நாச்சியப்பனின் உரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 3,822 
 

(இதற்கு முந்தைய ‘அரட்டைக் கச்சேரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ஒருநாள் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து திம்மராஜபுரத்தில் என் வீட்டிற்குப் போயிருந்தேன்.

என் வீட்டிற்கு அடுத்த வீடுதான் நாச்சியப்பன் வீடு. ஆனால் ஒரு சின்ன சந்து மாதிரி இடையே போய் அதன் கடைசியில் அமைந்திருக்கும் அவருடைய வீடு.

என் சித்திக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தொடர்புகூட எனக்கு அவரிடம் கிடையாது. திம்மராஜபுரம் போனால் ராத்திரிகளில் என் வீட்டின் பால்கனியில் நான் படுத்துத் தூங்குவது வழக்கம்.

பல நேரங்களில் என்னால் தூங்க முடியாமல் நாச்சியப்பன் குழுவினரின் சப்தமான அரட்டைக் கச்சேரி எனக்குப் பெரிய இடைஞ்சலாக இருக்கும். சில நேரங்களில் தலை வேதனையாக இருக்கும். எட்டு தெருவிற்கு கேட்கிற மாதிரியான உச்சக் குரலில் பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கும். இத்தனைக்கும் பேசப்படுகிற சமாச்சாரங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரகசியமானவை! அந்தரங்கமானவை!!

இரண்டாவது தெருவில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் யாராவது ஒருத்தர் சமாச்சாரத்தின் சுவாரஸ்யத்தால், காதில் விழுந்ததை யாரிடமாவது சொல்லி வைப்பார். அவர் அதை இன்னொருத்தரிடம் போய்ச் சொல்வார். திம்மராஜபுரம் குண்டுச்சட்டி போன்ற ஒரு சின்ன ஊர்தானே! அதனால் பல காதுகளில் விழுந்து புறப்பட்ட சங்கதி, கடைசியாகக் கேள்விப்படும் போது நாச்சியப்பனின் குழுவினரில் ஒருத்தராக இருப்பார்.

உடனே இரண்டாவது தெருவில் இருப்பவருக்கு அரட்டைக் கச்சேரியை ‘ஒட்டுக் கேட்டதாக’ ஒரு பயங்கர எச்சரிக்கை போகும்! தேவைதான் அவருக்கு! ராத்திரி பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் வெட்ட வெளியில் உட்கார்ந்துகொண்டு இரண்டாம் வகுப்பு வாத்தியார் மாதிரி கத்திக் கத்தி பாளையங்கோட்டைக்கு கேட்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஒட்டுக் கேட்பதாகக் கோபப்பட்டால் என்ன அர்த்தம்?

‘ஒட்டுக் கேட்கிற காதில் பூட்டுப் போட்டு விடுவேன்’ என்கிற மிரட்டல் கூட நாச்சியப்பனிடம் இருந்து சில சமயங்களில் வந்தது உண்டு! பூட்டுக்குப் பயந்து யாரும் அதனால் பொதுவாக வாயைத் திறப்பது கிடையாது. நியாயமாகப் பார்த்தால் நாச்சியப்பனின் வாய்க்குத்தான் பூட்டு போட வேண்டும் பூட்டு! ஆனால் நடப்பது என்னவோ நேர் எதிராக…

அன்றைக்கு ராத்திரி பதினோரு மணிக்கு எங்கள் வீட்டுப் பால்கனியில் நான் படுத்திருந்தபோது, நாச்சியப்பன் குழுவினரின் அரட்டைக் கச்சேரியில் குரல்கள் வழக்கத்திற்கு மாறாக உச்சத்தில் ரொம்ப உற்சாகமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நாச்சியப்பன் “வாய்யா டாக்டரு மாப்ளே வா! எங்கே நீ வருவாயோ மாட்டாயோன்னு நெனச்சேன்… வந்திட்டியே..” என்றார்.

“பெரியவங்க வந்து பாக்கச் சொல்லியிருக்கும் போது எப்பிடி மாமா வராம இருக்க முடியும்?” கமலாச் சித்தியின் மகன் ராஜாராமனின் குரல்.

“பெரியவங்களை வந்து பாத்தா மட்டும் போதாது மாப்ளே. பெரியவங்க சொல்றதைக் கேக்கவும் செய்யணும். தெரியுதா? உன் அம்மா வந்து மூக்கால அழுதிட்டுப் போறா! நீ என்னமோ தமன்னா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ரேஞ்சுல ரொம்ப அழகானவளா பாத்துத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு மொரண்டு பிடிக்கிறியாமே? வேணுகோபாலோட மவளைப் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றேயாமே…?”

“பொண்டாட்டி அழகானவளா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா மாமா?”

“மூட்டை மூட்டையா வீட்ல துட்டை வச்சிக்கிட்டு அப்படி ஆசைப்பட்டா தப்பில்லை! இப்ப நீ இருக்கும் நிலைமையில அப்படி ஆசைப்பட்டா தப்புத்தான் மாப்ளே! என்னடா மாமா இப்படிப் பேசறாரேன்னு பாக்காதே, நான் உன் நெலமையோட யதார்த்தத்தைச் சொன்னேன். இப்ப வேணுகோபால் வந்து லட்சம் லட்சமா கொண்டாந்து உன் கால்ல கொட்டி, அவனோட மவளையும் உனக்குக் கட்டித் தரேன்னு சொல்லலைன்னு வச்சிக்க – அப்ப கதையே வேற!”

“அப்ப என் கதையையே நீங்க மாத்திப்பிடணும்னு சொல்றீங்க?” ராஜாராமனின் குரல் மிகவும் தணிந்து கேட்டது. பதிலுக்கு நாச்சியப்பனின் குரல் உயர்ந்தது.

“மாப்ளே… நான் கதை எழுதறவன் கிடையாது. ஆனா நெறைய கதை கேக்கறவன்! வேணுகோபால் இப்ப உனக்கு அள்ளி அள்ளித் தரேன்னு சொல்லி இருக்கிற கதை இருக்கே – இதை எந்தக் கதையிலும் இதுவரை நான் கேட்டதில்லை தெரியுமா? அவன் தரேன்னு சொல்ற சமாச்சாரத்தை எல்லாம் நீயா சம்பாரிக்கிறதா இருந்தா, எத்தனை வருஷம் நீ கழுத்ல ஸ்டெத்தாஸ்கோப்பை மாட்டிக்கிட்டு ஓடணும் தெரியுமா? அப்பக்கூட எனக்கு அதில் சந்தேகம் உண்டு ஒனக்கு பேஷண்ட் படை தெரண்டு வருமா இல்லையான்னு… ஒருவேளை திரண்டு வந்தாத்தான் கொஞ்சம் நிம்மதி.

“……………..”

“நம்ம ஊர்லயே எத்தினி டாக்டருங்க ஈ ஓட்டிக்கிட்டு இருக்கானுங்கன்னு தெரியுமா ஒனக்கு? ஈ ஓட்டிக்கிட்டு என்னிக்கி நீ சம்பாரிக்கிறது; என்னைக்கு நீ வீடு கட்றது? எப்ப ஹைஎண்டு கார் எல்லாம் வாங்கறது? ஒனக்கு நல்லபடியா அவன் பொண்ணோட கல்யாணம் ஆனதும், வேணுகோபால் அங்கே ஹாஸ்பிடல் கட்றதுக்கு அஸ்திவாரம் எல்லாம் தோண்டி தயாரா வெச்சிருக்கானாம்… நீ இங்கே சரின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீன்னா அங்கே வேலையை ஆரம்பிச்சிருவான் அவன்!

இதுல இன்னொரு விஷயமும் இருக்கு மாப்ளே! வேணுகோபால் எதையாவது தொட்டாலே அது பவுனாயிடும்! அந்த மாதிரியான யோகக்காரன் அவன். மஹா லக்ஷ்மி எப்பவுமே அவன் தோள் மேலேயே உக்காந்திருக்கா! அவன் மகளை நீ கட்டிக்கிட்டா அடுத்த நிமிசமே மஹா லக்ஷ்மி ஒன் தோள் மேலும் ஏறி ஒக்காந்திருவா! பெறகு இந்த சென்மத்ல அவ ஒன் தோளை விட்டு இறங்க மாட்டா.. புரிஞ்சுக்க.

இதை நான் பத்திரத்ல எழுதி கையெழுத்து வேணுமானாலும் போட்டுத் தர்றேன்! யோசனையே பண்ணாத மாப்ள. உன் மாமன் நான். நாளைக்கு மாமன் சாஸ்திரத்துக்கு நான்தான் வந்து நிக்கணும் சொல்லிப்புட்டேன் மறந்துராத…”

ராஜாராமனிடமிருந்து பதில் பேச்சே இல்லை. சில நிமிடங்களுக்கு நாச்சியப்பனிடமிருந்தும் எந்தப் பேச்சும் இல்லாமல் இருந்தது. சற்று இடைவெளி விட்டு அப்புறம் ஒலித்தது அவரது குரல்.

“யோசனையே பண்ணாதன்னு இப்பத்தான் சொன்னேன்… நீ பாட்டுக்கு இப்ப யோசனையில் இருக்க. பொண்ணு அழகா இல்லையேன்னு யோசிக்கிறே போல இருக்கு..”

“வேணுகோபாலோட மக ரொம்ப அசிங்கமா இருப்பாள்னு எல்லோருமே சொல்றாங்களே மாமா?” ராஜாராமனின் குரல் கிணற்றில் இருந்து பேசிய மாதிரி மெலிதாகக் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *