“வேணு சாலை விபத்தில் இறந்து விட்டார். இன்று மாலை தகனம். உடனே கிளம்பவும் – சந்துரு.”
காலை பத்தரை மணிக்கு அலுவலகத்தில் இந்த டெலிகிராம் என் கையில் கிடைத்தது. உடனே பதட்டமடைந்தாலும் சிறிது நிதானித்துக் கொண்டேன்.
வேணு, என் மனைவி சரஸ்வதியின் மூத்த அண்ணன். அவளுக்கும் கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது பெரிய துக்கம். இந்த நிலையில், வேணுவின் இழப்பை அவள் நிச்சயம் தாங்க மாட்டாள். எனவே வேணுவின் இறப்பை அவளிடமிருந்து தற்சமயத்துக்கு மறைக்க எண்ணி, டெலிகிராமை என் பான்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன்.
எம்.டி.யிடம் சொல்லிவிட்டு எனக்களிக்கப்பட்ட அலுவலக காரில் டிரைவருடன் கிளம்பி வீட்டையடைந்தேன்.
கதவைத் திறந்த என் மனைவி என்னை அதிசயமாகப் பார்க்க, “சரஸ்வதி, உன்னோட அண்ணா வேணுக்கு ரொம்ப சீரியஸா இருக்காம்… நீ உடனே கிளம்பு, நாம் மருதூர் போகணும்” என்று துரிதப்படுத்தினேன்.
“என்னங்க என்ன ஆச்சு என் அண்ணாவுக்கு, உங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்?” பதட்டமானாள்.
“சந்துரு பத்தரை மணிக்கு டெலிபோன் பண்ணினான். விஷயத்தைச் சொல்லி உடனே கிளம்பி வரச் சொன்னான்.”
சரஸ்வதியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. பூஜையறையின் முன் நின்று, “தேவி, அகிலாண்டேஸ்வரி என் அன்ணாவைக் காப்பாத்து…” என இறைஞ்சினாள்.
என்னிடம் திரும்பி, “என்னங்க, பரத்துக்கு சொல்லியனுப்பினா அவனும் நம்மகூட வருவானே” என்றாள்.
“எல்லாம் எனக்குத் தெரியும்… அவனப் பத்தி இப்ப என்ன பேச்சு?…என்னிக்கு அந்த கிறிஸ்துவச்சிய அவன் கல்யாணம் பண்ணிக் கொண்டானோ, அன்னிலேர்ந்து அவன் நம்முடைய மகன் கிடையாது…நீ சீக்கிரம் கிளம்பு.”
வெடித்தேன்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தோம். கார் மருதூரை நோக்கி விரைந்தது.
எங்களுடைய ஒரே மகன் பரத்வாஜ். வயது இருபத்து நான்கு. பெங்களூரிலேயே ஒரு நல்ல கம்பெனியில் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட். கை நிறைய சம்பளம்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தன்னுடன் வேலை செய்யும் நான்ஸியை தான் மிகவும் விரும்புவதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறும் என்னிடம் கேட்டான்.
நான் வெகுண்டேன். அனுமதி மறுத்தேன். என்னை மீறி இத்திருமணம் நடந்தால், என் ஒரே மகன் இறந்து விட்டதாய் எண்ணி தலை முழுகி விடுவதாகவும் எச்சா¢த்தேன்.
அடுத்த மூன்று மாதங்கள் அமைதியாக அலுவலகம் சென்று வந்தான்.
நான்ஸியை அவன் மறந்து விட்டதாக நான் நம்பினேன்.
ஆனால், சென்ற மாதம் தன்னுடைய பெட்ரூமில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி வைத்துவிட்டு நான்ஸியைத் திருமணம் செய்துகொண்டு எங்களைப் பிரிந்து அவளுடன் குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டான்.
என் மனைவிதான் மிகவும் துடித்துப் போனாள். “அவர்களை அழைத்து, ஆசீர்வதித்து நம்முடன் சேர்ந்து இருக்கச் சொல்லுங்கள்..” என்று கெஞ்சினாள்.
“பெற்று, வளர்த்து, பாசம் காட்டி ஆளாக்கின பெற்றோர்களைவிட, அலுவலகத்தில் அறிமுகமான ஒரு பொட்டச்சியிடம் கிடைக்கும் சுகம் பெரிசாப் போச்சுடி உன் பிள்ளைக்கு” என்று கோபமாய் நான் இரைய, அடங்கிப் போனாள் சரஸ்வதி.
என்னைப் பொறுத்த வரையில் என் மகன் இறந்து போய் ஒரு மாதமாகிறது.
கார் சேலம் தாண்டி நாமக்கல்லை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
சரஸ்வதி வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு வந்தாள்.
“என் தெய்வம் என்னிக்கும் என்னை கைவிடாது. வேணு கண்டிப்பாக பொழச்சுடுவான்..” என்னைப் பார்த்து கலக்கத்துடன் சொன்னாள்.
பான்ட் பாக்கெட்டில் இருந்த டெலிகிராமை தடவிப் பார்த்தேன். மனதை உறுத்தியது.
‘டெலிகிராம் வந்த உண்மையை இப்போது சொன்னால், இவள் என்ன செய்வாள்’ என நினைத்துப் பார்த்து ஒரு கணம் பயந்தேன். வழியில் காரை நிறுத்தி இளநீர் குடிக்கச் சொன்னேன். மறுத்து விட்டாள். நானும் டிரைவரும் மட்டும் குடித்தோம்.
நாங்கள் மருதூரை அடையும்போது மாலை மணி ஐந்து.
காரை விட்டு சரஸ்வதி அவசர அவசரமாக இறங்கும்போதே அவளுடைய இரண்டாவது அண்ணன் ஜம்புநாதன், “வேணு நம்மை விட்டுப் போயிட்டாண்டி” என்று கதறியபடி எதிர்கொள்ள, இவளும் பெருங்க்குரலெடுத்து ‘ஓ’ வென அழ, அங்கிருந்த இன்ன பிற உறவினர்களும், இவளுடன் துக்கத்தினால் வெடிக்க – அந்த இறுக்கமான சூழ்நிலையில் நானும் கலங்கிப்போய் ஈஸிசேரில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த என் வயதான மாமனாரிடம் போய் நின்றேன்.
“இந்தப் பாவிய கொண்டு போயிருக்கக் கூடாதா மாப்ள. தள்ளாத வயசுல நான் எதுக்கு இன்னும் உயிரோட இருக்கணும்…என்னைக் கொண்டு போயிட்டு, வேணுவ உயிரோட விட்டு வச்சிருக்கக்கூடாதா, கடவுளுக்கு கண்ணில்ல மாப்ள…’ என்று துக்கத்தினால் அரற்றியபடி தலையிலடித்துக் கொண்டார்.
மா¢யாதை நிமித்தம் அவரின் நடுங்கும் கைகளைப் பற்றிக்கொண்டு அவரருகில் தரையில் அமர்ந்தேன்.
“பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, பெரியவனாய் வளர்ந்து…வேணுவின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து, அனுபவித்து வளர்த்தவன் நான், புத்திரசோகம் மட்டும் எவனுக்குமே வரக்கூடாது…ஏன்னா, சோகத்திலேயே பெரிய சோகம் புத்திரசோகம். மற்ற உறவுகள் அப்படியில்ல மாப்ள… மனைவி பாதியில் வந்தவள், சகோதர உறவுகள் பாதியில் பிரிகிறவர்கள், ஆனால் மகன் அப்படியல்ல. நம் ரத்தம், உணர்வு, பிரதிபலிப்பு, வாரிசு எல்லாம் அவன்தான். அதனாலதான் புத்திர சோகம் கொடுமையானது, வேதனையானது…இந்த எண்பத்திநாலு வயசுல எனக்கு இது தேவையா?” என்று அழுகையினூடே பெரிதாகப் புலம்பினார்.
வயதான ஒரு பெரிய் மனிதர் அழுது அன்றுதான் நான் பார்த்தேன். மிகவும் கலங்கிப் போனேன்.
மறு நாள் கலை அழுதழுது முகம் வீங்கியிருந்த சரஸ்வதியிடம், நான் பெங்களூர் கிளம்பிச் செல்வதாயும், பத்தாவது நாள் திரும்ப உத்தேசித்துள்ளதாகவும், விரும்பினால் அவளும் என்னுடன் வரலாம் என்றும் சொன்னேன்.
“நீங்க எப்படியும் போங்க, எங்க அண்ணாவைவிட இளநீர் உங்களுக்குப் பெரிசாப் போச்சு… அதுக்கு வண்டிய நிறுத்திய நேரத்துல இங்க வந்திருந்தா, வேணுவின் முகத்தை நான் கடைசியாப் பார்த்திருப்பேன்” என்று வெடித்தாள்.
