காய்க்காத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 7,732 
 

அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 | அத்தியாயம் 9

குறிப்பு:

இந்த பகுதியில் சில விஷயங்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டி இருக்கிறது. அதனால் சில தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கவும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கதை தொடர்ச்சி:

என் அப்பா சாதி பார்க்காம பழகுற நல்ல மனுஷன். ஒடுக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா நடக்க போய் சொந்த சாதிலயே எங்கள ஒதுக்கி வெச்சிட்டாங்க. ஆனாலும் என் அப்பா தன்னோட நிலையில இருந்து பின் வாங்கினதே இல்ல. என்னோட 8 வயசுலயே ஊர விட்டு வெளிய இருக்க எங்க விவசாய நிலத்த ஒட்டி வீடு கட்டி குடியேறிட்டோம். என் அப்பா உயிரோட இருக்க வரை ஒதுக்கப்படுறது எவ்வளவு கொடுமையானதுனு எனக்கு தெரியாது. அந்த சின்னஞ்சிறு உலகமே எனக்கு பிரபஞ்சமா இருந்தது. ஆனா என் அப்பாவோட மரணத்துக்கு அப்புறம் வாழ்க்கையில கஷ்டத்த மட்டும் தான் பார்த்தோம். 10 பேர் கூட இல்லாம என் அப்பாவோட இறுதி ஊர்வலம் நடந்தது. என் அப்பாவோட சாவுக்கு கூட வராதவங்க போதைல ராத்திரி நேரத்துல சொந்தம்னு சொல்லிகிட்டு எங்க வீட்டு கதவ தட்டி எங்க அம்மாவ கூப்பிடுவாங்க.

“நம்ம இந்த ஊர விட்டு வேற ஊருக்கு போய்டலாம்மா”

“எங்க போனாலும் தனியா இருக்க பொம்பளைங்களுக்கு இந்த பிரச்சினை இருந்துகிட்டே தான் இருக்கும்டா. இங்கயாவது எல்லாம் தெரிஞ்ச ஆளுங்கள இருக்கப் போய் ராத்திரில மட்டும் தான் தொந்தரவு பண்றானுங்க. இதுவே தெரியாத ஊர்னா நேரம் காலம் பார்க்காம தொந்தரவு பண்ணுவானுங்க”

“ஏன்மா இப்படி எல்லாம் பண்றாங்க?”

“தான் வீட்டு பொம்பளைங்க மட்டும் பத்தினியா இருந்தா போதும்’ன்ற நினைப்புடா அவங்களுக்கு”

அப்ப எனக்கு 12 வயசு தான். அம்மா சொன்னதுக்கு என்ன அர்த்தம்’னு கூட எனக்கு தெரியாது. வயசுக்கு வந்த அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது. சாதி வெறிக்கும் சதை வெறிக்கும் நடுவுல போராடி என் அம்மா என்னை ஆளாக்கினாங்க. நானும் நல்லா படிச்சு காலேஜ் வரைக்கும் போனேன். காலேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எந்த ஊர் எந்த சாதி பணக்காரன் ஏழை இதெல்லாம் அங்க உள்ள நட்புல இல்ல. ஆனாலும் ஆம்பிளைங்க மேல உண்டான பயம் மட்டும் போகல. காலேஜ் போற வரை ராஜேஷ பெரிய வீட்டு பையனா தான் தெரியும். ரொம்ப பழக்கம் இல்ல. காலேஜ்ல ராஜேஷ் பழகின விதம் எனக்குள்ள இருந்த பயத்த குறைக்க ஆரம்பிச்சது. கொஞ்ச நாள்ல அது காதலாச்சு. காதலிக்கும் போதும் கூட ராஜேஷ என்னை நெருங்க விட்டதில்ல. UG முடிச்சிட்டு ராஜேஷ் PG படிக்க டெல்லி போய்ட்டான். நான் மேற்கொண்டு படிக்க பணம் இல்லாம வேலை தேட ஆரம்பிச்சேன். திருச்சில வேலை கிடைச்சது. லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்த்துட்டு இருந்தேன். வீக் எண்ட்ல ஊருக்கு வருவேன். அப்படி ஊருக்கு வந்து இருந்தப்ப ஒருநாள் ராத்திரி நேரத்துல ராஜேஷ் அப்பா அவர் கிட்ட வேலை செய்ற அடியாட்கள் சில பேர கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்தார். நாங்க காதலிக்குறது அவருக்கு தெரிஞ்சிடுச்சுனு சொல்லி என் அம்மாவ அடிக்க ஆரம்பிச்சாங்க. என் அம்மாவ கேவலமா திட்டுனாங்க. என் அம்மாவ விட்டுட சொல்லி நான் கதறினேன். அப்ப யாரோ தலைல அடிச்சாங்க. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அப்புறமா நான் கண் முழிக்கும் போது அம்மா மட்டும் தான் இருந்தாங்க. என்ன நடந்துச்சுனு சொல்லாம துணிகள் எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்தாங்க.

“எதுக்குமா துணி எல்லாம் எடுத்துட்டு இருக்க?”

“இந்த ஊர விட்டு போகப் போறோம்”

“மிரட்டுனாங்களாம்மா. இரு நான் ராஜேஷ்க்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்றேன். ராஜேஷ் ஒண்ணும் அவன் அப்பா மாதிரி தப்பானவன் இல்ல”

அம்மா கோபமா என் கையில இருந்து ஃபோன பிடுங்கி எறிஞ்சிட்டு

“தோ பாருடி அவன் நல்லவனோ கெட்டவனோ உன் மேல பிரியம் இருந்தா அவனா உன்னை தேடி வரட்டும். நீயா அவனத் தேடிப் போகக் கூடாது. புரியுதா”

அம்மா அவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததே இல்ல. அங்க இருந்து திருச்சி வந்தோம். அங்க இருந்தபடி தெரிஞ்சவங்க மூலமா ஊர்ல இருந்த எங்க வீட்டையும் நிலத்தையும் வித்தாங்க. வந்த பணத்துல எனக்கே தெரியாம சேலத்துல இப்ப நாங்க இருக்க வீட்ட விலைக்கு வாங்கினாங்க. ஒருநாள்

“நீ வேலைய விட்டு நின்னுடு”

“ஏன்மா?”

“வேற ஊருக்கு போகப் போறோம்”

“எந்த ஊருக்கு? அப்படியே போனாலும் வேலைய விட்டுட்டு ஏன் போகணும்?”

“இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காத. வேலைய விட்டுட்டு வா”

“என்னதான்மா பிரச்சினை உனக்கு? ராஜேஷ் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னா. இப்ப வேலைய வேற ரிசைன் பண்ண சொல்ற. அன்னைக்கு அப்படி என்னதான் நடந்தது?”

“உன் பழைய சிம் கார்டு ஃபோன் எல்லாத்தயும் தூக்கி போடு. போற இடத்துல புதுசு வாங்கிக்கலாம். இனிமே உன்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட வேலை செய்றவங்கனு இருக்க எல்லாத்தையும் மறந்துடு. பழைய வாழ்க்கையோட அடையாளம்’னு எதுவுமே இருக்கக் கூடாது”

என் தலையில் இடி இறங்கியது போல இருந்தது.

“பழைய வாழ்க்கை’னா ராஜேஷ்?”

“அவனையும் சேர்த்து தான் சொல்றேன். உன் அம்மா நான் உனக்கு வேணும்னா சொல்றத செய். இல்லனா உன் இஷ்டம் போடி”

வேற வழியில்லாம அம்மா சொன்னத கேட்டு அவங்க கூட போனேன். சேலத்துக்கு வந்தோம். இங்கயே ஒரு சின்ன வேலைய தேடிக்கிட்டேன். நான் கொஞ்ச நாள் அம்மா கிட்ட சரியா பேசக் கூட இல்ல. அம்மா அதனால சாப்பாடு தூக்கம் மருத்துவம்’னு எதுலயும் கவனம் செலுத்தாம இருந்து இருக்காங்க. கடைசில அது அவங்கள உயிராபத்துக்கு கொண்டு போய்டுச்சு. சாகப் போறோம்’ன்ற பயம் வந்ததுக்கு அப்புறம் தான் என்ன நடந்ததுனு என்கிட்ட சொன்னாங்க. அன்னைக்கு நான் மயங்கி கிடந்தப்ப என்னை ட்ரெஸ்… இல்லாம… வீடியோ…. அத்தனை பேர் முன்னாடி நான் ச்சே. என் அம்மா எவ்வளவு போராடியும் அவங்க கேட்கல.

மாணிக்கம்:

“நான் நினைச்சா உங்க 2 பேரையும் சத்தமில்லாம மண்ணுக்குள்ள அனுப்பி இருக்க முடியும். இல்ல இந்த பசங்க கிட்ட கண்ண காட்டுனா உன் பொண்ண நாசம் பண்ணி கொன்னுட்டு இருப்பாங்க. ஆனா நீங்க சாகுறதுல எனக்கு உடன்பாடில்லை. கொன்னா உங்கள பார்த்து நான் பயந்த மாதிரி ஆயிடாது. நான் சொல்றத தான் இந்த ஊரே கேட்குது. நான் நினைக்கிறது தான் இங்க நடந்துட்டு இருக்கு. ஆனா என் வீட்டுலயே நான் நினைக்குறது நடக்கலன்னா ஊர்ல நடக்குமா. எல்லாத்துக்கும் மேல இராத்திரில எவன் எவனோ உன் வீட்டு கதவ தட்டுவானுங்களாமே. எனக்கு தெரியும் நீ நல்ல பொம்பள தான். கதவ திறந்து இருக்க மாட்ட தான். ஆனா வந்தவனுங்க சும்மா இல்லயே. கையால தொட விடலன்னு வார்த்தையால தொட்டதா ஊர் பூரா பரப்பிட்டானுங்க. பொய்யா இருந்தாலும் அசிங்கம் அசிங்கம் தான. நம்ம தகுதி என்ன நமக்கு வெளி உலகத்துல கிடைக்குற மரியாதை என்ன நமக்கு இவ்ளோ பெரிய ஆசை வரலாமான்ற அறிவு வேணாம் உன் பொண்ணுக்கு. ம்ஹ்ம்ம் அறிவு கூட இருந்து இருக்கும். ஆனா பயம் விட்டு போய்டுச்சு. அதான் எல்லாத்துக்கும் காரணம். அந்த பயத்த வர வைக்கத்தான் இப்படி செஞ்சேன். இப்ப உங்களுக்கு என்னென்ன வழி இருக்கு. ஒண்ணு வாழப் பிடிக்காம எதுவும் செய்ய முடியாம கோழைத்தனமா எனக்கு பயந்து நீங்களே உங்க வாழ்க்கைய முடிச்சிக்கணும். இல்ல வாழ்க்கை பூரா எப்ப மானம் போகும்னு தெரியாம எனக்கு பயந்து பயந்தே சாகணும். இனி உன் பொண்ணு என் பையன் பக்கம் திரும்புனதா கேள்விப்பட்டேனு வை இங்க இருக்கவங்க மட்டும் பார்த்தத நாளைக்கு ஊரே பார்ப்பாங்க. கவலைப்படாத இந்த பசங்களும் இங்க நடந்தத வெளிய சொல்ல மாட்டாங்க நான் சொல்லாம. அதனால பொத்திக்கிட்டு கம்முனு இருக்கணும். புரியுதா”

அதனால் தான் என் அம்மா என்னை பழைய வாழ்க்கையில இருந்து ஒளிச்சு வைக்க இதெல்லாம் பண்ணி இருக்காங்க.

“இனிமே எதுக்கும்மா வாழணும்?”

“அப்ப அவன் சொன்னத செய்ய போறியா?”

“என்ன?”

“அவன் சொன்னான் நம்ம செத்தா அவனுக்கு பயந்த கோழையா சாகணும். இல்ல எப்ப மானம் போகும்னு தெரியாம அவனுக்கு பயந்து பயந்து தான் வாழணும்னு”

“நம்மளால வேற என்னம்மா பண்ண முடியும்?”

“தெரில. ஆனா சாவு நமக்கு நடந்த எதையும் மாத்தாது. சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் காத்திரு. எல்லா நேரமும் அவங்க நேரமா இருக்காது. உன் நேரம் வரும் போது அவனுக்கும் அந்த வலிய குடு. அதுவரைக்கும் உயிரோட இரு”

என் அம்மா என் கிட்ட சொன்ன கடைசி வார்த்தைகள் அதுதான். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்லயே அம்மாவும் என்னை விட்டு போய்ட்டாங்க. அவங்க சொன்ன மாதிரி செய்யணும்னு முடிவு பண்ணேன். ஆனா எப்படின்னு புரியாம இருந்தேன். ஒரு ஒன்பது மாசம் முன்னாடி தான் லாவண்யா அக்கா என் பக்கத்து வீட்டுக்கு குடி வந்தாங்க. கொஞ்ச நாள்லயே உரிமையா பேசுற அளவுக்கு நல்ல ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க. அவங்க எப்பவாவது ராத்திரி மொட்டை மாடியில உட்கார்ந்து தண்ணி அடிப்பாங்க. அப்பலாம் பேச்சு துணைக்கு கூப்பிடுவாங்க. அப்படி ஒருநாள் பேசும் போது தான் அவங்க கடந்த காலத்த பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்

“நந்தினி ஏன் நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. ஆம்பிளைங்கள பிடிக்கலையா இல்ல கல்யாணமே பிடிக்கலையா?”

“நீங்க கூடாதாங்கா இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. அப்ப உங்களுக்கும் ஆம்பிளைங்கள பிடிக்காதா?”

“ம்ம்ம். பருவ வயசுல எனக்கும் ஆம்பிளைங்கள புடிக்க தான் செஞ்சது. அந்த குறுகுறுப்புல ஒருத்தன் மேல காதல் வந்து அவன நம்பி வீட்ட விட்டு ஓடிப் போனேன். ஆனா அவன் ஒரு பலான இடத்துல பெரிய அமௌண்ட்டுக்கு என்னை வித்துட்டு போய்ட்டான். எனக்கு அவன் எதிர்காலமா தெரிஞ்சான். ஆனா அவனுக்கு நான் அழகான விற்பனை பொருளா தெரிஞ்சு இருக்கேன் போல. அங்க சிக்கி சீரழிஞ்சு எப்படியோ தப்பிச்சு மறுபடியும் வீட்டுக்கு வந்தா உன்னை வீட்டுல சேர்த்துகிட்டா எனக்கு இருக்க இன்னொரு பொண்ணோட வாழ்க்கை கெட்டு போகும் வெளில போடினு அப்பா சொன்னாரு. மொதல்ல சாகணும்னு தான் தோணுச்சு. ஆனா என்னை சீரழிச்சவன அப்படியே விட்டுட்டு சாக எனக்கு விருப்பம் இல்ல. Moreover இந்த தேவுடியா பசங்க யாரு நம்ம வாழ்றதையும் சாகுறதையும் முடிவு பண்றதுன்னு தோணுச்சு. அதனால சாகல. ஆனா அவனத் தேடிப் பிடிக்கவும் பழிதீர்க்கவும் வாழ்ந்து ஆகணும்ல. அதுக்கு சின்ன சின்னதா பண மோசடிகள் செய்ய ஆரம்பிச்சேன். மெல்ல மெல்ல ஒரு டீமே ஃபார்ம் பண்ணிட்டேன்”

“நீங்க பண மோசடிலாம் பண்ணுவீங்களா?”

“கவலைப்படாத. என்னால உனக்கு எதுவும் பிரச்சினை வராது. நாங்க கை வைக்கிறது எல்லாம் ப்ளாக் மணி தான். Moreover உன்ன பார்க்கும் போது என் தங்கச்சி ஞாபகம் வருது”

“உங்கள ஏமாத்துன ஆள கண்டுபிடிச்சீங்களா?”

“ஹ்ம்ம். ஒருநாள் அந்த பாட கண்டுபிடிச்சு தூக்கினேன். அவன அவனா இல்லாம பண்ணேன்”

“ஐய்யய்யோ, கொன்னுட்டீங்களா?”

“ச்சே ச்சே. சாவெல்லாம் ஒரு வலியா. அவனால எத்தனையோ ஆம்பிளைங்க என்னை கடிச்சு குதறி இருக்காங்க. அவனுக்கு என்னோட வலிய தர முடிவு பண்ணேன். அவன் நல்லா கலரா கொழு கொழுனு இருப்பான். ஒரு ஆபரேஷன பண்ணி விட்டு அவன் என்னை வித்த மாதிரி நான் அவன வித்துட்டேன். பொம்பளையா மாத்தின அப்புறம் தான் செம அழகா இருந்தான் தெரியுமா. ஹாஹாஹா. எனக்கு நடந்த கொடுமை எல்லாம் இப்ப அவனுக்கு நடந்துக்கிட்டு இருக்கும்”

“நீங்க சொன்னத தான் என் அம்மாவும் சொன்னாங்க”

“அப்படியா என்ன சொன்னாங்க?”

“அது வந்து….”

“சும்மா சொல்லு. இங்க நம்ம 2 பேர் மட்டும் தான இருக்கோம். சொல்ல முடியாத அளவுக்கு பெரிய தப்பு பண்ணி இருந்தா சொல்லாத”

“நான் எந்த தப்பும் பண்ணலக்கா”

எனக்கு நடந்த எல்லாத்தையும் சொன்னேன்.

“சதைல மானத்தை வெச்சு அதையே பெண்கள அடிமையாக்க ஆயுதமா பயன்படுத்துற சமுதாயத்துல வேற என்ன எதிர்பார்க்க முடியும். உன் அம்மா சொன்னது தான் கரைக்ட். ஆனா அவங்க சொன்னதுல ஒரு விஷயம் தப்பா சொல்லிட்டாங்க. நீ ராஜேஷ ஃபாலோ பண்ணி இருக்கணும். அவனோட லைஃப் அப்டேட்ஸ் தெரிஞ்சு வெச்சு இருக்கணும். ஏன்னா அவன் தான் உன்னோட ட்ரம்ப் கார்ட்”

“ராஜேஷ் கிட்ட எனக்கு நடந்தத எல்லாம் சொல்லி இருக்கணுமாக்கா?”

“ம்ஹூம். நல்லவனா இருந்தாலும் அவன் மாணிக்கத்தோட புள்ள. அவனால ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா நீ தேடுற சந்தர்ப்பம் அவன் மூலமா கிடைச்சு இருக்கலாம். ஏன்னா அவன் தான் மாணிக்கத்தோட மானம் அவமானம் எல்லாம். சரி இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல. சோசியல் மீடியால தேடுனா கொஞ்ச நேரத்துல கண்டுபிடிச்சுடலாம்”

ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தாங்க. அதுல ராஜேஷ் ப்ரொஃபைல கண்டுபிடிச்சோம்

“இதோ இவன் தான்கா ராஜேஷ்”

“அடப்பாவிகளா ஓரே ஊர்ல இருந்துமா ஒருத்தர ஒருத்தர் பார்க்காம இருந்து இருக்கீங்க”

“தெரியலக்கா. இப்பவரை நான் பார்த்தது இல்ல”

“சரி விடு. இனிமே நடக்குறத பார்ப்போம். எதேச்சையா நடக்குற மாதிரி அவன் கூட ஒரு மீட்டிங் அரேன்ஞ் பண்ணனும். அதுக்கு முன்னாடி அவனோட டெய்லி ஆக்டிவீட்டீஸ் தெரிஞ்சிக்கணும். எல்லாத்துக்கும் மேல பயந்து நடுங்குற நந்தினியால எதையும் சாதிக்க முடியாது. அதே மாதிரி அடுத்தவங்க பாதிக்கப்படுவாங்க நீதி நேர்மை நியாயம்னு சொல்லிட்டு திரிஞ்சா ஒரு அணியும் புடுங்க முடியாது. எந்த தப்பையும் குற்ற உணர்ச்சி இல்லாம செய்யணும். அப்ப தான் நீ நினைச்சத சாதிக்க முடியும்”

உளவு பார்க்க ஆட்கள ஏற்பாடு பண்ணி ரேவதி ராஜேஷோட மொத்த ஆக்டிவீட்டீஸும் ஃபாலோ பண்ணோம். ஒருநாள் ராஜேஷ சந்திக்க முடிவு பண்ணேன்.

“ராஜேஷ் இப்ப உள்ள சூழ்நிலை முழுசா தெரியாம உனக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லிடாத. சொல்லியே ஆகணும்’ங்கிற நிலைமை வந்தா அவன் அப்பா உங்கள கொலை பண்ணிடுவேனு மிரட்டினதா மட்டும் சொல்லு”

“ஹ்ம்ம்”

ராஜேஷ் சந்திப்பு மூலமா ரேவதிக்கு இருக்க பிரச்சினை அதனால அவன் அப்பா அம்மா கூட ஏற்பட்ட பிரச்சினைனு எல்லாமே தெரிஞ்சிக்கிட்டேன்.

“ராஜேஷோட தற்போதைய சூழ்நிலை தெரிஞ்சிருச்சு. எதாவது ப்ளான் டிவைஸ் பண்ணி இருக்கியா?”

“எப்படி பண்றதுன்னு இனிமே தான் ப்ளான் பண்ணனும். ஆனா அதோட முடிவு என்னவா இருக்கணும்னு தீர்மானிச்சிட்டேன்”

“என்ன முடிவு?”

“அவனுக்கு பேரப் பிள்ளைனு ஒண்ணு பிறந்தா அது என் மூலமா மட்டும் தான் பிறக்கணும். எந்த யோனிய தன் வேலையாட்கள் முன்ன காட்சிப் பொருளா மாத்தி சந்தோஷப் பட்டானோ எந்த யோனிய படம் பிடிச்சு வெச்சிட்டு எங்கள பயந்து பயந்து சாகணும்னு சொன்னானோ அந்த யோனி வழியா மட்டும் தான் அவனுக்கு சந்ததினு ஒண்ணு வரணும். சாகுற வரைக்கும் அவன் கூட வந்த வேலையாட்கள நிமிர்ந்து பார்க்கவே அசிங்கப்படணும். அதுக்காக எந்த எல்லைக்கும் போக நான் தயாராகிட்டேன்”

தொடரும்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *