அவர்களும் வந்திருந்தார்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 12,539 
 

செமஸ்டர் லீவுக்கு பஸ்ஸில் அசொளகரியத்துடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். பயண களைப்பு அவஸ்தைகயாக இருந்தது. கண்டிவீதியில் என் வீடு இருந்ததால் சரியாக வீட்டுக்கு முன் “பஹினவா பஹினவா” என்று கத்தி இடித்து தள்ளி இறங்கி விட்டேன். டிஜிட்டல் கடிகாரம் ஏறக்குறைய 5.33 ஏம் காட்டியது. கேட்டை தொடவே பேர்டிக்கோவில் படுத்திருந்த ஜூட் மிதமிஞ்சிய கடமை உணர்வுடன் “லொள்…” என்று குரைத்தது. தூக்க கலக்கத்துடன் என்னை அடையாளம் கண்டு காது இரண்டையும் தாழ்த்தி சமர்த்தாக வாலை ஆட்டி “ஊவவ்வ்வ்வ்..”என்று ஆரவாரித்தது.

பேர்டிக்கோ,ஹோல் லைட்கள் உயிர்ப்பித்தன. அப்பா கதவை திறந்தார். இன்னும் கொஞ்சம் வயசான மாதிரி தெரிந்தது சாய்வாக விழுந்த யு பல்ப் வெளிச்சத்தில்.

“நாலரைக்கே வருவ என்று நினைச்சன்….” என்றார் அதே பழகிய குரலில்.

“நிகம்புல கொஞ்சம் கூட நேரம் நிண்டிச்சு பஸ் அதான் லேட்…..அம்மா எங்க நித்திரையா?” கேட்டுகொண்டே என் ரூம்க்கு போனேன். ரூம் பளிச் என்று வழக்கத்துக்கு மாறாக மின்னியது. புது கேட்டின்,பெட்ஷீட் வாசனை வீசியது. அம்மா எழும்பி வந்தாள்.

“ஆ…..வந்துட்டியா?… கோப்பி போடுறன்…குடிப்ப தானே??”

“இல்ல எனக்கு இப்ப வேணாம்….நான் நித்திரை கொள்ளனும். பஸ்ல நித்திரை கொள்ளவே முடியல… சிங்கள பைலா பாட்டை ராவுராவா போட்டு மனிசர எங்க நித்திரை கொள்ள விட்டாங்கள்…..”

“ஏன்டா…எந்த பஸ்ல வந்தனி…எங்க ஏறினி?” என்றார் அப்பா.

“ஹொட்டஹேனாப்பா….டிரைவரும் சிங்களம், கேன்டக்டரும் சிங்களம்…. ஆமா என்ன என் ரூம் இப்படி கலக்குது….”

“டேய் உங்க சித்தப்பா வாறார் அல்லோ….அதான் இந்த அடுக்கு…” அம்மா குசினினுக்குள்ள இருந்து காஸ் குக்கரை திருகிக்கொண்டு சொன்னாள்.

“என்னது சித்தப்பா வாறாரா??….ஏன் வாறாராம்? என் ரூமா கிடைச்சது குடுக்க… எங்க மீரா? அவாண்ட ரூம குடுக்குறதுதான்….”

அம்மா தொடர்ந்து “அது பத்தரைக்குதான் எழும்பும்….உண்ட ரூம்தான்..பெருசு.. சித்தப்பா பமிலி ஓட வாறாராம்… தர்ஷுனி சித்தி ஹரி, அனுஷா எல்லாம் வாறாங்க…. உன்கிட்ட சொன்னதுதானே….”

“ஏதோ சொன்னிங்க…..நான் மறந்திட்டன்.. எப்ப வாறாங்க இங்க..”

“இன்றைக்கு…..பத்துமணிக்கு ப்ளேன் லேன்ட் பண்ணுது….வான் குணராசா அங்கிள் அரேஞ்பண்ணி கொடுத்துட்டார். நேரா சரோமாமி வீட்ட போட்டு அப்படியே யாழ்ப்பாணம் வாறிணமாம்..ஏழு மணி அப்படி வந்துடுவினம்.” என்றார் அப்பா உற்சாகமாக.

“இரண்டுவருஷத்துக்கு முதல் தாத்தா செத்தவீட்டுக்கு கூடவரல…இப்ப என்னவாம்? இப்ப எதுக்கு வாறினம்?” சுவரில் தொங்கின தாத்தாவின் பிரேம்போட்ட போட்டோவை பார்த்துக்கொண்டு கேட்டேன். மெலிதான சிரிப்பு அதே நெத்தி அப்பாவின் சாயலில் காமராவை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.

“எதுக்கு வந்ததுல இருந்து இப்படி கத்திற போ போய் குளிச்சுட்டு வா?” அம்மா அதட்டினாள்.

“நான் படுக்க போறன்….ஹம்ம்ம்……”

அப்பா ஈக்குகட்டையோட முத்தம் கூட்ட போனார். நான் களுசானுக்கு மாறி பாத்ரூம் போனேன். மாபில்ஸ் தரை மின்னியது…அள்ளி குளிக்க புது பிளாஸ்டிக்வாளி,கோப்பை வேற இருந்தது. இதுவரை சிதைந்து இருந்த பழைய பிளாஸ்டிக்வாளியை காணம். ஷவர் புதுசாக இருந்தது. தொட்டவுடன் மிருதுவாக அருவிபோல் தண்ணீர் கொட்டியது. ம்ம்…கனடால இருந்து வாறாக்களுக்கு எவ்வளவு நடப்பு.

கட்டிலில் போய் விழுந்தேன். ஆறு மாதம் அப்புறம் சொந்த வீட்டில், போனமுறை செமஸ்டர் லீவுக்கு வந்தது. ஆறுமாதம் அசுவாரசியமாக ஓடி போச்சு. இப்போதுதான் ஒருமாதம் சுவாரசியாயமான விடுமுறை. கிழக்கரியால கடலுக்கு போய் நன்றாக நீச்சல் அடிக்கணும்.

அப்பாக்கு ரெண்டு சகோதரம். ஒரு தம்பி. அண்ணா ஒருவர் வயலில் இந்தியன் ஆர்மியினால் மார்பில் சுடப்பட்டு இறந்தார்.சைக்கிளின் மீது நாவலடி வயலில் குப்புற திறந்தகண் மூடாமல் வீழ்ந்து பிணமாக கிடந்ததை இப்பவும் மறக்க முடியவில்லை என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்போது அப்பாக்கு கலியாணம் ஆகவில்லை “அப்பா அம்மாவை நான் பாத்துக்குறன்” என்று சித்தப்பாவை லண்டன் அனுப்பிட்டார். அங்க படித்து கனடாக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்.

தாத்தாக்கு நாவக்குளி,பூநரியில் ஏக்கர்கணக்கா நிலம்,வயல்,தென்னம்தோப்பு இருந்தது. பாட்டி நான் பிறக்க முதலே இறந்துவிட்டாள். 95ம் ஆண்டு அடிபாட்டில் இடம்பெயர்ந்து கொடிகாமம் சென்றது கொஞ்சம் என் நினைவறையின் அடியில் தேங்கியிருந்தது. அப்போது சித்தியின் குடும்பத்தை சித்தப்பா பொன்சர் செய்து கனடாக்கு எடுத்து விட்டுடிருந்தார். எனக்கு முன்று வயசு. தங்கச்சி மீராக்கு ரெண்டு வயசு. 2000ம் ஆண்டு அடிபாடு முழுமையாக நினைவு இருந்தது அப்போது போனில் மட்டும் விசாரித்தவர்கள் இப்ப ஏன் வருகிறார்கள்?. எப்போதும் எனக்கும் உறவினர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இருந்தது இல்லை. தனிமையை அதிகம் விரும்பினேன்.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை எழும்பும் போது மணி பத்தை தாண்டியிருத்தது. நன்றாக முழுகிவிட்டு வந்தேன். அம்மாவின் கோப்பியோடு சோபாக்கு வந்தேன்.

“மாட்டிகிட்டியா…. யாரு டிலானிகா?” தூக்கிவார திரும்பினேன். மீரா என் சாம்சன்கலக்ஸ்ஸியை நோண்டிகொண்டு இருந்தாள்.

“ஏய் யார கேட்டுடி என் போனை எடுத்தனி?”

“ஆள பாரன்.. போன் புல்லா பொண்ணுக நம்பர்…அது என்ன எல்லா மெசேஜ்லையும் டியர் டியர்..போட்டு டிலானிகாக்கு அனுப்பி இருக்கு..அம்மா இங்கவந்து உம்மட பாசமகன் அடிச்ச கூத்தை பாருமா…”

“ஏய்…அவங்க என் யுனிவேர்சிட்டி அக்கா”

“அக்காவா…இல்ல….”

“ஏய்…………”

“இல்ல….நங்கியா என்று கேக்க வந்தன்” என்று விஷமாய் சிரித்தாள்.

அம்மா எதையும் கண்டுகாமல் “உனக்கு எண்ணெய் தோசை போடுறதா?”

“பார்றா…..நல்லா திண்டு கொழுக்கட்டும்” என்றாள் மீரா. அவளிடம் போனை அதட்டி பறித்தேன். வழமைபோல் டிவி ரிமொர்ட்க்கும் சண்டை வந்தது.

“இவ்வளவு நாளும் நீதானே டிவி பாத்தனி..இந்த மாசம் புள்லா என் கொன்றோல் தான்….” என்றேன்.முறைத்து பார்த்தாள். ஏல் எடுத்துவிட்டு ரிசல்ட்க்கு வெய்ட்டிங் மீரா. இவள் ஒரு அன்பான அவஸ்தை. எத்தனை முறை சண்டை போட்டாலும் வர்ணிக்க முடியாத சேவிக்கதக்க பாசம் அவள் மீது இருந்தது.

ஒருவரி விடாமல் பேப்பர் படித்தேன். ஆசைதீர டிவி பார்த்தேன். வாசிகசாலை க்ரௌண்டில் கிரிக்கட்அடித்தேன். கமலா அக்கா கடைக்கு பின்னால் மறைவாக சிகரெட் பிடித்தேன். நிக்கோடின் புகையுடன் சல்லாபித்தேன். அதில் ஒரு தீண்டத்தகாத இன்பம். பகிடிவதையில் சீனியர்ஸ் காட்டிதந்து… விடமுடியவில்லை. இருட்டிவிட்டது பவுக்கத்தை சப்பியவாறு வீடு வந்தேன்.

வீடு ஒரே ஆரவாரமாக இருந்தது. கனடா வாசனை வாசலிலே அடித்தது.

“ஹல்லோ….வாரும்…வாரும்…உம்மள தான் பாத்துகொண்டு இருந்தம்….” போனில் சிலசமயம் கேட்ட அதே குரல். தனக்கு சற்றும் ஓவ்வாத கலரில் டீ-ஷர்ட்,பியர் சகவாசத்தினால் குட்டி தொப்பை என்று சொல்ல கூடிய விதத்தில் வயிறு. முழங்கால் வரை விரியும் ஜம்பர். உச்சரிப்பில் சற்று ஆங்கில வாடை. இந்த வடிவத்தில் சித்தப்பா இருந்தார்.

மையமாக சிரித்தேன். அப்பா பல தசாப்தம் கழித்து தம்பியை சந்தித்த பூரிப்பில் ரொம்ப அட்டகாசமாக இருந்தார்.

“மீட் ஷி இஸ் மை டோட்டர் அனுஷா.. ஹி இஸ் மை லாஸ்ட் சன் ஹரி” என்றார்.

“ஹாய்..ஹாய்..”என்றார்கள். பதிலுக்கு அதேயே சொன்னேன்.

என்னைவிட கொஞ்சம் இளையவர்களாக இருந்தார்கள்.அனுஷாவை நேருக்குநேர் பார்க்க முடியவில்லை அவள் மேலாடை அலங்கோலமாக இருந்தது. ப்ரா விளிம்பு அப்பட்டமாக தெரிந்தது. ஹரி ரொம்ப சின்ன பையனாக இருந்தான்.

அம்மா, மீராவுடன் சித்தி அநாவசியத்துக்கு சிரித்து கதைத்துகொண்டு இருந்தாள்.என்னை அடையாளம் கண்டு “ஹலோவ் நிரேஷ்…ரொம்ப வளந்தாச்சு…”

சித்தி நிஜமாக இளமையாக இருந்தாள். தலைமயிரை வாரி விநோதமாக கொண்டை போட்டிருந்தாள். நடைமுறையில் சந்திக்காத மரூண், பிறவுன் நிறங்களில் டை அடித்து இருந்தாள்.

“போட்டோல பாத்ததை விட வளந்திட்டான் என்ன…..”

“டிரவலிங் எப்படி சௌகரியமாக இருந்திச்சா?” என்றேன்.

“யா இட்ஸ் வெரி சுமூத்…ரோட்டெல்லாம் நல்ல போட்டு இருக்காங்க என்ன…ரொம்ப டெவலோப்.. கட்டுநாயாக ஹைவே ரொம்ப நல்லா செய்து இருக்காங்க என்ன? வாவ்…சூப்பர்”

“ஓம்…இப்பதான் திறந்தாங்க…..”

“இப்ப எங்க படிக்குறடா?”

“களனி யுனிவேர்சிட்டி பிஃசிக்கல் சயின்ஸ்” என்றேன்.

“இஞ்சினியரிங் படிச்சு இருக்கலாமே ஏலேக்ட்ரோனிஸ்க்கு இப்ப நிறைய வேர்க்ஸ் இருக்கு என்ன, நெக்ஸ்ட் இயர் அனுஷா இஞ்சினியரிங்ல படிக்கபோறாள்”

உங்க நாடுமாதிரி இங்க சிம்பிள்ளா காசுகட்டி ஒன்றும் படிக்க முடியா. கோட்டா முறை அதையும் வருஷா வருஷம் குறைப்பம் என்று பயமுறுத்துறாங்க. எவ்வள போட்டி! ஸ்சட் புள்ளி 4ம் தசமதானத்தில் ஒரு சின்ன மாற்றத்தால் டொக்டர் டென்டிஸ் இடைவெளி. இந்த சிக்கலான சமாச்சாரம் உங்களுக்கு என்ன புரியும். என்று கேக்க நினைத்தேன் கேக்கவில்லை.

பரஸ்பர விஷயங்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். சொக்குலேட் டீ-ஷர்ட்ஸ், ஷர்ட்ஸ், தங்கச்சிக்கு ஸ்கேர்ட், ப்ளவுஸ், ப்ஃபேர்பியும் என்று அடுக்கினார்கள். அவர்கள் தந்த அனைத்து இனாமிலும் ஒரு விசேஷ வாசனை இருந்தது.

“ஐ பீஃல் வெரி தேர்ஸ்ட்டி…கேன் ஐ ட்ரிங்க் சம் வோட்டர்?” என்று ஹரி நெட்டி முறித்தான்.

“ரஞ்சி அக்கா.. போட்டில் வோட்டர் இருக்கா…?” அம்மாவை பார்த்து சித்திகேட்டாள்.

“நாங்க பைப் தண்ணிதான் பாவிக்குறநாங்க..பிரச்சனையில்லை முன் கடையில வேண்டலாம்…”

அம்மா என்னை கடைக்கு விரட்டினாள். ஹரியும் சேர்ந்து கொண்டான். சோடா வேண்ட காசும் கொடுத்து விட்டார்கள். ஐந்து லீட்டர் போட்டில் வோட்டர், கலர்கலராக சோடா எல்லாம் பொறுக்கி கொண்டு வீடு வந்தோம்.

“கேன் யு ஸ்பீக் தமிழ் லிட்டில் பிட்?” என்றேன்

“நோ ஐடியா அபௌட் டமில்..” என்றான்

அக்கம்பக்கத்து நாய்கள் ஹரியை சந்தேகமாக பார்த்து “லொள்…லொள்” என்று தள்ளி நின்று தயக்கத்துடன் குரைத்தன.

சுவாரசியமாக கதைத்துகொண்டார்கள். கரப்பான் பூச்சியை போட்டோ எடுத்தார்கள். நுளம்பு கடிக்கும் என்று பிரத்தியேக கீறீம்கள் கமகமக்க கால்,முழங்கால் என்று பூசிக்கொண்டார்கள். இரவு சாப்பாடுக்கு கணவாய்,நண்டு,ரால் எல்லாம் டைனிங் டேபிளில் செத்து கிடந்தன. எதை சாப்பிட்டாலும் “வாவ்..” “அமேசிங்” “கிரேட்” “ஓஸம்” என்றார்கள்.

நாளைக்கு சித்திவிநாயகர்,நல்லூர் எல்லாம் போகணும் என்றார்கள். வானுக்கு அப்பா சொன்னார். என் ரூம்மில் சீளிங்க் பேஃன்னையும் போட்டு எக்ஸ்ராவா டேபிள் பேஃனையும் கொடுத்தார்கள். நான் ஹோலில் பாயில் ஜன்னலை திறந்துவிட்டு படுத்தேன். அவர்கள் பயண களைப்பில் சீக்கிரம் நித்திரை கொண்டுவிட்டார்கள்.

காலையில் சித்தி அம்மாவுக்கு சமையலில் ஒத்தாசை செய்துகொண்டு இருந்தாள். புதிய நெஸ்கஃபேயில் கப் முழுவதும் தழும்ப நெஸ்கஃபே வந்தது. காமரா,போட்டில் வோட்டர்,சன்கிளாஸ் மற்றும் இதரபல சாமான்களுடன் ஆக்ரோஷமாக வானில் எறினார்கள். சித்திவிநாயகர் கோயிலை உற்சாகமாக சுத்திபார்த்தார்கள். பயபக்தியோடு சேவித்தார்கள். அர்ச்சனை செய்ய ஐயருக்கு ஆயிரம்ரூபாய் கொடுத்தார்கள். ஏன் இவ்வளவு என்று அப்பா ஆதங்கப்பட்டார். “நான் முந்தி இருக்க இது அப்படி இருந்துச்சு அது அப்பக்க இல்லை” என்று கோமன்றியடித்தார்கள்.

“வெளிநாட்டுக்காரர் வந்தது தெரிஞ்சுட்டு இனி கோயில் கொமிட்டிகாரர் காசுக்கு வந்துடுவார்கள்…” என்றார் அப்பா.

நல்லூர்க்கு போய் கோபுரம் தெரிய போட்டோ எடுத்தார்கள். இதை நான் ப்ஃபேஸ்புக் ப்ரோஃபைல் பிச்சராக போட போறேன் என்றார் சித்தப்பா. நல்லூரில் சிங்கள பஸ்கள் அதிகம் மேய்ந்தன. சிங்கள நங்கைகள் மார்பு குலுங்க வலம்மாறி சந்நிதியை சுத்தினார்கள். சிங்கள தாத்தாமார் அதே கோடுகோடு போட்ட சரத்துடன் ஷர்ட்டை களட்டி அர்ச்சனை டிக்கெட் ஒரு ரூபாய்! என்று சித்தப்பாவோட சேர்ந்து வியந்தனர். றியோக்கு போவம் என்றார்கள். இதான் சாட்டு என்று சண்டே ஸ்பெஷல் ஓடர் பண்ணிக்கொண்டேன்.

“இவ்வளவும் நீ தனியா தின்னுவியா அண்ணா?” என்று வாயை பிளந்தாள் மீரா. அவளை செல்லமாக முறைத்தேன்.

கஸின்ஸ் எல்லாம் ஒன்றா நில்லுங்க என்று ப்ளாஷ் மின்ன போட்டோ பிடித்தார்கள். ஒரு வாரம்தான் நிப்பம் அதுக்கு முதல் சொந்தகாரர்களை எல்லாம் பார்க்கணும் என்று எம்முடன் பிரத்தியேக சொக்குலேட் பெட்டிகளுடன் வானில் ஏறினார்கள்.

“இப்ப முல்லைதீவுல சிங்கள குடியேற்றம்..மும்முரமாக நடக்குது…” என்று அம்மா வானில் சொன்னாள்.

“ஹொ…..கொஞ்சகாலத்தில எல்லாம் சிங்களமா மாறிடும் போல இருக்கு என்ன..” என்றாள் சித்தி.

“அடுத்த தலைமுறை முழு சிங்களமாக மாறிடும் என்ன… இனி வாற பொடியல்தரவளியலுக்கு தமிழே தெரியாம போயிடும் என்ன…சோ சாட்.” என்று சித்தப்பா பெருமூச்சு விட்டார்.

உங்க பிள்ளைகள் எல்லாம் தமிழே தெரியாமல், வெள்ளைக்காரனுடன் தமிழ் அடையாளங்களை பெயரில் மட்டும் வைத்து சுகபோகமாக வாழலாம். தொழில்நுட்ப சந்தையில் இன அடையாளங்களை விட்டு ஆங்கிலமயமாகலாம். நாங்கள் மட்டும் மாறக்கூடா. உங்கள் பிள்ளைகளில் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்? என்று கேக்க நினைத்தேன். கேக்கவில்லை.

தர்ஷினி சித்திக்கு நிறைய சொந்தகாரர்கள் இருந்தார்கள். ரொம்ப உச்சாகமாக அனைவரையும் சந்தித்தார்கள். தன் கஸின் சர்வாஅன்டி வீட்டை கூட்டிக்கொண்டு போனார்கள். “வாவ்..எப்படி இருக்குறீங்க” என்று கட்டி பிடித்தார்கள். விழுந்து வழிந்து கவனித்தார்கள். அடிக்கடி சிரித்தார்கள்.. அனுஷா, ஹரியோடு தொட்டு தொட்டு கதைத்தார்கள். கிளாஸில் நெக்ட்டோ வந்தது நமக்கு மட்டும் வந்த கிளாஸில் கொஞ்சம் குறைவாக இருந்தது. நம்மிடம் அதிகம் கதைக்கவில்லை. நானும் மீராவும் தள்ளி நின்றோம்.

“ஜப்ணா ரொம்ப ஹோட் என…முந்தி நிறைய மகோகனிமரம் ரோட்ல இருந்தது அல்லோ….”

“கண்டி ரோட் அகலமாக்க எல்லா மரத்தையும் வெட்டிட்டாங்க….”

“இஸ் இட்? ஐ சி…”

பரஸ்பரமாக கதைத்தார்கள். மீரா என் போனை எடுத்து அங்ரி பேட்ஸ் ஆடினாள். நான் தடுக்கவில்லை. வெற்று பார்வை பார்த்தேன். விடைபெறும் போது மறைமுகமாக பணம் கொடுத்தார்கள். வாங்க மாட்டோம் என்று எல்லாம் பஸ் அடித்து விட்டு வழமை போல் வேண்டி கொண்டார்கள்.

வீடு வரும்போது ரொம்ப களைப்பாக இருந்தது. எதுக்கு இப்ப காரணம் இல்லாமல் வந்தார்கள்.. சொந்தகாரரை பார்க்கவா? நிறைய செலவழிக்குறாங்க எப்படி இப்படி உழைக்குறார்கள்.

அடுத்தநாள் கஷோரினா பீச் போனம் அதே வானில். ஒரே அரட்டை.நான் மீரா அனுஷா,ஹரி பின் சீட். அம்மா அப்பா சித்தி,சித்தப்பா எல்லாரும் முன் சீட். அனுஷா,ஹரி இப்போ கொஞ்சம் அதிகமாக கதைத்தார்கள். தங்களுடைய சமர் ஹொலிடேயில் செய்யும் சில்மிஷங்கள், ஐஸ்-ஹொக்கி, பேஸ்-போல் பத்தி அதிகம் கதைத்தார்கள். வான் ஓடிக்கொண்டு இருக்க பின் சீட்டில் செஸ் விளையாடினோம்.

“வாவ்…அமேசிங் பீச்…” என்றாள் அனுஷா.

“மாம்… இட்ஸ் சுபெர்ப்..ஐ அம் கோய்ங் டு சுவிமிங்..” என்று கடலை பார்த்து அவசரமாக உடையை மாத்திவிட்டு ஓடி போய் குதித்தார்கள். ரொம்ப நன்றாகவே நீச்சல் அடித்தார்கள். கடலில் டெனிஸ் போலை எறிந்து பிடித்தோம். நிறைய சாப்பிட்டோம் நிறைய குடித்தோம். ஒருவித சந்தோஷம் இருந்தது. சிப்பி சங்கு பொறுக்கி..சவுக்கு மரத்தடியில் கடல் தெரிய போட்டோ எடுத்தோம்.

அடுத்தநாள் முழுவதும் ஷோபிங் என்று டவுன் கூட்டிக்கொண்டு போனார்கள். நிறைய வேண்டித்தந்தார்கள். தயக்கத்துடன் திரிந்தோம். டிலானிகாவின் கோல் வந்தது அவசரமாக கட் பண்ணி விட்டேன். கோவிப்பாள் என்று “ஐம் பிஸி வித் மை ரிலேஷன்ஸ்” என்று sms தட்டிவிட்டேன். “ஹோந்தாய் ஹோந்தாய்” என்று உடனயே ரீப்லே போட்டாள். கூலிங்க் கிளாஸ் உடன் லிங்கம்போக விநோதமாக பார்த்தார்கள். பின்னேரம் அனைவரும் ராஜா-2 வில் படம் பார்தோம்.

அவர்கள் போக இன்னும் ரெண்டு நாள்இருந்தது. அம்மா அடுக்கு எடுத்தே களைத்து இருந்தாள். கொடுத்துவிட அரிசிமா வறுத்து,றால் கோது நோண்டி,எல்லாம் பொலித்தீன் பாக்கில் பக் பண்ணி மீராவும் களைத்து இருந்தாள். ஆனால் கொஞ்சம் சொல்ல மறந்த குதூகலம் இருந்தது.

அன்று இரவு அப்பாவுடன் சித்தப்பா கதைத்து கொண்டு இருந்தார் “அப்பாண்ட நிலம்,வயல் எல்லாம் உங்க பெயருலதானே இருக்கு, நாளைக்கே புரொக்டரை கூப்பிட்டு எனக்கு சேர வேண்டியதை எழுதிடுவம்…. என் பங்கை வித்துடலாம் என்று இருக்கன்..அடுத்த வருஷம் நான் மட்டும் வந்து விக்குற அலுவல பாக்குறன்…………”

– சாருநிவேதிகா விமர்சகவட்ட சிறுகதை போட்டிக்காக அனுப்பி வைக்கபட்ட கதை, 16ஆவது இடத்தை பிடித்தது .

Print Friendly, PDF & Email

1 thought on “அவர்களும் வந்திருந்தார்கள்

  1. எல்லா இடங்களிலும் இப்படித்தான்! சித்திகளை சொல்லி குற்றமில்லை பொறுப்பற்ற சித்தப்பாக்கள் இருக்கும் வரை பரம்பரை சொத்துக்களுக்கு மட்டும் சொந்தங்கள் கொண்டாடபடுகின்றன! சொத்துக்களை பார்த்துக்கொள்ள ஒருவன் வேண்டும் பழம் பழுக்கும் பொது பறவைகள் வரும் மற்றும் வந்து கொண்டு இருக்கின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *