கலியாணம் பண்ணிக்கிறீங்களா…?!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 2,943 
 

கட்டிலில் பக்கத்தில் படுத்து அவள் இடையை அணைத்தவனிடம்…..

“என்னங்க..! எனக்கொரு உதவி…இல்லே சேதி….”என்றாள் மாலினி.

“என்ன…? “என்றான் ரஞ்சன்.

அவனின் கை சில்மிசத்தில் நெளிந்த அவள் , அவன் கையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி …

”உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா…? “கேட்டாள்.

“ஏன்…?”

“பதில் சொல்லுங்க…?”

“இல்லே..”

“இது பொய்யா, நிஜமா…?”

“உண்மை. !”

“அப்படியா…?… கேட்டா தப்பா நினைக்கக் கூடாது..”

“இல்லே…”- நெருங்கினான்.

“வயசு….?”

“முப்பது”

“நீங்க என்ன சாதி…?”

“எதுக்குக் கேட்கிறே…?”

“காரணம் இருக்கு.”

“நான் எந்த சாதியும் இல்லே. எனக்குச் சாதி பிடிக்காது..! “- சொல்லி….மோகம். அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

மூச்சுக் காற்று சூடாக வந்தது.

“உங்க சேட்டையெல்லாம் கொஞ்சம் நிறுத்தி நான் சொல்றதைக் கேட்குறீங்களா…?”

“சரி ! “முகத்தை விலக்கினான்.

ஒட்டிய உடலையும், அணைத்தக் கையையும் எடுக்கவில்லை.

“எனக்கொரு தங்கச்சி இருக்கா. கலியாணம் பண்ணிக்கிறீங்களா…?”

ரஞ்சன் துணுக்குற்றவில்லை, மாறாக….

“உன் ஆசை சரி. ஆனா… இது எப்படி சரி படும்…?”

“புரியல…?!”

“உன் தொழிலுக்கு நான் உன் தங்கையைத் திருமணம் செய்யிறது சரிவருமா..?”

“என் தங்கை. ரொம்ப யோக்கியம். பட்டப் படிப்பு படிச்சி , முடிச்சி வங்கியில் உதவி மேலாளராக இருக்காள். தேர்வு எழுதி கிடைத்த வேலை. வயசு… 24.”

“உண்மையா….? “இதை இவன் எதிர்பார்க்கவில்லை.

“அம்மா , அப்பா இல்லே. நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது இறந்துட்டாங்க. அப்போ என் தங்கை என்னைவிட நாலைந்து வயது சின்னவள். என் அந்த படிப்புக்கு எந்த வேலைக்குப் போக முடியும்..? அப்படியும் ஜவுளிக் கடை, ஜெராக்ஸ் கடைன்னு ஐயாயிரம் ரூபாய் வேலைக்குப் போனேன். வீட்டு வாடகை அது இதுன்னு எங்களுக்கு அது போதலை. அப்புறம்தான் இந்தத் தொழில்ல இறங்கி… ரெண்டு மூணு வருசத்துல இந்த வீடு கட்டினேன்.தங்கச்சி வேலைக்குப் போய்ட்டாள்.”நிறுத்தினாள்.

“உன் தங்கைக்கு நீ இந்த பலான தொழில் செய்யிறது தெரியுமா…?”

“தெரியும் ! இதுனாலதான் அவள் நல்ல படிப்பு படிச்சாள். வேலைக்குப் போனாள்.”

“இப்போ திருமண ஏற்பாடு பண்றே. அப்படித்தானே..?!”

“ஆமாம் !”

”……………………………”

“எத்தனையோ வரன்கள் எப்படி எப்படியோ பார்க்கிறேன். ஒன்னும் சரி இல்லே. இப்படி என்னிடம் வர்றவங்களிடமும் கேட்டுப் பார்க்கிறேன். ஒன்னும் நடக்கலை. என்னால என் தங்கை பாதிக்கப் படுவாளோன்னு பயமா இருக்கு.

ஆனா…. அவள் அதை பத்திக் கவலைப் படலை.

‘ நீ ரொம்ப பிரயாசைப் படாதே. நல்ல வரன் வந்தா கட்டிக்கிறேன். இல்லேன்னா… கவலை இல்லே. நமக்கு வீடு இருக்கு. எனக்கு வங்கி வேலை இருக்கு. நீ உன் தொழிலை விடு. நாம ரெண்டு பேரும் கலியாணம் ஆகாமலே கடைசி வரை வாழ்வோம். இப்படி … வாழ முடியாது, வாழக்கூடாதுன்னு எதுவும் வரைமுறை இல்லேன்னு சொல்றாள். ஆனா… எனக்குத்தான் கஷ்டமா இருக்கு. ‘ சொல்லும்போதே மாலினிக்குத் தொண்டையடைத்தது, கரகரத்தது.

ரஞ்சன் எந்தவித அசைவுமில்லாமல் அமைதியாக படுத்திருந்தான்.

இரண்டொரு வினாடிகள் கழித்து….

“என்ன பேசமாட்டேங்கிறீங்க. சம்மதமில்லையா…?”

“சம்மதம் . கட்டிக்கிறேன். !”

“ரஞ்சன்!!” துணுக்குற்றாள்.

“ஒன்னும் பயப்படாதே. கட்டிக்கிறேன்.”வார்த்தைகள் தங்குதடையில்லாமல் வந்தது.

“உங்க அம்மா, அப்பா..??….”இழுத்தாள்.

“இல்லே..! அனாதை. படிச்சி முடிச்சி நானும் ஒரு அரசு வங்கியில்தான் வேலையில் இருக்கேன்.”

“ரஞ்சன்!” வியப்பு, திகைப்பு, சந்தோசக் கலவையில் அவனை இறுக்கிப் பிடித்தாள்.

“வேணாம். மாலினி.” அவளை விளக்கி எழுந்தான்.

“ஏன்… !?” புரியாமல் பார்த்தாள்.

“தங்கச்சி புருசன் மச்சினிச்சியைத் தொடுறது தப்பு. இன்னையிலிருந்து இந்தத் தொழிலை விட்டுடு மாலினி. கடைசிவரை…. நானும் உன் தங்கையும் உன்னைக் காபந்து பண்ணறோம். முடிந்தால் திருமணமே முடித்து வைக்கிறோம். எனக்கு நாள் கிழமையெல்லம் கிடையாது. எல்லா நாளும் நல்ல நாள். எல்லா நேரமும் நல்ல நேரம். நாளைக்கே நீ திருமணத்துக்கு ஏற்பாடு செய் . நான் அதுக்குத் தேவையான மத்த வேலைகளைக் கவனிக்கிறேன். “சொல்லி சட்டையை மாட்டி வேகமாக வெளியேறினான்.

‘நடந்தது கனவா..? நனவா..?! ரஞ்சன் கடவுளா… மனிதனா…?!’

எதுவும் புரியாதவளாய்…திகைத்து திணறி….. அவன் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள் மாலினி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *