எஸ்.வையாபுரிப்பிள்ளை

 

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர். பிற மொழி கலப்பதை வெறுப்பதும், சமஸ்க்ருதத்தை வெறுப்பதும், இந்தியை இகழ்வதும், தனித் தமிழ் நாடு குறித்து கனவு காண்பதும் போன்ற விருப்பு வெறுப்புகள் ஏதுமற்ற தமிழ் அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் வியப்பாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு ஆச்சரியம் தான் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.

பிறப்பு: நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி சரவணப்பெருமாள் – பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.

கல்வி: பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று “சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)” பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.

சட்டம்: தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

வழக்கறிஞர் பணி: திருவனந்தபுரத்தில் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும், மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

நண்பர்கள்: “இரசிகமணி” டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றவர்கள் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.

தமிழ் ஆய்வு: வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.

பதிப்பாசிரியர்: வையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.

தமிழ்த்துறைத் தலைவர்: வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ. ஐ. சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.

இரா. பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, “இரசிகமணி” டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ. உ. சி., ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். வையாபுரிப் பிள்ளையையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

வீடு நூலகம்: வையாபுரிப் பிள்ளை தனது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.

நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.

மறைவு: வையாபுரிப் பிள்ளை 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 65-வது வயதில் இயற்கை எய்தினார்.

இயற்றிய நூற்கள்:

1930 – ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு

1944 – சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு

1946 – Research in Dravidian Language, Madras Premier Co., Madras

1947 – இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்

1949 – தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்

1950 – கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி

1951 – உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு

1952 – இலக்கிய தீபம், பாரி நிலையம்

1952 – இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்

1954 – இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்

1955 – கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம்

1956 – இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்

1956 – திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு

1956 – History of Tamil Language & Literature, NCBH

1956 – சொற்கலை விருந்து, பாரி நிலையம்

1957 – காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்

1958 – இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்

1958 – ராஜி

1959 – தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு

1959 – அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்

1960 – தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம், நான்காம் பதிப்பு

பதிப்பித்த நூல்கள்:

01. மனோன்மணியம், 1922

02. துகில்விடு தூது, 1929

03. நாமதீப நிகண்டு, 1930

04. அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931

05. களவியற்காரிகை, 1931

06. கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932

07. குருகூர் பள்ளு, 1932

08. திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932

09. தினகர வெண்பா, 1932

10. நெல்விடு தூது, 1933

11. தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்பூரணம்), 1933

12. திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933

13. திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933

14. கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933

15. பூகோள விலாசம், 1933

16. திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933

17. மூப்பொந்தொட்டி உலா, 1934

18. பொதிகை நிகண்டு, 1934

19. இராஜராஜதேவர் உலா, 1934

20. தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934

21. இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934

22. மதுரைக் கோவை, 1934

23. தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936

24. புறத்திரட்டு, 1938

25. கயாதாரம், 1939

26. சங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்), 1940

27. சீவக சிந்தாமணி, 1941

28. சாத்தூர் நொண்டி நாடகம், 1941

29. நவநீதப் பாட்டியல் – உரையுடன், 1943

30. திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943

31. நான்மணிக்கடிகை, 1944

32. இன்னா நாற்பது, 1944

33. திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944

34. இனியவை நாற்பது, 1949

35. இராமப்பய்யன் அம்மானை, 1950

36. முதலாயிரம், 1955

37. திருவாய்மொழி

38. கொண்டல் விடு தூது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *