“பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது.
பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல் பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு. ஒன்றுக்கு நாலுவீடு வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின் சம்பாத்தியம் முழுவதும் பையனுக்குத்தான்.
அவங்க வசதிகளைப் பார்க்கும்போது நாம எங்கேயோ தள்ளி நிற்கிறோம். அவ்வளவு சொத்தை கொடுக்கவில்லையானாலும், ஆண்டவன் உனக்கு அழகைக் கொடுத்திருக்கறதனால, அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சு போச்சு. நீ என்னம்மா சொல்றாய்…’மகள் ரதியிடம் ரேவதி ஆவலோடு கேட்டாள்.
“அவங்க தங்களைப் பற்றி பெருமையா பேசியதை அலசி, ஆராய்ந்து முடிவு பண்ணலாம்!’ சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினாள் ரதி.
“நீயே அதைச் செய்… நான் கேட்டுக்கறேன்…’என்றாள் ரேவதி.
“பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய கார் டயரை ஐயாயிரம் கிலோ மீட்டரிலேயே மாத்தி, புதுசு போடுவாங்க. கையில் நல்லா வருமானம் வரக்கூடிய பிஸினஸ் இருந்தாலும், சைடில் இன்னொன்று, ஒரே வீட்டில் இருந்தா போரடிச்சுரும்னு, வருடத்திற்கு ஒருமுறை வீடு மாத்துவாங்க.
சொந்தவீடு இருந்தாக்கூட, வாடகை வீட்டுக்கும் போவாங்க. எதிலும் அவுங்களுக்கு ஒன்றுக்கு மேல தேவைப்படுகிறது. பழசை அடிக்கடி மாற்றி, புதுசுக்குப் போற பழக்கமிருக்கிற குடும்பத்தில், என்னையும் ஒரு வருடத்தில் மாற்ற மாட்டாங்கங்கற உத்தரவாதம் அவுங்க பேச்சுல தெரிஞ்சா சொல்லுங்க… அப்புறம் முடிவு பண்ணலாம்.’
மகளின் அலசலைக் கேட்டு, பவர் கட்டிலும் ஷாக்காகி உட்கார்ந்தாள் ரேவதி.
– ஜனவரி 2013