மனம் நொந்த நிலையில் அவள் கொட்டிய வார்த்தைகளுக்குப் பதிலேதும் சொல்லாது, சம்பிரதாயப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாது மருதூரை விட்டுக் காரில் தனியாக டிரைவருடன் பெங்களூர் கிளம்பினேன்.
என் மனசு மிகவும் சங்கடப் பட்டது. வேணு எவ்வளவு நல்லவன். எதற்கும் கோபப்படாமல் அமைதியாக அதிர்ந்து பேசாது, இன்முகத்துடன்.. ச்சே! இறப்பு என்கிற நிரந்தர உண்மைக்கு முன்னால் எல்லாமே பொய்தான்.
இரவு ஏழு மணிக்கு பெங்களூரை அடைந்தேன். வீடு வெறிச்சென்று போட்டது போட்டபடி கிடந்தது.
மகன் பரத்வாஜ் •போட்டோவிலிருந்து என்னைப் பார்த்து சிரித்தான். ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்தேன்.
மேஜையின் இழுப்பறைகளைத் திறந்து, அவன் எங்களுக்கு கடைசியாக விட்டுச் சென்ற கடிதத்தை தேடி எடுத்துப் படித்தேன்.
” என் அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு –
இக் கடிதத்தை தாங்கள் படிக்கும் தருணத்தில், எனக்கும் நான்ஸிக்கும் திருமணம் முடிந்திருக்கும்.
உங்களுடைய ஒப்புதலுடன், ஆசீர்வாதங்களுடன் இத்திருமணம் நடக்கும் என மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தேன்.
நான்ஸி நலல குடும்பத்துப் பெண். அவள் கிறிஸ்டியனாகவும், நான் இந்துவாகவும் பிறந்தது எங்கள் தவறல்ல. பரஸ்பர அன்பும், புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் எங்களுடைய பலம். கேவலம் அவள் வேறு ஜாதி என்கிற ஒரே அற்ப காரணம் எங்களுடைய இந்த பலத்தை பலவீனப்படுத்திவிட முடியாது.
சந்தோஷமான சாம்ராஜ்யம் எங்களுடையது. ஒரு நேர்மையான ஆரோக்கியமுள்ள வாழ்க்கையை நாங்கள் நல்லபடியாக நடத்திச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எங்களிடம் ஏராளமாக இருக்கிறது.
ஒரே ஒரு •போன் பண்ணினால் நாங்கள் ஓடோடி வந்து உங்கள் காலில் விழுந்து நமஸ்கா¢க்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்.
இப்படிக்கு,
பரத்வாஜ்.
ஒரி மாதத்துக்கு முன் கோபத்தில் படித்து அலட்சியப்படுத்தப்பட்ட கடிதம், இன்று தனிமையில் அமைதியாகப் படிக்கப்பட்டபோது அர்த்தமுள்ளதாகப் பட்டது.
ஏனோ, என் மாமனார் புத்திர சோகம் பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது.
வேணுவின் இறப்பு, என் மாமனாருக்கு நிரந்தரப் பிரிவு, ஈடு செய்ய முடியாதது.
பரத்வாஜின் பிரிவு என் அகம்பாவத்தினாலும், வீம்பினாலும் ஏற்பட்டது. தற்காலிகமானது. எனக்குத் தேவையானது புத்திர சுகம், சோகமல்ல. என் மகனை நான் இழக்கவோ, பிரியவோ தயாரில்லை.
ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தூங்கிப் போனேன்.
மறுநாள், அலுவலகத்திலிருந்து பரத்வாஜைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாலை வீட்டிற்கு வரச் சொன்னேன்.
வந்தான் அவன். கட்டித் தழுவினேன்.
தன் மாமா வேணுவின் இறப்பை எண்ணி வருந்தினான். பத்துக்கு தானும் கூட வருவதாகச் சொன்னான்.
“தனியாக வராதே, நான்ஸியை அழைத்து வா, நாம் அனைவரும் ஒன்றாக மருதூருக்குக் காரில் சென்று திரும்பி வரும்போது அம்மாவையும் அழைத்துக்கொண்டு வரலாம். துக்கத்திலும் அவளுக்கு இது சந்தோஷமான அதிர்ச்சியாக இருக்கும்” என்றேன்.
– சாவி (23-5-1990)