில் இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்கு வந்தான். 

இரவு ஒன்பது மணிக்கு சங்கீதா வந்து சாப்பிட அழைக்கும்போது அவன் அலுப்பாகப் படுத்திருந்தான். வேண்டுமென்றே டிக்கெட்டை யாருக்கோ விற்று விட்டுப் போன சுஜிதாவை நினைத்துக் கொண்டிருந்தான் அவன். அவள் அப்படி செய்தது மனதில் மெல்லிய வேதனையை ஏற்படுத்தியிருந்தது.ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி எழும்பியது. பணத்திலேயே பிறந்து புரண்டு வளர்ந்ததால் இந்த திமிரோ? இப்போது பரவாயில்லை. எப்படி யிருந்தாலும் ரசிக்கலாம். இதே ஈகோவும் திமிரும் திருமணத்திற்குப் பிறகும் இருந்தால் அது சரியாகுமா? அவன் கவலைப்பட்டான்.” 

“அண்ணா” 

கண்களைத் திறந்தான். 

”சாப்ட வரயா?” 

”ம். நீ போ வரேன்.” 

“எங்க போயிருந்த நீ?” 

“படத்துக்கு. சிக்ஸ்த் சென்ஸ்.” 

”ஓ! அதான் இவ்ளோ சைலன்ட்டா படுத்துட்டயா? இன்னும் ஒரு வாரத்துக்கு அசை போடுவ பார்.”

சங்கீதா கீழே போய்விட்டாள். சற்று நேரம் கழித்து ஆகாஷ் கீழே வந்தான். 

“ஏம்மா நியூ இயர் அன்னிக்கு யாராவது போன்ல விஷ் பண்ணினாங்களா?” கேஷிவலாக அம்மாவிடம் கேட்டான். 

“யாரு பண்ணினா. ஞாபகம் இல்லையே?” 

”நா சொல்லவா? கோபாலன் மாமா பண்ணியிருக்கார். புது வருஷ வாழ்த்து சொல்லியிருக்கார். நாங்கள்ளாம் முழிச்சுட்டு தானே இருந்தோம். தூங்கறோம்னு சொல்லி ஏம்மா போனை வெச்ச?” 

குற்றம் சாட்டுவது போல் அவன் கேட்க அம்மா புருவம் சுருங்க அவனைப் பார்த்தாள். 

“ஆமா கோபாலன் பண்ணினார். அதைச் சொல்லாதது அவ்ளோ பெரிய குத்தமா? இதுவரை எத்தனை புது வருஷம் வந்து போயிருக்கு! இவ்ளோ நாள் இல்லாம இப்பொ என்ன போன் பண்ணி வாழ்த்து சொல்ற புதுப் பழக்கம்?” 

”இவ்ளோ நாள் இல்லாம இருந்திருக்கலாம். அதுக்காக அவமானப்படுத்தணுமா?” 

“யார்ரா அவமானப்படுத்தினா? யார் சொன்னா உங்கிட்ட அவர் பண்ணின விஷயம் உனக்கெப்டி தெரியம்? அவரே சொல்லியிருந்தாலொழிய தெரிய சான்ஸ் இல்லையே.” 

“ஆமா அவர்தான் சொன்னார். அதா இப்பொ முக்கியம்? இதே ஒரு பெரிய வி.ஐ.பி. யாராவது பண்ணியிருந்தா உடனே எங்களைக் கூப்ட்ருப்பயா மாட்டயா?” 

“இவரென்ன வி.ஐ.பி.யா கூப்ட? அதான் சொல்லல போறுமா?”

“தப்பும்மா வாழ்த்து சொல்ல வி.ஐ.பி.யாதான் இருக்கணும்னு அவசியமில்ல. மனுஷனார்ந்தா போதும். அந்தஸ்து பார்த்துதான் பழகணும்ங்கற உன் சித்தாந்தத்தை உடைப்புல போடு. நாளைக்கே நாம செத்தா தூக்கறதுக்கு எந்த அந்தஸ்துள்ள மனுஷனும் வரமாட்டான். ஒரு மலர்வளையம் வெச்சுட்டு போய்டுவான். சாதாரணப் பட்ட நாலு கூலிக்காரன் வந்து தூக்கணும்.” 

”நா சீக்கிரமே செத்துடணும் அப்டித்தானே?” அம்மா முகம் சிவக்க ரௌத்ரத்தோடு கேட்டாள். 

“புரிஞ்சுக்காம கத்தாதம்மா.” 

“புரிஞ்சுதாண்டா பேசறேன். ஆனா ஒன்றுதான் புரியல. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அந்த குடும்பத்து மேல அப்டி என்ன கரிசனம்னுதான் புரியல.” 

“அந்த குடும்பத்து மேல உனக்கு ஏன் இவ்ளோ வெறுப்புன்னு எங்களுக்கும் தான் புரியல. அவங்க அப்பா பக்கத்து உறவுங்கறதாலயா? இல்ல நமக்கு சமமா பணக்காரங்க இல்லன்றதாலயா?” 

“ரெண்டும்தான் காரணம். இதுக்கு மேல எனக்கு யாரும் உபதேசம் பண்ணத் தேவையில்ல.” 

ஆகாஷ் மேற்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, அப்பா சட்டென்று இடது கையால் அவன் தோளை அழுத்தி பேச வேண்டாம் என்று அடக்கினார்.

இரவு அவன் அறைக்கு வந்தார். “யார் சொன்னா ஆகாஷ் போன் பண்ணினதா உங்கிட்ட? கோபாலன் தானா?” 

”உண்மையைச் சொல்லணும்னா கோபாலன் இல்லப்பா, சரண்யாதான்” 

அவர் வியப்போடு அவனைப் பார்த்தார்.

“அவளை எப்பொ பார்த்த நீ?” 

“தியேட்டர்ல பார்த்தேன். குடும்பத்தோட வந்திருந்தா” ஆகாஷ் தியேட்டரில் நடந்ததையும் சரண்யாவை தான் டிராப் பண்ணி விட்டு வந்ததையும் அப்பாவிடம் மறைக்காமல் சொன்னான். 

“சரண்யான்னு சொன்னா அம்மா அனாவசியமா சந்தேகப்படுவா. என்னால் அந்த பொண்ணை ஏன் சந்தேகப்படணும்னுதான் சொல்லலை”. 

”உங்கம்மா குணம் உனக்குத் தெரியாதாடா ஆகாஷ். அப்பறம் ஏன் அவகிட்ட வீணா வாங்கிக் கட்டிக்கற? நீ என்ன சொன்னாலும் அவ சுபாவம் மாறப்போவதில்ல. புரிஞ்சுக்காதவங்கிட்ட பேசறது வீண் வேலை. டைம்தான் வேஸ்ட்.” 

“டைம் வேஸ்ட்டுன்னு பார்த்தா இந்த சுபாவத்தால வாழ்க்கைல நிறைய வேஸ்ட் ஏற்படும்ப்பா.” 

“ஏற்படட்டுமே! கஷ்டமோ நஷ்டமோ அனுபவிச்சு தெரிஞ்சுக்கட்டும்! சொன்னா புரிஞ்சுக்காதவங்க பட்டுதான் புரிஞ்சுக்கணும் விட்ரு.” 

அப்பா எழுந்தார். சிந்தனையோடு தன்அறைக்கு வந்தார். கோபாலனை நினைத்தால் பாவமாயிருந்தது. வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டாரே தவிர எப்படி போவது, அவர்களிடம் ஆகாஷ் சரண்யாவை விரும்பவில்லை என்பதை எப்படி சொல்வது என்று புரியாமல் அங்கு செல்லவே தயக்கமாக இருந்தது. அந்த பெண்ணின் ஏமாற்றத்தைப் பார்க்கும் சக்தி அவருக்கில்லை. சும்மா இருந்தவள் மனதில் ஆசைத்தீயை கிளப்பிவிட்டவர் அவர்தான். இப்போது அவரே அதை அணைக்கவும் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு நாள்தான் சொல்லாமலிருப்பது? இதோ இன்று சினிமா தியேட்டரில் ஏதேச்சையாக சந்தித்து அவளை வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கிறான். இதையும் அவள் காதலின் ஒரு சம்பவமாகவே நினைத்து நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடும். இந்த நம்பிக்கை இறுகுவதற்குள் அவளிடம் உண்மையைக் கூறாவிட்டால் பின்னால் அது பெரிய பிரச்சனையில் கொண்டு விட்டு விடும். இப்படி நினைத்தவர், அடுத்த நாளே கோபாலனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தார். 

‘திடுதிடு’ப்பென்று வந்து நின்ற சம்பத்தைப் பார்த்ததும் முகம் மலர வரவேற்றாள் சரண்யா

”ஆச்சர்யமார்க்கு!” 

“ஏன்?” 

“எங்க வீடு மறந்து போச்சோன்னு நினைச்சேன்.”

“எப்டி மறக்க முடியும்? வராட்டா மறந்துட்டேன்னா அர்த்தம்.” 

“என்ன சாப்பிடறீங்க?”

”அப்பா இல்லையா?” 

“மதுரைல ஷூட்டிங்னு போயிருக்கார்.” 

“ஷூட்டிங்கா?” 

“ம்! அப்பா சினிமால சின்ன சின்ன ரோல்ல எல்லாம் நடிக்கறார் தெரியுமில்ல?” 

“திடீர்னு என்ன நடிப்பாசை அவனுக்கு?” 

“எனக்காகத்தான். அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன் கொஞ்சம் இருக்கு. அதுபோக, என் கல்யாணத்துக்கும் பணம் சேர்க்கறாராம். நீங்க ஒண்ணும் கேக்காட்டாலும் ஓரளவு கௌரவமா செய்யணுமாம்.” 

சரண்யா சொல்ல சம்பத்தின் முகம் சங்கடத்தில் இறுகியது. பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவரிடமிருந்து. 

‘சரண்யா உள்ளே போய் அவருக்கு காபி கொண்டு வந்தாள். 

”கல்யாணம்ங்கறது தெய்வம் போடற முடிச்சுன்னு எல்லாரும் சொல்றதுல உனக்கு நம்பிக்கையிருக்கா சரண்யா?” 

“திடீர்னு என்ன..?” 

“பதில் சொல்லேன்.” 

”நிச்சயமா நம்பிக்கையிருக்கு. எல்லாத்துக்கும் மேல ஒரு சக்தி இருக்குங்கறதை நா நம்பறேன். எதுக்காக கேட்டீங்க?” 

“இல்ல நாம நினைக்கறோம். தெய்வம் ஒருவேளை முடிச்சை மாத்தியும் போட்ருக்கலாம். அல்லது நாம நினைச்சபடியே கூட முடிச்சு போட்டு வெச்சிருக்கலாம். ஸோ.. எது நடந்தாலும் ஏத்துக்கற பக்குவத்துக்கு நம்ம மனசை பழக்கப் படுத்திக்கறது நல்லதுதானே?” 

சரண்யா அவரை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். இந்த வேதாந்தத்திற்குப் பின்னால் ஏதோ ஒரு நிஜம் மறைந்திருப்பதாக தோன்றியது அவளுக்கு. ஒருவேளை அந்த நிஜம்தான் மாமாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இந்த வீட்டுப் பக்கம் வரமுடியாமல் செய்திருக்க வேண்டும். அது என்ன என்பது புரியவில்லை. புரிந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை. உனக்கும் ஆகாஷுக்கும் ஒருவேளை திருமணம் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும் என்று மறைமுகமாய் அவர் சொல்கிறார் என்றால் ஒருவேளை இதற்கு தடங்கலாய் இருப்பது மாமியின் குணமா, அல்லது ஆகாஷுக்கே அவள் மீது காதல் இல்லையா? ஆனால் ஆகாஷ் பழகுவதைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே அவளிடம் அன்பிருப்பதாகத் தானே தோன்றுகிறது.பின் என்னவாகத்தான் இருக்க முடியும்? மாமிதான் இதற்கு காரணமா? அப்படித்தான் இருக்க வேண்டும். 

சரண்யா மாமாவைப் பார்த்தாள். “தெய்வத்தின் தீர்மானப்படிதான். எல்லாம் நடக்கிறது என்றால் நாம எல்லாருமே மனுஷா தானே மாமா? யாராலயுமே எதையும் தடுத்துடவோ மாத்திடவோ முடியா தில்லையா? எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீங்க கவலைப்பட வேண்டாம். எதுவாயிருந்தாலும் நேருக்கு நேர் சந்திச்சு ஏத்துக்க நா தயாராவே இருக்கேன்.” 

மாமா பரிவோடு அவள் தலையைத் தடவினார். 

“நீ என்ன புரிஞ்சுக்கிட்டயோ எனக்கு தெரியாது சரண்யா. ஆனா நீதான் என் வீட்டுக்கு மருமகளாகணும்ங்கறதுதான் என் பிரார்த்தனையாயிருக்கும். பார்ப்போம் அதுக்கு மேல தெய்வ சித்தம்.” 

சம்பத் எழுந்தார். “அப்பொ நா வரேன். அப்பா வந்தா சொல்லு. அதுசரி தனியா இருப்பயா நீ? எவ்ளோ நாள் ஷூட்டிங்?” 

”பக்கத்து வீட்டம்மா வந்து துணைக்கு படுத்துக்கறாங்க. ஒண்ணும் பயமில்ல”. 

‘சம்பத் புறப்பட்டார்.

இரவு முழுக்க அவர் பேசி விட்டுச் சென்ற வார்த்தைகளே உள்ளுக்குள் சுற்றி சுற்றி வந்தன.

மறுநாள் பிரிட்டிஷ் கவுன்சிலில் சில புத்தகங்களை மாற்றிக் கொண்டு பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது முன்பொருமுறை ஆகாஷை அந்த இடத்தில் சந்தித்து அவனோடு காரில் சென்றது நினைவுக்கு வந்தது. இப்போதும் கண்கள், அவன் தென்பட மாட்டானா என்று சுழன்றது.

சிக்னலுக்காக வரிசையாக கார்களும் வண்டிகளும் காத்திருக்க ஒரு காரில் ஆகாஷின் உருவமும் தெரிந்தது. அட என்று வியப்போடு பார்த்தவள் விழிகள் அவன் அருகில் அவன் தோளில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும் சுருங்கியது. கருமேகம் படர்ந்தாற்போல் முகம் கறுத்தது.

அத்தியாயம்-15 

மனிதன் பார்த்து வியக்கும் நட்சத்திரம் காதல்; அதைப் பார்த்தபடி அவன் கடறிலிமும் படுகுழி திருமணம். -மென்கென் 

“எதுக்காக என்னை அவசரமா கூப்ட்ட?” கடற்கரை சாலையில் காரை நிறுத்திவிட்டு சுஜிதாவிடம் கேட்டான் ஆகாஷ். 

”சொல்றேன். சொல்லத்தானே கூப்ட்டேன். அதுக்கு முன்னால ஏதாவது சாப்டலாமே.” 

“சுண்டல் வாங்கலாமா?” 

”பரம்பரை புத்தி போகுதா பார்” அவள் கிண்டலடிக்க அவன் முகம் ஒரு வினாடி சுருங்கியது. 

“அந்த ரெஸ்ட்டாரண்ட்ல சமோசா சுண்டல் சாப்ட்படி சொல்றேன் வாங்க” அவள் காரை விட்டிறங்கி நடந்தாள். காலியாயிருந்த ஒரு டேபிளில் அமர்ந்தார்கள். 

“அன்னிக்கு சினிமா தியேட்டர்ல கண்டுக்காம போனதுக்கு இன்னும் கூட உங்களை பழி வாங்கணும்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள வேற ஒரு பிரச்சனை வந்துதோ நீங்க பிழைச்சீங்களோ!” 

”என்ன பிரச்சனை…?’ அவன் சமோசாவுக்கு சொல்லி விட்டுக் கேட்டான். 

“நம்ம காதல் மும்பை வரை நாற ஆரம்பிச்சுடுச்சு தெரியுமா?” 

“ஆக நம்ம காதலை சாக்கடைன்னு சொல்லாம சொல்றயா?” 

”ச்சீ.. அப்டியில்லப்பா..” 

“பின்ன எப்டியோ?” 

”போன மாசம் என் அங்கிள் ஒருத்தர் பிஸினஸ் விஷயமா இங்க வந்திருக்கார். அவர் ஏதேச்சையா நம்ம ரெண்டு பேரையும் சேர்த்தாப்பல எங்கயோ பார்த்திருக்கார். அப்பறம் ஹாஸ்டலுக்கு வந்திருக்கார். அப்பவும் நா இல்ல. உடனே கிளம்பி ஊருக்குப் போய் விஷயத்தை சந்தேகம்ங்கற பேர்ல அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துட்டார் போல்ருக்கு.அம்மா ரெண்டு நாள் முந்தி போன் போட்டு என்னைக் காய்ச்சி எடுத்துட்டாங்க.” 

“உங்க வீட்ல எதிர்ப்பு இருக்கும்ங்கறது தெரிஞ்ச விஷயம்தானே.” 

“ஆனா இவ்ளோ சீக்கிரம் விவகாரம் தெரிஞ்சு போய்டும்னு நா நினைக்கலை. எப்டியாவது சமாளிச்சுடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள கதை மாறுது.” 

”என்ன சொல்றாங்க அம்மா?” 

”படிச்சு கிழிச்சது போறும். உடனடியா ஊர் வந்து சேருன்னு வழக்கமா எல்லாரும் சொல்றா மாதிரி சொல்றாங்க.” 

“என்ன செய்யப் போறே?” 

“முடியாதுன்னு அம்மாகிட்ட உறுதியா சொல்லிட்டேன்.”

“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?” 

“நாங்க பணம் அனுப்பினாதானே அங்க இருப்ப? பணத்தை கட் பண்ணிட்டா என்ன செய்வேன்னு கேட்டாங்க.” 

”ரொம்ப இக்கட்டான நிலைமையாச்சே” ஆகாஷ் கவலையோடு பார்த்தான் அவளை 

“எங்கம்மா என்னை மாதிரி அஞ்சு மடங்கு பிடிவாதக்காரி ஆகாஷ். படிப்பு பாதில நிக்கறது பத்தி கூட நா கவலைப்படல. ரெண்டு நாள் முந்தி வந்த ஒரு செய்திதான் என்னைக் கலங்கடிக்குது.” 

“என்ன செய்தி?” 

”என்னைப் பிடிச்சு சம்சாரக் கடல்ல தள்ளிவிட அவசர அவசரமா ஏற்பாடுகள் நடந்துட்ருக்கு. அடுத்த வாரம் என்னைக் கூட்டிட்டு போக அம்மாவும் மாமாவும் இங்க வராங்க. நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது. எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல. எப்டி இந்த பிரச்சனைலேர்ந்து தப்பிக்க போறேன்னுதெரியல. அதான் உங்களை உடனே வரச் சொன்னேன்.” 

“என்ன செய்யலாம் சொல்லு.” 

“என்ன ஆகாஷ் நா பதறிட்ருக்கேன். நீங்க இவ்ளோ கேஷுவலா கதை கேக்கறா மாதிரி கேக்கறீங்க.” 

“காதல்னாலே பிரச்சனைகள் வரத்தானே செய்யும் சுஜி? பயந்தாலோ பதறினாலோ சரியாய்டுமா? யோசிப்போம். இதுலேர்ந்து மீண்டு வர வழி ஏதாவது யோசிப்போம்”. 

“நீங்க யோசிச்சு சொல்றதுக்குள்ள அவங்க என்னை அள்ளிட்டுப் போய் எல்லா விஷயத்தையும் முடிச்சுடுவாங்க.” 

”அவசரப்படாதே சுஜி. சட்டப்படி உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. அதுக்கு யாருக்கும் உரிமையில்ல. யோசிக்காம எந்த முடிவும் நாம் இப்போ எடுக்க முடியாது. ரெண்டு நாள் எனக்கு டைம் கொடு. ஒரு நல்ல முடிவா எடுப்போம். நீயும் யோசி. உனக்கு தோன்ற வழி நல்ல வழியார்ந்தா நாம் அதையே டிஸைட் பண்ணுவோம்.” 

”ஊருக்குத் திரும்பிப் போற நிலைமை வந்தா உங்களை நா சும்மா விடமாட்டேன் ஆகாஷ்”. 

ஆகாஷ் சிரித்தான். “மிரட்டாதே எழுந்து வா.” 

அவளை ஹாஸ்டல் அருகில் இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்குவந்தான். அவளிடம் நிதானமாக இருப்பதுபோல் பேசி விட்டானே தவிர உள்ளூர அவனுக்கு கவலையாகத்தான் இருந்தது. காதலில் மட்டும் தோல்வி என்பது ஏற்படவே கூடாது. காதலென்பது அபூர்வமான உணர்வு. அது எல்லோருக்கும் ஏற்பட்டு விடுவதில்லை. காதல் தோன்றி காதலிக்கப்படுபவராலும் அது ஏற்கப்பட்டு, பின்னர் மற்றவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு, திருமணம் என்ற சடங்கில் காதலில் ஒரு நிலை முடிந்து மற்றொரு நிலை, முன்பிருந்ததை விட ஆழமான, அமைதியான நிலை ஆரம்பிப்பதென்பது அற்புதமான தெய்வீகமானது. அப்படி ஒரு அற்புதமான நிலையைத்தான் காதலிக்கும் ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும். காத்திருக்கும். அது கிடைக்கவில்லையெனில் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு கூட சில உள்ளங்கள் செல்லத் தயங்குவதில்லை. காதலின் சக்தி அப்படி ஆயினும் மரணத்தில் எல்லாம் ஆகாஷுக்கு நம்பிக்கையில்லை. காதல் ஜெயிப்பதற்காக, வாழ்வதற்காக என்பதில் அவனுக்கு நம்பிக்கையுண்டு. போராட வேண்டும். ஜெயிக்க வேண்டும். வாழ வேண்டும். 

ஆகாஷ் வாழ்வதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தான். அம்மாவிடமும் அப்பாவிடம் சொல்லி கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. அம்மா நிச்சயம் அதற்கு சம்மதிக்க மாட்டாள். அவள் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதே பெண் தங்களை விட பணக்காரி என்பதாலும், எனவே சீரும் சிறப்புமாக அவள் இந்த வீட்டுக்கு வந்தால் தன் மரியாதை பல மடங்கு உயர்ந்து விடும் என்பதாலும்தான். எனவே திருட்டுக் கல்யாணத்தையோ பெண் தன் வீட்டைப் பகைத்துக் கொண்டு கட்டிய புடவையோடு வருவதையோ அவள் நிச்சயம் விரும்பவும் மாட்டாள். ஆதரிக்கவும் மாட்டாள். எனவே திருமணம் என்பது இப்போதைக்கு சரியான முடிவல்ல. பின் என்ன செய்யலாம்? அவன் தொடர்ந்து யோசித்தான். இரவு முழுக்க யோசித்ததில் விடியும் வேளையில் ஒரு வழி தேவலை என்று தோன்றியது.

எட்டு மணி வாக்கில் ஹாஸ்டலுக்குப் போன் பண்ணினான். சுஜிதா வெளியில் போய்விட்டதாகக் கூறினார்கள். ஏதாவது புராஜக்ட் ஒர்க்கிற்காகப் போயிருக்கக் கூடும்.

மாலை மூன்று மணி வாக்கில் மீண்டும் போன் செய்தான். அப்போதும் அவள் இன்னும் வரவில்லை என்ற தகவல்தான் கிடைத்தது. எங்கேதான் போய் விட்டாள் அப்படி? ஆகாஷ் கவலையோடு போனை வைத்தான். ஒருவேளை ஊரிலிருந்து யாராவது வந்து விட்டார்களா? ஊருக்கு வரச்சொல்லி அவளை மிரட்டுகிறார்களா. அல்லது அழைத்தே சென்று விட்டார்களா? ஒன்றும் புரியவில்லை! இரவு ஒன்பது மணிக்கு மறுபடியும் ஹாஸ்டலுக்கு போன் பண்ணினான். 

“நல்ல காலம் ஒரு நிமிடம் இருங்கள் என்று சொல்லிவிட்டு போனார்கள். ஐந்து நிமிடத்தில் சுஜிதா லைனில் வந்தாள்.” 

“எங்க போய்ட்ட சுஜி…?” 

“போனை வெச்சுருங்க ஆகாஷ்.நா அப்பறம் உங்ககிட்ட பேசறேன்.” சுஜிதா கிசுகிசுப்பான குரலில் சொல்லிவிட்டு போனை வைக்க என்னாயிற்று ஏது ஆயிற்று என்று எதுவும் புரியாமல் குழப்பத்தோடு போனை வைத்தான் அவன். ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது. கவலையாக இருந்தது. அவளிடமிருந்து எப்போது போன் வரும் என்று தவியாய்த் தவித்தான்.

மறுநாள் மாலைதான் அவன் செல்போன் அவள் குரலைச் சுமந்து வந்தது.

“என்னாச்சு சுஜி?” 

“அப்பாவும் அம்மாவும் வந்திருந்தாங்க ஆகாஷ். ஹோட்டல் ரூம்ல வெச்சு நேத்து ஒரு கோடீஸ்வரன் என்னை பொண்ணு பார்த்துட்டு போயிருக்கான். அடுத்த மாசம் கல்யாணம்ங்கறா மாதிரி பேசிட்ருந்தாங்க. நா எந்த எதிர்ப்பும் காட்டல. புலி பதுங்கறதுக்குப் பேர் பயமில்ல அது ஒரு தந்திரம். நாம ஒரு திட்டம் தீட்டிருக்கோம்ங்கற சந்தேகம் அவங்களுக்கு வரக் கூடாதுங்கறதுக்காக அவங்க வழிக்கே போறாப்பல நடிச்சேன். அவங்களும் நம்பி ஊருக்கு கிளம்பிப் போய்ட்டாங்க. இனிமேலும் நாம நிதானமார்ந்தா காரியம் கை மீறிடும். கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிச்சு நின்னு போய் எங்கப்பா அம்மா அவமானப்படறதையோ தலை குனியறதையோ நா விரும்பல. அதுக்கு முன்னாடி நாம ஒரு முடிவுக்கு வந்து அது அவங்க காதுக்கு போகணும். முன்னாடியே தெரிஞ்சா ஏதாவது சொல்லி சமாளிச்சுப்பாங்க. அவமானம் மிஞ்சும். உங்களுக்கு ஏதாவது வழி தோணிச்சா…?” 

“ஒரே ஒரு வழிதான் இருக்கு. இப்போதைக்கு அதைத் தவிர வேற வழி இல்ல.” 

”சொல்லுங்க” 

“நீ யார்கிட்டயும் எதுவும் சொல்லாம கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துடணும்.” 

“மை காட்..! உங்க வீட்ல இதுக்கு ஒத்துப்பாங்களா?” 

“நா அம்மாவை ஏதாவது சொல்லி கன்வின்ஸ் பண்ணிடறேன். ஆனா ஒரே ஒரு விஷயம். நீ வீட்டுக்கு பயந்துக்கிட்டுதான் இங்க வரங்கறது மட்டும் அவங்களுக்கு இப்போதைக்குத் தெரியக்கூடாது. உன் வீட்லேர்ந்து யாரும் வந்து தகராறு பண்ணினாதான் பிரச்சனையாய்டும். அவங்களுக்கு நா யாரு, எங்க இருக்கேங்கற விவரம் ஏதாவது தெரியுமா?” 

“இல்ல தெரியாது. என் பிரண்ட்ஸுக்கே நா இன்னும் விவரம் சொல்லலையே.”

“நல்லதாப் போச்சு. அப்பொ ஒண்ணு செய். ஞாயித்திக்கிழமை காலேல ஹாஸ்டல்ல ஏதாவது பொய் சொல்லிட்டு கிளம்பிடு. நா அதுக்குள்ள அம்மாகிட்ட ஏதாவது சொல்லி அவளை சமாளிக்கிறேன்’ 

“தேங்க் யூ ஆகாஷ். நீங்க குடுக்கற தைரியம்தான் இப்பொ எனக்கு டானிக்”. 

சுஜிதா குரல் கம்ம சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

செல்லை கீழே வைத்த ஆகாஷ் அம்மாவை எப்படி சமாளிக்கலாம் என்று அடுத்த திட்டத்திற்கு யோசிக்க ஆரம்பித்தான்.

“ஏண்டா சாதத்தை உருட்டிக்கிட்டே இருந்தா பசியடங்கிடுமா? என்ன யோசனை அப்டி?” இரவு சாப்பிடும்போது அம்மா தோளைத் தட்டிக் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினான். 

”ஒண்ணுல்லயே…” 

“ரொம்பத்தான் வழியாதண்ணா! அவளைத்தான் நினைச்சுட்ருக்கேம்மான்னு உண்மையைச் சொன்னா குறைஞ்சா போய்டுவ…?” சங்கீதா கிண்டலடித்தாள். 

“ஏண்டா ஒரு நாள் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம் இல்ல? அவ எப்டித்தான் இருக்கான்னு நாங்களும் பார்க்கறோமே” அம்மா இன்னொரு கரண்டி குழம்பு ஊற்றியபடி சொன்னாள். 

”நாளைக்கு என்ன கிழமை?” அவன் யோசனையோடு கேட்டான். 

”நாளைக்கா..” 

ஒரு வினாடி யோசித்த சங்கீதா. “நகைச்சுவைத் திங்கள்!” என்றாள் ராகத்தோடு. “நாளன்னிக்கு காதல் செவ்வாய்!” என்றாள் தொடர்ந்து. 

அப்பா பக்கென்று சிரிக்க, மற்றவர்களுக்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. ஆகாஷ் தங்கையின் தலையில் செல்லமாகத் தட்டினான். 

“எதுக்கு என்ன கிழமைன்னு கேட்ட?” 

“இல்ல… புதன் கிழமையன்னிக்கு அவளே இங்க வரதா சொன்னா. அதான் கேட்டேன்.” 

“அப்பொ காவிய புதன்தான்னு சொல்லு”

”அப்பறம் இன்னொரு விஷயம்மா?” 

“என்னடா…” 

“அவளுக்கொரு பிரச்சனை…” 

“என்ன?” 

“ஹாஸ்டல் சாப்பாடு ஒத்தக்கலை. அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வரது. இது தெரிஞ்சதும் அவங்க வீட்ல கத்தறாங்க. படிச்சது போதும் அதை விட்டுத் தொலைச்சுட்டு ஊரோட வந்து சேரு. அந்த படிப்பை இங்க படி. உன்னை நாங்க பாத்துக்கறோம்ங்கறாங்களாம். ஆனா அவளுக்கு இதுல இஷ்டமில்ல. இன்னும் ரெண்டே வருஷம்தான். படிப்பு முடிஞ்சுடும். அதுவரை நம்ம வீட்லயே பேயிங்கெஸ்ட்டா தங்கிக்கலாமான்னு கேக்கறா. திடீர்னு அவ அப்டி கேட்டதும் எனக்கு ஒண்ணும் புரியல. நா உன்னைக் கேட்டுக்கிட்டு பதில் சொல்றேன்னு சொல்லிட்டேன். ஏம்மா கல்யாணத்துக்கு முந்தியே அவ இங்க வந்து இருந்தா அது நல்லார்க்குமா? வேணாம்மா நா அவகிட்ட எங்கம்மாக்கு இஷ்டமில்ல நீ வேற ஏதாவது இடம் பார்த்துக்கன்னு சொல்லிடறேன்.” 

“இருடா… என்ன நீ! நீயே கேக்கற நீயே பதிலும் சொல்லிக்கற..என்னாச்சு உனக்கு?” 

“அவளுக்கு வயத்துவலின்னா இவருக்கு பேதியாகுதாம்! என்ன கேள்விம்மா இது. அவங்களுக்கு பிரச்சனைன்னா அய்யா மனசு துடிக்காம என்ன செய்யும்? இவர் வாழ்க்கையே இப்பொ உன் பதில்லதான் இருக்கு! சரியாண்ணா?” 

ஆகாஷ் சரிதான் என்பது போல மௌனம் சாதித்தான். அம்மா யோசித்தாள்.

”கல்யாணத்துக்கு முன்னாலயே இங்க இருந்தா நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. ஆனா அதையெல்லாம் பார்த்தா முடியுமா…? என்ன இருந்தாலும் நம்ம வீட்டுக்கு பொண்ணாகப் போகிறவ. அவளுக்கொரு பிரச்சனைன்னா நாம சும்மார்க்க முடியுமா…?” 

அம்மா பேசப் பேச ஆகாஷின் கண்கள் சந்தோஷத்தில் பளிச்சிட ஆரம்பித்தது. 

“ஹாஸ்டலை காலி பண்ணிக்கிட்டு அவளை எப்பொ வேணா வரச்சொல்லு. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்!” 

“என்ன..?” 

“அவ இங்க இருக்கான்னு எப்பப்பாரு அவகிட்ட பேசிக்கிட்டு நின்ன… அவளை அனுப்பிடுவேன். சங்கீதா ஒருத்தி வீட்ல இருக்கான்ற ஞாபகம் இருக்கட்டும்!” 

ஆகாஷ் மகிழ்ச்சியோடு அம்மாவைக் கட்டிக் கொண்டான். “நல்ல அம்மா!” என்றவாறு கொஞ்சினான். 

“டேய் டேய் விடுடா.. நா சொன்ன கண்டிஷனை மீறின…!”

”உம்மேல சத்தியமா மீற மாட்டேன் சரியா? அவளை எப்பொம்மா கூட்டிட்டு வரட்டும்? வியாழக்கிழமை?” 

“ஓ… அதிரடி வியாழனா.. பேஷ் பேஷ்” சங்கீதா அவனைக் கிண்டலடித்தபடி அப்பாவைத் திரும்பிப் பார்த்தாள். அவர் முகத்தில் சிரிப்பில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது. இந்த ஏற்பாட்டை அவர் விரும்பவில்லை என்பதை அவர் முகம் சொல்லியது. இருந்தாலும் மௌனமாய் இருந்தார். 

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வருவாள், காதல் தேவதை…

  1. வருவாள் காதல் தேவதை அத்தியாயம் 16-20 பார்க்க முடியவில்லை

    1. இன்று அடுத்த அத்தியாயங்கள் வெளிவரும், எங்களுடைய சோசியல் மீடியா அக்கௌன்ட் வழியாக தொடர்பில் இருங்கள். மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *