கி.வா.ஜகந்நாதன்

 

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

தமிழ்த் தந்தை கி.வா. ஜகந்நாதன் அவர்கள் 1906ம் ஆண்டு ஏப்ரல் திங்களன்று திரு. வாசுதேவ ஐயர் அவர்களுக்கும் பார்வதியம்மாளுக்கும் பிறந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரிவதற்கிணங்க அவர் கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருவாசகம் ஆகிய பக்தி இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கத் துவங்கினார். ஒன்பதாவது படிக்கும் போதே செய்யுட்கள் எழுதத் துவங்கினார். நடராஜரைப் பற்றி எழுதிய ”போற்றிப் பத்து” என்ற பதிகமே அவருடைய கன்னி முயற்சி.

காந்திஜியின் விடுதலை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு, சர்க்காவில் நூல் நூற்று, கதர் ஆடைகளையே அணியத் துவங்கினார். இறுதி நாள் வரை தூய கதர் ஆடையையே அணிந்து வந்தார்.

தமிழ்த்தாயின் கருணை நோக்கினால் உ.வே. சாமிநாத அய்யர் அவர்களுடன் அவருடைய சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு தமிழ் வரலாற்றில் ஒரு பொற்காலத்தைத் துவக்கி வைத்தது என்றே சொல்லலாம். கல்லூரியில் படிப்பதை விட உ.வே.சா. அவர்களிடம் தமிழ் மாணவனாக இருப்பதையே கி.வா.ஜ விரும்பினார். சங்க நூல்கள், காவியங்கள், பிரபந்தங்கள் உள்ளிட்ட பல பாடங்களை உ.வே.சா அவர்களிடம் ஒரு நாளைக்குப் பதினோரு மணி நேரம் கற்றுக் கொண்டதோடு, குருவின் ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தார். ”உ.வே.சா அவர்களுக்குக் கி.வா.ஜ. ஒரு செந்தமிழ் வாரிசு” என்று அவருடைய நினைவு அஞ்சலி மலரில் குறிப்பிடுகிறார்கள்.

1932ம் ஆண்டு ”கலைமகள்” பத்திரிக்கை துவங்கியபோது கி.வா.ஜ. அவர்களைப் பதிப்பாசிரியராக உ.வே.சா. அவர்கள் சிபாரிசு செய்தார்கள். துவங்கிய அன்று முதல் இறுதி வரை அவருடைய வாழ்க்கையுடன் கலைமகள் ஒன்றியிருந்தாள். ஒரு இலட்சியப் பத்திரிக்கையாக அதை நடத்தி வந்தார். பத்திரிகைப் பணி, உ.வே.சா. அவர்களுடன் இடையறாத தமிழ்ப் பணி என ஓய்வின்றி உழைத்தார்.

1942-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தன் தந்தையை இழந்த நான்கே நாட்களுக்குள் அவரின் குருவான சாமிநாத அய்யரை இழந்தது தான் அவருக்குப் பேரிழப்பாக இருந்தது. அவரின் வரலாற்றை என் ஆசிரியர் பிரான் என்ற தலைப்பில் நூலாக எழுதி நிறைவு செய்தார்.

கி.வா.ஜ. ஒரு பன்முகம் கொண்ட தமிழ் வித்தகர். தனது எளிமையான பேச்சாற்றலால் உலகத்தைக் கவர்ந்தவர். அவர் பங்கு பெறாத பட்டி மன்றங்கள் கிடையாது. அவருடைய பேச்சில் நகைச்சுவையும், நடைமுறை உதாரணங்களும் கலந்து மிகக் கடினமான பொருட்களைக் கூட எளிதாகக் காட்டும். அவருடைய சிலேடைகள் மிகவும் பிரபலமானவை. அவருடைய சிலேடைப் பேச்சுக்களே தனி நூலாக வெளிவந்துள்ளது. அவர் நாட்டுப்புற இலக்கியத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு பல கிராமங்களுக்குச் சென்று, பாடல்களையும், பழமொழிகளையும் சேகரித்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஏற்றப் பாடல்கள், திருமணப் பாடல்கள், தெய்வப்பாடல்கள், சுவையான தமிழ்ப் பழமொழிகள் என நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கியவர். கி.வா.ஜ. அவருடைய கதைகளில் நகைச்சுவை இழையும். பிற மொழிக் கதைகளையும், புராண வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதைகளையும் அவர் தந்திருக்கிறார்.

ஜோதி என்ற பெயரில் அவர் கவிதைகள் பல பொழிந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருக்கு ”வாகீச கலாநிதி”, ”திருமுருகாற்றுப்படை அரசு” என்ற பட்டங்களை வழங்கியுள்ளார். செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

டாக்டர் உ.வே.சா. அவர்கள் தமிழ்த் தாத்தா என்றால், இவர் இன்றைய இலக்கிய மாணவர்களுக்குத் தமிழ்த் தந்தையாவார். அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தமிழ்ச் சொத்துக்களோ 150க்கும் மேல் 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் ”மூச்செல்லாம் தமிழ்” என்று இருந்த கி.வா.ஜ. அவர்களின் வாழ்வு நிறைவடைந்தது.

அவரைப் பற்றி எழுத்தாளர் அகிலன் கூறியுள்ள ஒரு மேற்கோள்:-

திரு. கி.வா.ஜ. அவர்கள் ஒருவர் தான். ஆனால் அவரைத் தமிழ்த் தாத்தாவின் சீடராகக் காண்பவர்கள் பலர். கலைமகள் ஆசிரியராகக் காண்பவர்கள் பலர். எழுத்தாளராகக் காண்பவர்கள் பலர். கவிஞரான ஜோதியைக் காண்பவர்கள் பலர். தலை சிறந்த பேச்சாளராய், சமயத்துறை அறிஞராய்க் காண்பவர்கள் பலர். எல்லோருமே அவரை எந்த உருவில் கண்டாலும், அங்கே அவர் அன்பு நிறைந்தவராக, பண்பின் உருவமாக, உழைப்பிலும், உள்ளத்திலும் உயர்ந்தவராகவே தோற்றமளிக்கிறார்.

இவரது நூல்கள் சில

  1. அதிகமான் நெடுமான் அஞ்சி
  2. அதிசயப் பெண்
  3. அப்பர் தேவார அமுது
  4. அபிராமி அந்தாதி
  5. அபிராமி அந்தாதி விளக்கம்
  6. அமுத இலக்கியக் கதைகள்
  7. அழியா அழகு
  8. அறப்போர் – சங்கநூற் காட்சிகள்
  9. அறுந்த தந்தி
  10. அன்பின் உருவம்
  11. அன்பு மாலை
  12. ஆத்ம ஜோதி
  13. ஆரம்ப அரசியல் நூல்
  14. ஆலைக்கரும்பு
  15. இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
  16. இருவிலங்கு
  17. இலங்கைக் காட்சிகள்
  18. இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
  19. உதயம்
  20. உள்ளம் குளிர்ந்தது
  21. எல்லாம் தமிழ்
  22. எழில் உதயம்
  23. எழு பெருவள்ளல்கள்
  24. என் ஆசிரியப்பிரான்
  25. ஏற்றப் பாட்டுகள்
  26. ஒளிவளர் விளக்கு
  27. ஒன்றே ஒன்று
  28. கஞ்சியிலும் இன்பம்
  29. கண்டறியாதன கண்டேன்
  30. கதிர்காம யாத்திரை
  31. கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
  32. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 1
  33. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 2
  34. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 3
  35. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 4
  36. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 5
  37. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 6
  38. கரிகால் வளவன்
  39. கலைச்செல்வி
  40. கலைஞன் தியாகம்
  41. கவி பாடலாம்
  42. கவிஞர் கதை
  43. கற்பக மலர்
  44. கன்னித் தமிழ்
  45. காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
  46. காவியமும் ஓவியமும்
  47. கி.வா.ஜ பேசுகிறார்
  48. கி.வா.ஜ வின் சிலேடைகள்
  49. கிழவியின் தந்திரம்
  50. குமண வள்ளல்
  51. குமரியின் மூக்குத்தி
  52. குழந்தை உலகம்
  53. குறிஞ்சித் தேன்
  54. கோயில் மணி
  55. கோவூர் கிழார்
  56. சகல கலாவல்லி
  57. சங்கர ராசேந்திர சோழன் உலா
  58. சரணம் சரணம்
  59. சித்தி வேழம்
  60. சிரிக்க வைக்கிறார்
  61. சிலம்பு பிறந்த கதை
  62. சிற்றம்பலம் சுதந்திரமா!
  63. ஞான மாலை
  64. தமிழ் நாவல்கள் – நாவல் விழாக் கருத்துரைகள்
  65. தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
  66. தமிழ் நூல் அறிமுகம்
  67. தமிழ் வையை – சங்கநூற் காட்சிகள்
  68. தமிழ்க் காப்பியங்கள்
  69. தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
  70. தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 1
  71. தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 2
  72. தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 3
  73. தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 4
  74. தமிழ்ப்பா மஞ்சரி
  75. தமிழின் வெற்றி
  76. நாம் அறிந்த கி.வா.ஜ.
  77. நாயன்மார் கதை – முதல் பகுதி
  78. நாயன்மார் கதை – இரண்டாம் பகுதி
  79. தனி வீடு
  80. தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
  81. திரட்டுப் பால்
  82. திரு அம்மானை
  83. திருக்குறள் விளக்கு
  84. திருக்கோலம்
  85. திருமுருகாற்றுப்படை
  86. திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
  87. திருவெம்பாவை
  88. தெய்வப் பாடல்கள்
  89. தேவாரம்-ஏழாம் திருமுறை
  90. தேன்பாகு
  91. நல்ல சேனாபதி
  92. நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
  93. நாடோடி இலக்கியம்
  94. நாயன்மார் கதை – மூன்றாம் பகுதி
  95. நாயன்மார் கதை – நன்காம் பகுதி
  96. நாலு பழங்கள்
  97. பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
  98. பல கதம்பம்
  99. பல்வகைப் பாடல்கள்
  100. பவள மல்லிகை
  101. பாண்டியன் நெடுஞ்செழியன்
  102. பாரி வேள்
  103. பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
  104. பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
  105. பின்னு செஞ்சடை
  106. புகழ் மாலை
  107. புது டயரி
  108. புது மெருகு
  109. புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
  110. பெரிய புராண விளக்கம் பகுதி-1
  111. பெரிய புராண விளக்கம் பகுதி-2
  112. பெரிய புராண விளக்கம் பகுதி-4
  113. பெரிய புராண விளக்கம் பகுதி-5
  114. பெரிய புராண விளக்கம் பகுதி-6
  115. பெரிய புராண விளக்கம் பகுதி-7
  116. பெரிய புராண விளக்கம் பகுதி-8
  117. பெரிய புராண விளக்கம் பகுதி-9
  118. பெரிய புராண விளக்கம் பகுதி-10
  119. பெரும் பெயர் முருகன்
  120. பேசாத நாள்
  121. பேசாத பேச்சு
  122. மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
  123. மாலை பூண்ட மலர்
  124. முந்நீர் விழா
  125. முருகன் அந்தாதி # முல்லை மணம்
  126. மூன்று தலைமுறை
  127. மேகமண்டலம்
  128. வழிகாட்டி வளைச் செட்டி – சிறுகதைகள்
  129. வாருங்கள் பார்க்கலாம்
  130. வாழ்க்கைச் சுழல்
  131. வாழும் தமிழ்
  132. விடையவன் விடைகள்
  133. விளையும் பயிர்
  134. வீரர் உலகம்

மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்) – 1951

முகவுரை 

தமிழ் மொழியைப் பலவகையிலே சிறப்பிற்துச் சொல்வதுண்டு. செந்தமிழ், பசுந்தமிழ், தீந்தமிழ். நற்றமிழ் என்று பாராட்டுவார்கள். இப்படி மற்ற மொழி களையும் அவற்றைப் பேசுவோர் பாராட்டிச் சொல்வதும் இயல்புதான். ஆனால் தமிழின் சிறப்பை வேறு ஒருவித மாகச் சொல்வதுண்டு. அந்தச் சிறப்பு வேறு மொழி களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. “சங்கமலி செந்தமிழ்” “சங்கத்தமிழ்’ என்று சிறப்பித்துப்பாராட்டும் தமிழ், சங்கங்களிலே சிறப்பாக வளர்ச்சி பெற்றது. மக்கள் பேசுவதனால் தமிழ் விரிந்து பரந்தது. ஆனால் அதனோடு நின்றிருந்தால் இலக்கியச் செல்வம் வளர்ச்சி பெற்றிராது. புலவர்கள் பல நூல்களை இயற்றுவதனால் தான் அந்தச் செல்வம் ஒரு மொழியில் மிகுதியாகும். 

தமிழில் பல புலவர்கள் பல பல நூல்களை இயற்றி னார்கள். அந்த நூல்கள் யாவுமே தமிழ் நாட்டாரின் பாராட்டைப் பெறவில்லை. இயற்றப்பெற்ற நூல்கள் எல்லாமே நின்று நிலவும் பெருமையைப் பெற முடியுமா? தமிழ்ச் சங்கம் என்ற புலவர் கூட்டம் ஒன்று இருந்தது. அதில் பல சிறந்த புலவர்கள் இருந்தார்கள். அழகிய கவிகளைப் பாடினார்கள். நாடு முழுவதும் வேறு பல புலவர்கள் இருந்தனர். அவர்களும் பல கவிகளை இயற்றினர். ஆயினும் அப்புலவர்கள் தங்கள் கவிகளைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியதனால்தான் நாட்டாரின் நன்மதிப்பைப்பெற முடிந்தது.இவ்வாறு தமிழ் தமிழ் நூல்கள் தக்கவர்களுடைய பார்வை பெற்றுத் தமிழ் நாட்டில் உலவி வந்தன. அதனால்தான் சங்கத் தமிழ் என்ற பெருமை தமிழுக்கு வந்தது. 

தமிழ்ச் சங்கத்தை வளர்த்தவர் பாண்டிய மன்னர். பாண்டி நாடு தமிழ் நாட்டின் நடுநாயகமாக இருந்தது. செந்தமிழ் நாடு, தமிழ் நாடு என்ற பெயர்கள் அந்த நாட்டுக்குப் பழங்காலத்தில் வழங்கி வந்தன. பாண்டி நாட்டில் மக்கள் பேசும் தமிழ்தான் நல்ல தமிழ் என்றுகூட அக்காலத்தில் நினைத்தார்கள் அதன் தலை நகரத்தில் தமிழ்ச் சங்கம் இருந்து வந்தது. அங்கே இருந்தாலும் மற்ற நாடுகளிலிருந்து புலவர்கள் வந்தார்கள் முடிய ணிந்த மன்னராகிய சேர சோழ பாண்டியர் என்ற மூவரும் தமிழ் நாட்டை ஆண்டு வந்கனர். இவர்களுக் குள்ளே பகைமை எப்பொழுதாவது இருந்தாலும், பிறநாட்டிலுள்ள புலவர்கள் பாண்டிநாட்டுக்கு வரு வதற்கு ஒரு தடையும் இருந்ததில்லை சங்கத்தில் இருந்த புலவர்கள் அத்தனை பேரும் பாண்டி நாட்டார் என்று சொல்ல முடியாது. பல நாடுகளில் பல ஊர்களில் பிறந்து வாழ்ந்த புலவர்கள் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த்தார்கள். 

பழைய தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன என்று சொல்வார்கள். ஒரே காலத்தில் அவை இருக்கவில்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் நடந்து வந்த சங்கம், கடல் கோளினால் பாண்டியனுடைய தலைநகரம் மாறியபோது, வேறு இடத்திற்கு மாறவேண்டிய அவசியம் நேர்ந்தது. 

இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் தமிழ் நாட்டுப் பகுதி இருந்தது. குமரிமலை, குமரியாறு, பஃறுளி யாறு என்பவை அந்த நிலப் பரப்பிலே இருந்தன. மதுரை என்ற நகரம் ஒன்று இருந்தது. அதுவே அக்காலத்துப் பாண்டி நாட்டின் தலைநகரம். பாண்டியர்களே தமிழ்ச் சங்கத்தை வளர்த்தமையால் அவர்களுக்குரிய தலைநகரமே தமிழ்த் தாய்க்கும் தலைநகரமாக விளங்கியது. அந்தப் பழைய மதுரையையும் பாண்டிநாட்டைச் சார்ந்த ஒரு பகுதியையும் கடல்பொங்கி அழித்துவிட்டது. அதனால் அந்த நாட்டின் நிலை மாறியது. பாண்டிய மன்னன் வடக்கே உள்ள கபாடபுரம் என்ற நகரத்தைத் தன் தலை நகரம் ஆக்கிக்கொண்டான். அந்த நகரத்தைப் பற்றிய செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. பாண்டிய மன்னன் அங்கே தமிழ்ச் சங்கத்தையும் நிறுவினான். 

மீண்டும் மற்றொரு கடல்கோள் வந்தது. கபாடபுரம் இருந்த பாண்டி நாட்டின் தென்பகுதியைக் கடல் விழுங்கியது. பாண்டிய மன்னன் அப்போதைக்கு வடக்கே மணலூர் என்ற இடத்தில் சென்று தங்கினான். இந்த நாட்டில் கடற்கரைக்கு நெடுந் தூரத்தில் இருக்கும்படி நாமே ஒரு நகரம் புதியதாக அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற நினைவு அவனுக்கு உண்டாயிற்று. இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு ஒரு நகரத்தை நிறுவினான் பாண்டி நாட்டுக்குப் பழங்காலத்தில் தலை நகரமாக இருந்த மதுரையின் பெயரையே அதற்கு வைத்தான். இந்தப் புதிய மதுரையில் தமிழ்ச் சங்கத்தை யும் நிறுவி வளர்த்து வரலானான். 

இந்த மூன்று தலைநகரங்களிலும் இருந்த தமிழ்ச் சங்கங்களைத் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்று சொல்வார்கள். சங்கத்தை அக்காலத்து மக்கள் எவ்வளவு உயர்வாகக் கருதினார்கள் என்பதற்கு அதைப் பற்றிய வரலாறுகளே சாட்சி. சாதாரண மக்கள் கூடிப் பேசும் இடம் அது என்ற நினைவே அவர்களுக்கு இல்லை; தமிழ்த் தெய்வத்தின் திருக்கோயில் அது என்றும், சங்கப் புலவர்களெல்லாம் நாமகளின் அவதாரம் என்றும் நம்பி வழிபட்டார்கள். அதுமட்டுமல்ல; சிவபெருமான், முருகன் திருமால் ஆகியவர்கள் கூடப் புலவர்களாக முதற் சங்கத்தில் இருந்தார்கள் என்று சொல்லிச் சொல்லி அதன் மதிப்பை அதிகமாக்கினார்கள். சங்கத் தமிழாக இருந்தது தெய்வத்தமிழாகவும் விளங்க வேண்டுமென்பது அவர்கள் ஆசை. 

இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலின் உரையில் இந்த மூன்று சங்கங்களின் வரலாறுகளும் வருகின்றன. தலைச்சங்க காலத்தில் தோன்றிய நூல் களில் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை. இடைச் சங்கத்தில் எழுந்த நூல்களில் தொல்காப்பியத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை நல்ல வேளையாக சிறந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமாவது மிஞ்சியதே என்று மகிழ்ச்சியடைய வேண்டும். 

மூன்றாவது சங்கமாகிய கடைச் சங்கத்தில் நாற்பத் தொன்பது புலவர்கள் இருந்தார்களென்று சொல் வார்கள். அக்காலத்தில் புலவர்கள் அவ்வப்போது பல பாடல்களைப் பாடினார்கள். அவை தமிழ் நாட்டில் அங்கங்கே வழங்கிவந்தன. நாளடைவில் அவை மறந்து போய்விடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. சில பாடல்கள் மறைந்துகொண்டும் வந்தன. ஆதலின், கடைச் சங்க காலத்தின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த புலவர்களும் அரசர்களும் அங்கங்கே வழங்கிய பாடல் களைத் தொகுத்து ஒழுங்குபடுத்த எண்ணினார்கள். சில அரசர், புலவர்களின் துணைகொண்டு இந்தத் தொகுப்பு வேலையைச் செய்தார்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்று அவற்றை மூன்று வரிசையாக வகுத்து அமைத்தார்கள். பத்துப் பாட்டு என்பது நீண்ட பாடல்கள் பத்து அடங்கிய தொகுதி. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பெயருடைய பத்து நூல்கள் அந்தத் தொகுதியில் இருக்கின்றது. 

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்கள் சேர்ந்த வரிசை. அந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு நூலும் பல பாடல்களின் தொகுதி. அதனால் இவற்றைத் தொகை நூல்கள் (Anthology) என்று சொல்வார்கள். பிற் காலத்தில் தனிப் பாடல் திரட்டு என்ற பெயருடன் சில நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் போன்ற திரட்டு நூல்களே இவை. பதினெண் கீழ்க்கணக்கு என்பவை பதினெட்டுச் சிறு நூல்கள் அடங்கியவை. அவற்றிற் பல, நீதிநூல்கள், திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்ததே. 

எட்டுத் தொகையைத் தொகுக்கும்போது சில வரை யறைகளை மேற் கொண்டு தொகுத்திருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சொல்லும் அகப்பொருட் பாடல்களை யெல்லாம் தனியே தொகுத்தார்கள். அப்படியே வாழ்க் கையின் மற்றப் பகுதிகளைப் பற்றிய பாடல்களையும் தொகுத்து அமைத்தார்கள். இவ்வாறு தொகுத்துவைத்த நூல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. ஐங்குறுநூறு என்பது அகப் பொருளைச் சார்ந்து ஐந்து திணைகளையும் பற்றித் தனித் தனியே நூறுநூறாக ஐந்து புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதி.பதிற்றுப்பத்து என்பது சேர அரசர்கள் பத்துப் பேர்மேல் பத்துப் பத்துப் பாட்டாகப் பத்துப் புலவர்கள் பாடிய நூறு பாடல்கள் அடங்கியது. பரிபாடல் அந்தப் பெயருள்ள பாவகையால் அமைந்த பல புலவர்களின் பாடல் தொகுதி. ஐந்து திணைபற்றி ஐம்பெரும் புலவர்கள் தனித்தனியே கலிப்பாவாகப் பாடிய பாடல்கள் அமைந்த நூல் கலித்தொகை. புறப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது புறநானூறு. அகப்பொருள் பற்றிய மற்றப் பாடல்களைத் தொகுத்து அடிக் கணக்குப் பண்ணினார்கள். சிறிய பாட்டுகளைத் தொகுத்து அவற்றைக் குறுந்தொகையென்ற பெயரோடும், அடுத்த படி சற்றுப் பெரிய பாடல்களைத் தொகுத்து நற்றிணை என்ற பெயரோடும், பின்னும் பெரிய பாடல்களைத் தொகுத்து அகநானூறு என்ற பெயரோடும் உலவ விட்டனர். நாலடி முதல் எட்டடிவரையில் உள்ள பாடல்கள் நானூறு குறுந்தொகையில் இருக்கின்றன. ஒன்பதடி முதல் பன்னிரண்ட டிவரையில் உள்ள பாடல்கள் நானூறு நற்றிணையில் உள்ளன. பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடி வரையில் உள்ள பாடல்களை அகநானூற் றில் காணலாம்; அந்த நூலிலும் நானூறு பாடல்கள் இருக்கின்றன 

சங்க நூல்கள் வழக்கற்றுப்போய், அவற்றைப் படிப் பவரும் கற்பிப்பவரும் இல்லாமல் தமிழ்நாடு சில காலத்தைப் போக்கியது. என்னுடைய ஆசிரியப்பிரா னாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சங்க நூல் களைத் தேடித் தொகுத்து ஆராய்ந்து வழுக்களைந்து அச்சிடலானார்கள். பெரும் பகுதியை அவர்கள் வெளி யிட்டார்கள். அவர்களோடு பழகியவர்களும், அவர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்தவர்களும், அவர்கள் நூற்பதிப்பைக் கண்டு உணர்ந்தவர்களும் சில நூல்களை வெளிப்படுத்தினார்கள். தமிழ் நாட்டில் காவியத் தமிழும் தோத்திரத் தமிழும் சமயத் தமிழும் பிரபந்தத் தமிழுமே வழங்கிவந்த காலத்தில் அவர்கள் அவதாரம் செய்து சங்கத் தமிழைப் புதையலைப் போல எடுத்து வழங்கா விட்டால் இன்று தமிழுக்குள்ள ஏற்றம் வந்திருக்குமா? ஆகவே, சங்கத் தமிழ்ச் சோலைக்குள் புகும் யாவரும் அவர்களை நன்றியறிவுடன் நினைப்பது கடமையாகும். 

உணர்ச்சியைத் தலைமையாகக்கொண்டு, காதலன் காதலியரிடையே நிகழ்வனவற்றைச் சொல்வது அகப் பொருள். செயலைத் தலைமையாகக்கொண்டு உலக வாழ்க்கையில் பிறதுறைகளில் நிகழும் செய்திகளைச் சொல்வது புறப்பொருள். காதல் அல்லாத பிற எல்லாம் புறமே ஆனாலும், பெரும்பாலும் புறத்துறைப் பாடல்கள் வீரத்தைச் சார்ந்தே இருக்கக் காணலாம். 

காதலனும் காதலியும் அன்புசெய்யும் ஒழுக்கம் இரண்டு வகைப்படும். கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் பிறர் அறியாமல் காதல் செய்வதைக் களவொழுக்கம் என்றும், மணத்தின் பின்னர்க் கணவன் மனைவியராக வாழும் வாழ்க்கையைக் கற்பொழுக்கம் என்றும் சொல் வார்கள். கதைபோலத் தொடர்ந்து வரும் காதல் வாழ்க்கையில் பல பல கட்ட ங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். தனித்தனி நிகழ்ச்சியைச் சொல்லும் பகுதியைத் துறை என்று கூறுவார்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு துறையில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் காதலன், காதலி, தோழி முதலியவர்களில் யாரேனும் ஒருவருடைய கூற்றாக இருக்கும். காதலனைத் தலைவனென்றும், காதலியைத் தலைவியென்றும் சொல்வது மரபு. தோழியைப் பாங்கி என்றும், தோழனைப் பாங்கன் என்றும், பெற்ற தாயை நற்றாய் என்றும், வளர்த்த தாயைச் செவிலி யென்றும் சொல்வார்கள். 

பிறருடைய உதவியும் தூண்டுதலும் இல்லாமல் அழகும் அறிவும் சிறந்த தலைவன் ஒருவன் தன் தகுதிக்கு ஏற்ற அழகி ஒருத்தியைத் தனியிடத்திலே சந்திக்கிறான். அவர்கள் ஒருவரோடு ஒருவர் காதல் கொண்டு அள வளாவுகிறார்கள். மறுநாளும் அப்படியே தனியிடத்தில் சந்திக்கிறார்கள். பிறகு தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனைப் பாங்கன் காண்கிறான். அவனிடத்தில் ஏதோ ஒரு வகையான சோர்வு இருப்பதை உணர்ந்து, என்ன காரணம் என்று வினவுகிறான். தான் ஒரு மங்கையின் காதல் வலையிற் பட்டிருப்பதை அவன் எடுத்துச் சொல் கிறான். பாங்கன் அம் மங்கை நல்லாள் இருக்கும் இடத் தைத் தலைவன் வாயிலாக அறிந்து, அவ்விடம் சென்று அவளை அறியாமல் அவளைக் கண்டு அவள் தலைவனுக்கு எவ்வகையாலும் ஏற்றவளே என்பதை உணர்ந்து மீண்டு வந்து தலைவனிடம் சொல்கிறான். 

மீண்டும் தலைவனும் தலைவியும் சந்தித்து அளவளாவு கிறார்கள். தலைவி தன் உயிர்த் தோழி இன்னாள் என்பதைக் குறிப்பால் தலைவனுக்குப் புலப்படுத்த அவன் அவளைத் தங்கள் காதல் வாழ்க்கைக்குத் துணையாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறான். அவளை அணுகித்தான் தலைவியி னிடம் காதல் பூண்டுள்ளதைத் தெரிவிக்கிறான். தோழி ஏதேதோ காரணங் கூறி அவனை மறுக்கிறாள். மீண்டும் மீண்டும் தன் காதலின் ஆழத்தைத் தலைவன் புலப்படுத்து வதோடு, தலைவிக்கும் தனக்கும் தொடர்பிருப்பதையும் குறிப்பிக்கிறான், அப்பால் தோழி அவன் உண்மைக் காதலன் என்று தேர்ந்து, தலைவியினிடம் அவன் காதலைப் பற்றிச் சொல்கிறாள். முதலில் தலைவி ஒன்றும் அறியாத வள்போல் இருக்கிறாள். அப்பால் மறுப்பவளைப்போலப் பேசுகிறாள்.தோழி மேலும் வற்புறுத்தவே, தலைவி ஒப்புக் கொள்பவளைப் போலப் பேசுகிறாள். அதுமுதல் தோழி யின் துணையைக் கொண்டே பகற்காலத்தில் தினைப்புனத் திலும வீட்டுக்குப் புறம்பான வேறிடங்களிலும் தன் காதலனைச் சந்தித்து வருகிறாள். இடையில் சில நாள் அவனைச் சந்துக்க முடியாமற் போகின்றது. அப்பொழு தெல்லாம் அவள் மிக்க துன்பத்தை அடைகிறாள். 

தினைப்புனத்தைக் காத்தல், பூக்கொய்தல் முதலி வற்றுக்காக வீட்டுக்குப் புறத்தே வந்து செல்லும் தலைவியை அவளுடைய தாய் வீட்டிலே இருக்கும்படி சொல்லிக் கட்டுப்பாடு செய்கிறாள். அதைத் தோழி வாயிலாக அறிந்த தலைவன் அத்தோழியின் உதவி பெற்று இரவுக் காலங்களில் வந்து யாரும் அறியாமல் தலைவியைச் சந்தித்துச் செல்கிறான். இந்த இரவுச் சந்திப்புக்கும் சில நாட்கள் தடை நிகழும் அப்பொழுது தலைவி தலைவனைக் காணாது வருந்துவாள் 

இவ்வாறு யாரும் அறியாமல் காதல் செய்வதற்குப் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. அவற்றால் மனம் வாடிய தலைவியைக் கண்ட தோழி, தலைவன் தலைவியை மணந்து கொண்டு வாழ்வதே தக்கதென்று நினைக்கிறாள். தன் கருத்தைக் குறிப்பாகத் தலைவனுக்குத் தெரிவிக் கிறாள். அவன் அதனை ஏற்றுக் கொண்டு, கல்யாணத்தின் பொருட்டுப் பொருள் தேடப் பிரிகிறான். அப்பொழுது அவன் பிரிவால் தலைவிக்குத் துயரம் உண்டாகிறது. 

தலைவன் மணம் செய்துகொள்வதற்குரிய முயற்சி களைச் செய்கிறான். அவனைத் தலைவியின் தாய் தந்தையர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றோ, வேறு யாருக்கேனும் அவளை மணஞ் செய்து கொடுக்க எண்ணியிருக்கின்றனர் என்றோ தெரிய வந்தால், தலைவி ஒரு தலைவனிடம் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைத் தோழி அவர்களுக்குக் குறிப்பாகப் புலப்படுத்துவாள். அதனை உணர்ந்து அவர் கள் தலைவனுக்கு அவளை அளிக்க உடம்படுவார்கள். 

சில சமயங்களில் அவர்கள் உடம்படாவிட்டால் தலைவன் தலைவியை ஒருவரும் அறியாமல் அழைத்துக் கொண்டு தன் ஊர்சென்று அங்கே அவளை மணந்துகொள் வான். அவர்கள் போன பிறகு தலைவியின் உ ண்மைக் காதலை அறிந்த தாயும் செவிலியும் வருந்துவார்கள். செவிலித்தாய், ‘நான் போய் என் மகள் எங்கிருந்தாலும் அழைத்து வருகிறேன்’ என்று புறப்படுவாள். இதுவரை யில் உள்ளது களவு என்ற பிரிவு. 

காதலர் இருவரும் மணம் புரிந்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்வார்கள். அப்போது சில காரியங்களுக் காகக் கணவன் தன் வீட்டை விட்டுச் சென்று சில காலம் தலைவியைப் பிரிந்திருப்பான். அந்தப் பிரிவால் இருவருக் கும் வருத்தம் உண்டாகும். இல்லறத்தை வளப்படுத்தும் பொருட்டுப் பொருள் தேடத் தலைவன் பிரிவது உண்டு. கல்வி கற்கப் பிரிவது உண்டு. அரசனுக்குத் தூதுவனாக நின்று தூது உரைப்பதற்காகவும், போரில் துணை புரிவதற் காகவும், நாட்டைக் காப்பதற்காகவும் பிரிந்து செல்வது உண்டு. 

பரத்தையினிடம் விருப்பம் கொண்டு தலைவன் சில சமயம் செல்வது உண்டு. அப்போது தலைவி ஊடல் கொள்வாள். தோழியின் உதவியாலும் தன்னுடைய முயற்சியாலும் தலைவியின் ஊடலைப் போக்கத் தொடங்கு வான் தலைவன். தலைவி ஊடலொழிந்து தலைவனுடன் ஒன்றுபட்டு வாழ்வாள். வை கற்புக் காலத்து நிகழ்ச்சிகள். 

இந்தக் காதற் கதையில் நானூறுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் அல்லது துறைகள் உண்டு. சங்க நூல்களில் இந்தத் துறைகள் தொடர்ச்சியாக இருப்பதில்லை; கலந்து கலந்து வரும். இவற்றைக் கதைபோலக் கோத்துத் தொடர்பு படுத்தி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செய்யுள் அமைத்துப் புலவர்கள் பாடியிருக்கும் ஒருவகை நூலுக்குக் கோவை என்றுபெயர் ; அகப்பொருட் கோவை யென்றும் ஐந்திணைக் கோவையென்றும் சொல்வார்கள். 

இந்தப் புத்தகத்தில் நற்றிணையிலிருந்து எடுத்த ஒன்பது பாடல்களுக்குரிய விளக்கங்களைக் காணலாம். முதற்பாட்டாகிய கடவுள் வாழ்த்து அகத்துறையை சார்ந்ததல்ல. எட்டுத் தொகையில் உள்ள நூல் ஒவ்வொன்றிலும் கடவுள் வாழ்த்து உண்டு. இந்தக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்பவர். அவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் வேறு தொகை நூல்களிலும் உள்ளன. இந்தப் பாட்டுத் திருமாலைப் பற்றியது. 

மற்றப் பாடல்களில் களவுக் காதலைப் பற்றிய பாடல் கள் ஆறு (3, 4, 5, 6, 8, 9); கற்பு வாழ்க்கையைப் பற்றி யவை இரண்டு (2,7); தோழி தலைவன் காதலை எடுத்துத் தலைவிக்குச் சொல்வது ஒன்று; வீட்டுக்குப் புறம்பே பகற் காலத்தில் வந்து தலைவியைச் சந்திக்கும் தலைமகன் சில நாள் வாராமையால் வருந்தும் தலைவி சொல்வது ஒன்று; தலைவன் மணம் புரிந்து கொள்ளும் ஏற்பாட்டோடு வந்திருக்கிறான் என்று தோழி கூறுவது ஒன்று; தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போவதாகத் திட்டம் போட்ட பிறகு தன் ஆயத்தாரைப் பிரிய முடியாமல் தலைவி வருந்துவதைத் தலைவனுக்குத் தோழி உரைப்பது ஒன்று; தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போகையில் அவளோடு கூறுவது ஒன்று; தலைவி தலைவ னுடன் போய்விட அதனை உணர்ந்த தாய் வருந்தி உரைப் பது ஒன்று. இவை களவுத் துறைகள். 

இல்லறம் நடத்தும்போது பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்ல நினைத்த நெஞ்சை நோக்கித் தலைவன் கூறியதாக ஒரு பாட்டும், அவன் பொருள் ஈட்டச் செல்வதற்கு உடம்பட்ட தோழியைத் தலைவி பாராட்டிக் கூறியதாக ஒரு பாட்டும் உள்ளன. இவை கற்புக்குரிய துறைகள். 

இந்த இருவகை வாழ்க்கை நிலையிலும் உணர்ச்சி வகையினால் ஐந்து பகுதிகள் உண்டு. தலைவியும் தலைவனும் ஒன்றுபட்டு இன்பத்தில் ஆழ்வது ஒன்று; இதற்குக் குறிஞ்சித் திணை என்று பெயர். தலைவனும் தலைவியும் பிரிந்து துன்புறுதல்; இதற்குப் பாலைத் திணை என்பது பெயர். தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி இருத்தல் முல்லைத் திணை என்ற பெயர் பெறும். தலைவன் தலைவி யைப் பிரிந்து வேறு மகளிரை நாடும்போது தலைவி ஊடல் கொள்வாள்; இது மருதத் திணை என்று பெயர் பெறும். தலைவி தலைவனை நினைந்து புலம்புதல் நெய்தல் திணை யாகும். புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் என்ற பெயர்களால் இந்த ஐந்து பகுதிகளையும் சுருக்க மாகச் சொல்வார்கள். 

குறிஞ்சி முதலியவை ஒழுக்க வகைகளானாலும் அவை நிகழும் நிலங்களுக்கும் அந்தப் பெயர் வழங்கும் முதலில் நிலத்திற்குப் பெயர் ஏற்பட்டுப் பிறகு அந்த நிலத்தில் நடக்கும் ஒழுக்கத்துக்குப் பெயராக வந்தது. மலையும் மலை யைச் சார்ந்த இடமும் குறிஞ்சி. இந்த நிலத்தில் புணர்த லாகிய ஒழுக்கம் சிறப்பைப் பெறும். மழையுன்றி வறண்டு போன நிலம் பாலை; பிரிவு இங்கே நிகழ்வதாகச் சொன்னால் பிரிவினது துன்ப உணர்ச்சி நன்றாக வெளிப்படும். காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை; இந்த நிலத் தில் இருத்தல் என்னும் ஒழுக்கம் நிகழ்வதாகச்சொன்னால் சிறப்பாக இருக்கும். வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம்; இது ஊடலுக்கு ஏற்ற இடம். கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல்; தனிமையிலே புலம்புதற்கு ஏற்ற இடம். 

சங்க நூல்களில் இயற்கை எழிலைப் புலவர்கள் மிக நன்றாக வருணித்திருக்கிறார்கள். விலங்கினங்களிடத்தும் காதல் வாழ்க்கை இருப்பதைப் புலப்படுத்தியிருக்கிறார் கள். இப்புத்தகத்தில் உள்ள பாடல்களில் குறிஞ்சி நிலத் தையும் பாலை நிலத்தையும் பார்க்கிறோம். குறிஞ்சி நிலத் தில் நன்னெடுங் குன்றம் ஓங்கி நிற்கிறது. காலையில் பெய்த மழையினால் அருவிபெருக்கெடுத்து வீழ்கிறது அது பாயும் காடுகள் காண்பதற்கு அரிய அழகுக் காட்சியாகத் திகழ் கின்றன. காந்தள் மலரில் வண்டு மொய்த்து ஊதுகின்றது. அதன் இன்னிசை யாழொலியைப் போல இருக்கிறது. யாமத்தில் அடர மழை பெய்கிறது. மரங்கள் அடர்ந்து ஓங்கி நின்ற மால் வரை திருமாலைப் போலத் திகழ்கிறது. வெள்ளை வெளேரென்று வீழும் அருவி பலராமரைப் போல இருக்கிறது. குறமகளிர் தினைப்புனத்தைக் காவல் புரிகிறார்கள். அவர்களை ஏமாற்றிவிட்டு மந்தி தினைக் கதி ரைப் பறித்துக்கொண்டு தன் கணவனாகிய கடுவனோடு மலை மேலே ஏறிப் போய்த் தினைக் கதிரைக் கையால் தேய்த்துத் தின்கிறது. தன் கவுளிலும் தாடையிலும் தினையை அடக்கிக் கொள்கிறது. 

எங்கே பார்த்தாலும் வெப்பம் நிரம்பி அழல் கொளுந் தும் பாலை நிலத்தைச் சில பாடல்களில் காண்கிறோம். உலர்ந்த காந்தளும் ஓய்ந்த புலியும் ஈனும் பருந்தும் அங்கே வருகின்றன. எப்போதும் கோடைக் காலம் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. வேப்ப மரத்தின்மேல் இலைகள் சுருங்கிச் சு ண்டுள்ளன. அதன் கீழே புள்ளி புள்ளியா த்தான் நிழல் காணப்படு கிறது. அதன் மேலே பிரசவ வேதனையோடு பருந்து தங்கி யிருக்கிறது அந்த நிழலில் மறவர்களின் சிறுவர்கள் தாயக் கட்டம் போன்ற விளையாட்டை ஆடுகிறார்கள்; நெல்லிக் காயை உருட்டி விளையாடுகிறார்கள். கருவுயிர்த்த பெண் புலி நடக்க முடியாமல் ஓரிடத்தில் இருக்க, அதற்கு இரை தேடி ஆண் புலி வழியிலே யாராவது வருகிறார்களா என்று ஒளித்துப் பார்த்து நிற்கிறது. 

நெல்லி மரமும் விளாமரமும் எங்கேயோ ஓரிடத்தில் உயிர் வைத்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பாலையில் பிறரைக் கொன்று வாழும் மறவர்களாகிய வில்லேருழவர் கள் வாழ்கிறார்கள். 

எங்கோ ஓரிடத்தில் கொஞ்சம் பசுமை இருக்கிறது. அங்கே விளாமரத்தின் கீழே பச்சைக் கம்பலத்தை விரித் தாற்போலப் பயிர் பரந்திருக்கிறது. அதன் மேலே விளாம் பழங்கள் பழுத்து உதிர்ந்திருக்கின்றன. மாமரச் சோலையும் அதில் இருந்து பாடும் குயிலும் பாலை நிலத்தை அடுத்து இருக்கின்றன. 

பழந்தமிழர் வாழ்க்கையில் தெய்வ பக்தி நன்றாக இருந்தது. திருமாலையும் பலராமனையும் இந்தப் புத்தகத் ‘தில் வரும் செய்யுட்களில் காண்கிறோம். சக்கரபாணி யாகிய திருமால் வேத முதல்வராகவும் உலகமே உருவ மாகப் பெற்ற பெருமானாகவும் விளங்குகிறார். அவர் எப் பொருளினூடும் இருப்பவர்; எல்லாவற்றையும் தம்முள் அடக்கியவர். சர்வாந்தரியாமி; சர்வ வியாபகர். அவர் தமையனாராகிய பலதேவர் வெள்ளை நிறமுடையவர். 

பல தெய்வங்கள் இருந்தாலும் உள்ளம் கசிந்து வழி படும் தெய்வம் ஒன்று ஒவ்வொருவருக்கும் இருக்கும். அத் தெய்வத் திருவருளைப் பெறவேண்டுமென்ற ஆர்வத் தினால் சோர்வில்லாமல் அவர்கள் சாதனங்களில் ஈடுபட் டார்கள். வழிபடு தெய்வத்தைக் கண்ணாலே காணலா மென்றும், அந்தக் காட்சியின்பம் எல்லா இன்பங்களிலும் சிறந்த தென்றும் நம்பினார்கள். 

நோன்பு நோற்று நீராடி ஈரம் புலராதபடியே சென்று கையினால் பிட்சை ஏற்று உண்ணும் துறவியர் இருந்தனர். 

இல்லற வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது என்பதை ஆடவர் உணர்ந்திருந்தனர். பொருள் ஈட்டுவது அவர் கடமை என்பதை மகளிர் உணர்ந்து அவர்களைப் பிரிந்து சிலகாலம் இருக்கும் துன்பத்தைப் பொறுத்தார். கள். எண்ணியபடி செய்யும் துணிவுடையவர்களே சிறந்த ஆடவர்கள் என்ற எண்ணம் இருந்தது. ஒருவரோடு நட் புப் பூண வேண்டுமானால் அவர் தகுதி முதலியவற்றை முன்பே ஆராய்ந்து, ஏற்புடையவரென்றால் நண்பு செய் வதும் இல்லையானால் செய்யாமல் இருப்பதும் பெரியோர் இயல்பு. ஒருமுறை நண்பராக்கிக் கொண்டால் பிறகு அவருடைய தகுதியை ஆராய்வது தவறு என்பது அவர் கள் கொள்கை. 

இளம் பெண்கள் மணலில் விளையாடுவார்கள். கம் பலத்தை விரித்து அதன்மேல் பந்தாடுவார்கள். இல்லத் தில் மகளிர் மாலைக் காலத்தில் விளக்கேற்றுவார்கள்; விடி யற்காலத்தில் தயிர் கடைவார்கள். காலிலே சிலம்பை யும் உடம்பிலே பொன்னாலாகிய சேயிழைகளையும் அணி வார்கள். இயற்கை அழகைக் கண்டு இன்புறுவது சில மகளிர் இயல்பு. 

மகளிருக்கு உயிரைவிடச் சிறந்தது நாணம். இளம் பெண்கள் தம்முடைய அன்னையாரிடத்திலும் ஆயத்தோரிடத்திலும் மிக்க அன்பு பூண்டிருப்பார்கள். இரவில் தம் அன்னையின் அணைப்பிலே இன்புற்று உறங்குவார்கள். தாய் தன் பெண்ணை வாயிலே முத்தமிட்டுக் கொள்வ துண்டு. 

பொன்னை உரை கல்லில் தேய்த்துப் பார்ப்பார்கள். அந்த உரைக்கல்லுக்குக் கட்டளை என்று பெயர். தயிர்ப் பானையில் விளாம்பழத்தைப் போட்டு மூடிவைப்பார்கள். அதனால் அந்தப் பானையின் முடைநாற்றம் மாறும். யாழ் வாசித்து அந்த இசையிலே ஈடுபடும் வழக்கம் தமிழ் மக்களுக்கு உண்டு. 

இந்த ஒன்பது பாடல்களிலே இத்தனை செய்திகளும் இன்னும் சில செய்திகளும் அமைந்திருக்கின்தின. நானூறு பாடல் அடங்கிய நற்றிணையில் இன்னும் பல பல செய்தி கள் உண்டு. இப்படியே எட்டுத்தொகை நூல்களிலும் உள்ள செய்திகளை ஆராய்ந்தால் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைத் தெரிந்து கொள்ளலாம். 

இந்த நற்றிணையைப் பழங்காலத்தில் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற அரசன். உரை எழுதி அச்சிற் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் என்ற பெரியார். 

சங்க நூல்களிலுள்ள பாடல்கள் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு விளங்காத நடையில் இருக்கின்றன. அவற் றைத் தெளிவாக்கினால் அவற்றிலுள்ள பொருள் யாவர் மனத்தையும் கொள்ளை கொள்ளும். இந்த எண்ணத் தினால் சில அகப்பொருட் செய்யுட்களுக்குக் கதை போன்ற உருவத்தில் விளக்கம் எழுதிக் ‘கலைமக’ளில் முன்பு வெளியிட்டேன். அவற்றை அன்பர்கள் படித்துப் பார்த்து மிகவும் பாராட்டினார்கள். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, ‘காவியமும் ஓவியமும்’ என்ற பெயரோடு ஒரு புத்தகமாக்கி விரிவான முகவுரையோடு வெளியிட்டேன். அப்பால் திருமுருகாற்றுப் படைக்கும் விளக்கம் எழுதி, ‘வழிகாட்டி’ என்ற பெயரோடு வெளியிட்டேன். 

இந்த இரண்டு புத்தகங்களும் தமிழர்களின் உள்ளத்துக்கு உவந்தவையாக இருக்கின்றன என்று தெரிந்து இன்ப மடைகிறேன். முருகன் திருவருளும் என் ஆசிரியப்பிரா னுடைய ஆசியுமே இந்தச் செயலில் யான் புகுவதற்கு மூலகாரணமாக நிற்பவை. 

இதே முறையில் இன்னும் பல் பாடல்களுக்கு விளக்கம் எழுதலாமென்று எண்ணினேன். என் கருத்தை அறிந்து, அப்படிச் செய்வது மிகவும் நன்றென்றும், நான் அதைச் சிறிதும் சோர்வின்றி நன்றாகச் செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்தி, இவை புத்தக உருவத்தில் வருவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து, என்னைத் தூண்டி நிற்பவர் என உழுவலன்பினரும், அமுத நிலையத் தின் தலைவரும் ஆகிய ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள். இயல்பிலே சோம்பலை அணியாகப் பூண்ட நான் அவர் களுடைய ஊக்கம் இல்லையானால் இதை எழுத முற்பட் டிருக்க மாட்டேன். ஆகவே அவர்களுக்கு என் நன்றி யைத் தெரிவிப்பது என் தலையாய கடமை. 

இந்த முயற்சி நன்கு நிறைவேறுவதற்கு முருகன் திருவருளும் தமிழ் அன்பர்களின் ஆதரவும் இன்றியமையாதவை. அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையே ‘மனைவிளக்’கை முதல் முதலில் ஏற்றச் செய்தது. 

கார்த்திகைத் திருநாள்,
12-12-1951 
கி.வா.ஜகந்நாதன். 

குறிப்பு: சங்கநூற் காட்சிகளுக்குத் தமிழுலகம் அளித்த ஆதரவினால் இப்போது இதன் இரண்டாம் பதிப்பு வெளியாகிறது. இப்பதில் பின்னும் இரண்டு பாடல்களுக்குரிய விளக்கத்தைச் சேர்த்திருக்கிறேன். 

கல்யாணபுரம், மயிலாப்பூர்,
9-2-1955 
கி.வா.ஜகந்நாதன்.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *