மதம் பிடித்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 7,326 
 

அவர் ஒரு பிரபல நடிகர். தமிழகத்தில் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். முனைப்புடன் செயல் படுகிறார்.

சமீபத்தில் ஒருநாள் அவர் கலந்துகொண்ட அரசியல் கூட்டத்தில் “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே…” என்கிற ஒரு உண்மையைச் சொன்னார்.

உடனே அவரது பேச்சை சிலர் பெரிது படுத்தி அதில் குளிர்காய முற்பட்டார்கள். நடிகர் ஹிந்துக்களை அவமானப்படுத்தி விட்டதாக கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஏராளமாகப் புகைந்தார்கள்.

நடிகர் மீது திருநெல்வேலி தணிகாசலத்திற்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது. அவர் எப்போதும் தன்னை ஒரு தீவிர ஹிந்துவாக காட்டிக்கொள்ள முனைபவர். திருநெல்வேலியில் ஒரு பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து அலம்பல் செய்ய ஆரம்பித்தார். நெல்லை ஜங்க்ஷனில் பேருந்துகள் ஓடவில்லை. அந்த நடிகரை கைது செய்யும்படி ஆர்ப்பரித்தார். ஆனால் பெரும்பான்மையான பொதுமக்கள் தணிகாசலத்தைக் கண்டுகொள்ளவில்லை.

எந்த ஒரு மத சம்பந்தமான விஷயத்திலும் தன் மூக்கை நுழைத்து தான் ஹிந்துக்களுக்காக பாடுபடும் ஒரு சிறந்த தலைவன் என்று தீவிரமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வார்; ஹிந்துக் கோவில்களின் புனிதத்தை காப்பதாக சொல்லிக்கொண்டு தன்னைப்பற்றி பீற்றிக் கொள்வார்.

ஆனால் தணிகாசலத்தின் மனைவிக்கும், அவரின் ஒரே மகள் அனன்யாவிற்கும் அவரின் ஹிந்து அடாவடித்தனம் கிஞ்சித்தும் பிடிக்காது. அனன்யா திருநெல்வேலி மெடிகல் காலேஜில் இறுதியாண்டு படிக்கிறாள். அவள் அந்த நடிகருடைய தீவிர ரசிகை வேறு.

அவள் தன் தந்தையிடம் சென்று, “அப்பா ப்ளீஸ், மதத்தை விட மனிதம்தான் மிகவும் உயர்ந்தது. ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் என்பது நாமாக பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் முட்டாள்தனமாகப் பிரித்துக்கொண்ட விஷயம். மனிதர்கள் என்று தோன்றினார்களோ அன்றே பிரிவு என்பது தோன்றிவிட்டது. தேவையில்லாமல் நமக்குள் மதப் பிரிவினையை ஏற்படுத்தி விட்டார்கள். மதங்கள் என்பதே மனிதன் ஆரம்பித்து வைத்த பம்மாத்துதான்.

“அனன்யா விவரம் புரியாம எதையும் பேசாதே.” அதட்டினார்.

“நா புரிஞ்சுதான் பேசறேன்பா… நம்முடைய ஆசை, பயம், கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம் நம்முடைய எண்ணம்தான். தாட் ப்ராசஸ். எண்ணம்தான் மனுஷனுக்கு கிடைச்ச மிகப் பெரிய வரம். அதே சமயத்தில் அவனுக்கு கிடைத்த மிகப் பெரிய சாபமும் அதே எண்ணம்தான். எப்படி அவன் எண்ணம் என்கிற சொல்லுக்கு ஆசை, பயம், கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல பெயர்களை பிரிச்சு பிரிச்சு வச்சானோ; அதே மாதிரி தன்னுடைய எண்ணத்திற்கு பல லட்சம் பெயர்களை வைத்துக் கொண்டான். அதுல ஒரு பெயர்தான் மதம். அது மாதிரிதான் ஜாதி, இனம், தமிழன், மலையாளி, கொல்டி… அதுக்கும்மேல கடவுள்னு பொத்தாம் பொதுவா ஒரு பெரிய பேரு.”

“என்ன அனன்யா கடவுளையும் திடீர்னு ஒரு எண்ணம்னு சொல்ற? வாய் ரொம்ப நீளுது. மெடிகல் படிக்கிறோம்னு திமிரா?”

“ஆமாம் கடவுள் என்பதும் நாம் வைத்த பெயர்தான். அதுவும் ஒரு மனித எண்ணம்தான்.”

“அப்ப கடவுளே இல்லையா? உனக்கு யார் நாத்திகம் சொல்லிக் கொடுத்தா?”

“நான் ஆழமாகச் சிந்தித்து உண்மையைப் பேசுகிறேன். கடவுள் என்கிற பெயர் மனித எண்ணம் என்கிறதால, இந்தக் கடவுள் என்கிற பெயர் கடவுள் இல்லை. நம் எண்ணங்களின் இயல்பு என்னவென்றால் பிரிப்பது. எண்ணம் என்கிற அந்த நகர்வு இருந்துகிட்டே இருக்கிறவரைக்கும் பிரிவுகளும் ஏற்பட்டுகிட்டேதான் இருக்கும். அதாவது ஆயிரம் ஜாதி இருக்கும்; மதம் இருக்கும்; குலம், கோத்ரம் இருக்கும்.”

“உனக்கு சீக்கிரம் மந்திரிக்கணும். கோட்டி பிடித்துவிட்டது… ”

“நல்லா யோசிச்சுப் பாருங்கப்பா, உங்களுக்குப் புரியும். கிறிஸ்தவ மதம் முதலில் தோன்றியபோது, சிலரின் எண்ணங்கள் அந்த மதத்தை ப்ரோட்டேஸ்ட் பண்ணியதால் அவர்கள் ப்ரோட்டேஸ்டென்ட் என்று அழைக்கப் பட்டார்கள். அதே மாதிரிதான் ஐயங்கார்களும். வடகலை, தென்கலை என்று பிரிந்து கிடந்து அடித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பிரம்மோர்ச்சவ ஊர்வலத்தில் வடகலை தென்கலை அர்ச்சக அய்யங்கார்கள் தெருவில் அடித்துக்கொண்டதைப் பார்த்து ஊரே சிரித்தது! சரி ஐயர்களில் எத்தனை பிரிவுகள்!? முதலியார்களில், தேவர்களில் எத்தனை பிரிவுகள்!? இதுமாதிரி ஆயிரக்கணக்கான ஜாதிகள், எண்ணங்கள், பிரிவுகள்…

இது உலக அரசியலையும் விட்டு வைக்கவில்லை. நம் தமிழகத்துல திக, திமுக, அதிமுக, அம்மா திமுக, அப்பா திமுக எனப் பிரிந்ததற்கு காரணம் மனித எண்ணங்களே.

கடவுள்களிலும் எத்தனை கடவுள்கள்! அதில் ஆண் கடவுள்கள் எத்தனை; பெண் அம்மன்கள் எத்தனை! உலகத்தில் உள்ள அத்தனை பிரிவுகளுக்கும் காரணம் மனிதனின் ‘நான்’ என்கிற அகந்தை. இந்த நான் என்கிற அகந்தை ஊசிமுனையளவும் இல்லாம நிர்மூலம் ஆயிருச்சின்னா, அது போதும். பிரிவே இல்லாம முழுமை இருக்கும். துண்டுபட்டுப் போகாத சக்தி இருக்கும். இருளின் சுவடே அற்ற பேரொளி இருக்கும்.”

“இத பாரு அனன்யா, நான் பிறப்பால் ஹிந்து. ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கடவுள்களையும் வம்புக்கு இழுப்பது போலப் பேசுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. வைரமுத்து, வீரமணி ஆகியோரின் வரிசையில் இந்த நடிகர் இப்போது அப்படிப் பேசியிருக்கிறார். இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஹிந்து என்று ஏன் மதத்தைக் குறிப்பிட்டு அவர் பேசவேண்டும்? அதுவும் முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் அந்த ஊரில்? இது முஸ்லீம்களுக்கு துளிர் விடாதா? ஏற்கனவே ஜிகாத் என்று துடிக்கும் அவர்களுக்கு தீவிரவாத எண்ணம் வராதா?”

“வராது. நடிகரின் அந்தப் பேச்சுக்கு முஸ்லீம்கள் அதிகம் இருந்த அந்தக் கூட்டத்தில் எவரும் கை தட்டவில்லை என்பதே உண்மை. பெரும்பாலான முஸ்லீம்கள் நேர் கோட்டில் வாழும் உத்தமர்கள். உங்களுக்கு இந்திய விடுதலைப் போர் பற்றிய சரித்திரம் தெரியுமா? 1780 ஆம் ஆண்டே ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை இந்திய மண்ணிலிருந்து அகற்ற, முதன் முதலில் 90 ஆயிரம் போர் வீரர்கள் மற்றும் 100பீரங்கிகளுடன் ஒரு பெரிய போரைத் தொடங்கிய ஹைதர் அலியும், அதற்கு அடுத்து அவர் மகன் திப்பு சுல்தான் போன்றவர்களும் விதைத்த ஆங்கிலேயே எதிர்ப்பு என்ற வித்துக்கள்தான், பிறகு நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சுதந்திரப் போராட்டமாக முளைத்தன. அந்த வகையில், 1857 ல் இந்திய விடுதலைப் போரின் மையப் புள்ளியாக விளங்கிய டெல்லி சக்ரவர்த்தி பகதூர்ஷாவின் ஆங்கிலேயே எதிர்ப்பு நடவடிக்கைகளும், அதன் விளைவுகளும், அவருக்கு ஏற்பட்ட முடிவும் நம்மை மனம் கலங்கச் செய்யும். ஆனால் இப்போது தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லீம் என்றாகிவிட்டது. இது நம்மிடையே புரிதல் இல்லாததனால் ஏற்பட்ட குழப்பம்.”

“ஹிந்து மதத்தின் குறிக்கோளே தர்மத்தை நிலை நாட்டுவதுதான். இது ஏதோ ஒரு ஜாதிக்குரியதல்ல. கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகள் பைபிள் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டவை; இஸ்லாமிய மதத்தின் கொள்கைகள் குர்ஆனில் வகுக்கப்பட்டுள்ள தத்துவங்களை அடிப்படைகாகக் கொண்டவை. இப்படியே ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு ஆதார நூலைக் காட்ட முடியும். ஆனால் ஹிந்து மதத்திற்கு இப்படி எதைச் சொல்வது?

மோசஸுக்கு பத்துக் கட்டளைகள் கிடைத்தன. அவற்றை அவர் புதைபொருள் ஆராய்ச்சி செய்து, பூமியைத் தோண்டி எடுக்கவில்லை. ஆண்டவன் புரிந்த அருள் அது. அதேபோல, நபிகள் நாயகத்திற்கு குரான் கிட்டியது. அவர் உட்கார்ந்து குரானை இயற்றவில்லை. இறைவன் அவருக்கு அதை அருளினார். இவையெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த அற்புதங்கள்… அதே போலதான் நம்முடைய ரிஷிகள் வேதங்களைப் பெற்றார்கள்.”

“அனா எனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கிடையாதுப்பா. என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதுதான் என் நம்பிக்கை. சரி எனக்கு நிறைய வேலை இருக்கு.” அனன்யா அங்கிருந்து அகன்றாள்.

மாதங்கள் ஓடின.

அனன்யா மெடிகல் முடித்து விட்டாள்…

அன்று தணிகாசலத்திடம் சென்று, “அப்பா, நான் என்னுடைய மெடிகல் சீனியர் அப்துல் மஜீத்தை கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். அவர் ரொம்ப நல்ல குடும்பம். சொந்தமாக பெருமாள்புரத்தில் கிளினிக் வைத்துள்ளார். அவங்க குடும்பத்துல எங்களுடைய கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டாங்க. அம்மாகிட்டேயும் என் முடிவை சொல்லிட்டேன். எனக்கு உங்க சம்மதம் வேண்டும்…” என்றாள்.

தணிகாசலம் கொதித்துப் போனார்.

“என்னது போயும் போயும் ஒரு முஸ்லீமை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாயா? அதுவும் எனக்கு மகளாகப் பிறந்துவிட்டு?”

“இல்லப்பா நான் எனக்குப் பிடித்தமான ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேன். இதில் மதமும் ஜாதியும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. இது என் வாழ்க்கை என் சந்தோஷம்…”

Print Friendly, PDF & Email

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

பணம் பிழைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *