கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 23,647 
 

‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’

இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே அவன் எழுதிய 700 பக்க நாவல் அக்னிக்கு உணவாவதை அவன் பார்த்துக்கொண்டு நின்றான்.

அவனே எரிந்துகொண்டு இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. இந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதோ, அங்கே எரியும் ஒவ்வோர் எழுத்தும் அவன் உதிரத்தில் பிறந்தது. அவனுக்கே சொந்தமானது. அவனுக்கே மட்டும் புரியக்கூடிய புனிதமான அந்தரங்கம். இலக்கிய உலகம் அவன் எழுத்தைப் புரிந்துகொள்ள மறுக் கிறது. அதனால்தான் அவன் தன்னுடைய மாபெரும் படைப்பை எரிதழலுக்கு அர்ப்பணித்துவிட்டான்.

‘தலைப்பு நன்றாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு வேறு ஒரு நாவல் எழுதித் தாருங்களேன்’ என்கிறான் ஒருவன். இன்னொருவன், ‘இதை எட்டுப் பக்கங்களில் ஒரு சிறுகதையாக்கித் தர முடியுமா?’ என்று கேட்கிறான். எல்லாவற்றையும்விட, தன்னை ஒரு விமர்சகனாகப் பாவித்துக்கொண்டவன் சொன்னது தான், தான் எழுதியதை எரிக்கத் தூண்டியது… ‘நல்ல எழுத்து ஜவ்வு மிட்டாய் மாதிரி மெல்வதற்குச் சுலபமாக இருக்க வேண் டும். கூழாங்கற்களாக இருந்தால் யாரால் மெல்ல முடியும்?’ என்றான் அவன்.

எரிகின்ற ஜ்வாலையில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். அவன் எழுதிய எழுத்துக்கள் புகை புகையாக வெளி வந்தன. பிறகு வட்ட வடிவ மான வளையங்களாக… என்ன அழகான வளையங்கள்!

அவன் கட்டிலில் போய்ச் சாய்ந்துகொண்டான். திடீரென்று ஒரு விவரிக்க இயலாத சோகம் அவனை ஆட்கொண்டது. அவன் ஒரு தோல்வியா? இந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுத்து அவன் முன் நின்றது.

எது வெற்றி? எது தோல்வி?

அனைத்துப் பக்கங்களும் எரிந்து ஓய்ந்தன. அவன் அதனருகில் சென்று அந்தச் சாம்பலைச் சற்று நேரம் உற் றுப் பார்த்துக்கொண்டு இருந்தான். திடீரென்று அவனுக்கு ஓர் எண் ணம் தோன்றியது. இந்தச் சாம்ப லைப் பொட்டலமாகக் கட்டி அந்த விமர்சகனுக்கு அனுப்பி வைக்கலாமா? ‘இது என் நாவ லின் எளிய மறு வடிவம். ‘ஜவ்வு மிட்டாய் மாதிரி இல்லாவிட்டாலும், இப்போது இந்த வடிவில், மெல்வது கடினமில்லை!’ என்ற குறிப்புடன்?

‘இந்த வாசக உலகம் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறை எனக்குள் ஏன் எழுகிறது?’ என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அவன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது, இதுதானே சுய உருவ வேட்டையின் எல்லைக் கல்? அப்படி இருக்கும்போது, அவன் ஏன் 700 பக்கங்களைத் தீயில் இட்டான்? யாரைப் பழி வாங்க வேண்டுமென்று?

தன்னையேதான்!

திடீரென்று அவனுக்கு அழுகை வந்தது. ‘சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்!’ ஆனால். ஆனால்… அவன் வாழ்க்கையில் ஒரு தோல்வி! அவனுக்கு வாசிப்பவர்களை ஈர்க்கும்படி எழுத வரவில்லை என்கிறார்கள். அந்த விமர்சகன் சொல்வது உண்மையாக இருக்கலாம். அற்புதமான அழகு மாளிகை அவன் மனக்கண் முன் நிற்கிறது. ஆனால், அதைத் திறந்து மற்றவர்களுக்குக் காட்ட, சாவி அவனிடம் இல்லை!

அவனுக்கு எழுத வரவில்லை என்று யார் சொன்னார்கள்? அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவன் அவனுக்காகத்தான் எழுதுகிறான். அப்படியானால் பிரசுரமாக வேண்டுமென்று ஏன் இந்த அரிப்பு? எழுதி எழுதி எரித்துத் தன்னையே அழித்துக்கொண்டு அவன் எழுதுகிறான். தினம் ஒரு தற்கொலை! இலக்கியம் படைப்பதே ஒரு தற்கொலைதான்! படைத்து முடித்த பிறகு எஞ்சியிருப்பது என்ன? முடிந்துவிட்டதே என்ற வரையறுத்துச் சொல்ல முடியாத ஏக்கம்.

அப்போது அறைக் கதவைத் தட்டும் சத்தம் அவனுக்குத் துல்லியமாகக் கேட்டது. கனவு உலகத்தில் இருந்த அவனுக்கு அது ஆயிரம் மைல்களுக்கு அப் பால் இருந்து ஒலிப்பது போல் இருந்தது. ஓசை இப் போது பலமாகக் கேட்டது. ஆயிரம் மைல்கள் தூரம் குறைந்துகொண்டே வந்து, யதார்த்த உலகின் ‘நான்… நீ’ உறவை நிச்சயப்படுத்துவதாக, மிகவும் உரக்கக் கேட்டது.

கதவைத் திறந்தான். அவன் மனைவி கோகிலா நின்று இருந்தாள். அவள் பார்வை அறை ஓரத்தில் குவிந்திருந்த சாம்பலின் மீது விழுந்தது.

“என்ன அது?” கேட்டாள் கோகிலா.

“நான்!” என்றான் சண்முகம்.

“நானா?”

“ஆமாம், நான்தான் எரிஞ்சு சாம்பலாயிட்டேன்!”

அவள் அவனைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“நீங்க எழுதிட்டிருந்தீங்களே… அந்த நாவலா?”

அவளுக்குத் தெரிந்திருக்கிறது. சீண்டுவதற்கென்றே கேட்கிறாள். அவன் பதில் கூறவில்லை. ஒரு சிகரெட் டைப் பற்றவைத்துக்கொண்டான்.

மேஜையில் இருந்த ஒரு தாளில், அவள் நிதானமாகச் சென்று அந்தச் சாம்பலை ஒரு குவியலாக அள்ளிப்போட்டாள்.

“இனிமே நீங்க எழுதப் போறதில்லையா?” – அவள் கேட்டபோது குரலில் ஒரு நம்பிக்கை தொனிப்பது போல் அவனுக்குப் பட்டது.

“உனக்குச் சந்தோஷந்தானே?”

அவள் அந்தக் குவியலை மேஜையின் மீது வைத்துவிட்டு, அவன் அருகில் வந்தாள்.

“எனக்கென்ன சந்தோஷம்? உங்களுக்கே தெரியணும்! கல்யாணம் செய்துக்கிட்டீங்க; ரெண்டு பசங்களையும் பெத்துக்கிட்டீங்க. அவங்களும் உங்க படைப்புகள்தானே, அவங்க எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சீங் களா? ‘எங்க வீட்டுக்காரர் அற்புதமான கதாசிரியர்’னு சொன்னா, எந்த மளிகைக்கடைக்காரரு லட்சியம் பண்றாரு? ‘சரிதான்மா, ரெண்டு மாசமா பாக்கி வெச் சிருக்கீங்க, அதைக் குடுத்துட்டு இந்த மாச சாமான் வாங்கிக்கங்கங்கிறாரு. இப்ப குழம்புக்கு மசாலா பொடி இல்ல, வாங்கிட்டு வாங்க!” என்றாள்.

“மசாலா பொடி இல்லாம செய்!”

“உப்புச்சப்பில்லாம எனக்குக் குழம்பு செய்யத் தெரியாது. நீங்க உங்க கதையில மசாலா போடறதில்லை. அதான் ஒரு பப்ளிஷரும் உங்க கதையைப் போட மாட்டேங்கிறான். உங்க ஃப்ரெண்ட் சுகுமாரனைப் பாருங்க. வரிக்கு வரி மசாலா. அதான் அவர் எழுத்துக்கு அவ்வ ளவு டிமாண்ட்!”

“மை காட்! நீயும் ‘லிட்டரரி கிரிடிக்’ ஆயிட்டியா? நான் கதை எழுதறதையே விட்டுட வேண்டியதுதான்!”

“குட் நியூஸ்! பிழைக்க வழி பாருங்க. கல்யாணம் ஆன பத்து வருஷத்திலே ரெண்டு குழந்தைங்க, ஆறு உத்தியோகம். மூணு மாசமா வேலையும் இல்லே. யாரும் பப்ளிஷ் செய்யமாட்டேங்கிறான்னா எதுக் காக வெட்டியா எழுதணும்?”

‘நான் உனக்காகவோ, யாரோ என்னைப் படிக்கப் போறாங்கன்னோ எழுதலை. எனக்காக எழுதுறேன். இது சுய உருவ வேட்டை. என் அடையாளம்!” என்றான் சண்முகம் சிறிது உஷ்ணத்துடன்.

“இதோ இருக்கு உங்க அடையாளம்?” என்று சாம்பல் பொட்டலத்தைக் காட்டிவிட்டுச் சொன்னாள், “இது சமைக்க, அடுப்பு மூட்டக்கூட உதவாது. நம்ம வீட்ல அடுப்பு எரியிறதுக்குப் பதிலா கதை கதையா எரிஞ்சுக்கிட்டிருக்கு. பேசாம, நான் சொல்றதைக் கேளுங்க. அண்ணாசாலையில ஒரு கம்பெனியில ‘ஸ்டோர் கிளார்க்’ வேலை காலியா இருக்காம். சுந்தரம் மாமாவுக்குத் தெரிஞ்சவர்தான் மேனேஜராம். நீங்க அவரைப் போய்ப் பாருங்க. சுந்தரம் மாமா போன் பண்ணிச் சொல்றேன்னிருக்காரு!”

“ஸ்டோர் கிளார்க்கா?”

“என்ன நினைச்சுட்டிருக்கீங்க? பத்து வருஷத்திலே எட்டு உத்தியோகம் பார்த்தவங்களுக்கு வேற என்ன வேலை கிடைக்கும்? எத்தனை நாளைக்குத்தான் வேலை இல்லாம குப்பை கொட்ட முடியும்? இப்போ நீங்க போகலைன்னா, நான்தான் வேலைக் குப் போகணும். நீங்க கதை எழுதி எழுதி எரிச்சுட்டு இருங்க!” என்று சற்றுக் குரல் உயர்த்தினாள்.

“சரி… சரி… நான் போறேன். கத்தாதே!”

அவனுக்கு வேறு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதாவது பேசினால் இன்னும் பெரிய சண்டையாகிவிடும். அடுத்த நாள், குறித்த நேரத்தில் அண்ணா சாலையில் இருந்த அந்த அலுவலகத்துக்குச் சென்றான். ரிசப்ஷன் பெண் ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் இருந்தாள். தொலைபேசியில் உதட்டளவு ஆங்கிலத்தை நேர்த்தியாகப் பேசிக்கொண்டு இருந்தாள். இயந்திரகதியில் முகத்தில் தோன்றிய புன்னகையுடன், அவனை உட்காரும்படி சமிக்ஞை செய்தாள். முகத்துப் புன்னகை வந்த வேகத்தில் மறைந்தது. சிறிது நேரம் கழித்து, “முதல் மாடி. மூன்றாவது அறை. செக்ரெட்டரியைப் பாருங்கள். அவர் உங்களை அழைத்துக்கொண்டு போவார்!” என்றாள் ஜீன்ஸ்.

அலுவலகத்தின் துப்புரவு அவனை அச்சுறுத் தியது. அவன் மூன்றாவது அறைக்குச் சென்று அங்கு உட்கார்ந்திருந்த மற்றொரு இளம் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“ஓ யெஸ்! என்னுடன் வாருங்கள்!” அவன் அவளைத் தொடர்ந்தான்.

பெரிய அறை. பளபளப்பான மேஜை. மிஸ்டர் கல்யாணராமனுக்கு அவன் வயதுதான் இருக்கும். கழுத்தில் சங்கிலி மின்னுவது தெரிந்ததே தவிர, கழுத்து தெரியவில்லை. அவ்வளவு வளப்பமான சரீரம். அதற்கேற்ற உயரம். அவனை உட்காரும்படி கையமர்த்தினான் கல்யாணராமன். சண்முகம் உட்கார்ந்தான்.

“மிஸ்டர் மீனாட்சிசுந்தரம் உங்களுக்கு…” என்றான் அவன்.

“என் மனைவியின் மாமா!”

“உங்க சர்டிஃபிகேட்ஸ்லாம் அப்புறம் குடுங்க. நீங்க எம்.ஏ., லிட்டரேச்சர்னாரு மிஸ்டர் மீனாட்சிசுந்தரம்!”

“ஆமாம்.”

“புரொஃபஸரா போயிருக்கலாமே?” அவன் பதில் சொல்லவில்லை.

“இந்த வேலை பெரிய வேலையில்லை, உங்க குவாலிஃபிகேஷனுக்கு! அதுக்காகச் சொன்னேன்!” அவன் தொடர்ந்து பேசா மல் இருந்தான்.

“நீங்க ரைட்டர்னு சொன்னார் மிஸ்டர் சுந்தரம். எதிலே எழுதறீங்க?”

“எதுலயும் இல்லே!”

“அப்படின்னா?”

“நான் இங்கே ‘கிளார்க்’ வேலைக்கு வந்திருக்கேன். ‘ரைட்டரா’ இருக்கிறதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, அந்தக் காலத்துல ‘கிளார்க்’குக்கும் ‘ரைட்டர்’னுதான் பேரு. ஈஸ்ட் இண்டியா கம்பெனி காலத்துல… கல்கத்தாவில் இருக்கிற செக்ரட்டேரியட்டுக்கும் அதனால்தான், ‘ரைட்டர்ஸ் பில்டிங்’னு பேரு. அந்த அர்த்தத்துல சொல்றீங்களா?”

கல்யாணராமன் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.

“எனக்கும் கொஞ்சம் லிட்டரேச்சர்ல ஈடுபாடு உண்டு. அதனால கேட்டேன்” என்றான் கல்யாணம்.

“ரியலி? ஐயம் ஸாரி… நான் சீரியஸா எழுதறதனால இதுவரைக்கும் எதுவும் பப்ளிஷ் ஆகல. நான் தமிழ்ல எழுதறேன்.”

“ஐ ஸீ… நான் டமிள்லே அதிகம் படிச்சதில்லே. என் வொய்ஃப் டமிள் நிறையப் படிப்பா. உங்க ஸ்க்ரிப்ட்டைக் குடுத்தீங்கன்னா, அவ ஒருவேளை படிக்கலாம். எனக்கு டமிள் படிக்கணும்னுதான் ஆசை. எங்கே டைம் இருக்கு. நீங்க எந்த மாதிரி நாவல் எழுதுவீங்க?”

“ஆர்ட் நாவல்.”

“சிற்பங்களைப் பத்தியா? நாங்க ‘antique things’ எக்ஸ்போர்ட் செய்யறோம். உங்களுக்கு ‘ஆர்ட்’டைப் பத்திஎல்லாம் தெரியும்கிறது எங்களுக்கு ஒரு போனஸ்.”

“இல்லே. ஆர்ட் நாவல்ங்கிறது ஒரு வகை. ஒரு ரீமீஸீக்ஷீமீ. அதுக்கும் சிற்பங்களுக்கும் சம்பந்தமில்லை. ஹென்றி ஜேம்ஸ் படிச்சிருக்கீங்களா?”

“‘Who? படிச்சிருப்பேன். நீங்க எழுதின நாவலையெல்லாம் குடுங்க. படிச்சுப் பாக்கறேன். பை தி வே… இப்போ ஸ்டாக் டேக்கிங் செக்ஷன்ல உங்களுக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம்னு இருக்கேன். உங்க மாமா மிஸ்டர் சுந்தரம் ஒரு நல்ல மனுஷன். என் ‘இன்கம்டாக்ஸ்’ பிரச்னையெல்லாம் அவர்தான் பாத்துக்கிட்டிருக்காரு. வொண்டர்ஃபுல் மேன்! அவருக்காகத்தான் நான் புரொஸீஜர் ஒண்ணும் பாக்காம உங்களுக்கு வேலை போட்டுக் குடுக்கிறேன். புரிஞ்சுதா? நீங்க அடிக்கடி வேலையை விட்டுடறீங்கன்னு சுந்தரம் வருத்தப்பட்டுக் கிட்டாரு. இங்கேயே பொறுமையா வேலை செய்தீங் கன்னா, பிரமோஷன் கிடைக்கும்.”

“என்ன பிரமோஷன்?” என்றான் சண்முகம்.

“ஹெட் கிளார்க் ஆகலாம். ஆனா ஒண்ணு, ஆபீஸ்ல கதை எழுதக் கூடாது.”

“ஸ்டாக் டேக்கிங்னா என்ன?”

கல்யாணம் மணியை அழுத்தினான். ஒரு பணியாள் வந்தான். “இவரை ஜடாதரன்கிட்டே கூட்டிக்கிட்டுப் போ. மிஸ்டர் சண்முகம், ஜடாதரன் எல்லாத்தையும் உங்களுக்கு விளக்கமாச் சொல்வாரு. ஸ்டாக் டேக்கிங் வேலையில மூழ்கிட்டீங்கன்னா, அதிலேயே ஆழ்ந்துடுவீங்க. கதை எழுதறதெல் லாம் மறந்துடுவீங்க. இட் இஸ் எ குட் ரெமெடி ஃபர் சச் இல்னெஸ்!” என்று உரக்கச் சிரித்தான் கல்யாணம்.

சண்முகத்துக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. ஆனால்… ஆனால்… வீட்டில் அடுப்பு எரிந்தாக வேண்டும். கீழே, பேஸ்மென்ட்டில் ஜடாதரன் அலுவலகம் இருந்தது. பெயருக்குப் பொருத்தமான தலைமுடியும் ஒரு நீண்ட வெண் தாடியுமாக இருந்தார் ஜடாதரன். அவர் வயதை நிர்ணயித்துச் சொல்ல முடியாது போல் தோன்றிற்று. ஐம்பதும் இருக்கலாம், நூறும் இருக்க லாம்.

“என் பேரு சண்முகம். உங்க செக்ஷன்ல வேலைக்குச் சேரப் போறேன். மிஸ்டர் கல்யாணராமன் உங்ககிட்டே அனுப்பினார்” என்றான் சண்முகம்.

“முதல்ல ‘பாஸ்’னு சொல்லப் பழகிக்கோங்க” என்றார் ஜடாதரன்.

“ஐ யம் ஸாரி! பாஸ்!”

“ஸ்டாக் டேக்கிங் அவ்வளவு சுலபமான வேலை இல்லே. உங்களைவிட இன்னும் சின்னவனா இந்த வேலைக்கு வந்தேன். இன்னும் ஸ்டாக் டேக்கிங் எடுத்துண்டிருக்கேன்.

நான் போயிடுவேன். இப்போ நீங்க வந்திருக்கீங்க. உங்களுக்கப்புறம் இன்னொருத்தன் வருவான். ஸ்டாக் டேக்கிங் நடந்துண்டே இருக்கும்” என்று அவர் உரக்க வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். அவர் சிரிப்பு ஓயவே இல்லை.

சண்முகத்துக்கு அவரைப் பார்க்கப் பயமாக இருந் தது. அவனுக்கும் நீண்ட ஒரு வெண் தாடி வளர்ந்து விட்டாற்போல ஒரு பிரமை ஏற்பட்டது!

– ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *