வந்தே பாரத் வாகாக கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
ஆரம்பத்திலிருந்தே அந்த டி.டி.யாரை எதாவது சொல்லிக் கடிய வேண்டுமென்று கறுவிக் கொண்டிருந்தது மனம். காரணம் வேறொன்றுமில்லை., அந்த கம்பார்ட்மெண்டில் பத்து பேராய் பயணித்தவர்கள் ஆளாளுக்கு ஒரு இடத்தில் மாறி மாறி வேறு வேறு சீட்டில் உட்கார்ந்திருந்தார்கள். பொறுமையாய் செக் செய்தபடி நகர்ந்து கொண்டிருந்தவர், அவன் சீட்டருகே வந்ததும் சரியான இடத்தில் அவன் உட்கார்ந்திருந்தும் ‘ஐடி புரூப் இருக்கா? அது இருக்கா? இது இருக்கா காமின்னு!’ கடுமையாய்க் கேட்க, கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமைகாத்தான். காரணம் இருந்தது.
அவர் டிப்பார்ட் மெண்ட் அறிவித்த ஆடைகள் கச்சிதமாய் அணிந்திருந்தார். நீட் யூனிஃபார்ம்.., தொப்பி எல்லாம் இருந்தன. அதுதான். அவர், அவர் டியூட்டீயைச் செய்கிறார். நாம், நம்ம கடமை புரூப் வைத்திருப்பதும், அதைக் காட்டுவதும்… என்று சமாதானமாகி, அவருக்குக் காட்டிவிட்டு அமைதியானான்.
சேலம் வருவதற்குள் காலதாமதம் ஆனது. லைன் பராமரிப்பே தாமத்திற்குக் காரணம். சேலம் தாண்டி ஈரோடு நெருங்க நெருங்க எல்லார் முகத்திலும் கோவை அருகில் என்கிற உற்சாகம் முகத்தில் உவகையாய் கனிந்து கொண்டிருந்தது.
திடீரென்று நாலைந்து போலீஸ்… அறக்கப் பறக்க அந்த கம்பார்ட்,மெண்டில் நுழைந்து, ‘ இது… இது யார் பார்சல் ?யார் பார்சல்? என்று ஒரு கனசதுர அட்டைப் பெட்டியைக் காட்டிக் கேட்க, மனசில் எல்லாருக்கும் பயம் பரவத் தொடங்கியது. ‘சே! அடுத்து திருப்பூர் திருப்பூர் தாண்டினால் கோவை…! இந்த நேரத்தில் இது வேறு தேவையா??!! எல்லாரும் நொந்து கொண்டார்கள்.
‘என்ன பார்சலோ? எவன் வெடிகுண்டு வைத்திருக்கானோ? எப்ப வெடிக்குமோ? முழுசாய் கோவை கொண்டு சேர்க்குமோ இந்த வந்தே பாரத்?! இந்த லட்சணத்தில் எலக்ஷன் பிசி வேறு! யார் எங்க உட்கார்ந்தா என்ன? ஐடி இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? இதோ பார்சல் வைத்திருக்கானே பாவி… எல்லாரையும் கூண்டோடு கைலாசம் அனுப்பவா? பயம் பதற்றதை ‘திக் திக்’ என்று திகிலேற்ற… டிடியார் தன் செல்போனில் எந்த ஸ்டேஷனுக்கோ தொடர்பு கொண்டு எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்.
போச்சு~!போச்சு! எல்லாரும் சாகப் போறோம்னு நெனைக்கையில் செக்கிங்க் இன்ஸ்பெக்டரான டிடியாருக்கு வந்தது அந்த போன்… டிடியார் மெல்ல புன்னகைத்தபடி அருகிலிருந்த போலீஸ்காரர்களிடம் அந்த பார்சலை எடுக்காமல் கடந்துபோன எந்த ஸ்டேஷனிலோ இடமாறி மாறி அமர்ந்தவர்கள் யாரோ எடுக்காமல் போயிருக்கிறார்கள். என்று சொல்லிச் சிரித்தார்.
இறங்கிய ஸ்டேஷனில் பார்சலை எடுக்காமல் இறங்கிய விஷயத்தை புகாராய்க் கொடுக்க… அந்த ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலுக்குத் தகவல் தர,
போக இருந்த உயிர் புனர்ஜென்மம் எடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
ஐடி கேட்டதற்காகக் கோபம் வந்ததே…?! ஒருவேளை அது தப்பான பார்சலாயிருந்து வெடித்து பர்லோகம் போயிருந்தால்…?! அடையாளம் தெரியாமலயே அஸ்தமித்திருமே வாழ்வு?!
நினைக்கையில் வண்டி பயணம் இடம்மாறினாலும் தடம் மாறினாலும் தப்பு என்று தெளிவைத் தந்தது. ஐஞ்சு நிமிஷத்தில் ஆனந்தம் வந்ததே.?!. புண்ணியவான் பொட்டி எடுக்க மறந்துட்டேன்னு புகார் கொடுத்தானே?! நல்லா இருக்கட்டும்,! அவன் மட்டும் புகார் கொடுக்காதிருந்தால், அதை நினைத்தாலே பதறுகிறது.. ஆனந்தம் ஐஞ்சு நிமிஷம்தான். ஆனால் ஆயுசு நிலைக்கிறதே?!