காதல் என்பது எது வரை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 8,007 
 

இன்று பக்தி சுற்று முடிந்து நாளை காதல் பாடல்கள் சுற்று…. தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அறிவிப்பு தொடர்ந்து கொண்டு இருந்தது.

காதல் பற்றிய உங்கள் கணிப்பு என்னம்மா ? கேள்வி கேட்டது டீன் ஏஜ் மகள்தான்.

காதல் மேல் நம்பிக்கை உண்டு ஆனால் காதலர்கள் மீது ……. முடிக்கும் முன்பு எனது எண்ணங்கள் எனது கல்லூரி நாட்களுக்கு சென்றன.

கல்லூரி இரண்டாம் வருடம்.ஒரு நாள் இடைவேளை நேரம். வழக்கம் போல் டே- ஸ்காலர்
மாணவிகளும் ஹாஸ்டல் மாணவிகளும் சேர்ந்து டிபன் Box- களை காலி செய்து கொண்டு இருந்தோம். உன் அம்மா கை பக்குவம் தனி சுவைதான். தங்க வளையல் செய்து போடு என்றேன் நான். நீயே அதை செய். தங்கம் வேண்டாம் artificial போதும் என்று கல கலத்தாள் உஷா.

அந்நாட்களில் நாங்கள் நால்வர் ஒரு அணியாக இருப்போம் . உஷா ஒருவரை காதலிப்பது எங்களுக்கு தெரியும். கொஞ்சம் கண்டிப்பான பெற்றோர்தான். இருந்தாலும் இளைய மகளும் செல்லப்பெண்ணுமாகிய இவள் அக்காவின் திருமணம் முடிந்ததும் எப்படியும் சம்மதம் பெற்று விடலாம் என்று நம்பிக்கொண்டு இருந்தாள். வார இறுதி நாட்களில் காதலரை சந்திப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள். கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு திங்கள் கிழமை கல்லூரிக்கு வரும்போது வலது உள்ளங்கையை சுற்றி கட்டு போட்டபடி, சோர்ந்த முகத்துடன் வந்தாள்.

“என்ன ஆச்சு” விரிவுரையாளர் கேட்கும்போது…. கிட்சன் ல அம்மாக்கு ஹெல்ப் பண்ணினேன். எண்ணெய் தெறித்து விட்டது. பாவமாய் நின்றாள்.

தனிமையில் “உண்மையை சொல்லுடி” நாங்கள் உலுக்கி எடுத்ததும்….. வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று இருந்தோம். ராஜன் அப்பாவை பார்த்து சம்மதம் கேட்க வருகிறேன் என்றார். நான் இப்போது வேண்டாம் என்றேன். கொஞ்சம் வாக்குவாதம் ஆகி விட்டது. என்னை மறந்து விடுவாய் என்று நினைக்கிறேன் என்றதும் எனக்கும் கோவம் வந்து கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்துக்கொண்டு நின்றேன். புண்ணாகி விட்டது. டாக்டரிடம் காண்பித்துவிட்டு தெருமுனை வரை கொண்டு வந்து விட்டு விட்டு ராஜன் ஊருக்கு போய் விட்டார். Lab –ல ஆசிட் கையில் பட்டு விட்டது என்று வீட்டில் சொல்லி விட்டேன் என்றாள்.

“ரொம்ப தப்பு பண்ணுகிறே. பைத்தியக்காரத்தனம் கல்லூரியில் வந்து விசாரித்தால் என்ன ஆகும். உண்மையான காதலுக்கு சந்தேகமும் வரக்கூடாது ; தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் வரக்கூடாது. உன்னுடைய நிலைப்பாட்டை உணர்த்தி இருக்கவேண்டும் என்று அவளுக்கு நாங்கள் புத்தி சொன்னோம். பரஸ்பர சமாதானங்களுக்கு பிறகு சந்திப்புகளும், காத்திருப்புகளும் தொடர்ந்தன.

காலம் ஓடியது. படிப்பும் பரிட்சைகளும் முடிந்து எல்லோரும் பிரிந்தோம்.

“உன்னை நினைக்கவே மாட்டேன்; ஏனென்றால் மறப்பதில்லை புதிதாய் நினைப்பதற்கு”

என்று கடைசி நாளில் கலங்கிய படியே, ஒரு வருடம் கழித்து கான்வொகேஷனில் மீண்டும் சந்திப்போம் என்ற உறுதியுடன் ஒருவருக்கொருவர் விடை கொடுத்துக்கொண்டோம். அலை பேசி புழக்கம் இல்லாத காலம் அது. கடித தொடர்பு மட்டுமே. அதுவும் நாளடைவில் குறைந்து விட்டது. எனக்கு ஹைதெராபாத் -ல வேலை கிடைத்து விட்டது

அடுத்த வருடம் கான்வொகேஷன் போது எனக்கு லீவு கிடைக்காத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை. நேரில் வந்து வாங்கி கொள்கிறேன் என்று HOD- க்கு கடிதம் எழுதிவிட்டென்.

கான்வொகேஷன் முடிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு கல்லூரிக்கு சென்று HOD – யை பார்த்து வாழ்த்துக்களுடன் Certificate பெற்றுக்கொண்டு திரும்பினேன். பழகிய வகுப்பறை, லேப் என்று கொஞ்சம் அமர்ந்து இருந்தேன். மனதில் ஒரு திட்டம் போகும்போது உஷா வீட்டிற்கு சென்று விட்டுதான் போக வேண்டும்.

அப்போதுதான் லேப் அசிஸ்டன்ட் அக்கா அங்கு வந்தார். Hi எப்ப வந்த, எப்படி இருக்க பரிவுடன் அணைத்துக்கொண்டார். இப்பதான் Certificate வாங்க வந்தேன். இப்படியே ஒவ்வொருவரை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.

உனக்கு ஒன்று தெரியுமா. உஷாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதுப்பா. ஒரு பெண் குழந்தை 4 மாதம் ஆகிறது. அவளும் கான்வொகேஷன் வரவில்லை.

துள்ளி எழுந்தேன் நான். Super News. இப்போ உஷாவும் ராஜனும் எங்கே இருக்காங்க? (அக்காவிற்கு இவர்கள் காதல் பற்றி தெரியும்).

இல்லப்பா …… மாப்பிள்ளை ராஜன் இல்லை. உஷாவின் அப்பா சம்மதிக்கவில்லை. போன வருடம் படிப்பு முடிந்தவுடன் அக்கா கல்யாணம். உடனே இவளுக்கும் சொந்தத்திலே முடித்து விட்டார்கள்.

எப்படிக்கா இவள் ஒத்துக்கொண்டாள் ? காதலிக்கும்போது இந்த சொந்தம் எங்கு போய் இருந்தது

ஆமாம்பா.எனக்கு கூட ரொம்ப கஷ்டமாக இருந்தது. பாவம் அந்த ராஜன்.

எனக்கு கண்கள் கரித்தன. தொண்டையை அடைத்தது. அது துக்கமா? வருத்தமா? விரக்தியா? கோபமா? வெறுப்பா? என்னால் இனம் பிரித்து உணர முடியவில்லை.

இரண்டு நிமிடம் அமைதியாக அமர்ந்து இருந்தோம். சரிக் கா நான் கிளம்புகிறேன்.

பார்த்தீங்களா….. பேசிக்கொண்டே இருந்ததில் மறந்து விட்டேன். இந்தாங்க, ஹைதெராபாத் Designed வளையல்கள் என்று கொண்டு வந்திருந்த வளையல்களை அவரிடம் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

சந்தோஷம்மா. நினைவு வைத்து வாங்கி வந்து இருக்கிறாய்.

அவ்வளவு சுலபமாக எதையும் மறக்க முடியுமா என்றேன்.

இது அக்காவிற்கான பதிலா? உஷாவின் காதலை நினைத்து என் மனதில் எழுந்த கேள்வியா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *