இரவு பத்து மணி. கட்டிலுக்கு வந்த மகேசுக்குள் மகிழ்ச்சித் துள்ளல். காரணம் இன்றைக்குத் தாம்பத்திய நாள்.
கணவன் மனைவி மாதச் சம்பளக்காரர்கள், அலுவலக உழைப்பாளிகள் என்றாலே தாம்பத்தியத்தில்கூட கட்டுப்பாடு என்பது காலத்தின் கோலம்.
என்னதான் ஆண் பெண்ணுக்கு உதவி ஒத்தாசை அனுசரணையாக இருந்தாலும் காலை…சமையல் சாப்பாடு என்று எட்டுமணிவரை எதையும் சிந்திக்க முடியாத வேலை. அடுத்து குளித்து முடித்து அள்ளிச் சொருகி அவசர அவசரமாய் விழுங்கி பேருந்து பிடித்து அலுவலகம் சேரல். அங்கே வேலை. அற்புறம் மாலை பேருந்தில் கசங்கி வீட்டில் வந்து வேலை அடுத்து கணவன் மனைவி என்பது தினம் நடைமுறைப் படுத்த முடியாத விசயம். ஏன் இருவருக்கும் உடலும் மனமுமே ஒத்துழைக்க முடியாத காரியம். அதனால் விடுமுறை கொண்டாட்டமான ஞாயிற்றுக் கிழமையில் இதையும் கொண்டாட வேண்டிய கட்டாயம்.
காலை துணிமணி துவைத்தல், மதியம் சைவமோ அசைவமோ சூடான சாப்பாடு. மாலை….பூங்கா, கடற்கரை, சினிமா, இரவு ஓட்டல் இறுதியாய் தாம்பத்தியம் என்பதுதான் இவர்கள் அட்டவணை.
அதனால் மகேசுக்கு ஞாயிறு விடிந்தாலே இனிப்பு. இரவு வந்தால் துடிப்பு.
வீட்டு வேலை முடித்து வந்து படுத்த மனைவியை மெல்ல தொட்டான்.
”வேணாங்க….” சித்ரா மெல்ல அவன் கையை விலக்கினாள்.
”ஏன் ?” திடுக்கிட்டான்.
”இன்னைக்குப் பக்கத்துத் தெருவுல அகால மரணம் சாவுக்குப் போய் வந்தது மனசுலேயே இருக்கு. மனசு சரி இல்லே, ஒத்துழைக்கலே.!” மென்iமையாச் சொன்னாள்.
மனைவியின் மனசு புரிய…மகேசுக்குள்ளும் கனம் ஏறி களிப்பு குறைய நகர்ந்து படுத்தான்.